.

Pages

Monday, September 30, 2013

கொடுப்போம்... நீரூற்றாய் !

கொடுங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள் !
உங்களுடையது என்று ஏதுமில்லை !
அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,
வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,
அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,
அனைத்துமே கொடுத்துதானே வளர்கிறது !

இலவசமாய் பெற்றதை
விற்றுப் பிழைப்பவராய்
இருப்பதை அழித்து
இனிமை காண்பவராய்
இரக்கத்தைக் கொன்று
அடித்துண்ணும் நரமாமிச பட்சியாய் !

இல்லாமை மனதில் சூடி
இருந்தென்ன லாபம் ?
கொண்டு வந்தாயா ?
கொண்டு போவதற்கு ?
இதயத்தைப் பூட்டி வைத்து
கைகளை முடக்காதே !

அன்பை வாரி வழங்குவோம் !
அறிவைப் பகிர்ந்து கொடுப்போம் !
கருணையாய் பார்ப்போம் ....
படைப்பில் ஊனமில்லை
நடக்க வேலை செய்ய
இன்பம் தேட ,இன்னல் ஒழிக்க
அன்பைப்பெற , அன்பு செய்ய
உழைக்க சம்பாதிக்க
படிக்க, எழுத , பாட என
அனைத்தும் நமக்கு அருளப்பட்டது .

அம்மா ,அப்பா ,உறவுகள்
கொடுக்கப்பட்டன ...

இதோ ...
அனாதைகளாய்
ஊன்முற்றவர்களாய்
பார்வை இழந்தோராய்
தெருவில் விடப்பட்டவராய் ...
பைத்தியங்களாய்
மனவளர்ச்சி குன்றியவராய் ..
கைம் பெண்களாய் ...
நோயின் பிடியில் சிககியவராய்...
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவராய்
படிப்பின் தவறுகளாய்..
தினம் தினம் உடலாலும்
மனதாலும் நொந்து வெந்து
மாய்ந்து சாய்ந்து கிடக்கும்
உள்ளங்கள் எத்தனையோ ?

வீட்டில் நாய்க்கு அடிபட்டால்
பொறுக்க மாட்டோம் ..
வீதியில் கிடக்கின்ற இதயங்களைக்
காப்பாற்ற இரங்க மாட்டோம்!
யாருக்கு வேதனை !
யாருக்கு துக்கம் !
கொடுத்து வாழ்பவன் வாழ்கிறான் !
கெடுத்து வாழ்பவனை
வேதனை தேடி வரும் ...
கொடுப்போம் ...நீரூற்றாய்!
சசிகலா

Saturday, September 28, 2013

[ 13 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ சேமிக்கும் முன் யோசிக்கணும் !? ]

சேமிக்கும் முன் யோசிக்கணும்...
வளைகுடா வாழ்க்கையில் பல நிகழ்வுகள் கலந்த கலவை. சிலரின் குடும்ப தேவைகள் குறைவாகவும், சேமிக்கும் அளவிற்கு சம்பளம் கூடுதலாகவும் இருக்கும். சிலருக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் பெரிய தொகை தேவைப்படும்.

இது போன்ற தருணங்களில் நண்பர்கள் ஒன்று கூடி சீட்டு பணம் சேகரிப்பார். குறைந்தது பத்து நபர்கள். ஒவ்வொருவரும் இந்திய பணம் மதிப்பிற்கு ஐந்தாயிரம் வீதம் ஒவ்வொருவரிடமும் வசூல் செய்து சேரும் தொகையை ஒருவர் பின் ஒருவராக மாதா மாதம் விநியோகிக்கப்படும். இது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

உடன் தங்கி இருப்பவர்கள் ஒரே ஊராக சொந்தம் பந்தமாக இருக்கும் தருவாயில் பண விநியோகம் சுமூகமாக அமையும். ஆனால் சில சந்தர்பங்களில் ஒரே வீட்டில் தங்கி இருப்பார். ஆனால் வெளியூர் நபராக இருப்பார்.

இது போன்ற சீட்டு பணம் சேரும் நிகழ்வுகள் நடை பெரும் ..வெளியூரை சேர்ந்தவர் கம்பெனியில் பிரச்னை ஏற்பட்டு ஊருக்கு செல்லும் நிலையில் சீட்டு பணம் முதிர் தொகையை பெற்று கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊர் சென்று விடுவர்.

மீதமுள்ளவர்கள் தனக்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கு சீட்டு சேர்த்தவரிடம் தொந்தரவு செய்வார்கள் இதன் காரணமாக ஒரு வருட வருமானம் வரை சீட்டிற்கு கொடுத்து அழுதவர்களும் உண்டு. இது போன்ற சிறு சேமிப்பு செய்பவர்கள் சேமிப்பு திட்டத்தில் சேரும் நபர்கள் வேலையின் பின்னணி. உள்ளூர் காரராக இருக்க வேண்டும்.நாணயமுள்ளவராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

பண தேவை அவசியம் இல்லாதவர்கள் உள்ளூர் வங்கியில் கணக்கு துவங்கி பணம் சேகரிக்கலாம். சேமிக்கும் பணம் பற்றிய தகவல் ரகசியமாக வைத்து கொள்ளவும் .ஒவ்வொரு முறையும் விடுப்பில் ஊர் செல்லும்போது நிலதரகர்களை சந்திக்க தவறாதீர்கள். உங்களுக்கு முதலீடு செய்ய ஆசை வரும்...

அரபு நாடுகளில் வியாபாரம் செய்யும் நபர்கள் கூட பணம் அதிக அளவில் இருப்பில் இருக்க சீட்டு சேர்ப்பார்கள் அவர்களும் பல பேர்கள் முழுமையாக பணம் செலுத்தாததின் காரணமாக கடும் சிரமம் ஏற்பட்டு சொந்த தொழிலை இலக்க நேரிட்ட சம்பவமும் உண்டு.

நான் நேரில் பார்த்த சம்பவம் சீட்டு நடத்தியவரிடம் சிலர் மோசடி செய்துவிட்டு செல்ல...மற்றவர் பணம் கேட்டு நச்சரிக்க சிலர் தகாத வார்த்தை கூறி அழைக்க. அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

நண்பர்களே ! சேமிக்க முன் யோசிக்க சொன்னது சரிதானே..!
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, September 27, 2013

வடிவும் வகிடும் (வரி)

வானத்தில் மிதக்கும் வடிவு
....வெண்மேகம் இழைத்த வகிடு
தானத்தில் சிறந்த வடிவு
....தூயோன்சொல் விகித வகிடு

தென்னை மரத்தின் வடிவு
....தென்றல் வருடும் வகிடு
கன்னம் கொடுக்கும் வடிவு
...காந்தக் குழியின் வகிடு

கடலின் நீரில் வடிவு
.....கப்பல் கிழித்த வகிடு
உடலின் சேரும் வடிவு
....உள்ளம் விரித்த வகிடு

புன்னகைப் பூக்கும் வடிவு
....பூவிதழ் விரித்த வகிடு
எண்ணமும் காட்டும் வடிவு
...எம்முணர் வுகளின் வகிடு

வயற்கள் தோறும் வடிவு
.... வரப்புக் கட்டிய வகிடு
செயற்கள் தோறும் வடிவு
....செயலின் திட்டமே வகிடு

ஊரின் பரப்பில் வடிவு
....ஊரும் தெருவின் வகிடு
வேரின் உறுதி வடிவு
....வேறாய்ப் பரவும் வகிடு

வலிமைக் கட்டிட வடிவு
.....வரைபடம் எழுதிய வகிடு
பொழியும் சந்திரன் வடிவு
....பிறையெனப் பிளந்திடும் வகிடு

இலைகளின் ரேகை வடிவு
....இறைவன் தீட்டிய வகிடு
மலைகளின் பாக வடிவு
....மனங்கவர் நீர்வழி வகிடு

ஏறும் எறும்பின் வடிவு
....ஏற்றப் பணியின் வகிடு
ஆறு சிறக்கும் வடிவு
....ஆங்கு அணைகள் வகிடு

தேசிய கொடியின் வடிவு
......தியாக வண்ண வகிடு
தேசிய தலைமை வடிவு
.....தெளிவாய்ப் பண்ணும் வகிடு

குடும்பத்தின் உறவுகள் வடிவு
....குலையாத உறுப்பினர் வகிடு
மிடுக்கான உடையினில் வடிவு
.....மெலிதான மடிப்பினில் வகிடு

முகத்தின் தோற்ற வடிவு
....முகத்தின் மூக்கே வகிடு
முதுகின் தோற்ற வடிவு
....முதுகின் தண்டின் வகிடு

வெண்பா யாப்பின் வடிவு
.....வெண்டளைக் காய்சீர் வகிடு
பெண்பால் சீப்பின் வடிவு
.....பெண்டலை நேர்சீர் வகிடு

செல்வம் பெற்றதன் வடிவு
...செய்யும் செலவின் வகிடு
கல்வி கற்றதன் வடிவு
... கற்றல் முறையின் வகிடு
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 26-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

Thursday, September 26, 2013

வழி விடுங்க... வழி விடுங்க... ஆம்புலன்ஸ்சுக்கு !

ஓங்கி ஒலி எழுப்பிக்கொண்டு விரைவாக சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்புலன்சை எங்கேயாவது நாம் பார்த்தவுடன் முதலில் நம் மனதில் ஒரு வித அனுதாபம் ஏற்பட்டு பிறகு கடந்து செல்கின்ற அந்த வாகனத்திற்கு வழி விடுங்க... வழி விடுங்க... என சொல்கின்ற அளவுக்கு மனித நேயம் நம் அனைவரிடத்திலும் வளர்ந்து காணப்படும்.

இதற்கான காரணம் இல்லாமல் இல்லை மனித வாழ்வில் இதன் பயன்பாடு எண்ணிலடங்கா ஒருவருக்கு ஏற்படும் விபத்தாகட்டும், அவசர சிகிசையாகட்டும், இறப்புகள், பிரசவம் போன்ற மனித வாழ்வாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கிய பங்களிப்பது ஆம்புலன்ஸ் என்பது நாம் மறுக்க இயலாது. எப்போது, எங்கே, யாருக்கு இதன் தேவை என்பதையும் யாராலும் கணிக்க முடியாவிட்டாலும் இதன் தேவையை எனக்கு தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ள எந்த கொம்பனாலும் முடியாது. அவசர காலத்தில் இந்த வாகனத்தை பயன்படுத்தியோரிடம் கேட்டால் இதன் அருமை நமக்கு தெள்ளத்தெளிவாக அறிய முடியும்.

நம் அலைபேசியில் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு எண் என்றால் அது அவசர காலக் கட்டங்களில் நமக்கு விரைவாக உதவ முன் வரும் ஆம்புலன்ஸின் தொடர்பு எண்கள் மட்டுமே என்றால் மிகையல்ல.

ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !

சேவையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ஆம்புலன்ஸின் எண்ணிக்கையை உயர்த்தி இயற்கை சீற்றத்திலிருந்து அவற்றை பாதுகாப்போம் என்றென்றும்...

வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !

சேக்கனா M. நிஜாம்

Wednesday, September 25, 2013

ஸ்மார்ட் போன்கள் !?

கடித காலத்தில்
கருத்துப் பரிமாற்றம்
கணினி காலத்தில்
காட்சிப் பரிமாற்றம்
இட்ட கடிதத்தின்
பதில் வர
காத்திருப்பு
கட்டாயம்
தொட்ட திரை
விரிய
சுருங்கிவிடும்
இவ்வுலகம்
அற்புத விளக்கை
தடவ
பூதம் வந்த கதை
வாய் பிளந்து
கேட்டிருப்போம்
நம் கையிலும்
அற்புதமாய்
ஸ்மார்ட் போன்கள்
எதிர்பார்ப்பில்லாது
பூதம் தரும்
நாம் கேட்டதை
காசிருந்தால்
மட்டுமே
திரை விரியும்
நம் போனில்
கையில காசு
வாயில தோசை
கதையாய்
பல்போனா சொல்போச்சு
அந்தக்காலம்
செல்போனா சொல்போச்சு 
இந்தக்காலம்
வாழ்க்கைச்சிரையில்
அடைபட்ட நமக்கு
கட்டாயம் உண்டு
செல்நம்பர்
மு.செ.மு.சபீர் அஹமது

Tuesday, September 24, 2013

நல்லதொரு குடும்பம் !

கணவன் – மனைவி
குறிப்பு:- இந்த ஆக்கம் யாரையும் குறிப்பிட்டோ, அல்லது குத்திக் காட்டியோ எழுதப்பட்டது அல்ல, பொதுவாக மானிடர் வாழ்வில் நடக்கின்ற சம்பவங்களை பல நாட்களுக்கு மத்தியில் பல கோணங்களில் சிந்தித்து மற்றும் பெரும்பான்மையான குடும்பங்களை சந்தித்து தொகுக்கப்பட்ட ஒரு ஆக்கமாகும்.

மாநிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. அப்பா(தாத்தா) உம்மம்மா(பாட்டி), வாப்பா(அப்பா) உம்மா(அம்மா), காக்கா(அண்ணன்) தம்பி, ராத்தா(அக்கா) தங்கச்சி, மாமா மாமி, மச்சான் மச்சி,  பெரியப்பா சின்னவாப்பா, பெரியம்மா சின்னம்மா, இன்னும் அநேக உறவு வட்டங்கள் நம் மத்தியில் வட்டமடித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி உள்ள ஒரு உன்னதமான உறவுதான் கணவன் மனைவி என்ற உறவு. இந்த கணவன் மனைவி உறவு சிலருக்கு சந்தோஷமாக அமைவதுண்டு, இன்னும் சிலருக்கு பாதிக்கு பாதி தேவலாம் என்றும், பலருக்கு ஏன்தான் இப்படி அமைந்ததோ என்றும் இருப்பதுண்டு. ஆக மொத்தத்தில் திருப்த்தி அடைவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

இந்த உலகத்தில் சந்ததிகளை, குடும்பங்களை, மக்கள் செல்வங்களைப் பெருக்க இறைவனுக்கு இரண்டு பாத்திரங்கள் தேவை, அதில் ஒன்று ஆண், மற்றொன்று பெண், இதே போன்று தான் எல்லா ஜீவராசிகளுக்கும், இறைவன் தான் விரும்பியபடி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று ஜோடிகளை சேர்த்து வைக்கின்றான், ஆக மொத்தத்தில் கணவனுக்கு மனைவி அடிமை இல்லை, மனைவிக்கு கணவன் அடிமை இல்லை, இரண்டு பேரும் சரிசம உரிமைகளை பெற்றவர்கள். அப்படி சம உரிமைகளை மனைவி பெற்றிருந்தாலும் கணவனுக்கு கீழ்படிய கடமை பட்டவள், அப்படி கணவனுக்கு கீழ்ப்படிந்து நடந்தாலும் கணவன் மனைவிக்கு உண்மையாக நடந்து கொள்ள கடமைப்  பட்டவன், அதுபோல் மனைவியும் கணவனுக்கு உண்மையாக நடந்து கொள்ள கடமைப் பட்டவள், இந்த விஷயத்தில் ஒரு துளிகூட தடம் மாறாமல் இருக்க வேண்டியது பொறுப்பு கணவன் மனைவி இருவருக்கும் உண்டு.

பொதுவாக மனைவிமார்கள்(இல்லத்தரசிகள்) வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதிலும், கணவன்மார்கள் பொருள் ஈட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியில் செல்வது வழக்கம், இதுதான் மரபும் கூட. கணவன்மார்கள் குடும்பத்தை பிரிந்து ஊர் எல்லைகளைக் கடந்தும், மாவட்ட எல்லைகளைக் கடந்தும், மாநில எல்லைகளைக் கடந்தும், பல தேசங்களையும் கடல்களையும் கடந்து பொருள் ஈட்டுவதற்காக சென்றுவிடுகின்றனர். உள்நாடுகளில் இருப்பவர்கள் சமயம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தை பார்த்துவிட்டு போவது வழக்கம், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ, மூன்று வருடத்திற்கு ஒரு முறையோ குடும்பத்தை வந்து பார்த்து விட்டு மீண்டும் திரும்பிச் செல்வது வழக்கம், இன்னும் சிலர் குடும்பத்தோடு அங்கு இருப்பதும் உண்டு,  இன்னும் சிலர் இதையெல்லாம் கடந்து ஊருக்கே வராமல் உடம்பில் இருக்கின்ற பலம் குன்றும் அளவுக்கு, தலை முடியெல்லாம் வெழுத்து, பற்களெல்லாம் பழுதாகி, முகத்தோற்றம் உருமாறி, அடையாளம் சிதைந்து குழைந்து ஊர் வருவதும் உண்டு, இன்னும் சிலர் ஊர் வராமலேயே அப்படியே போய்விடுவதும் உண்டு, இதையும் கடந்து வேறு சிலர் தகாத உறவுகளோடு திருட்டுத்தனமாக வாழ்வதும் உண்டு, இப்படி பல சம்பவங்கள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

பெண்ணுக்கு சுதந்திரம் வீட்டில்தான், வெளியில் கிடையாது, பெண் ஏதேனும் வேலை விஷயமாக வெளியில் செல்வதாக இருந்தால் தகுந்த துணையோடு செல்ல வேண்டியது பெண்களின் கடமை, அதை கவனமாக பார்த்துக் கொள்வது கணவன், பெற்றோர்கள், உடன் பிறந்த சகோதரன், இருபது வயதை தாண்டிய மகன், தாய் மாமா, மாமியா மாமனார் இவர்களின் தலையாய கடமை. பெண் வெளியில் செல்லும் முன் கணவன், பெற்றோர்கள், உடன் பிறந்த சகோதரன், இருபது வயதை தாண்டிய மகன், தாய் மாமா, மாமியா மாமனார், இவர்களில் யார் அருகில் இருக்கின்றாரோ அவரிடத்தில் முறையாக அனுமதி பெறுவதோடு தகுந்த துணையோடு போகவேண்டும். என்ன வேலையாக போகின்றோம் எப்போ திரும்பி வருவோம் போன்ற விபரத்தையும் அந்த பெண் தர வேண்டும். பல வேளைகளில் பெண்கள் தகுந்த துணையோடு வெளியில் செல்லாததினால் ஜீரணிக்க முடியாத பல மோசமான சம்பவங்கள் நடந்து அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.

பெண்களே! நீங்கள் தேர்ந்து எடுக்கும் உடைகள் ஒரு ரூபாயோ அல்லது ஒரு கோடியோ அது முக்கியமல்ல மானத்தை பாதுகாக்கக்கூடியதாக, விலையில் சிக்கனமானதாக உள்ள உடையாக தேர்ந்து எடுக்க வேண்டும். ஆண்களே! நீங்கள், பெண்களை அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு விடாதீர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும், இதற்க்கு பெண்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இன்று எத்தனை பெண்கள் பெற்றோர்கள் மற்றும் கணவர் சொல்படி நடந்து கொள்கின்றனர்? பெண்களே, மேலே சொல்லப்பட்டவைகளில் நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்று நீங்களே உங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தது உண்டா?

பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் முறையாக நன்கு வளர்த்து பெரியவளாக்கி ஒருத்தனுக்கு மனைவியாக கொடுக்கின்றனர். கணவனாக வருகின்றவன் தன் மகளை நன்கு வாழவைப்பார், சந்தோஷமாக வைத்துக் கொள்வார், கண் கலங்க விடமாட்டார், எந்த சூழ்நிலையிலும் மனைவியாக வைத்து பாதுகாப்பார், இறுதிவரை(மரணம் சம்பவிக்கும்வரை) கணவன் மனைவியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு அனுப்பி வைக்கின்றனர்.

ஒருத்தனுக்கு மனைவியாக போகும் அந்தப் பெண் ஒரு மெல்லிய கண்ணாடி பாத்திரத்தை (கிளாஸ்) போன்றவள், அந்த மெல்லிய கண்ணாடி பாத்திரத்தை (கிளாஸ்) நெருக்கி பிடித்தாலும் உடைந்துவிடும், அப்படி உடைந்துவிடும் என்று நினைத்து பிடியை தளர்த்தினாலும் கீழே விழுந்து உடைந்துவிடும், மனைவியும் அப்படித்தான்..

தன்னை நம்பி வந்த மனைவியை அடிப்பதற்கோ, நொசுவனை செய்வதற்கோ, வாயில் வந்தபடி திட்டுவதற்கோ, மன நோக அடைவதற்கோ, மனைவிக்கு எதிராக நடப்பதற்கோ கணவனுக்கு ஒரு துளிகூட உரிமை கிடையாது, அதேபோல கணவனுக்கு எதிராக நடந்துகொள்ள மனைவிக்கும் ஒரு துளிகூட உரிமை கிடையாது. ஏதேனும் தவறுகள்  நடக்குமேயானால் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் முறையிட்டு சரி செய்து கொள்ளவேண்டும்.

குடுபத்தின் தேவைகளை மனைவி கணவனுக்கு தெரியப்படுத்துவது கட்டாய கடமைகளில் ஒன்று, அதை முறையாக ஆலோசித்து சரிபார்த்து சிந்தித்து செயல்படுவது கணவனின் முழுப் பொறுப்பு, உள்ளூரிலோ, வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ கணவன் இருந்தாலும் குடும்பம் சம்பத்தப்பட்ட அனைத்து தேவைகள் நடவடிக்கைகளையும் நன்கு கவனிப்பதோடு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருத்தல் அவசியம். தேவையை நன்கு ஆராய்ந்து அறிந்து பணத்தை பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்து மனைவிக்கு கொடுக்கச் சொல்லலாம், அல்லது நேரடியாகவே மனைவிக்குக்கூட அனுப்பலாம்.
 
பல கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு அதிக சுதந்திரத்தை கொடுப்பதோடு கணக்கில்லாமல் பணத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கின்றனர் / கொடுத்துக் கொண்டும் வருகின்றனர்.

இது மட்டுமா? இன்னும் இருக்குது, ஒரு சில மனைவிகள் கணவன் அனுப்பிவைத்த பணத்தை சிக்கனப்படுத்தி மீதியை சேர்த்து வைக்கின்றனர், ஆனால் பலர் அப்படி இருக்காமல் கண்டபடி சிலவு செய்துவிட்டு அதுவும் போதாமல், கணவனுக்கு தெரியாமல் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கியோ அல்லது வங்கியில் நகையை அடகு வைத்தோ மீதமுள்ள ஆடம்பர சிலவுகளை செய்கின்றனர். கணவன் ஊர் வந்து கணக்கு கேட்டால் ஈரான் ஈராக்கு போர்தான். இதன் காரணமாக நிம்மதி குழைந்து மன உளைச்சலுக்கு ஆளான எத்தனையோ குடும்பங்கள் உண்டு, அதுமட்டுமா? விவாகரத்து வரை சென்ற குடும்பங்களும் உண்டு.

இங்கு ஒரு உண்மை சம்பவத்தை மட்டும் சொல்ல விரும்புகின்றேன். அது யார் எந்த ஊர் போன்ற விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளது, நான் கடந்த சிலவாரங்களுக்கு முன் ஒரு கடைக்கு போய் இருந்தேன், அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாமான்கள் விற்பனை செய்யப்படுகின்றது. நான் அந்த கடைக்கு சென்ற நேரம் ஒரு பெண் அங்கு வந்து பல புடவைகளை பார்த்து விட்டு ஒரு புடவையை மட்டும் தேர்ந்து எடுத்து விலையை கேட்டாள், விலை 1550 ரூபாய் என்று கடைக்காரர் சொன்னார், அந்தப் பெண் அந்தப் புடவையை விலைகொடுத்து வாங்கியபின், கடைகாரரிடம் என் கணவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் 2750 ரூபாய் என்று சொல்லவும் என்று சொல்ல, அதற்கும் கடைகாரர் புன்சிரிப்போடு தலையை ஆட்டி தன் சம்மதத்தை தெரிவித்தார்.

இதுமாதிரி எல்லாம் நடப்பதற்கு யார் காரணம்? கணவனான ஆண்களே நீங்கள்தான். ஒவ்வொரு உறவு முறைகளையும் அந்தந்த ஸ்தானத்தில் வைத்து பார்க்க வேண்டும். மனைவியை மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்து பார்க்க வேண்டும்.

அன்பான பொறுப்பான கணவர்களே, பொருள் ஈட்ட வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் எந்த அளவுக்கு முழுப் பொறுப்புடன் இருக்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இதைப் படிக்கும் உங்களுக்கு அழுப்பு வந்துவிடக்கூடாது, அதனால் இப்போதைக்கு இது போதும்

ஆக மொத்தத்தில் கணவனும் தவறு செய்கின்றான், மனைவியும் தவறு செய்கின்றாள். எப்போது கணவன் மனைவி இவர்கள் ஒருத்தருக்கொருத்தர் உண்மையாக உறுதியாக பாசமாக இருக்கின்றனரோ அன்று முதல் அந்தக் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Monday, September 23, 2013

உங்கள் வாழ்த்தோடு தொடர்கிறேன்...

தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
நடக்கப் பழகிய தென்றலின்று,
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
பயணம்தொடர விரும்புகிறேன்!
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
இனிமையான ஓர் வரனென்பேன்,
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
தரணியில் பெரும் பேரென்பேன்!

இமயம்முதல் குமரிவரை,
இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
நானுமொரு பாத்திரமாய்,
உடன் வாழ வரம் பெற்றேன்.
மனம் பாடும் பாட்டு இதுவே !
என்னினிய உறவெல்லாம்,
எனதருமை நட்புகளே!

எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
ஆராதனைப் பொருளாக-அதை,
ஆராதிப்பேன் உயிருள்ளவரை!

நேற்றுவரைப் பிறை நிலவு,
இன்று வளர் பிறையாய்!
பௌர்ணமியாய் வளர்கவென,
வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
பாதம் தொழுது வளர்கின்றேன்,
பயணத்தைத் தொடர்கின்றேன்!
 
உங்களில் நானுமாகி!!
மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
விண்மீனாய் வானில்பறந்து,
கார்முகிலாய் கவிதைபாடி,
காற்றாகி ,தென்றலாகி,
ஊற்றாகி தாகம் தீர்த்து
இந்தியத்தாயின் மடியினலே,
தமிழாய் மடியவேண்டும்.
அழைப்பு வரும்வரையில்,
எழுதும் என் எழுதுகோல்!
நீதிக்காய்-அநீதியெதிர்த்து!

தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
அன்புக்காய்-தலைவணங்கி,
உண்மைக்காய்-போராடி,
அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
இல்லார்காய்-நாழும் அழுது,
தொடரும்  பயணமதை!
உங்கள் வாழ்த்தோடு!
தொடர்கிறேன் முடிந்தமட்டில்...
சசிகலா

Saturday, September 21, 2013

[ 12 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ அண்ணனை உறிஞ்சும் தம்பி !? ]

1960களில் பஞ்சம் நிறைந்த காலங்கள் ! ஆனால் வஞ்சம் இல்லா வாழ்வு. ஒவ்வொரு தம்பதியர்களுக்கும் ஐந்து, ஆறு குழந்தைகள். அவ்வப்போது கொள்ளை நோய்களால் குழந்தைகள் இறந்து போகும் அது போக  எப்படியும் நாலு பிள்ளைகள் பிழைத்து கொள்ளும்.

குடும்ப தலைவனின் உழைப்பு தலைமகன் வளரும் வரைதான்... நான் கூறும் காலகட்டம் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்த காலம்...

நான் கூற வரும் கருத்தின் நாயகன் வளைகுடா நாட்டிற்கு வேலை வாய்பிற்கு வருகிறான்... தந்தையின் கடமைகளை சுமந்தவனாக ...( இரு தங்கைகள் ஒரு தனயன் ) ஒரு தங்கைக்கு மணமுடிக்க மூன்று வருட உழைப்பு ஊர்வந்து தங்கையின் மணக்கோலத்தை கண்டு மகிழ்ந்து போனார். மறுகணமே வளைகுடா பயணம் இரண்டாவது தங்கைக்கு கல்யாண ஏற்பாடு ஆனால் அண்ணனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை.

ஆனால் பலவகையில் கடன்பட்டு தங்கை கல்யாணம் சிறப்பாய் நடந்தேறியது. ஆனால் அதன் கடன் அடைந்தேற நான்கு வருடம் ஆகியது. மறு விடுப்பு நான்கு வருடம் கழிந்தே வர முடிந்தது. அரைகுறையாய் பள்ளிகூடம் சென்று சரியாய் படிக்காத தம்பி வாலிபனாய் காட்சி தந்தான். தனக்கும் கல்யாணம் செய்ய குடும்பத்தாரின் நிர்பந்தம். விடுப்பு நாட்கள் இரண்டு மாதமே இருந்த நிலையில் கல்யாணமும் நடந்தேறியது.

மேற்படிப்பு  படிக்க திராணியற்ற நிலையில் உள்ள தம்பியை வெளிநாட்டிற்கு அழைத்து கொள்ள தீர்மானித்தார். மணமான இனிய நினைவுகளை சுமந்தவனாக வளைகுடா வருகிறார். வந்த சில மாதங்களில் தம்பி வரவழைக்கபட்டான்.

தனது கடமைகள் முடிந்து விட்டது என்று நிம்மதி அடைந்தார் அவர் ஆனால் வளைகுடா வந்த தம்பி சரியாக வேலைக்கு செல்லாமல் அண்ணனின் இடத்திற்கு வந்து அடைக்கலம் அடைந்தான். தான் வேலை பார்க்கும் நிலை தம்பிக்கு நன்றாகவே தெரியும். வாடகைகொடுப்பது, சாப்பாட்டு செலவில் பங்கு என்று தனது வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கு செலவாகும் நிலை அறிந்தும் அண்ணனின் கஷ்டத்தினை சற்றும் பொருள் படுத்தாது அவரது உழைப்பை உறிஞ்சும் உறவாய்  அமைந்தான் தம்பி. பெற்றோர் சுமந்த மூத்த மகனின் நிலை ஒய்வு நாள் வரை ஓயாமல் போனதுதான்  பரிதாபம் !

* தம்பிகளே நல்ல அண்ணனை உறிஞ்சும் அட்டைகளாக ஆகி விடாதீர்கள்.

* உறவுகளே  உதவிய உறவை வாழ்நாள் முழுவதும் மறவாதீர்.

அடுத்த வாரம்... சேமிக்க முன் யோசிக்கணும் !?
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, September 20, 2013

சின்னக் குழந்தை சிரிப்பு

என்னை விளித்தவன் ஏது சிறப்பென்று
மன்னன் வினவ மறுமொழி பகர்ந்தனன்
மின்னி வருவது மின்னலை விஞ்சிடும்
சின்னக் குழந்தை சிரிப்பு.

தொட்டியில் தோரணம் தொங்குதல் கண்டதும்
மட்டிலா ஆர்வத்தில் வாஞ்சையுடன்  - நீட்டியே
கன்னம் குழையக் கருவிழி பார்த்திருக்கும்
சின்னக் குழந்தை சிரிப்பு.

சத்தமிலா முத்தமிடும் வித்தகமே மொத்தமுமாய்ப்
பத்திரமாய் வைத்திருக்கும் சொத்தெனக்குச்- சித்தமதில்
நித்தமும்நான் பொத்திவைத்த அத்தனையும் எத்தனிப்பேன்
அத்தருணம்  ஒத்துவரும் காத்து

துள்ளியெழும் கிள்ளைமொழிப் பிள்ளையிடம் கொள்ளைகொள்ளும்
கள்ளமிலா வெள்ளையுள்ளம்  வெள்ளமென அள்ளிவந்து
பள்ளமெனும் உள்ளமதில் கொள்ளுவதால் தெள்ளுதமிழ்
வள்ளுவனின் பள்ளியிலும் உள்ளு

(வேறு)

உயிராய்ப் பிறந்த மழலையே வா
.......உணர்வில் நிலைக்கும் மழலையே வா
பயிராய் வளரும் மழலையே வா
...... பசுமைச் சிரிப்பாம் மழலையே வா
துயரை மறக்க மழலையே வா
......தூய்மை அன்பாம் மழலையே வா
வயிறும் வாயும் நிறைவதற்கு
......வருவாய் விருந்தாய் மழலையே வா!

சின்னஞ் சிறிய கருவுக்குள் குழந்தையெனும்
...............சித்திரத்தை வரைந்து அனுப்பியது யார்?
சன்னக் குரலில் சங்கீதம் தோற்கும்
.................சாரீரம் அமைத்துப் படைத்தது யார்?
பின்னிடும் சின்னக் குழந்தை எழுந்து
................பீடுநடை போடக் கற்பித்தது யார்?
புன்னகை ஒன்றால் மனத்தினை ஈர்க்கும்
.........பேரோளியை இதழ்களில் புதைத்தது யார்?

அந்த இறையை வணங்குகிறேன் - அவனுக்கு
..................யாதும் எளிதாகும் என்பதனால்
எந்த வரமெனக் கேட்காமலே-எனக்கு
.....................ஏற்ற தருளிட வேண்டுகிறேன்.

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 19-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

மரணமும், ஜனனமும் பேசிக்கொண்டால்...

ஜனனமும்
மரணமும்
உயிர்களோடு
ஒட்டிப்பிறந்த
ரெட்டைப்பிறவிகள்

மரணம் கேட்டது ?
ஜனனத்தை
விரும்பும்
மக்கள்,
மரணத்தை !
ஏன் வெறுக்கின்றனர் !

ஜனனம் சொன்னது
நான்
இனிமையான பொய்
நீ
கசப்பான உண்மை !

மானுடர் விருப்பம்
இனிப்பு

கசப்பின்
மருத்துவமும்
மகத்துவமும்
அறிந்தோர்
நம்மில் உண்டு

மறுமையை
நம்பினோர்
வாழ்வின்
கசப்பை
சகிப்போடு ஏற்பர்

உண்மைக்கு
அழிவில்லை
மரணம் என்பது
முடிவல்ல!?

வந்த மரணம்
விதி
நாம்
தேடிய மரணம்
சதி
மு.செ.மு.சபீர் அஹமது

Wednesday, September 18, 2013

கூகிள் பேராண்டிக்கு தாத்தா எழுதும் கடிதம்...


வசதியாகத்தான் இருக்கிறது பெயரனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது !

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன் !

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன் !

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று !

அன்புடன்...
தாத்தா

நன்றி மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு

Sunday, September 15, 2013

ஏனிந்த மவுனம் !?

உலகில் பிறக்கும் மனிதர்களில் சிலர் சிறுவயதிலிருந்தே சுயமாக நல்லோழுக்கமுடன்; புத்தி கூர்மையுடனும், சிலர் வளர்ப்பில் நல்லோழுக்கமுடன்; வழிகாட்டுதலில் நல்ல புத்தியுடனும், சிலர் தங்களுக்கு அத்தகைய நிலைகள் இல்லாமல் அடுத்த நல்லுழுக்க முடையவர்களைப் பார்த்து தன்னை அவ்வாறு நேர்படித்திக் கொண்டு நல்லுழுக்க முடையவர்களாகவும் புத்தியுள்ளவர்களாகவும், சிலர் மனம் போனப்போக்கில் வளர்ந்து, வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து, புத்தி படித்து, பின் சரியான நல வாழ்வை அமைத்துக்கொள்பவர்களும் உண்டு. மற்றவர்களும் உண்டு.

சிலர் உலக வாழ்க்கையில் பொருளாதாரமே மிக முக்கியம் என்றதனை மையமாகக் கொண்டு, தான் பெற்ற நல் பழக்கங்கள்; நல் உபதேசங்கள் அவைகளை பணம் ஈட்டும் வழிகளில் முன்னோக்குவார்கள். சிலர் அவ்வப்பொழுது ஏற்படும் தன் தேவைகள் நிறைவேறும் வண்ணம், பொருளியல்கள் சீராக கிடைக்கும் வகையில் தன் நிம்மதி சிதறாத வண்ணம், வாழும் வாழ்க்கை அமைத்துக்கொள்கின்றனர். சிலர் தாமரை இல்லை தண்ணீர்போல் பற்றற்ற பற்றும் வாழ்வை அமைத்துக்கொண்டும் வாழ்கின்றனர்.

ஒவ்வொருவரும் தனக்கு கிடைத்த அறிவுகள், அதனில் சமைந்து அவ்வறிவின்படி நடப்பார்கள். வழிகாட்டப்படும் வழியில் ஒருவர் வாழ்வது அவரைப் பொருத்தமட்டிலும் சரியே. ஒருவர், அவரின் வழிகாட்டுதல், அதில் தவறு இருந்து அதனை எடுத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். தான் தன் சிறுவயதிலிருந்து பழக்கப்பட்ட வழி சரியானது என்ற கோணத்தில்தான் என்றுமே சிந்திப்பார்; வாதிடுவார். இவ்வாறுதான் உலகில் பல வழிகள் உண்டாகிவிட்டது. எனவே எனது வழியே நல்வழி என்று அவர்கள் நிலையில் ஒவ்வொருவரும் சொல்வதில் தவறில்லை.

ஒருவர், அவர் பெற்ற அறிவு, அதனை ஏற்று, அதன்படி வாழ்ந்து வருவார். அதில் அவரால் தவறுகள் காண இயலாது. அவர்தன்வழி தவறானது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனாலும் சொல்பவர் அவரில் உண்மை இருந்து, கேட்பவர் நிலையறிந்து, சொல்லும் விதமறிந்து, விளக்கினால் புரிதுகொள்லாமலும் போகமாட்டார்.

சில உண்மைகள் உடன் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்காது. காலப்போக்கில் அதன் அனுஷ்ட்டானங்க்களை செய்து வரும்பொழுது, புரிந்துகொள்ளும் பக்குவம் உண்டாகும் பொழுது புரியலாம். அதுவரை அந்த உண்மையை நம்பிக்கை என்ற முடிச்சில் புதைத்துவிடுவார்கள், சில
அனுஷ்ட்டானக்களையும் தந்துவிடுவார்கள்.

நல்லொழுக்கமுடையவர் அனுஷ்ட்டானங்களை முறையாக செய்து, அதில் அறிவை விளங்க தெரிந்த தேர்ந்தவர், அல்லது உண்மைகளை நன்கு அறிந்தவர் அவர் காட்டும் பாதையில் சென்று, அவ்வனுஷ்ட்டான்களில் இவர் மறைந்திருக்கும் உண்மையை புரிந்துகொள்வார். காரணம் எல்லா வயதிலும், எல்லா அறிவு படித்தரத்திலும் சில உண்மைகள் தெளிவாக புரியாது. அப்படி
புரிய முயன்றாலும் சிலர் தவறிவிடுவார்கள்.

ஒருவழி நல்வழி என்று எவ்வாறுதான் புரிந்துகொள்வது. ?
இது மிகவும் கடினமான கேள்விதான். ஆனாலும் பதிலில்லாமல் இருக்காது. ஒரு வழி அல்லது வாழும் முறை அதில் தான் நிம்மதியுடன் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டை மட்டும் கொண்டால் எல்லா வழி/வாழ்வு முறைகளும் சரியாகத்தான் படும். நல்ல வழியாகத்தான் தெரியும்.

தன்னைப்போல் பிறரையும் பாவித்து, அவரும் நிம்மதியுடன் வாழ்ந்தால், அது அந்தவழியைவிட வேறுபட்டு இந்த வழி சிறப்பானதாகத் தெரியும். தான், தன் சக பிறர், அதோடு மற்ற அனைத்து உயிரினங்களும் நிம்மதியாக வாழும் வாழ்வுமுறை அதைவிட  இன்னும் சிறப்பாகத்தான் தெரியும்.  இதன்படி தாவரங்களை, மற்றவைகளை தன் தேவைக்கு உண்ணுதல், வேறு தேவைகளுக்கு பயன்படுத்துதல் இவைகள் அக்கோட்பாடு பிரகாரம் தவறாகவும் தெரியும். அதாவது மற்ற உயிரினக்களை வதைப்பதாகவோ அல்லது அழிப்பதாக்வோ தோன்றும். அவ்வாறானால் வாழ்வுகள் முடக்கப்படும். எனவே இதிலும் தெளிவான, சிறப்பான வாழ்வு முறை
இருப்பதாகத் தெரியவில்லை; இல்லைதான்.

பூமியில் உண்டான உயிர்கள் பலவாறு அறிவுகளின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகிறது. ஓர் அறிவு, ஈர் அறிவு, இவ்வாறு மூன்று; நான்கு; ஐந்து; ஆறு அறிவு உயிர்கள் எனவும் பிரிக்கப்படுகிறது. இவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தும் மற்றவைகளில் சிலதை உண்டும்தான் வாழம்படி உயிரினங்கள் இயற்கையாக அமையப்பட்டுள்ளது.

தேங்காய் அது முளைத்து வளர்ந்து மரமானால், பல தேங்காய்கள் அதிலிருந்து கிடைக்கும். அதிலிருந்து பல தென்னைமரங்கள் உண்டாகும்; பல்கிப்பெருகும். ஆதலால் தேங்காய் ஓர் உயிரினம், அதனை உண்ணக்கூடாது என்றும் அதனை உணவாக உண்டு அழித்து விடுதல் பாவமானது என்றும் கருதுவதும், அதுபோல் பல மற்ற உணவாக இருக்கும் தாவர மற்ற இனங்களும் உயிரினம்தான், அதனால்  மனிதன் மற்ற உயிரினம் தன் உணவாக மற்றவைகளை உண்ணக்கூடாது என்றும் இருக்குமானால், உலகில் உயிரினங்களே வாழமுடியாது; தோன்றிருக்காது. அதலால் ஒன்றை ஒன்று
உணவாக உண்ணாவிட்டால் உலகில் உயிரினம் இல்லை.

பூமியில் வாழும் அனைத்து உயிரினமும் தான் தன்தேவைகளைப்பெற்று, மற்றவைகளை உணவாக உண்டு, வாழவேண்டும் என்றுதான் விரும்பும். அது அதனைப் பொறுத்து ஞாயமும்; உரிமையும் ஆகும். இவைகளில் ஆறறிவு உள்ள மனிதன் இப்பூமியில் மிக உயர்ந்தவன். காரணம் இவன் அனைத்தையும் பாதுகாக்கும் பண்பையும் உடையவன்.

மனிதன்  அனைத்தையும் உற்பத்தி செய்பவனும்; வளர்ப்பவனும்தான். மாற்றவைகளிடம் இந்த குணம் இல்லை. மனித இனத்தை மையமாக வைத்து மற்றவைகளின் வாழ்வுகள் இயற்கையாகவும் அமைந்துள்ளது. எனவே இவன் இன வாழ்வு இப்பூமியில் இருக்கவேண்டும். மனிதன் வாழ்ந்தால் அனைத்து இனமும் வாழும். மற்றவைகளுக்கு அவ்வாறு சிந்திக்க தெரியாது. அவைகள் அடுத்தவைகளை உண்ணவே பார்க்கும். எனவே இவனே பூமியில் பூமியின் சிறந்த உயர்ந்த உயிர் தோற்றம். இவன் தனது புலன்களால் தனக்கும் பிற/பிறவைக்கும் அதன் நிம்மதி குழையாமலும்; அவ்வினம் அழியாமலும் வாழமுடிந்தவன்; வாழத்தெரிந்தவன். இத்தகைய அறிவுகள் முழுமையாக தெளிவாக எந்த வழியில் உள்ளதோ அதுவே சரியான நல் வழி என்றால் ஏற்காதோர் இல்லையென்பதுமில்லைதானே ? சரியான விளக்கங்கள் தான் மனிதனுக்கு வேண்டும்.

எவைகள் எவையவைகளுக்கு உணவாக உண்ணலாம் என்பதும் ஒரு சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கின்றது. எல்லாம் எல்லாவற்றையும் உண்ணுவதில்லை. சிலவைகளை உண்ணலாம் என்றாலும் உண்ணமுடியாது; உண்ணக்கூடாததும் உண்டு. இதனை இங்கு விவரிக்கவேண்டியதில்லை.

சுருக்கமாக சொல்வதென்றால் தன்உயிருக்கு; தன் நல்குணத்திற்கு அழிவு; இழிவு ஏற்ப்படாமல் நன்மை தருமோ அதனை உண்பது தவறாகாது. நல்குணத்திற்கு என்று எழுதப்பட்டதன் காரணம் என்னவென்றால், சில உணவுகள் உட்கொண்டதனில் அவ்வுணவின் குணம் வெளிப்படும்.
இவைகள் இங்கு எழுதப்பட்டக் காரணம், அறிந்தவைகள் எவ்வாறு சரிகாணப்படவேண்டும் என்பதோடு சில உண்மைகளையும் எழுதி அதனோடு அனைவரையும் சிந்திக்க தூண்டுவதற்காகத்தான்.

ஒருவர் ஒரு கருத்தை சொல்கிறார். அது சரியானது என்று அவர் வாதிடுகிறார். அவருக்கு அக்கருத்து சரியான கருத்து என்பதற்கு அவருக்கு கிடைத்த, சேகரித்த அறிவுகளின்படி அவர் அக்கருத்து சரியே என வாதிடல் அவர் பொருத்தமட்டிலும் சரியே. அடுத்தவருக்கு அக்கருத்து தவரானது என்று அறிவுகள் கிடைத்திருந்தால் இவரைப் பொறுத்தமட்டிலும் இதுவும் சரியே.
இப்பொழுது சரியான கருத்தை இவர்கள் ஏற்க்கவேண்டும் என்றால் தவற்றைச் சுட்டிக்காட்டி எது தவறானது என்பதை நிரூபிக்கவேண்டும்.

சிலநேரங்களில் நிரூபிக்கத் தெரியாவிட்டால் அவரில் ஒருவர் ஏற்கமாட்டார். தன் நிலைதான் சரியென ஒருவர் தான் அறிந்ததை முழுமையாக நம்பி  அழுத்தி வாதிடவும் வந்தால், அவரை  புரிய வைக்க; தெளிவைத்தர தெளிவான உண்மையை புரிந்தவர் தெரிந்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவரை புறக்கணித்தால் அந்த தவறான கருத்து அழியாமல் மேலும் பல மடங்காக வளரத்தான் செய்யும். சில சமயம் அவர் தோல்வி காண்பதை ஏற்காமல் தன் கருத்திலே நின்றால், அவரைத்தவிர்த்து மற்றவர்கள் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு மற்றவர்கள் தவறிப்போகும் வழியில்லாமல் போகும். மேலும் இவரும் பின்னாட்களில் திருந்திவிடும் வாய்புகளும் உண்டு. காரணம் அனைவரும் இயற்கையிலே உண்மையைத்தான் விரும்புவார்கள்.

தொடரும்...
நபிதாஸ்

Saturday, September 14, 2013

[ 11 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ வாசகரின் தொலைபேசி ஆதங்கம் ]

வளைகுடா வாழ்க்கை தொடர் எழுதத்துவங்கிய நாள் முதல் தொலைபேசி மூலமும் சில அன்பர்கள் நேரிலும் தனது மனதில் உள்ள ஆதங்கங்களை கூறுகின்ற போது இன்னும் பல படிப்பினை உள்ள சம்பவங்களை பதிய வேண்டும் என்ற வேட்கை எண்ணுள்ளே எழுகிறது.

மனைவி ஒரு மந்திரி என்ற தலைப்பை படித்த வாசக அன்பர் ஒருவர் இந்த ஆக்கம் பத்து வருடத்திற்கு முன் வந்திருந்தால் நான் ஒரு கோடீஸ்வரன். வெல்லந்தியாய் உறவுகளுக்கு அள்ளி கொடுத்து விட்டு ஒன்றுமில்லாமல் தெருவில் நிற்கிறேன் என்றார்.

கணவனின் வருமானத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது. தர்ம பிரபைப்போல அள்ளிக்கொடுத்து விட்டு வயதான காலத்தில் உறவுகள் பாராமுகமாக இருப்பதை சொல்லி காட்டினார்.

சம்பாதிக்கும் பணத்தை நன்றாக ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள். வாழ்க்கையின்  உற்ற உறவான மனைவி கூட உன்னை கட்டி என்ன சுகம் கண்டேன் ? என்று அவர் மீதே பழியைபோட்டது தான் அபாண்டம்.

வளைகுடா நாட்டில் பல காலம் பொருளீட்டிய ஒருவர் தனது கட்டுபாட்டில் பணத்தை  வைத்து கொள்ளாமல் மனைவிக்கே அனுப்பி வைத்தார். மனைவியோ தன் உற்றார் உறவினருக்கு அள்ளி கொடுத்து விட்டார். ஊர் திரும்பிய அவர் தனது வாழ்வை கழிக்க ஏதாவது தொழில் செய்ய பணம் தேவைப்பட்டது. பணம் கிடைக்க வில்லை உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்க வில்லை. இன்று அவர் மன நோயாளி போல ஊரில் உலா வருகிறார்.

முதலீடு அவசியம் என்பதை அறியா அவரின் வாழ்வு சூன்யமாய் போனதுதான் மிச்சம். மனைவி கெட்டிக்காரராக இருந்தால் அவரிடம் பணத்தினை ஒப்படைப்பதில் தவறில்லை. எதிர்கால திட்டம் அறியாதவராக இருந்தால் நீங்களே முதலீட்டில் இறங்குங்கள்.

உழைப்பை உறிஞ்சும் உறவுகள் !? இதைப்பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்.
 [ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

உயிரினங்கள் தண்ணீரின்றி வாழ முடியுமா ?

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு.

தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம்.

அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை.

வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.

முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,

இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை.

தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது.

நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத  ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன.

நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.

ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.

பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.

அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீர்களும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகிவிட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்புதாது அதிகமாகிவிட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்துவிட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .

இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.

மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

அதிரை தென்றல் (Irfan Cmp)


Friday, September 13, 2013

நாணயம்

மதிப்பினை இழந்தது மனித நாணயம்
விதிப்பயன் என்பது வீணர்க் கூவலே
துதிப்பவர் கூட்டமும் துய்த்தல் வேடமே     
கொதிப்பினக் காட்டினால் நிற்கும் நாடகம்!

சிந்திய உழைப்பினைச் சிறிதும் போற்றிடாச்
சந்தையில் இந்தியா சரிவைக் காண்பதால்   
இந்திய மதிப்பினை இழந்த நாணயம்
நொந்துதான் அழுவதா நினைப்பாய் தோழனே!   

இருபுறம் உள்ளதால் இந்த நாணயம்
தருவதும் மனிதனின் தரத்தைக் கூறிட
வருவதும் அழகிய வழக்குச் சொல்லிலே
பொருளினை மதிப்பவர் புரிந்துகொள்ளுவர்!

இரண்டிலும் பொருட்களில் இருக்கும் வேற்றுமை
திரண்டநம் தமிழ்ச்சுவை தெரிந்து போற்றுவோம்  
புரண்டிடா நாணயம்;   பேசும் நாநயம்
இரண்டுமே  இருப்பவர்  எவரும் நாடுவர்!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 12-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

Tuesday, September 10, 2013

பிள்ளைகள் வழிகேடுவது ஏன் !?

தாய், தந்தையர், ஆசிரியர் ஆகியோர் குழந்தைகளுக்கு என்ன என்ன விசயங்கள் சொல்லிக் கொடுக்கின்றோம் என்பதை சற்று நாம் சிந்திக்கவும்...
ஆசிரியர்களும், பெற்றோர்களும் பிள்ளைகளை சரிவரப் பார்ப்பதில்லையாம். ஏனெனில் அவர்கள்  நன்றாக படித்து வருகிறார்களே..!  என் பிள்ளை நல்லாதானே இருக்கிறது...! சில ஆசிரியரும், பெற்றோரும் அவர்களை சமாளித்து கொள்கிறார்கள்.

அதோட நம்ம வேலை முடிந்து விட்டது என்று எண்ணுகிறார்களா ???
முன்புபெல்லாம் ஆசிரியர், தாய், தந்தை பெரியவர்களின் ஒழுக்க கண்டிப்புகள் கடுமையாக இருக்கும். இப்பொழுது சற்றுக்குறைந்தே காணப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டி ஆசிரியரும் அவருடைய பெற்றோரும்தான் என நீங்கள் உங்களுடைய விசயங்களில் முக்கியத்துவம் கொடுக்கிறதே சற்று நிறுத்தி வைத்துவிட்டு பிள்ளைகளின் பக்கம் கவனம் செலுத்துங்கள்.

ஏன் என்றால் அவர்களுக்கு எது சரி ? எது தவறு ? என்று தெரியாத நிலையில் விளையாட்டு தனமாக இருக்கிறார்கள்..

பிள்ளைகள் தாய் ,தந்தை, உறவினர்கள், அவரது வயதைவிட முத்தவர்களுக்கு  மரியாதை தருவதில்லை ஏன் ..??? குழந்தைகளின் ஆரம்ப கால கட்டங்களில் உங்களின் கவனக் குறைவுகளால் ஏற்படுவதே தவிரே வேரு எதுவும் இல்லை.

ஆசிரியர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளூக்கு சிறுவயதிலையே அன்போடு, அரவணைப்போடு, கட்டுபாட்டோடு, கவனத்தோடு, பாதுகாப்போட அவரவரகளுக்கு அறிவு திறன்விசயங்களை எடுத்துச்சொல்லி வெற்றிபெற்றால்  பாராட்டி,தோல்வி கண்டால் தட்டிக்கொடுத்து வளர்க்கலாமே..!!!

முக்கியமாக பாசத்தை அள்ளிக்கொடுத்து வளர்க்கவும், பணத்தை அள்ளிக்கொடுத்து வளர்க்க வேண்டாம் ப்ளீஸ் !

சிராஜுதீன் M-S-T

Monday, September 9, 2013

ஆதலால் காதல் செய்வீர் !?

காதல்
கொண்டவன்
அரிச்சந்திரனாயினும்
பொய்யுறைப்பதில்
தயங்குவதில்லை

காதல்
கொண்ட
மகாத்மாவும்
மற்றவரை
மனம் புண்பட
செய்திடுவார் !

கடமை,
கண்ணியம்,
கட்டுப்பாடு.
காதலுக்கு ?
அதுவெல்லாம்
படும்பாடு !?
பெரும்பாடு !!

காதலும்
மோதலும்
இரட்டை பிறவி

காமத்தோடு
காதலை
பார்க்காதீர்

கண்டதும்
காதல்
கண்டிக்கத்தக்கது

சாக்லேட்டும்
ஐஸ்கிரீமும்
முதல் படி
பியரும்
வென்சுருட்டும்
இரண்டாம்
ஆசை !
காதல் என்பது ?
மூன்றாம் தரம்

காதல் ஓர்
சுகமான
சுமை
இது காதலருக்கு !
பெற்றோருக்கு ?
சுமக்கமுடியாச்சுமை

தாயாய்
வயிற்றில்,
இடுப்பில்
சுமந்து

தந்தையாய்
தோளில்
பின்
பொருளாதார
சுமையை
சுமந்தவர்க்கு
மேலும் ஓர்
சுமையை
தரலாமோ ?

அவர்கள்
சுகமாய்
துயில் கொள்ள
நாமல்லவா
சுமக்கவேண்டும்

ஆதலால் காதல் செய்வீர்
நம் தாய் தந்தையரை !!!
மு.செ.மு.சபீர் அஹமது

Saturday, September 7, 2013

[ 10 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ அரபி டோய் ! ]

நமதூரில் நம்மவர்கள் மாலை நேரங்களில் எதோ ஒரு இடத்தில் ஒன்று கூடி அரட்டை அடிப்பது வழக்கம். அதே போன்றே துபாய், குவைத், பஹ்ரைன போன்ற நாடுகளில் நம்மவர்கள் ஏதாவது ஒரு இடத்தில நான்கைந்து பேர் குழுக்களாக அமர்ந்து அரட்டை அடிப்பார்கள். தாய் மொழியில் பேசி மகிழ்வார்கள்.

அக்கம் பக்கத்தில்  உள்ளவர்கள் வேற்று மொழி பேசுபவர்கள் அமர்ந்து இருந்தால் மிக அலச்சியமாக... இவன், ஏண்டா நம்ம பக்கத்தில் அமர்கிறான் நாற்றம் சகிக்கல என்பர். சிறு புண் முறுவலுடன் வேற்று மொழிக்காரரை அடாவடியாக திட்டுவது ..தர குறைவாக அழைப்பது சாதாரணமாக நிகழும்.

ஒருநாள்  நம்மவர் கூடும் இடத்தில் ஒருவர் அராபிய உடை அணிந்து வந்து அமர்ந்தார். என்றும் போல் நம்ம தமிழ் மொழியில் இந்த மடப்பய நம்ம இடத்திற்கு ஏன் வருகிறான் ? என்றார்.

சற்றும் எதிர்பாரத நிலையில் அரபி உடை அணிந்திருந்த நபர் யாரைப்பார்த்து மடையன் என்கிறாய் ? நீதாண்டா மடப்பய என்றார்.

மற்றவர் நிலை குலைந்து போனார். ஐயோ நீங்க அரபி என நினைத்து விட்டேன் என்றார். ஏன் அரபியாக இருந்தால் திட்ட வேண்டுமா என்றார் கோபமாக... பழக்க தோஷம் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். பிறகு இருவரும் நண்பர் ஆனார்கள்.

அரபி வீடுகளில் டிரைவர் வேலை பார்பவர்களை  சில அரபிகள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று கொள்வார்கள். உடை கூட அவர்கள் அணியும் உடை கொடுத்து மகிழ்வார்கள். நம்மவரை சந்திக்க சிலர் அரேபிய உடையில் வருவதால் ஏற்படும் விபரீத விளைவுதான் இது.

அரேபிய நாட்டில் சைவ உணவகங்களுக்கு நம்மவர்களிடையே நல்ல மவுசு விடுமுறை நாட்களில் அங்கு சென்று உணவருந்துவது நடைமுறை நம்மவர் அரேபிய உடையில் உணவகம் சென்று அமர பரிமாறும் சர்வருக்கு ஒரே திகைப்பு !

என்னடா அரபி நம்ம கடைக்கு வந்திருக்கான் என்ற ஆச்சரியத்துடன் அவரை அணுகி ஆங்கிலம் பாதி அராபிய மொழி மீதி திக்கி திணறி என்ன உணவு வேண்டும் என சர்வர் கேட்க...

அரேபிய உடையில் உள்ளவர் மிக சாதாரணமாக ரெண்டு இட்லி, ஒருவடை கொண்டு வாயா என்கிறார்.

தலையை சொரிந்த வண்ணம் அரபி என்னமா தமிழ் பேசுறான் என்றவாறே உணவெடுக்க செல்கிறார் வடிவேலை போல...

அட நான் தமிழன்தான்யா ...உடை மட்டும்தான் அரபியோடது பாத்து பேசுயா என்றார்

அதே நபர் ஒருநாள் நண்பரை பார்க்க அவர் வீட்டு கதவை தட்டுகிறார் நம்மவர் அரேபிய உடையில்.

நண்பர் அல்லாத மற்ற நபர் கதவருகே வந்து பார்த்து திகைத்தவாறு டேய் யாரோ ஒரு அரபி நம்ம வீட்டு கதவை தட்டுகிறாண்டா என்று சத்தம் போடா ஐயோ ! நான் அரபி இல்ல தமிழன் தாங்க...

நண்பரை பார்க்க வந்தேன் என்கிறார். கொஞ்ச நேரத்திலே கலங்க வச்சுட்டீங்களே என்றார் வீட்டிலிருந்தவர். காரணம் குறிப்பாக வெளிநாட்டவர் தங்கும் இடத்தில் அரபியர் வருவதில்லை. ஏதாவது பிரச்சனை என்றால் மட்டுமே வீடு தேடி வருவர் .

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு அராபிய உடை அணிந்து நம்மவரை காண அவர் வருவதே இல்லை.

முக்கிய தகவலோடு மீண்டும் வருகிறேன்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, September 6, 2013

நினைத்தாலே இனிக்கும் நினைவலைகள்

விமானத்தில் ஏறாமல்
வீடுவரைச் சென்றேன் !

பள்ளிப் பருவம்
அள்ளித் தரும்
அழியா நினைவலைகள்
விழியோரக் கரையினிலே !

தெருவில் அரும்பிய
அருமை நட்புகள்
உருவாக்கிய உதவி
உட்கார்ந்திருக்கும் பதவி !

நூலகத்தில் உலகைக் கண்டேன்
உலகத்தில் நூலகத்தைக் கண்டேன் !

”கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”
கற்றுக் கொடுத்தவர்கட்குச் செய்ய வேண்டும் சிறப்பு !

கற்றவர் சபையில் எனக்கோர் இடமுண்டு
கா.மு.உ. பள்ளிக்கு அதில் முழு பங்குண்டு !

ஏழு ம்ணிக்குள்
இறைவேதம் ஓதிட
எழுந்து ஓடியதால்
“ஈமான்” எனும் விசுவாசம்
இருதயத்தின் சுவாசம் !

உம்மாவின் கைவண்ணம்
சும்மா சொல்ல முடியுமா எண்ணம்?
அடுப்படியில் ஊட்டிவிட்ட
அன்புகலந்த அமுதன்றோ ?

உச்சி முகர்ந்து ஓதி ஊதி
மெச்சிப் புகழ்ந்து வழியனுப்பி
உச்சிப் பகலில் திரும்பி வரும்வரை
பச்சிளம் பாலகனாம் எனக்காக
காத்திருந்துக் காத்திட்ட உம்மாவின்
பூத்துக் குலுங்கும் புன்னகை !

கண்ணாடி முன்னாடி நின்று
கனவுகளைக் கண்டேன் அன்று
அரும்பி வரும் மீசைபோல்
அரும்பி வரும் ஆசையும்தான் !

தங்கைகளைக் கரையேற்ற
எங்களையேக் கரைதாண்டி
அரபுநாடு வந்தோம்
தமிழ்நாடு எல்லைத் தாண்டி !

முகவரிடம் ஏமாற
மும்பையில் முடங்கி விட்டேன்
பகற்கனவாய்ப் போனது
பயணமும் புளித்தது !

படித்தப் படிப்பும்
துடிப்பானப் பிடிப்பும்
தோல்வியை வெற்றியாக்கின
கால்வைத்து அயல்நாட்டில்
கால்நூற்றாண்டும் ஆனது !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 05-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

நீரின்றி தவிக்கும் நம்மூரு குளங்கள் !

நம்மூரின் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படும் குளங்கள் ஒவ்வொன்றும் பல தலைமுறையைக் கண்ட பாரம்பரியமிக்கவை. ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றை எடுத்துச்சொல்லும் அளவுக்கு விசேஷமானவை. இன்றும் ஏதாவது ஒரு குளத்தைக் நாம் காண நேரிட்டால் நமது நெஞ்சம் துடிதுடித்து அக்குளத்தில் நீராடத்தோணும். அதில் குளித்து மகிழ்வோரைக் கண்டு நமது உள்ளம் பூரிப்படையும் ஆனந்தமடையும்.

இக்குளங்கள் நம்மூர் மற்றும் நம்மூரைச் சுற்றி வாழக்கூடியவர்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பயன்தரக்கூடியதாகவும், நமதூருக்கு நீர் ஆதாரத்தை வாரி வழங்கக்கூடியவையாகவும் இருந்து வருகின்றன.

கோடை காலங்களில் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு சற்று கூடிக்கொண்டேதான் போகும்.

நம்மூரில் சமீப காலமாக மழை இல்லாமல் கடும் வெப்பம் நிலவி வந்ததன் காரணமாக நகரில் உள்ள குளங்களும் நீரின்றி வறன்று காணப்பட்டு வருகின்றன.

எப்புடி இருந்த நீ ! ஏன் இப்புடி ஆயிட்டே ? என கேட்கும் அளவிற்கு குளங்களின் நிலைமை மோசமடைந்துவிட்டது. நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள் இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன.












சேக்கனா நிஜாம்
புகைப்படங்கள் : அதிரை நியூஸ்

Wednesday, September 4, 2013

துபாய்லே வாங்கிற சம்பளம் அபராதத்திற்கே பத்தலைங்க :)



அன்புச்சகோதரர்களே !

துபையில் வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கல் வந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவிலிருந்து படித்தவர்கள் துபையில் வேலை தேடுபவர்கள் குறைவாக இருந்தாலும். வேலைக்கு சேர்ந்தவுடன் கார் லைசன்ஸ், அல்லது இருசக்கர வாகன லைசன்ஸ் எடுக்கிறார்கள். லைசன்ஸ் எடுப்பதாக இருந்தால் குறைந்தது இந்தியா ரூபாய் 75 000 த்திலிருந்து 1 லட்சம் வரை செலவாகும்.
பலவிதமான கஷ்டங்களை தாங்கி வருகிறார்கள் இவர்களின் சம்பளம் பற்றிய

சிறிய தகவல் :
1 ) அதிகம் படித்தவர்களுக்கு சம்பளம் = 4000 Dhm to 10000 Dhm
2 ) கார் டிரைவருக்கு சம்பளம் = 3000 Dhm to 5000
3 ) இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சம்பளம் = 2000 dhm 3500
4 ) ஆபிஸ் பாய்க்கு சம்பளம் = 1500 dhm
5 ) ௬லிவேலை செய்வர்களுக்கு சம்பளம் : = 600 dhm to 1000 - இவர்களுக்கு மட்டும் தங்கும் வசதி உள்பட

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாரித்து ஊருக்கு அனுப்பலாம்ண்டு பார்த்தா ! அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுகிறது. கார் பார்க்கிங்காக டோக்கன் எடுத்து கார் முன்பு வைக்கணும். யாரேனும் டோக்கன் எடுக்க மறந்து விட்டால். அவருக்கு அபராதம் 210 dhm முனிஸ்பால்ட்டி வாகன எண்ணில் இணைத்து அபராதம் விதித்து விடுவார்கள். இது போன்று கார்களுக்கு பலவிதமான அபராதம் உண்டு.

இருசக்கர வாகனம் தற்போது அதிகமாக காணப்படுகிறது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு தனி இடவசதி அமைக்கவில்லை. வாடகை கார் வந்து போகும் இடத்தில் இருசக்கர வாகனத்தை நிருத்தி வைத்துள்ளார்கள். இதற்கு அபராதம் அளிக்க வாய்ப்பு உண்டு.

கார் இல்லாதவர்கள் பஸ்களில் பயணம் செய்தால் அங்கு டீட்டியார் கிடையாது, மாறாக பஸ் கார்டு அதை ரிச்சார்ஜ் செய்து, பஸ்ஸில் இருக்கும் ஸ்க்கேனிங் மிஷின் மீது ஏறும்போதும் இறங்கும் போதும் அதன்மேல் வைத்தால் பஸ் தேவையான திர்ஹம் கழித்துவிடும், யாரும் பஸ் கார்டு இல்லாமல் ஏறிவிட்டாலோ, கார்டுடில் திர்ஹம் இல்லாவிட்டாலோ ( RTA ) சோதனை செய்பவர் ( SPOT FINE ) உடனே அபராதம் கட்டச்சொல்வார் 210 DHM TO DHM 1000. ஆகலாம்.

அதுபோல்தான் மெட்ரோ ரயில்களிலும் அபராதம் விதிக்கிறார்கள். தண்ணிர் ௬ட குடிக்கக் ௬டாதாம். மேலும் குடித்தால் 200 லிருந்து 1000 திர்ஹம் விதிக்கப் படும் சரி கார்ல,பஸ்ல,மெட்ரோல போனாதான் அபராதம் கட்ட சொல்வாங்க ஆனா நடந்து போனாலும் அபராதம் கட்டனுமா ! வேட்டி உடுத்திக்கிட்டு போனாலும் அபராதம் கட்டனுமாம்.

தங்குவதற்கு (ROOM)அறை தனியாக தங்குவதாக இருந்தால் வாங்குற சம்பளத்தை இங்கேயே விட்டுச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் ஒரு (ROOM) அறைக்கு நான்கு அல்லது பத்து நபர்கள் சேர்ந்து தங்கலாம். (ROOM) அறைக்கு வருசத்துக்கு வாடகை 6 லட்சம் வருகிறது. அறையின் அளவு 30 க்கு 20 வது, அதிகமாக அளவு இருக்க வாய்ப்பு உள்ளது, அறைகளில் காற்று ஓட்டம் இல்லாமல் இருக்கும், சில அறைகளில் பால்கனி இருக்கும்.

துபையில் பலவிதமான அடுக்குமாடி இருந்தாலும், துணிகள் காய போடுவதற்கு போதுமான இடம்வசதி கிடையாது, இதுபோன்ற அறைகளில் தங்கும் சிலர் பால்கனிக்கு வெளியே துணிகளை காயப்போடுவார்கள். அதற்கும் கடந்த 28/2/2012 அன்றிலிருந்து முனிஸ்பால்ட்டி பால்கனிகளில் துணிகள் காய போட்டால் 510 திர்ஹம் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்.

சில ( ROOM ) அறைகளில் சமையல் அறை இருக்காது. (KITCHEN) சமையல் அறை இருந்தால் சமைத்து சாப்பிடலாம், வாங்கும் சம்பளம் கொஞ்சமாவது மிஞ்சும். ( KITCHEN ) சமையல் அறை இல்லாதவர்கள் உணவு விடுதிகளில் சாப்பிட வேண்டிய கட்டாயமாக இருக்கிறது. பெரும்பாலும் மலையாளி உணவகம் அதிகமாக உள்ளது. அந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ் உணவகத்தை அதிகளவில் இங்கே காண்பது கடினம்.

இங்கு மருத்துவமனைகள் அதிகமாக உள்ளது, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் சரியான மருத்துவ உதவி கிடைப்பதில்லை. மாத்திரைகள் அதிகவிலை உள்ளதால் குறைந்த சம்பளம் உள்ளவர்கள் மருத்துவமனை செல்லாமல் நாட்டு(கை) வைத்தியம்தான் உதவியாக உள்ளது. சில நபர்களுக்கு அவர்களின் கம்பெனி ஹெல்த் கார்டு மூலம் மருத்துவ சிகிச்சை செய்துக் கொள்கிறார்கள்.

இப்படியெல்லாம் கஷட்டத்தோடு காலத்தை ஓட்ட வேண்டி இருக்கு... துபாயில் வாங்கிற சம்பளம் அபராதத்திற்கே பத்தலைங்க !

சிராஜுதீன் M-S-T


Pro Blogger Tricks

Followers