.

Pages

Monday, December 31, 2012

அழிவின் விளிம்பில்...!

ஒரு சிறு தவறுக்காக
அப்பா அன்று
திட்டினார் என்று
ஊரையே விட்டு ஓடினேன் !

எதுவுமே அறியாத
இரண்டு கெட்டான்
வயது பதினைந்து
இருபது வருடங்கள்
கழிந்து, அங்கேயும்
இங்கேயும் சுற்றி
திரிந்துவிட்டு, முப்பத்தி
ஐந்து அகவையில்
இப்போதுதான் ஊருக்கே
திரும்புகிறேன் சொகுசான
பேருந்து, சுகமான தூக்கம் !

கண்விழித்துபோது, தெரிந்தது,
'வெள்ளிமலை' [ கிராமம் ]
என்ற பதாகை [ போர்டு ]
வரவேற்றது !

மண்சாலையைக் காணோம் !
தார்சாலையில் இறங்கி
நடந்தேன் ! ஊரைச்சுற்றி
இருந்த மலைகளையும் 
காணோம் !

வழியில் ஒரு வாலிபரிடம்,
தம்பி ! ஊரைச்சுற்றி
மேற்கே பனிகள் படர்ந்த
மேற்குமலை தொடர்ச்சி
இருக்குமே !

மனிதர்கள் மிருகங்கள்
பறவைகள் என்று
எல்லோருக்கும் வனங்களில்
வளங்கள் வழங்கி
மழைபெய்ய காரணமாக
இருந்ததே அது எங்கே ?
என்றேன்...
'அதை எல்லாம்தான் வேட்டு
வைத்துவிட்டார்களே' என்றார்
என்ன தம்பி சொல்கிறாய் !
என்று வெள்ளந்தியாய்
கேட்டேன் 'மலைகளை
உடைத்து, வயிறு புடைக்க
உண்டு ஏப்பம்
விட்டுவிட்டார்களே' என்றார்.

'மலை முழுங்கி மஹாதேவன்
என்பார்களே ! அவர்கள்தான்
இவர்கள் என்றார்.
அடே ! உதாரணங்கள் கூட
உண்மையாகி விட்டதே ! என்ற
வியப்பில் சிந்தனை சென்றபோது,

தம்பி ! வளங்கள் வழங்கும்
வாய்க்கால்கள், ஆறுகள்
ஏரிகளைக் காணோமே !
அது எங்கே ? என்றேன்...

அதோ ! நீண்ட வால்கொண்ட
'வால்மார்ட்' கட்டிடம்
தெரிகிறதே அதுதான்
என்றார் வியப்பு மேலிட
மேலும் நடந்த போது,

நாம் தாகம் தீர்க்க
தண்ணீர் அருந்துவோமே
வண்ணச்சிறவிகளும், வாத்துகளும்
நீந்துமே தாமரைக்குளம்
அதாவது உண்டா என்றேன்...

ஓ...! அதுவா ?
'கேம்பஸ் கிளப்' என்ற பெயரில்
'வால்மார்ட்'டின் முதலை
முதலாளிகளின் சூதாட்ட
கூடமாகி விட்டதே என்றார்.

வீட்டின் நெருக்கத்தில்
அப்பாவும், அம்மாவும்
நின்றிருந்தவரை, முப்பத்தி
ஐந்து வாலிபனாக
மொழு மொழு என்றிருந்த
என்னைப் பார்த்ததும்,

ஒரே நேரத்தில் இருவருக்கும்
ஆனந்த அதிர்ச்சி !
பரஸ்பரம் சுகமும்,
நலமும் விசாரிப்பு
முடிந்ததும் கேட்டேன்.
'அம்மா ! அறுவடை
முடிந்தபின்னர், தாளடிகளில்
வாய்க்கால், வரப்புக்களில்
மாடுகள் மேயுமே அந்த 
வயல்களாவது மீதமுண்டா ?'
என்றேன்.

அதற்குள் அப்பா
முந்திக் கொண்டு
அதோ ! கரகர வென்று
உருளைகள் உருளும்
சப்தம் காதை துளைக்குதே !
'உலகமயமாக்கள் தொழிற்
கூடம்' அந்த இடம்தான் தம்பி
என்றார்.

மூச்சுத்திணறி, அப்போது
மயக்கம் போட்டு கீழே விழுந்தவன்தான்
இப்போதுதான் கண் திறந்தேன்
அம்மாவின் மடியில்
தலைவைத்துப் படுத்திருக்க

அப்பா மோரும் நீரும்
தந்து ஆசுவாசப்படுத்தினார்
அக்காவும், தம்பிகளும்
தங்கைகளும் கவலை தோய்ந்த
முகத்துடன் நின்றிருந்தனர்
அப்பா சொன்னார்
'தம்பி ! நாம் கலியுக
அழிவின் விளிம்பில் 
நிற்கின்றோம் என்றவர்.

வெள்ளிமலை [ கிராமத்தில் ]
அடையாளங்களை இழந்து
விட்டோம், இழந்தது
வெள்ளிமலை மட்டுந்தானா ?
இந்திய கிராமங்களும்தான்
என்றார் அப்பா ஆராத்துயரில்...

"புதுமைக்கவி" 
அதிரை அப்துல் ரஜாக்

Saturday, December 29, 2012

குடி குடியைக் கெடுக்குமா !?


'ஆல்கஹால்' என்பது ஒரு போதைப் பொருளா ?

ஆம். சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு 'நோயே' !

1. பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...

2. இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவர்களும்...

3. விஷேசத் தினங்களில் தங்களின் மகிழ்ச்சியை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவர்களும்...

4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...

5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...

6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...

7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...

8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...

9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...

10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...

11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் '420' களும்...

12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

என்னதான் பாதிப்புகள் ?

1. ஞாபக மறதி

2. உடல் உறுப்புகள் பாதிப்பு

3. பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்

4. கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்

5. கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்

6. தற்கொலை முயற்சி செய்தல்.

7. குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில்  சந்தேகித்தல்

8. குழந்தையின்மை

9. சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.

10.  இறுதியில் அகால மரணம்

'குடி' நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

என்னதான் தீர்வு ?

1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.

2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.

3. போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.

5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு 'கவுன்சிலிங்' செய்வதன் மூலம்  குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.

6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான 'ஜூன் 26' அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.

7. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் 'பூரண மதுவிலக்கு சட்டத்தை' இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள் பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...

பொறா[ ஆ ]மை !!!




தாம் அடையாத ஒன்றை பிறர் அடையும்போது ஏற்படுகின்ற வெளிப்பாடு 'பொறாமை' என்னும் சிந்தனையாக ஒருவரின் மனதில் ஆழமாக உருவாகின்றது. தான் ஏதே பல நூற்றாண்டுகள் இத்துனியாவில் வாழப் போகின்றோம் என்ற எண்ணத்தில் புதுசா புதுசா இதுபோன்ற தீய சிந்தனையை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்கின்றனர். இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும்...

இங்கு வசிக்கின்ற ஒருவர், எங்கேயோ வசிக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்வதில்லை... மாறாக ஒருவர் மற்றவரோடு தொடர்பில் உள்ளவர், அருகில் வசிப்பவர், உறவினர்கள், தொழில் சார்ந்தவர்கள் போன்றவர்களாகவே இருப்பர்.

1. ஒருவர், பிறரிடம் உள்ள வளர்ச்சியைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்...

2. பிறர், எளிமையான ஒருவரிடம் உள்ள நிம்மதியான வாழ்வைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்...

3. நான் தான் 'நம்பர்  1' னாக இருக்க வேண்டும், பிறர் நம்பர் 1' னாக வர எனக்கு பிடிக்காது என மனக்கணக்கு போடுபவர்களும்...

4. தன்னால் முடியாத ஒன்றை அவன் சாதித்து விட்டான்... அவனை எப்படியாவது “வீழ்த்திக்” காட்டுகிறேன் பார் என சபதம் எடுப்பவர்களும்...

5. எனக்கு அந்த பொருள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அண்டை வீட்டுக்காரனுக்கு அறவே கிடைக்க கூடாது என்ற சிந்தனைக் கொண்டோரும்...

6. “ஆ” அவளிடம் பார்... அழகிய புடவைகள், நகைகள் இருக்கின்றன என பெருமூச்சு இடுபவர்களும்...

7. அவனுக்குப் பார்....சொகுசான வேலை, கைநிறைய சம்பளம் எனக்கு ஒன்றும் அமைய வில்லையே ! என்ற வெறுப்பை வெளிப்படுத்துபவர்களும்...

8. அவரின் மிகப்பெரிய வீட்டைப்பார்... அழகிய தோற்றம், அதில் விலை உயர்ந்த சாதனங்கள், புதிய மாடல் கார் போன்றவற்றை எண்ணி வேதனைப்படும் ஜெலஸ்களும்...

9. என் கண் காணப் பிறந்த அந்தப் பொடியனைப்பார்... தன் இளம் வயதில் என்னை வீட பெரிய ஆளாயிட்டான் என கர்வங்கொள்ளும் பெரிசுகளும்...

10. நான் தான் அந்த தலைமைப் பதவிக்கு தகுதியானவன். ஆதலால் இப்போட்டிக்கு பிறர் வரக்கூடாது என்ற பேராசையில் 'ஜிக் ஜாக்'காக செயல்படுவோரும்...

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

'பல்லு' இருக்கிறவன் தட்டில் வைக்கும் 'பக்கோடா'வை முழுவதும் சாப்பிடுகிறான் என்றால் அவனுக்கு மென்று தின்பதற்கு இலகுவாக 'ஈ' என்று இளித்துக்கொண்டு இருக்கும் அழகிய, வலிமையான பற்கள் இருக்கின்றன. அதுக்கு நாம் ஏன் பொறாமைக்கொள்ள வேண்டும் !?

'தான்' என்ற அகந்தை நம்மிடம் அறவே அறுபட்டு, வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ள உங்களிடம் உள்ள 'பொறாமை' என்னும் உணர்வு சற்று விலகிக் காணப்படவேண்டும். இதற்கு உங்களை பொறாமைக் கொள்ளத் தூண்டுபவர்களின் நற்சிந்தனைகள், நற்செயல்கள், அவர்களின் வெற்றி, அவர்களின் ஒழுக்கம், அவர்களின் தானம், அவர்களின் தொழில் போன்றவற்றை மனதார குறிப்பாக போலித்தனம் இல்லாமல் பாராட்டி மகிழுங்கள். நீங்கள் கண்டிப்பாக அவரின் மனதில் நிலையாக இடம் பெறுவதோடு மட்டுமல்லாமல் அவரும் உங்களிடம் வசப்பட்டு விடுவார்.

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள் பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...

Friday, December 28, 2012

தலைவர் யார் !?


1.   நானே பெரியவன்.... நானே சிறந்தவன்.... என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரணும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது

2.   விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது

3.   எதிர்மறையாகச் சிந்திப்பது

4.   பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.

5.   தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது

6.   அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது

7.   தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.

8.   சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது

9.   மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது

10. பதவி...! பதவி...!! பதவி...!!! என்ற நினைவில் எப்போதும் வாழ்வது

போன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு

நல்லப் பண்புகளாகிய....

1.   எளிமையாக வாழ்தல்

2.   ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல நட்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, அன்பு செலுத்துதல், கடமையை நிறைவேற்றுதல்

3.   வேகமாகச் செயல்படுதல்

4.   எப்பொழுதும் நேர்மையாக செயல்படுதல்

5.   தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்

6.   மூத்தோர்களின் நல்ல அனுபவங்களைப் பெறுதல்

7.   ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்

8.   தீர்க்கமான முடிவு செய்தல்

9.   வீண் விரயத்தைக் குறைத்தல்

10. தரத்தை மேம்படுத்துதல்

11. திட்டமிடுதல்

12. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்

13. எளியோருக்கு உதவுதல்

போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் நிச்சயம் மேன்மை அடைவீர்கள். இதற்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு எடுத்துக்காட்டை தங்களுக்கு கூற விரும்பிகிறேன்....

நூறு பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளார் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும் ? ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார். “ஆம்“ என்று அனைவரும் கையைத் தூக்கினர்.

மீண்டும் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார் “ஆம் “ என்று அனைவரும் மீண்டும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார்... கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கின்றோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களின் மூலம் சிறந்தவன், ஒழுக்கமானவன், தலைமை வகிக்க தகுதியானவன் போன்ற சிறப்புகளைப் பெறுகின்றோம்...

நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி  அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்லப் பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள் !

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள்பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...

Thursday, December 27, 2012

[ 7 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...

சினிமா...
இயக்குநர் வீடு...
புல்வெளி நடுவே...
கம்பீரமாய் காட்சி தந்தது 
என்றும் அமைதியான சூழல்
அன்று மட்டும்
அமைதி குலைந்து காணப்பட்டது
ஆசையாய் வளர்த்த மகள்
குமரி என்று பாராமல்
குழந்தையாய் வளர்ந்த மகள்
வளர்ந்து ஆளாகி 
ஓடிவிட்டாள் ஒருவன் கூட
கடிதம் கூறியது அவள் காதலை
கதறி அழுதாள் தாயவள்
தயங்கி நின்றார் இயக்குனருமே ..!
ஆறுதலுக்கு சொந்தங்கள்
சொல்லால் ஒத்தடம் இட
அங்கு வந்தார் நம் கவிஞானி ..!
அனைவரும் சினம் கொள்ளும் வண்ணம்
அதிர சிரித்தார்...! என்சிரித்தீர் ? என்று
பலர் கேட்க... பதில் பகர்ந்தார் கவிஞானி
இயக்குனரின் படம் பார்த்து
ஆயிரம் ஆயிரம் மணங்கள்
பாலாகி பெற்றவர்களை விட்டு
ஓடியபோது...
இயக்குனரின் படத்தின்
வெற்றி என்றார்கள்
அவர் மகள் ஓடியது மட்டும்
துயரமா !?
பல ஆண்டு காலம்
காதல் பாடம் கொடுத்த
இயக்குனருக்கு...
ஒரே நாளில் ஓராயிரம்
பாடத்தை அவர் மகள்
கொடுத்து விட்டால்...
என்று சிரித்தார் கவிஞானி...!
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

Tuesday, December 25, 2012

[ X'clusive ] : பற்களில் புழுவா !? அதிர்ச்சி ரிப்போர்ட் !


'தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்பது முதுமொழி. 'பல் போனால் சொல் போச்சு' என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் 'பொக்கை வாய்' என கேலி பேசுவோரும் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல், நரிப்பல், தெத்திப் பல் போன்ற பெயர்களிலும் இவற்றை அழைப்பது உண்டு.

பல்லுக்கு இம்புட்டு பில்டப்பா !?  :)

1. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்பட்டவுடன் உடனே ஒரு 'பாரசிட்டமால்' போட்டால் சரியாகிவிடும் என எண்ணுகின்ற ஒரு வகையினரும்...

2. முறையான மருத்துவரிடம் சென்று அலோபதி சிகிச்சையை எடுத்துக்கொள்வோரும்...

3. இல்லை.... இல்லை.... நாட்டு வைத்தியம் பார்த்தல்தான் எனக்கு குணமாகும் !? என்று சொல்லி, அருகில் உள்ள ஊருக்குச் சென்று பற்களில் உள்ள பூச்சிகளை (புழு) நீக்கிவிட்டால் போதும் குணமாகி விடலாம் !? என எண்ணுகின்ற மற்றொரு வகையினரும்

என இருக்கத்தான் செய்கின்றனர்.

சரி விசயத்துக்கு வருவோம்...

பல் வலி என்றவுடன் சிலர் பல்லில் பூச்சி (புழு) எடுப்பதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள 'உடையநாடு' என்ற கிராமத்திற்கு சென்று அங்குள்ள நாட்டு வைத்தியர் !? ஒருவரை சந்தித்து பற்களில் இருக்கும் பூச்சியை (புழு) !? எடுத்துவிட்டால் பல்வலி குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சிலர்  அந்நாட்டு வைத்தியரை !? நாடிச்செல்கின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் சென்று வருவது நமது கவனத்துக்கு வந்தவுடன் அதன் உண்மை நிலையை அறிய நாம் விசாரணையில் அதிரடியாய் இறங்கினோம்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் உள்ள அழகிய கிராமம் 'உடையநாடு'. பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் இவ்வூரில் பல்லுக்கு பூச்சி எடுக்கும் டாக்டர் எங்கே ? என்றாலே அனைவரும் கைகாட்டுகின்றனர் அவர் சொந்தமாக நடத்துகின்ற சிறிய கூல்டிரிங்க்ஸ் கடையை நோக்கி. நாமும் அங்கே சென்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் தொடர்ந்து பேசினோம்...

'ஆமாம்...பல்லில் பூச்சி எடுப்பதற்காக பல ஊர்களிலிருந்து இங்கு வருகின்றனர். ஒரு வகை வேரை’க்கொண்டு [ அதன் பெயர் என்ன ? என்பதை சொல்ல மறுத்துவிட்டார் ] வலி ஏற்படும் பற்களில் வைத்து தேய்த்தால் அதில் உள்ள புழுக்கள் !? அனைத்தும் வெளியே வந்துவிடும். பல்லை பிடுங்க வேண்டியதில்லை'.... என்று உரையாடிக் கொண்டிருக்கும் போதே ஒரு அம்மா தனது 8 வயது சிறுவனை பல்லில் வலி எனச்சொல்லி பற்களில் பூச்சி எடுப்பதற்காக இவரிடம் அழைத்து வருகின்றார்.

உடனே எங்களை அமர வைத்துவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் கையில் வேர் ஒன்றைப் பிடுங்கி கொண்டு வருகிறார். அவ்வேரை சிறுவனின் வாயில் விட்டு ஆட்டுகிறார்.....சில நிமிடங்களில் என்ன ஆச்சர்யம் ! புழு வந்து கீழே கொட்டுகிறது...! அதுவும் ஒன்றல்ல...  இரண்டல்ல... பத்து புழுக்கள்… உடனே கையில் வைத்துள்ள இலையை பற்களில் வைத்து மெல்லச்சொல்லி அச்சிறுவனிடம் கொடுக்கிறார். இதோடு ட்ரீட்மென்ட் ஓவர் !

இதற்காக ஒரு வருட கேரண்டி !? கொடுத்து மருத்துவ பீஸ்’ஸாக ரூபாய் 100 ஐ பெற்றுக்கொண்டார் அதாவது ஒரு பூச்சிக்கு(புழு) ரூபாய் 10 வீதம் வசூல் செய்கின்றார்.

இம்மருத்துவ முறையைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம்.... தனது பெயரை 'இளங்கோவன்' என அறிமுகம் செய்துகொண்டு தொடர்கிறார்...


பற்களில் பூச்சி [ புழு ] எடுப்பது குறித்து பிரபல பல் மருத்துவர் பஜ்லூர் ரஹ்மான் BDS அவர்களை சந்தித்து விளக்கத்தைக் கோரினோம்…

ஆக மொத்தத்தில் மருத்துவர் பஜ்லூர் ரஹ்மான் BDS அறிவுரையின் பேரில் பற்களில் பூச்சி(புழு) எடுப்பது என்பது மோசடியான ஓன்று என்பது நிரூபணம் ஆகின்றது.  பொதுமக்கள் இதுபோன்ற மோசடியான வைத்திய முறைகளை தவிர்த்துக்கொள்வது நமது உடலையும், பொருளாதாரத்தையும், நேரத்தையும் பாதுகாப்பதாக இருக்கும்.

மேலும் பல் நலத்தை பேணுதல் மிகவும் முக்கியமான ஓன்று. பல நேரங்களில் இருதயம், சர்க்கரை, தோல் போன்ற நோய்கள் பல் நலனுடன் சம்பந்தப்படும் ஒன்றாகும். பல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் என்று நினைக்க வேண்டியதில்லை... இன்றைய மருத்துவ துறையில் பற்களுக்கு எண்ணற்ற நவீன ட்ரீட்மென்ட் வந்துள்ளன. அவற்றில் 'ROOT CANAL TREATMENT' ம் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம், பற்குழி, சுத்தம் செய்தல் போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள் பாதுகாக்கப்படும்.

மேலும் கீழ்கண்ட மூன்று விஷயங்களை முக்கியமாக நாம் கடைபிடித்தால் நம் பற்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்பது மருத்துவரின் ஆலோசனையாக இருக்கின்றது.

அதாவது,

1. தினமும் இருமுறை பல் துலக்குவது.

2. சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் தண்ணீரால் வாய்யை கொப்புளிப்பது.

3. ஆறு மாதத்திற்கு ஒரு முறை தகுதியுள்ள மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது.

நமது பல்லை பாதுகாக்க நாம் அடிக்கடி பல் மருத்துவரை சென்று பார்ப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. தகுதியுள்ள பல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வது என்பதே சிறந்தது.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் தொடரும்....

Monday, December 24, 2012

'ப்பூ'... திமிரப்பாரு !


'தராசு' நமக்கு நன்கு அறிமுகமான ஒரு கருவி. ஒரு பொருளின் எடை அளவை சரியாக எடை போடுவதற்காக பயன்படுத்தப்படும் ஓன்று. அது ஒரு இயந்திரம் அதற்கு விருப்பு / வெறுப்பு எல்லாம் கிடையாது. தெரிந்தவர் / தெரியாதவர் என்ற பாகுபாடில்லை. கைபிள்ளையாக இருந்து கொண்டு தன் கடமையைச் செய்து உண்மையான விசுவாசத்தை தன் எஜமானிக்குக் காட்டும்.

சரி விசயத்துக்கு வருவோம்...

பலசரக்கு, காய்கறி, பழக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் போன்றவற்றில் எடை மோசடி ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடையைப் பத்தி விரிவா எவ்வளவு வேணும்டாலும் எழுதி ஒரு புத்தகமே வெளியிடலாம்... அந்தளவு விஷயம் இருக்கும்.....அனைத்து ரேஷன் கடைகளிலும் 'எலட்க்ரானிக் தராசு' மூலமாகத்தான் பொருளை எடை போட்டு கொடுக்கணும்டு நம்ம அரசு அறிவித்தும் அரசு வழங்கிய எலட்க்ரானிக் தராசை அப்படியே ஓரமா ஒதுக்கி வைச்சிட்டு சில கடைகளில் வில் தராசு மூலமா எடை போடுறாய்ங்களாம் !? ஏன் இப்புடின்னு கேட்டா ? கரண்ட் இல்லிங்கன்னு பதில் !? அதிலேயும் இருபது கிலோ அரிசி வாங்கினா பதினெட்டே முக்கால் தான் இருக்காம். இரண்டு கிலோ சீனி வாங்கினால் ஒன்னேமுக்கால் சொச்சம் தான் இருக்காம். சரி மிரட்டும் மின் வெட்டிலிருந்து அவ்வப்போது தலைகாட்டும் மின்சாரத்தை பயன்படுத்தி எலெக்ட்ரானிக் தராசின் மூலம் அவசர அவசரமா எடை போட்டாலும் இதே பிராப்ளமாம் !

அடுத்து 'கூம்பு குடுவை' பெயரே வித்தியாசமா இருக்குல்ல... இத வச்சிதான் மண்ணெண்னையை அளக்கிறாய்ங்க...அப்படியே மல்லாக்க படுத்துட்டு குடுவையை நிமிர்த்தி கவுத்திப் பார்த்தா அதில் உலகம் தெரியுமளவுக்கு ஓட்டை ! அதிலே நுரையை பொங்க  பொங்க வரவழைத்து அவசர அவசரமா அளந்து கொடுக்கிறாய்ங்களாம்... அஞ்சு லிட்டர் வாங்கினா கேனிலே நாலேகால் லிட்டரு காட்டுதாம்...!? ரெய்டு வரும் ஆபி'ஜ'ரும் கண்டுகிறதுல்லையாம் அவிய்ங்களும் தன் பங்குக்கு கலெக்க்ஷனை கம்முண்டு வாங்கிட்டு பொத்திகிட்டு போறாய்ங்களாம். நாட்லே விவரம் தெரிஞ்சவங்க ரேஷன் கடைக்காரன்கிட்ட 'என்னப்பா எடை குறையுதே'ன்னு முன்னாடி நிண்டு தில்லா கேட்டா... வரிஞ்சி கட்டிகிட்டு சண்டைக்கு வர்றாய்ங்களாம்.

கட்டுக்கடங்காத கூட்டத்தில்,

கால் கடு கடுக்க...
வேகாத வெயிலில்...
வேர்த்து விறு விறுக்க...
நாக்கு வறண்டு...
வரிசையில் நிண்டு...
கார்டைக் காட்டி...
காசை நீட்டி...
சீட்டே வாங்கி...
பையை நீட்டி...
சரியா பொருளக் கேட்டா...

'ப்பூ'... திமிரப்பாரு !

அப்புடியும் 'நமக்கேன் வம்பு'ன்னு சைலண்டா விலகி வேறு கடைக்கு சென்றாலும் அங்கேயும் இந்த முள்ளு ஆ(ட்)டிக்கிட்டு தன் “ஜொ”ள்ளை தொடருதுப்பா.

தான் ஆடாட்டியும் தன் தசை ஆடும்பாய்ங்கலே அது போல தராசில் "முள்ளு' மட்டும் ஆடுதாம் !? கூம்புக் குடுவையிலே நுரை மட்டும் பொங்குதாம் !? காசு கொடுத்தும் 'கனம்' இல்லையாம் !? எடை குறையுதாம்ப்பா...!

என்ன கொடுமைடா இது !?
[ இது ஒரு மீள் பதிவு ] 
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் தொடரும்....

[ 6 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...

மருத்துவ வாளகம்...
நோயாளிகளின் சங்கமம்
பல்வேறு நோயாளிகள்
நோய் தாயென்று பாராது
சேயென்றும் பாராது நோய்
ஆணென்றும் பாராது
பெண்ணென்றும் பாராது
மனித வர்க்கத்தை 
பல்வேறு முகம்கொண்டு
தாக்கியதன் விளைவாக
மருத்துவமனையில் பெருங்கூட்டம்
அதிலொரு நோயாளி
வாயிற்று வலி தாங்காது
உருண்டு பெரண்டு
துடித்தார் ஒரு நோயாளி
பார்ப்பவர் அனைவரும்
பதைபதைத்து போயினர்
அங்கு அந்த நம் கவிஞானி
பதைக்காமல் சிரித்து நின்றார்

ஏன் சிரித்தார் கவிஞானி
காண்போர்கள் வியந்து
ஏன் சிரித்தீர் என்று கேட்க
ஞானியவர் பதில் பகர்ந்தார்
பாவிமகன் இவனும்தான்
உழைத்து உழைத்து ஓடானான்
உழைத்து கிடைத்த பணம் தன்னை
மனைவி மக்களுக்கு
கொடுக்காமல் குடித்து குடித்து
உடல் நலத்தை கெடுத்து கொண்டான்
குடித்து குடித்து குடல் அழுகி
வலியெடுத்து புரள்கின்றான்
பசித்த குழந்தை கொடுக்காத
பாவிக்கு குடல் கெட்டு
போனதற்கு இவன்தானே
காரணமையா இவன் செய்த
பாவம் இவனே சுமக்கின்றான்
என சிரித்தார் கவிஞானி

'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

Sunday, December 23, 2012

மறந்திடாதிங்க : குடியிருப்பவர் அடையாள அட்டை !


 அடையாள அட்டை என்றால் என்ன ?

குடியிருப்பவர் அடையாள அட்டை தேசிய மக்கள் தொகையைப் பதிவேட்டிலிருந்து பெறப்படுகிறது. கடலோர கிராமங்களில் தொடக்கி உருவாக்கப்பட்டு வரும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நாட்டில் உள்ள அனைத்து வழக்கமாக வசிக்கும் நபர்களுக்கான ஒரு பதிவேடு ஆகும். இதில் ஒவ்வொரு வழக்கமாக வசிக்கும் நபருக்கும் ஒரு அடையாள எண் இருக்கும். இவ்வடையாள அட்டை, அடையாள எண்ணைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் தனிநபர் விவரங்களையும் கொண்டிருக்கும். நீங்கள் இந்தியாவில் வழக்கமாக வசிப்பவர்தான் என்ற அடையாள ஆவணத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த அடையாள அட்டையில் உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்கள் தந்தை / தாயாரின் பெயர், இனம், பிறந்த தேதி, பிறந்த ஊர், கைவிரல் ரேகைப் பதிவு மற்றும் அடையாள எண் ஆகியவை இருக்கும். இவ்விவரங்களை அடையாள அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும். அதே சமயத்தில் தனிநபர் விவரங்கள் மற்றும் விரல் ரேகைப் பதிவு விவரங்கள், அடையாள அட்டையில் உள்ள நுண் மின்னணு செல்லில் [ Microprocessor Chip ] பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்தியாவில் 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின்  70 மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வழக்கமாக வசிப்பவர் என்ற அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பதிவேட்டில் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கும் அடையாள எண் கொடுக்கப்படும். முதன் முதலில் இந்த அடையாள அட்டையைப் பெறுபவர்களாக நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்கிறீர்கள்.

 சரி என்னதான் பயன்கள் ?

1. உங்களுடைய அடையாளத்தை நிலைநாட்ட

2. உங்களுடைய குடியிருப்புத் தகுதியை நிலைநாட்ட

3. வயது மற்றும் பிறந்த தேதியை உறுதிசெய்ய [ இப்பதிவில் இணைக்கப்பட்ட அட்டையில் உள்ளவாறு ]

4. வங்கி கணக்கு, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம்/வாகனப்பதிவு, தொலைப்பேசி/கைபேசி. LPG கேஸ் இணைப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போதும், மேலும் திருமணப் பதிவு, நிலம்/சொத்து போன்றவை பதிவு செய்யும்போதும், இந்த அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிலைநாட்டுகிறது.

 பயன்படுத்தும் வழிமுறைகள் :

இந்த அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிருபிக்கும் முக்கியமான சான்றாவணம் ஆகும். உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கேட்கும் அலுவலங்கள் / நிறுவனங்களுக்கு இந்த அடையாள அட்டையைக் காட்டலாம். மத்திய / மாநில அரசு அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / வட்ட அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வங்கிகள், பாஸ்போர்ட் அலுவலகம், சேவை நிறுவனங்களான தொலைப்பேசி/கைபேசி நிறுவனங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்கள் போன்றவற்றில் இந்த அடையாள அட்டை பயன்படும். அடையாள அட்டையில் அச்சடிக்கப்பட்டுள்ள விவரங்களை பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம் போன்ற விவரங்களைத் தவிர மின்னனு செல்லில் பதிவு செய்யப்பட்ட மற்ற விவரங்களை எங்கெல்லாம் [ Card Reader ] என்று சொல்லக்கூடிய படித்தறியும் கருவி இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்தக்கருவி மூலம் மின்னனு செல்லில் உள்ள விவரங்களை படித்தறிய முடியும்.

மின்னனு செல்லில் தற்போதைய / நிரந்தர முகவரி, திருமணநிலை, துணைவரின் பெயர் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இது உங்களுடைய அடையாளத்தை நிருபிக்கும் ஒரு சான்றாவணம் என்பதால் அரசு அல்லது காவல்துறை அல்லது பாதுகாப்புப்படை அதிகாரிகள் அடையாளம் பற்றிக் கேட்டால் நீங்கள் இதை அவர்களிடம் காண்பிக்கலாம். உங்கள் அடையாளம் பற்றிய கேள்வி விசாரணை முடிந்தபின் அடையாள அட்டையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள மறந்து விடாதிர்கள். சில சூழ்நிலைகளில் அடையாள அட்டையை கொடுத்துவிட்டு செல்லவும் என்று கேட்டாலொழிய, மற்ற நேரங்களில் அட்டையை விட்டு விட்டு வராதிர்கள். இம்மாதிரி நேரங்களில் அடையாள அட்டையை ஒப்படைத்தற்கான அத்தாட்சியை சம்பந்தப்பட்ட அலுவலகம் /அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளவும்.

பாதுகாப்பது மற்றும் தொலைந்து போனால் புகார் செய்வது தொடர்பாக..
உங்களுடைய அடையாள அட்டை உங்கள் அடையாளத்தை நிருபிக்கும் விலைமதிப்பற்ற ஓர் ஆவணமாகும். ஆகையால் இதைப்பாதுகாப்பதும் பத்திரமாக வைத்திருப்பதும் உங்களுடைய கடமையாகும். வேறு எவரும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அடையாள மோசடி செய்தல் போன்றவற்றை தவிர்க்க இந்த அடையாள அட்டையை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அடையாள அட்டை சேதமடையாமல் இருக்க இதை நீர்/ நெருப்பு / மின்னனு சாதனங்கள் படாமல் பார்த்துக்கொள்ளவும். இல்லையெனில் மின்னனு செல்லில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் பாழாகிவிடும். செல்போனுடன் அடையாள அட்டையை ஒன்றாக வைக்காதீர்கள். இதை வளைக்கவோ மடிக்கவோ கூடாது. அப்படி செய்தால் அட்டையில் பதிக்கப்பட்டுள்ள மின்னனு செல் வெளியே வந்துவிடும். பின்பு அடையாள அட்டை பயனற்று விடும்.

 அடையாள அட்டையை பாதுகாப்பாக வைப்பதற்கும் அவசர சூழ்நிலையில் செய்ய வேண்டியதற்கும் சில வழிமுறைகள்...

1. உங்களுடைய அடையாள எண்ணை குறித்து வைத்துக்கொள்ளவும். அட்டை தொலைந்து விட்டாலோ களவு போய் விட்டாலோ மாற்று அட்டை பெற இது பயன்படும்.

2. உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினருடைய அடையாள அட்டை தொலைந்துவிட்டால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். நீங்கள் மாற்று அட்டை பெற படிவம் R-1 இல்  விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்ப படிவத்துடன் காவல் நிலையத்தில் அட்டை தொலைந்ததற்கான கொடுக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை யையும் [ FIR ]  இணைக்க வேண்டும்.

3. உங்கள் அடையாள அட்டையில் அச்சிடப்பட்டுள்ள தனிநபர் விவரங்களில் திருத்தமோ, மாற்றமோ செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் கிராம அதிகாரியையோ, தாலுகா அதிகாரியையொ கேட்டு உதவியைப் பெறலாம். அப்படி முடியாத பட்சத்தில் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரை மின் அஞ்சல் [ E-mail ] மூலமோ அல்லது கட்டனமில்லாத தொலைப்பேசி மூலமோ தொடர்பு கொண்டு உதவியைப்பெறலாம்.

4. அடையாள அட்டைதாரர் இறந்துவிட்டால் அவருடைய நெருங்கிய உறவினர்கள் இறந்த நபரின் அட்டையை குடியுரிமைத் தலைமைப் பதிவாளரிடமோ அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரியிடமோ நேரிடையாகவோ தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இயக்குனர்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம்,
E-பிரிவு, மூன்றாவது மாடி,
இராஜாஜிபவன், பெசன்ட்நகர்,
சென்னை-90 , தமிழ்நாடு
தொலைப்பேசி எண் : 044-24912993, 24911992

அல்லது

வட்டாட்சியர் அலுவலகம்
மாவட்டம்
தமிழ்நாடு

 புதிதாக பதிவு செய்ய விண்ணப்பிக்கவும், அட்டை வழங்குவதற்கான வழி முறை

முதன் முதலில் தகவல் சேகரித்த போது விடுபட்டுவிட்ட வழக்கமாக வசிப்பவர்களும், 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், தகவல் சேகரித்தபின் புதிதாகக் குடியேறியுள்ளவர்களும் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். இத்தகைய நபர்கள் தாலுகா பதிவாளரிடம் தங்களை சேர்க்குமாறு விண்ணப்பிக்கலாம்.

 தொடர்பு கொள்ள :

உங்களுக்கு அடையாள அட்டை பற்றிய தகவல்கள் அறிய விரும்பினாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள விரும்பினாலும் மாற்று அட்டை பெற விரும்பினாலும், அட்டை திருட்டு போய்விட்டாலும் அல்லது தொலைந்து போனாலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய, தேசிய அடையாள அட்டை சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்.

E-mail : nprcoastal.rgi@nic.in / npr.tn@nic.in
கட்டணமில்லாத் தொலைப்பேசி எண் : 1800110111
கீழ்க்கண்ட வலைத்தளத்திலும் விவரங்களை அறியலாம் :
www.censusindia.gov.in

Directorate of Census Operations ,
Chenai – 600090
Tamil Nadu
Tel : 044-24911992

Friday, December 21, 2012

இலவசம் முந்துங்கள் !!!


சமூகத்தில் காலம் காலமாக 'இலவசம்' என்ற பெயரில் பொதுமக்களிடயே வழங்கப்பட்டு வரும் பொருட்களால் சமுதாயத்தின் நிலைகள் மாறிக்கொண்டே வருகிறது என்றுச் சொன்னால் மிகையாகாது.

ஆம்..! பிறப்பு முதல் இறப்பு வரை எத்துணை இலவசங்கள் !

1. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செய்யும் அறிவிப்பாகிய “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் இலவசமாக வழங்குவோம்” என்பதாகட்டும்...

2. தேர்தல் நடக்கும் முந்திய நள்ளிரவில் பொதுமக்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை, பரிசுப்பொருளாகட்டும்...

3. இலவசப் பொருட்கள் வழங்க “நமது தலைவர்” வருகிறார் என்ற கட் அவுட் அறிவிப்பாகட்டும்...

4. புதிய கடையின் திறப்பு விழாவின்போது கொடுக்கும் இலவசமாகட்டும்...

5. ஒரு பொருள் எடுத்தால் மற்றொன்று இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்...

6. நூறு சதவீத பொருள் வாங்கினால் கூடுதலாக இருபது சதவீதம் இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்...

7. பண்டிகைக்கால தள்ளுபடியாகட்டும்...

8. இன்று ஒரு நாள் மட்டும் எதை எடுத்தாலும் பாதி விலை ( ?! ) என்ற அறிவிப்பாகட்டும்...

9. ஒரு மனை வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதாகட்டும்...

10. நூறு ரூபாய்க்கு டாப் அப் செய்தால் நூற்றுஐம்பது ரூபாய்க்கு டாக் டைம் என்பதாகட்டும்...

இப்படி இலவசங்கள் சமூகத்தில் ரொம்ப மலிவாகக் காணப்படுகிறது.

இலவசம் என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.

அரசால் தேவையானவர்களுக்கு இலவசங்கள் வழங்குவதில் தவறில்லை என்றாலும், உழைத்து பிழைக்கக்கூடிய வாய்ப்புள்ளவனுக்கும், வசதி படைத்தவனுக்கும் இலவசங்களைக் கொடுப்பது, அவனை சோம்பேறியாக்கிவிடுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய Professional Tax, Sales Tax, Central Sales Tax, Custom Duty, Income Tax, Dividend Distribution Tax, Excise Duty , Municipal & Fire Tax, Staff Professional Tax, Cash Handling Tax, Food & Entertainment Tax, Gift Tax, Wealth Tax, Stamp Duty & Registration Fee, Interest & Penalty, Road Tax, Toll Tax , Vat  & etc போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” என்பது பலமொழி ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை பசியாற்றிவிடலாம். அந்த நிமிடத்திலேயே அவனை அடுத்தவர்களிடம் கையேந்தவும் பழக்கிவிடுகிறோம். இது மட்டுமல்லாமல் மீனை பரிதாபப்பட்டு கொடுப்பவனுக்கும் இதனால் வீணான செலவு. இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.

இன்று பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பை நாளை நாம் பயன்படுத்தலாம் என்பதை தூக்கி தூர வைத்துவிட்டு அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது என்பதைக் கருத்தில் கொண்டு இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.

கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி !
[ இது ஒரு மீள் பதிவு ! ]
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Thursday, December 20, 2012

குப்பைத்தொட்டி !!!


 பெயர்:  குப்பைத்தொட்டி

 மாற்றுப்பெயர்: சுகாதார 'குப்பைத்தொட்டி'

 வயது: எப்ப வேனும்ண்டாலும் 'துரு'ப் பிடித்து தூக்கி வீசப்படலாம்.

 நிரந்தரமா இருக்குமிடம்: 1. ரோட்டோரம், 2. தெருவோர முச்சந்தி, 3. சாக்கடையோரம்

 வேதனைப்படுவது: மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து எங்கள் மீது கொட்டுபவர்களை நினைத்து.

 எதிரிகள்: குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அல்லாமல் காலதாமதம் செய்யும் உள்ளாட்சி ஊழியர்கள்

 வருந்துவது: எங்கள் மீது மலக் கழிவுகளை கொட்டுபவர்களை நினைத்து

 சாதனை: சுற்றுப்புறத்தைச்  சுத்தப்படுத்தும் தொட்டி

 வேண்டுகோள்: மக்கள்தொகை பெருகிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கும் கூடுதல் இட ஒதுக்கீடு அளித்து பொதுமக்களுக்கு கூடுதல் சேவையை அளிக்க ஆங்காங்கே தெருவின் முக்கியப் பகுதிகளில் தொட்டிகளை அதிக எண்ணிக்கையில் வைக்க வேண்டுகிறோம். மேலும் கொசுக் கடியிலிருந்து எங்களை பாதுகாக்கும் விதமாகவும், எங்கள் மீது வீசும் துர்நாற்றத்தை போக்கும் விதமாக எங்களைச்சுற்றி 'பிளிச்சிங்' பவுடரை இட வேண்டுகிறோம்.

 கருத்து: "குப்பைகளை தொட்டியில் போடுங்கள், வெளியில் போடாதீர்கள்", "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்’’

Wednesday, December 19, 2012

[ 5 ] ஏன் சிரித்தார் கவிஞானி..? சிரிப்பது தொடர்கிறது...

காரிருள் கொண்டுவந்த மழை
ஊர் கோடியில் பெருவெள்ளம்
வீதியெங்கும் பாய்ந்த வெள்ளம்
வீட்டிற்குள்ளும் புகுந்ததுவே
அடுக்களையும் என்றும் பார்க்காது
படுக்கையறை என்றும் பார்க்காது
புகுந்ததுவே பெருவெள்ளம்
குடியிருப்போரை பதைபதைக்க
வைத்ததுவே பெருவெள்ளம்
மக்கள் படும் துயரம் கண்டு
அனைவரும் அடைந்தனரே பெரும் துயரம்
அவ்வழியே வந்த நம் கவிஞானி
மனம் கனத்தும் நகைத்தாரே ஏன்..?

இதோ கவிஞானி பதில்
பண்டைக்கால மக்கள் .
மேடு பள்ளம் பார்த்து
வீடுகளை கட்டிவைத்து .
ஊரென்றும்... வீதியென்றும்
குளமென்றும் ஏரியென்றும்
ஓடையென்றும் வாய்க்கால் என்றும்
வகுத்து வைத்த விதியை மீறி
ஆற்றுக்குள்ளும் ஏரிக்குள்ளும்
வீட்டுமனை போட்டு விட்டு
ஏரிகளை ஊர்களாய் மாற்றி விட்டு
ஊருக்குள் தண்ணீர் என்றால்
நகைக்காமல என்ன செய்வேன்
என்றாரே கவிஞானி
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

Monday, December 17, 2012

புதுமைக்கவியின் அதிரைக்கவிதை !

வங்கக்கடலாம் தங்கக்கடலும்
வளமுரு அருங்காவிரியும்
ஊண் ஊட்டிட்டியே தாலாட்டி
வளர்த்த, செல்லிமாநகரெனும்
அதிரையின் அழகிய சரித்திர வரலாறு
கூறுவோம், இத்தளத்தில் காணீர் !

தொன்று தொட்டே துறைமுகத்தொடர்பால்
வளமிகு வாணிபம் செய்தே
கொள்வினை, கொடுப்பினையும் கொண்டு
'செல்லிமாநகர்' கொழித்துச் செழித்து
வரலாற்றுச்சுவடுகளில் அதன் அழகிய
சரித்திரத்தை ஆழவும் பதித்து

வரதுங்க பாண்டியனின் சகோதரர்
அதிவீர பாண்டியன் எனும்
மாமன்னன் பெரும்புலமை பெற்ற
புலவனும் ஆவான் அறநெறிமிக்க
அரசாட்சி கொண்ட பேரரசனுமாவான்

வாழைக்கொல்லை எனும் எழில்சூழ்
வளமிகு நிலத்தில் 'கோட்டை' ஒன்றை
அமைத்து, அறம் தழைக்க
அம்மாவீரனும் கோலொச்சியே
கொற்றவனாகி ஆண்டான் [ கி.பி. 1562-1567 ]

சிறப்புரு, சீர்மிகு செல்லிநகர்
அதிவீர பாண்டியனின் அதிவீரமிகு
தீரச்செயலால் அவன் பெயர் சூடியே
[ நன்றியுள்ள ] மக்கள் அதிவீர பாண்டிய 
பட்டினம் என்றே அழைத்தனர்.

மன்னனும் மக்களின் அன்புகண்டு மகிழ்ந்தான்
காலத்தின் ஓட்டத்தில் அப்பெயரும்
மருவி, திரிபுமாகி 'அதிராம்பட்டினம்'
என்றே நிலைத்து நின்றதேயாகினும்,
இறுதியில் அதுவும் சுருங்கி
'அதிரை' - என்றே ஆனது.

வாணிபத் தொடர்பால் அராபியர்
அதிரையை 'அபாத்' - என்றே அழகிய
பெயராலும் அன்று அழைத்தனர்
வரலாற்றிலும் அதனை பதித்தனர்.

எல்லாம் வல்ல ஏகனின் அருள்
தங்கியே நிற்கின்ற, அதிரையாம்
சீர்பதியில் ஆன்மிக அறிஞர்கள்
அறத்துறை வேந்தராம் வள்ளல்
காதிர் முகைதீன் மரைக்காயர்

இலங்கு தமிழில் இலக்கியப்பா
வடித்த 'அமிர்தகவி' செய்யது 
முஹம்மது அண்ணாவியார் அவர்தம்
வரிசையில் இன்றும் அதிரையில் 
புலவர்கள் கவிஞர்கள் என
அதன் தொடரும் நீளுமே...!

தேசவிடுதலையில் உயிரை 
துப்பாக்கி முனையில் அர்ப்பணம்
செய்ய முன்வந்த, தியாகச்சீலர்களாம்
தியாகி எஸ்.எஸ். இபுராஹீம், அப்துல் ஹமீது
சுதந்திரப்போரட்ட விடுதலைப் போரில்
சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ அமைப்பில்
சேவையாற்றிய உடன் பிறந்த சகோதரர்கள்
முஹம்மது ஷரிப், செய்யது முஹம்மது 
இன்னபிற இம்மண்ணின் மைந்தர்களும்
இம்மண்ணில் மறைந்தே வாழுகின்றனர்.

செல்லிநகரம் அதிரை குறித்து
அதன் சிறப்பினை யாழ்ப்பாணத்து
புலவனொருவனும் பாவிலே
நாவுரைத்துப் பாடினான் இதன்கீழ்
காணுவீர் !

""கல்வி மாண்டவர் களுன்று
வைகிடமாம் செல்லிமாநகர்"

[ பொருள் : கல்வியில் சிறந்த ஆன்றோர் அறிஞர்கள் நெருங்கியே வாழும் ஊர் ]

இறையருள் பொழியும் அதிரை நம்
நனவிலும், கனவிலும்
நீங்காது நின்று என்றும்
நல்லோர், உலகோர் உள்ளத்தில்
வாழுமே !

"புதுமைக்கவி" அதிரை அப்துல் ரஜாக்

Sunday, December 16, 2012

[ 4 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...

முதுமையை தொட்ட மங்கை
பதுமையாய் காட்சி தந்தாள்
தங்க நகை பல அணிந்து
வீதியிலே பவனி வந்தாள்
பார்பவர்கள் நகைத்திருக்க 
பக்கத்திலே கள்வனவன் 
தற்றுனம் பார்த்து நகைதன்னை 
பறித்து சென்றான்
அனைவருமே பதை பதைத்திருக்க 
கவிஞானியோ சிரித்து நின்றார்

ஏன் சிரித்தீர் என்று கேட்க 
ஞானி அவர் பதில் பகர்ந்தார் 
பாவி மகள் அணிந்த நகை 
பாவத்தின் சின்னமைய்யா
தான் பெற்ற மகனுக்கு 
மணமுடித்த பெண்ணிடம் 
வரதட்சனையாய் வாங்கியதுவே 
தட்சனை என்ற சொல் 
தரம் கெட்டு போனதுவே 
முன்பு ஒரு காலத்தில் 

குருவுக்கு கொடுப்பதுதான் 
குரு  தச்சனை என்றழைத்தார்கள்
 குருவுக்கு கொடுக்கும் பணி விடை 
குருவுக்கு கொடுக்கும் மரியாதை 
குருவுக்கு கொடுக்கும் வெகுமதி 
தட்சணை என்றழைத்தனர்

வரனுக்கு
மனகையின் அங்கமும் 
அதற்கு தங்கமும் கொடுப்பது 
தட்சனை என்றழைப்பது 
தட்சணை என்ற சொல்லும் 
தரம் கெட்டு போனதுவே 

வயதுக்கு தகுந்தார் போல் 
ஆசையையும் குறைக்க வேண்டும் 
பிள்ளைக்கு மணமுடித்து 
கண்குளிர பார்பதோடு 
நம் கடமை முடிந்த தென்று 
பெற்றோர்கள் நினைக்க வேண்டும் 

வீட்டீற்குள் புகுந்த மங்கை 
அணிந்து வந்த தங்கமதை 
அதை நாமும் அணிந்திடனும் 
என்று யாரும் நினைத்திட்டால் 
இது போன்ற நிகழ்வுகள் 
நடப்பதுதான் சகஜமையா 
அதை நினைத்தே நான் சிரித்தேன் 
என்றாரே கவிஞானி...! 

'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

Saturday, December 15, 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – RTI


1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் [ PIO ] பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி [ இவை இரண்டும் கட்டாயமில்லை ] ஆகியவை இடம்பெற வேண்டும்.

3. மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு அதன் ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டையும் பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்து கொள்ளலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.

உதாரணமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிராம்பட்டினம் என்ற ஊரின் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமிருந்து, தகவல்களை நாம் கேட்டுப்பெறலாம் ?

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் [ 5 கோடி ரூபாய் ] இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் [ 2 கோடி ரூபாய் ] இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் [ முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ], அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் [ தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ] நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனைப் பெற யாரை அணுகுவது ? என்ன என்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன ஆவணங்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா ?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்போது ஆரம்பமாகும் ? இப்பணிகள் முழுவதும் எப்போது நிறைவு பெரும் ?

13. நமதூரில் புதிய தீ அணைப்பு நிலையம் அமைய யாரை அணுக வேண்டும் ? அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல பொதுமக்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் ?

14. அரசின் சார்பாக பாதாள சாக்கடைத் திட்டம் நமதூரில் ஏற்படுத்த அரசின் கவனத்துக்கு எவ்வாறு எடுத்துச்செல்வது ? அதற்குரிய வழிமுறைகள் என்ன ?

15. நமதூரில் இடிந்துவிழக்கூடிய நிலையில் உள்ள பள்ளிக் கட்டங்களைப் புதுப்பிக்க யாருடைய கவனத்துக்கு எடுத்துச்செல்வது ? அதற்குரிய வழிமுறைகள் என்ன ?

இப்படி நீங்களும் இதே போல் எண்ணற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :
திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )
மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,
அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )
தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email : mailto:sic@tn.nic.in
Website : http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :
Shri Satyananda Mishra
Chief Information Commissioner Room No.306,
II FloorAugust Kranti BhavanBhikaji
Cama PlaceNew Delhi - 110 066.
Phone:- 011 - 26717355
E-mail :- s.mishra@nic.in http://cic.gov.in/

குறிப்பு : மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.

சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
[ இது ஒரு மீள்பதிவு ! ] 

Thursday, December 13, 2012

[ 2 ] பூனைக்கு மணி கட்டுவது யார் ?

ஒரு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் டாக்டரால் பரிந்துரை செய்யப்படும் மருந்து மாத்திரைகளுக்காக செலவிடப்படுகிற தொகை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை என்பது மருத்துவதுறையின் ஆய்வு அறிக்கைகள்.

சற்றுத் தெளிவாக குறிப்பிட வேண்டுமேன்றால் மருத்துவத்திற்காக இந்தியா செலவிடும் தொகை மொத்த வருவாயில் 4.2% ஆக இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தனிநபர் சராசரி மருத்துவச் செலவு இந்திய அளவில் ரூ.1,201 ம், தமிழக அளவில் ரூ.1,256 ஆகவும் இருக்கிறது.

ஏறக்குறைய நான்காயிரம் வேதிப்பொருட்களை வேறு வேறு கூட்டணிகளில் பயன்படுத்திதான் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரே மாத்திரைக்கு வெவ்வேறு கம்பெனிகளில் வேறு வேறு பெயர்களை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் விற்பனை பிரதிநிதிகளை மருத்துவர்களை சந்திக்கவைத்து அவர்களால் தரப்படும் வாக்குறுதிகளாகிய "எங்கள் புராடக்ட்'களை நுகர்வோருக்கு பரிந்துரை செய்தால் நாங்கள் உங்களுக்கு அது வழங்குவோம்...இது வழங்குவோம்" என்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கி விடுகின்றனர். இதனால் ஒரே மருந்து, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொருத்து பெரும் லாபம் வைத்து பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஓன்று.

டாக்டர்களே தாங்கள் நடத்தும் கிளினிக்கிள் மருந்துக் கடைகளை ஏற்படுத்தி சேவை செய்வது பரவலாகக் காணப்பட்டாலும்  மருந்து கடை நடத்துனர்களின் போட்டியால் தாங்கள் நடத்தும் மருந்து கடைக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் டாக்டருக்கு 'பிரிஸ்கிரிப்ஷன் சீட்டுகள், ஊக்கத்தொகை, இன்பச் சுற்றுலாவிற்கான பேக்கேஜ், அன்பளிப்புகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை அசத்தி விடுகின்றனர். இதனால் டாக்டரால் பரிந்துரை செய்யும் மருந்துகளை கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளும் நாம் அதற்குரிய தொகையை மருந்தில் குறிப்பிடப்பட்டுள்ள M.R.P விலைகளின்படி ஒரு நயா பைசா பாக்கியில்லாமல் செலுத்த வேண்டும். இதற்காக எவ்வித தள்ளுபடியோ, கழிவுத்தொகையோ நுகர்வோருக்கு தரப்படுவதில்லை.

இந்தியாவில் திட்டக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011 -12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை என்பது நமக்கெல்லாம் வியப்பைத் தந்தாலும் அரசால் நுகர்வோர் அடையும் ஆறுதலான விசயம் என்னவெனில் குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிலோ, அல்லது கூட்டுறவு மருந்து கடை மூலமாகவோ M.R.P விலையில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து கிடைப்பதுதான். 

மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்கள் எழுதித்தரும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்களும் அதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் சொல்லவில்லையே !? என்று நாமும் சைலண்டா விட்டுவிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியமானது.

இறுதியாக 'மருத்துவம்' என்பது சமுதாயத்தின் உயிர்நாடியாக இருப்பதால் மருத்துவரால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் இத்துறையில் நிகழும் லஞ்சமும், தவறுகளும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தின் உற்பத்தி செலவினங்களை அறிந்து விற்பனை விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியமானதொன்றாகும்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'பூனைக்கு மணி கட்டுவது' தொடரும்...

Wednesday, December 12, 2012

பதிய மறந்த படங்கள்...

படங்கள் ஒவ்வொன்றும் நம்மை பேச வைக்குமா...!?

[ பழுதடைந்த மின்கம்பங்களின் நிலையை போக்க ஒரு மாட்டுவண்டியில் மாத்திரம் ஏற்றிச்சென்றால் போதாது பல நூறு மாட்டுவண்டிகள் தேவை ]

[கல்வி கற்க வேண்டிய வயதில் மணியை ஆட்டிக்கொண்டு தெருத்தெருவாக பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யும் சிறுவனின் பரிதாபம் என்று மாறுமோ !? ]

[ குடிகாரர்களுக்கு...செல்பேசி பிரியர்களுக்கு...வாகன விதியை பின்பற்றாதவர்களுக்கு...அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமா  இது !?  ]

[ இன்னிக்கி கொடிமரம் நடும் விழாவாமே ! நம்மை உசுப்பேத்தும் முன்னோட்டமா இது !? ]

[ ஏனுங்க இப்பிரம்மாண்டத்திற்கு எம்புட்டு செலவாயிருக்கும் !? ]

[ வரும்... ஆனா வராது !? அட அதானுங்க... அகல ரயில் பாதை ! ]

[ வாழ்க ! வளர்க !! இதெல்லாம் அரசியல்லே சகஜமப்பா ]

[ ஈகோ இல்லாமல் ஒற்றுமையுடன் பணி செய்யும் இவர்கள்... மெய்யாலுமே சிறப்புக்குரியவர்கள் ]

[ எதிர்கால தண்ணீர் பஞ்சத்துக்கு வெள்ளோட்டமா இது !? ]

[ அட பாத்துப்போங்க... மின்கம்பத்திலே உரசிடப்போவுது ]

[ விலை சல்லிஸாம்ல...குழந்தைகளுக்கு குதுகலம் ! பூனை, காக்கைக்கு வேட்டைதான் போங்க !? ]

[ இம்போர்ட் மரங்களோ...!? இப்படி அழிச்சிக்கிட்டுப் போனா 'பசுமை எங்கே ?' என்று தேட வேண்டியதுதான் ]

படங்கள் : அபூ இஸ்ரா

Monday, December 10, 2012

பாதுகாப்போம் : முதியோர்களை !!!



உலகின் 100 வயதை கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 3.16 லட்சம் என்கிறது ஆய்வு அறிக்கை !

குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தும், தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தும் அவர்களின் எதிர்கால இல்லற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் பெற்றோர்களை உதாசீனப்படுத்துகிறது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டி அதற்கு தாய் தந்தையர் பெயரைச் சூட்டி மகிழும் பிள்ளைகள் அவர்களை கவனிக்கத் தவறி விடுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை !

வருவாய் இழந்து, உடல் தளர்ந்து, நோய்வாய்பட்ட சூழ்நிலையில், அவர்களின் மனம் புண்படும்படி கொடுமைகள் நடப்பது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....

2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...

3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...

4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....

5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...

6. தேவையான நேரத்தில் உன்ன உணவுக் கொடுக்காமல் பசிக் கொடுமையால் அவதிப்படுபவர்களாகட்டும்...

7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...

8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...

9. பிள்ளைகள் மூலம் முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு அன்றாட பொழுதுகளை துயரத்துடன் கழிப்போரும்...

10. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

வயதான தாத்தா - பாட்டி ஆகியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது. அனாதைகளைப் போல நடத்துவதை சமூக அவமானமாகக் கருதி, அவர்களுக்கு வயதான காலத்தில் அன்பும், பரிவும், பாசமும், உயிர்வாழ உணவும், இருக்க இடமும், உடுத்த உடையும் வழங்குவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை அனுபவங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது என்பதையும் இளம் வயது அறிவுக்கு புலப்படாத பல விசயங்களை மூத்தவர்களின் அனுபவத்தால் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசின் சார்பாக வருமான வரிவிலக்கு, ரயில், விமான பயணங்களில் கட்டண சலுகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை போன்றவற்றை வழங்கி கெளரவிக்கும் போது, நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்/தந்தையருக்கு நமது கடமைகளை செலுத்த மறந்துவிடுகின்றோம்.

1. குறிப்பிட்ட நேரத்தில் சத்தான உணவு
2. போதுமான உடற்பயிற்சி, ஓய்வு
3. நண்பர்கள், குடும்பத்தினருடன் பழகுதல்
4. குழந்தைகளுடன் விளையாடுதல்
5. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை
6. சமூக சேவைகளில் ஈடுபடுதல்

போன்றவற்றில் அவர்களை கவனம் செலுத்தவைத்து, அவர்கள் படும் கஷ்ட/நஷ்டங்களை நன்கு புரிந்து அதற்கேற்றார் போல் அவர்கள் மீது பரிவு/பாசத்துடன் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்வோம்.

இன்றைய இளைஞன்-இளைஞி ! நாளைய தாத்தா - பாட்டி !!
வாழ்க தாத்தா - பாட்டி ! வளர்க அவர்களின் ஆரோக்கியம் !!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
Pro Blogger Tricks

Followers