.

Pages

Tuesday, June 26, 2012

சுகாதாரத்துறை கவனத்திற்கு !



தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிரைப்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை அச்சுறுத்துகின்ற கீழ்க்கண்டவற்றிக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது மக்கள் நல் வாழ்வுத்துறையாகிய சுகாதாரத்துறையின் தலையாயக் கடமையாகும்.

1. இறைச்சிக்காக ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுத்து விற்பனை செய்பவர்களால் பயன்படுத்தப்படும் கூடங்கள் சுகாதாரமான முறையில் உள்ளனவா ? இதன் கழிவுகளை எங்கே கொட்டுகின்றனர் ? இதனால் இப்பகுதியைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா ? அக்கூடத்தில் உயிரற்ற ஆடு, மாடு, கோழி போன்றவைகள் அறுக்கப்படுகின்றனவா ? முறையாக அரசின் முத்திரை அதில் இடம்பெற்றுள்ளதா ?

2. அதேபோல் கடல் சார்ந்த பொருட்கள் குறிப்பாக மீன்கள், இறால், நண்டு, கணவாய், உலர்ந்த மீன் ( கருவாடு ) போன்றவை விற்பனை செய்யபடுகிற கூடங்கள் சுகாதாரமான முறையில் உள்ளனவா ? இதன் கழிவுகளை எங்கே கொட்டுகின்றனர் ? இதனால் இப்பகுதியைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டா ?

இதுபோன்ற பொதுமக்களின் சுகாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது சுகாதாரத்துறையின் தலையாயக் கடமையாகும்.

3. தெருவோரம் சுற்றித்திரியும் நோய் பிடித்த நாய்களால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு போன்ற ஜீவனங்களும் அதன் கடியால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதுபோன்ற நாய்களை கட்டுக்குள் கொண்டுவந்து கருத்தடை செய்தால் நாய்களின் கடிக்கும் தன்மை குறைந்து விடும்.

4. பிள்ளைக்குட்டிகளுடன் ஆங்காங்கே தெருவோரம் சுற்றித்திரிவதோடு மட்டுமல்லாமல் இறைச்சிக்கழிவுகள், குப்பைக்கழிவுகள், கழிவு நீர் போன்ற இடங்களில் வசிக்கும் பன்றிகளால் இவைகள் கிளறப்படுவதன் மூலம் பரவும் நோய் கிருமிகளிலிருந்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் பன்றிகளின் நடமாட்டங்களை கட்டுக்குள் கொண்டுவருவது அவசியமாகிறது.

5. காளான்கள் போல ஆங்காங்கே தெருவோரக்கடைகளாக “உணவகங்கள்” என்ற பெயரில் நாளும் பொழுதும் அதிகரித்துக்கொண்டு இருக்கும் வேளையில் தரமற்ற, எவ்வித சுகாதார முறைகளையும் பின்பற்றாத இக்கடைகளில் உணவுப்பொருட்களின் சுவையை கூட்டுவதற்கென்று மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட சுவையாகிய “அஜினோமோட்டோ” என்ற மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodiumglutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு புகுந்து விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

6. செயற்கை முறையில் “கார்பைட்” கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் முழு பகுதியும் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு அல்லாமல் இவற்றைப் பார்த்தவுடன் வாங்கும் வகையில் நிறம் மாறி காணப்படுவதாலும், சாப்பிட ருசியாக இருப்பாத்தாலும் வியாபாரங்கள் படு ஜோராரக நடைபெறுகின்றன. இவை உண்போருக்கு பல்வேறு வயிற்று தொல்லைகளை கொடுக்கும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை ! ? இக்கார்பைடைக் கொண்டு வாழைப்பழங்களும் பழுக்க வைக்கப்படுகின்றன என்பது வேதனையான செய்தி.

7. கோடை கால விற்பனையைக் குறி வைத்து தரமற்ற குளிர்பானங்களை விற்பனை செய்து வருகின்ற கடைகளில் தயாரிக்கப்படும் ஆரஞ்சு, லெமன், பாதாம்கீர், புரூட் ஜூஸ், என பல்வேறு ஜூஸ்கள் மொத்தமாக கலந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற கடைகளில் குளிர்பானங்களில் கலர் சேர்மானத்துக்கு ரசாயன உணவுப் பொருள்களுக்குத் தடை செய்யப்பட்ட கலர் பொடிகளை பயன்படுத்துகின்றனர். மேலும் குளிர்பானங்களில் இனிப்பு சுவை கிடைக்க “சாக்கிரின்” என்ற பவுடர்கள் கலக்கப்படுகிறது. இது போன்ற கலவையை பருகுவோருக்கு வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டு, அலர்ஜி ஏற்பட்டு சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் நிலையுள்ளது. “மிக்ஸ்டு புரூட் ஜூஸ்” என்ற பெயரில் அழுகிய தரமற்ற பழங்களை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து கூடுதல் இனிப்பு சுவையுடன் விற்பனை செய்கின்றனர்.

8. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களில் விதம் விதமாய் கலப்பட உத்திகளை கையாள்கிறார்கள். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான். அன்றாடம் விற்பனை செய்யும் பலசரக்கு கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தினாலே தெரிந்துவிடும் பொருட்களின் தரம் என்னவென்று.

9. தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய்களை பரப்புவது கொசுவே. டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன. தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளில் வசிக்கும் இதுபோன்ற உயிர்க்கொல்லிகளை ஒழித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

10. மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை பதினைந்து நாட்களுக்கொரு முறை சுத்தம் செய்தல் மற்றும் அதற்குரிய விவரங்களை பதிவு செய்தல். குளோரின் கலத்தல் மற்றும் அதற்குறிய சோதனை செய்தல்.

11. மருத்துவக்கழிவுகளை ஒவ்வொரு மருத்துவமனையும் எவ்வாறு அப்புறப்படுத்துகின்றன என்பதை கண்காணித்தல், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல் மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள “பிணவறைக்கூடம்”த்தின் தரத்தை ஆய்வு செய்தல்.

12. முடி திருத்தும் நிலையங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பாதுகாப்பானவையா ? இந்நிலையங்கள் சுகாதாரமான முறையில் உள்ளனவா ?

இது போன்றவற்றைக் கொண்டு நோய் தீவிரமாகப் பரவும்போது அதைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை, நோய் தோன்றக் காரணமாக இருக்கும் விவாகரத்தில் கண் மூடி இருக்கக்கூடாது. நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் நோய் வராமலே தடுப்பதுதான் செலவையும், வலியையும், பதற்றத்தையும், அலைச்சலையும், இழப்பையும் தவிர்க்கும்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி கடுமையான நடவடிக்கையாக “அபராதம் விதித்தல்” தேவைபட்டால் அவர்களின் “உரிமங்கள் ரத்து செய்தல்” போன்றவை அதிரடியாக எடுக்க வேண்டும் என்பதே அதிரைப்பட்டினம் வாழ் சமூக ஆர்வலர்களின் அவசரக் கோரிக்கையாகும்.

சுகாதாரத்துறை ஆபி”ஜ”ரே....!  “ஜொ”ல்றது..... சரியா...?

அப்போ இப்பவே ஆரம்பிங்க உங்க ரெய்டே.......:)


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்..............

Saturday, June 23, 2012

“குளு” “குளு” குற்றாலம் !


ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலே குளுமையை விரும்புவோரின் நினைவுக்கு வருவது "குளு குளு குற்றாலம்'தான். ஆகஸ்ட் மாதம் இறுதிவரை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் குவியும் ஒரே இடமாகத் திகழ்வது குற்றாலம் மட்டுமே.

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொஞ்சி உறவாடிக்கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இ.ந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இச்சாரல் விழும் இக்காலகட்டத்தைக் "குற்றால சீசன்' என அழைப்பார்கள். குற்றாலச் சாரல் சுற்றுவட்டாரப் பகுதி மக்களையும் மகிழ்விப்பது உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மூலிகைச் செடி கொடிகளில் கலந்து வருவதால் குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீருக்குத் தனி மவுசு உண்டு. இங்குள்ள அருவிகளில் குளிப்பதே தனி சுகம். ஒரே நாளில், எத்துணை முறை, எத்துணை அருவியில், எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொண்டு குளிக்கலாம் சலிப்பே வராது என்பது கூடுதல் சிறப்பு.

இவை அதிரைப்பட்டினத்திலிருந்து ஏறக்குறைய 357 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தென்காசியில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மொத்தம் 9 அருவிகள் உள்ளன. இவற்றில் பாலருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவை தவிர மற்ற 6 அருவிகளும் மக்கள் அதிகம் விரும்பும் அருவிகளாக உள்ளன. குறிப்பாக, பேரருவியில் அதிகக் கூட்டம் காணப்படுவது உண்டு.

பேரருவி: "மெயின் பால்ஸ்” என அழைக்கப்படும் பேரருவிதான் குற்றாலத்தில் பிரதானமானது. தண்ணீர் அதிகம் வரும் காலங்களில் இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்படும். பெண்கள் குளிக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

செண்பகா அருவி: பேரருவியில் இருந்து மலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதால் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

தேனருவி: செண்பகா அருவியின் மேல் பகுதியில் உள்ள தேனருவியின் அருகே பாறைகளுக்கு நடுவில் அதிக அளவில் தேன்கூடுகள் காணப்படும். இதனால் தேனருவி என அழைக்கப்படுகிறது. மிகவும் அபாயகரமான இந்த அருவியில் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி: பேரருவிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்புவது ஐந்தருவியைத்தான். பேரருவியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவி, ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவதால் “ஐந்தருவி” என அழைக்கப்படுகிறது. இதில், பெண்கள் குளிப்பதற்கென்று ஒரு கிளை அருவியும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக மூன்று கிளை அருவிகளும் உள்ளன. ஐந்தாவது கிளையில் தண்ணீர் வருவது குறைவு.

பழத்தோட்ட அருவி: “முக்கியஸ்தர் அருவி” என்ற பட்டப் பெயரோடு அழைக்கப்படும் இந்த அருவி, ஐந்தருவியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சாதாரண மக்கள் இந்த அருவியின் அருகில் செல்லவே முடியாது.

பழைய குற்றால அருவி: குற்றாலம் பேரருவியில் இருந்து கிழக்கு பகுதியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பழைய குற்றாலம். பேரருவியிலும், ஐந்தருவியிலும் குளிப்பவர்கள் நிச்சயமாக பழைய குற்றால அருவியிலும் நீராடிச் செல்வது வாடிக்கை.

படகு சவாரி: ஐந்தருவிக்கு அருகே அமைந்துள்ள குளத்தில் படகு சவாரி செல்வது தனி சுகம். இந்தக் குளம் விவசாய குளம் என்பதால் சீசன் காலங்களில் மட்டும் படகு சவாரி நடைபெறும்.
மஸ்ஜீத் ஜாமிஆ : சில வருடங்களுக்கு முன் புதிய பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட இம் மஸ்ஜித்தால் இச்சுற்றுலாத் தளத்திற்கு வந்துசெல்லும் முஸ்லீம் சகோதரர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாகவும், ஏறக்குறைய ஐந்து ஆயிரம் பேர் அமர்ந்து தொழக்கூடிய பகுதியையும் பெற்றுள்ள இவை ஐந்தருவிச் செல்லும் பாதையில் அமையப்பெற்றுள்ளது.

சாரல் திருவிழா : ஆண்டுதோறும் "சீசன்' காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் ஒரு வார காலம் பல்சுவை விழாவாக "சாரல் திருவிழா' என்ற பெயரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மூலிகை எண்ணெய் : தலையில் தேய்த்துக் குளிப்பதற்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய். இது உடல் சூட்டைத் தணிக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இங்கே விற்பனை செய்யப்படுகிற சந்தனாதி தைலம், அரைக்கீரை தைலம், பொன்னாங்கன்னி தைலம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் வாங்கி நமது உடலில் நன்றாகத் தேய்த்தும் குளிக்கலாம். இந்த மூலிகை எண்ணெய்களில் "போலி'கள் ஏராளம் என்பதால் கவனத்துடன் வாங்க வேண்டும்.

பழங்கள் : குற்றாலத்தில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களான மங்குஸ்தான், ரம்டான், துரியன், முட்டைப்பழம், மனோரஞ்சிதம் பழம் போன்ற பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஹல்வா : “இருட்டுக்கடை” அல்வா, சுடச்சுட “திருநெல்வேலி” அல்வா, “மஸ்கோத்” அல்வா போன்றவைகளும், பல்வேறு சிப்ஸ் வகைகளும், நறுமணமிக்க மசாலா பொருட்களும், கருப்பட்டி, பனங்கல்கண்டு, மலைத்தேன், திருவில்லிபுத்தூர் பால்கோவா போன்றவைகள் கிடைக்கின்றன.



கவனத்தில்கொள்ள வேண்டியவை :
1. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியாகவுள்ள குற்றாலத்தில் பொது சுகாதாரச்சட்டம் 1939 பிரிவு 84, 85 மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011’ன் படி பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த அல்லது சேமித்து வைக்க தடை செய்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கென்று அரசு விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகள் ஏராளமானவை உள்ளன. மேலும் குடும்பத்துடன் தங்குவதற்கென்று சமையல் வசதிகளுடன் கூடிய வீடுகளும் தின வாடகைக்கு கிடைக்கின்றன. இவற்றில் தங்குவதற்கு அதிகபடியான கட்டணம் வசூல் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க முன்வர வேண்டும்.

3. சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கிடும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் “விலை மற்றும் பொருட்களின் தரம் “ போன்றவற்றை கண்காணிக்க முன்வர வேண்டும்.

4. குற்றாலம் அருவி பகுதிகளில் காலாவதியான உணவு பொருட்கள், தரமற்ற தண்ணீர் பாட்டில்கள், அழுகிய பழங்கள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றனவா ? என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

5. குற்றவியல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் மேலும் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதிரைப்பட்டினத்திலிருந்து வழித்தடம் ?
பஸ் ரூட் : பட்டுக்கோட்டை – மதுரை – தென்காசி – குற்றாலம்
ட்ரைன் ரூட் : 1. தஞ்சை – திருநெல்வேலி , 2. திருச்சி – தென்காசி
பயணச்செலவுகள் :  “ப்ளீஸ்” அதே மட்டும் கேட்காதிங்க...

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

Thursday, June 14, 2012

போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் வாங்க வில்லையா ?



சமூகத்தில் குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது நமது காவல்நிலையத்திற்கே.........

காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவது என்பது நிதர்சனமான உண்மை.

இச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்காக காவல்நிலையத்திற்கு வரும் புகாரை விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே காவல்துறை அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படும் என்ற ஒரு கருத்து பெரும்பாலானோர் மத்தியில் காணப்பட்டாலும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர். இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

காவல்துறைக்கு எடுத்துச்செல்லும் நியாமான நமது புகார்களை முறையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வில்லையா ?

தமிழ்நாடு போலீசின் அதிகாரப்பூர்வ இணையதளமாக http://www.tnpolice.gov.in/ இவை உள்ளது. இதில் தமிழ்நாடு போலீசின் விவரங்கள், காவல்துறையின் அன்றாட நிகழ்வுகள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளத்தில், காணாமல் போனவர்களின் பட்டியலும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் தங்கள் புகார்கள் குறிப்பாக கிரிமினல் குற்றங்கள், நில மோசடி, விபத்துகள் மற்றும் நமது கருத்துகள் போன்றவற்றை பதிவு செய்யலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யும் முறை : (  ONLINE  PETITION  FILING  )

     1.   இதற்க்கு முதலில் http://www.tnpolice.gov.in/  இந்த லிங்கில் செல்லுங்கள்.

  1. அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்வு செய்து அதில் நம்முடைய புகார்களை பதிவு செய்துகொள்ளலாம்.

  1. மேலும் நமது புகாரின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம்.

  1. நாம் பதியும் புகார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ( Superintendent of Police )அவர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. சகோதரர்களே, கோரிக்கையில் பதியும் விவரங்கள் அனைத்தும் குறிப்பாக நமது பெயர், தொலைப்பேசி எண்கள், புகாரின் தன்மை போன்றவை உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்................... 

Monday, June 11, 2012

இன்னிக்கு காலையிலே வெருங்குடலோடு வந்துட்டோம்ல....!


இப்ப நிறைய பேர் காலையில எழுந்து பல் விளக்கி, மூஞ்சே கழுவி டீ யை குடிச்சிட்டு “பஜ்ர்” தொழுவுறாங்களோ ! இல்லையோ பிளாக்கிலே பதிவே போடாம....பதிவே படிக்காம... கமெண்டே அடிக்காமே... விட்றதே இல்ல. ஏன்னா அந்தளவுக்கு "பிளாக்மேனியா" நம்மிடம் பரவிக்கிடக்கு.. 

இதுவும் ஒரு விதத்தில் நம் டயரி போன்றதுதான்....... டயரியை நாம் மட்டுமே படிக்க முடிகிறது....... எழுதிய பதிவுகளை பொதுவில் வைப்பதால் எல்லோராலும் படிக்க முடிகிறது...... இதில் இதைத்தான் எழுதனும் இதெல்லாம் எழுதக்கூடாதுன்னு சட்ட திட்டமெல்லாம் கிடையாது யாரைப்பற்றியும், எதைப்பற்றியும், பின்னாடி நடக்கிறதப்பத்தி “திங்” ( ? ! ) பண்ணாமே எழுதலாம், கருத்தைப் பதியலாம்.

1.   நீங்க காலையிலே எழும்பி பாத்ரூம் போறதுலயிருந்து, நைட்டு கொறட்டவிட்டு தூங்குற வரைக்கும் நடக்கும் காரியமாகட்டும்..........

2.   படபடக்கும் செய்தியாகட்டும்......பரபரப்பு சம்பவமாகட்டும்...........சிந்தனையை தூண்டும் தகவலாகட்டும்.........

3.   அன்றாட நடக்கிற பொது நிகழ்ச்சிகளாகட்டும், அறிவிப்புகளாகட்டும், உதவிகள் கோருதலாகட்டும்............

4.   சமுதாயம், அரசியல், மார்க்கம், கல்வி, மொழி, விளையாட்டு, உடல்நலம், அனுபவங்கள், ஆய்வுகள், வரலாறு போன்ற பயனுள்ள கட்டுரைகளாகட்டும்............

5.   அழகிய புகைப் படங்களாகட்டும், காணொளியாகட்டும், கவிதையாகட்டும், கடிதங்களாகட்டும்.................

இதெல்லாம் படிப்பதற்கென்று , பார்ப்பதற்கென்று, பிரிண்ட் எடுப்பதற்கென்று மிகப்பெரிய வாசகர் கூட்டம் இருக்குதென்று சொன்னால் மிகையாகாது. 

இண்டர்நெட் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் "அடுத்தக் கட்டம்" என்று சொன்னால் மிகையாகாது அந்தளவிற்கு நிமிடத்தில் எண்ணற்ற பக்கங்கள் கொண்ட தகவல்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. மாணவ, மாணவிகள் இணையதளத்தை பயன்படுத்தும் போது அதில் பயனுள்ள பகுதிகளை மட்டுமே பார்க்க பழகிக்கொண்டால் சாதிக்க நிறையவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் விழிப்படைய சிறிதளவு உறுதுணையாய் இருப்போமே ( இன்ஷா அல்லாஹ் ! )

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...................

Saturday, June 9, 2012

பொறியியல் படிப்புக்கு நன்கொடையா ? எடுங்க போனை....புகார் செய்ய...!


பொறியியல் படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழுவில் புகார் அளிப்பதுடன் மாவட்ட அளவிலும் புகார் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கட்டணம் :
1.       அண்ணா பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் கல்விக் கட்டணம் ரூ 7,500 /-
2.       அரசு உதவிபெரும் பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் ரூ 8,500/-
3.       சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியம் குழு நிர்ணயித்துள்ளது.

இதன்படி,
a.       தரச்சான்று பெற்ற பாடப்பிரிவுக்கு கல்விக்கட்டணம் ரூ 40,000/-
b.      தரச்சான்று பெறாத பாடப்பிரிவுக்கு கல்விக்கட்டணம் ரூ 32,500/-

எச்சரிக்கை :
சுயநிதிக் கல்லூரிகள், நீதிபதி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கவோ, நன்கொடை வசூலிக்கவோ கூடாது. மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும். கல்லூரியின் பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அனைத்து சுயநிதிக் கல்லூரிகளுக்கும் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அங்கீகாரம் ரத்து :
அரசின் எச்சரிக்கையை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கவும், புகார்களின் மீது கல்லூரிகளில் சோதனை செய்யவும் ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு சட்டப்படி அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம், நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது ஆய்வுக் குழுவில் மட்டுமே புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. மாநிலம் முழுவதும் புகார் செய்யலாம். புகார் செய்ய கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் வசதி :
இதன்படி, நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது தமிழகம் முழுவதும் புகார் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் மாணவர்கள், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம்…..

1.       சென்னை / திருவள்ளூர் / காஞ்சிபுரம் :TEL : 044-22351018  FAX : 044-22201514

2.       ஈரோடு / கரூர் / கோவை / நீலகிரி / திண்டுக்கல் : TEL : 0422-2432221/436  FAX : 0422-2455230

3.       சேலம் / நாமக்கல் / கடலூர் / பெரம்பலூர் / அரியலூர் : TEL : 0427-2346157  FAX : 0427-2346458

4.       திருச்சி / தஞ்சாவூர் / திருவாரூர் / புதுக்கோட்டை / மதுரை / சிவகங்கை / நாகப்பட்டினம் / காரைக்குடி : TEL : 04565-224535/225349  FAX : 04565-224528

5.       திருநெல்வேலி / விருதுநகர் / தூத்துக்குடி / கன்னியாக்குமரி / ராமநாதபுரம் / தேனீ / திருநெல்வேலி : TEL : 0462-2552448/50  FAX : 0462-2554012

பொய் !



ஒரு மனிதன் தானும் தன்னைச் சார்ந்தவரும் செய்கின்ற தவற்றை மறைப்பதற்காகவும், தன்னை சமூகத்தில் “நல்லவன்” போல் காட்டிக்கொண்டு அதை மற்றவர் முன் நடித்து வெளிப்படுத்துபவர்களும் பயன்படுத்தும் ஆயுதமே “பொய்”

சிலருக்கு பொய் கூறுவதென்பது குற்றால அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் அவ்வளவு  சுலபமாக வரும். எதற்கெடுத்தாலும் நூர் லாட்ஜ் கடை “ஹல்வா” போல பொய்யைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு ங்களின் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற “கெத்து” வேறு.  ஒருவன் “பொய்” சொல்லும் போது அவனின் கண் புருவங்களையும், உதட்டையும் கவனித்தாலே போதும்......காட்டிக்கொடுத்து விடும்.       

1. விளையாட்டுக்காகவும், அடுத்தவர்களை சிரிக்க வைப்பதற்காகவும் பொய் சொல்பவரும் சரி.............

2. இல்லாத ஒன்றை மிகைப்படுத்தி தன்னிடம் இருப்பதாக கூறிக்கொள்பவரும் சரி..............

3. தன்னிடம் இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டிக்கொள்பவரும் சரி...............

4. வீட்டில் இருந்துகொண்டே இல்லை என அவரிடம் சொல் என சொல்பவரும் சரி.............

5. ஒரு பொய்யைச் சொல்லி அதை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்பவரும் சரி.............

6. சமூகத்தில் தன்னை உயர்த்திக் காட்டுவதற்காக பொய் சொல்பவரும் சரி.............

7. வியாபாரத்திற்காக பொய்யை மூலதனமாக பயன்படுத்துபவர்களும் சரி............

8. பொய்யானக் காரணத்தைக் கூறி கடன் கேட்பவர்களும் சரி..............

9.   பிறருக்காக சாட்சி சொல்லும்போது பயன்படுத்துபவர்களும் சரி...............

10.   இறைவன் மீது பொய் சத்தியம் செய்பவர்களும் சரி..............


என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

பொய் சொல்பவனுக்கு தான் சொன்ன ஒரு பொய்யை மறைக்க பல மடங்கு பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்பதும் மறந்து, வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படக்கூடிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

மேலும் பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீயச்செயலாகும். இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய ஈனச்செயலை விட்டொழிக்க முன்வர வேண்டும்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பொய்கள் :
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட கீழ்கண்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, அதாவது எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்

1. போரின் போது.....
2.   சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த.....
3. ஒரு கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக்கொள்ள.....

போன்றவற்றிற்கு கூறிக்கொள்ளும் பொய் அனுமதிக்கப்பட்டதாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக ! ஆமின் !

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்................... 

Pro Blogger Tricks

Followers