.

Pages

Wednesday, July 31, 2013

டர்... புர்... உஷ்... ஆபத்தா !?

ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.

நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும். இதற்கு, “அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் “எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.

(0 – எப்போதும் இல்லை, 1 – குறைந்த அளவு வாய்ப்பு, 2 – போதுமான அளவு வாய்ப்பு, 3 – அதிக அளவு வாய்ப்பு).

1.எப்போதெல்லாம்தூக்கம்வருகிறது ?
அ) “டிவி’ பார்க்கும் போது.
ஆ) “மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது.
இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது.
ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது.
உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது.
ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், “டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது.

மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா?
இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம்.
12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.

சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், “டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.

காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.

மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும்.

குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும். தினமும் 45 நிமிட மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்.

நன்றி: என் மருத்துவ தோழர். 
பரிந்துரை
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

15 comments:

  1. சிறப்பான மருத்துவ தகவல் !

    குறட்டை விட்டு பிறரை துன்புருத்துவோர் :) பின்பற்றபட வேண்டிய அவசியமான அறிவுரை

    ReplyDelete
  2. தெரிந்துக்கொள்ள வேண்டிய மருத்துவ தகவல். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நோய் ஏற்படவில்லை என்பதில் சந்தோசம்... தவிர்க்கும் விளக்கங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  4. தெரிந்துக்கொள்ள வேண்டிய மருத்துவ தகவல். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

  5. தெரிந்துக்கொள்ள வேண்டிய மருத்துவ தகவல். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. டர்... புர்... உஷ்...

    தெரிந்துக்கொள்ள வேண்டிய மருத்துவ தகவல். பகிர்வுக்கு நன்றி

    ஜமால் காக்கா எப்புடி 1 லிருந்து 9 வரையா.? இல்லை 12 லிருந்து 16 வரையா.? [சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.]

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      6 லிருந்து 86 வரை.

      Delete
  7. நல்ல கட்டுரைக்கு வாழ்த்துக்கள் திரு ஜமால்

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    முன்பெல்லாம் பதிவு போட்ட அன்றே எல்லா கருத்துக்களுக்கும் உடன் நன்றி சொல்லி பதில் தருவேன்.

    இந்த முறை தொடர்ந்து தூக்காத்தினால் நன்றி சொல்லி பதில் தர தமாதமாகிவிட்டது.

    நான் தூங்கினாலும் குறட்டை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான் குறட்டை விடவில்லை என்று நீங்கள் எப்படி நம்புவீர்கள்?

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers