.

Pages

Wednesday, October 31, 2012

பிலால் நகரை பழி தீர்த்தது ஏரியும்...செடியன் குளமும்...[காணொளி]

நமதூரில் கடந்த இரண்டு நாட்களாக மிரட்டிய கனமழையால் ஏரி மற்றும் செடியன் குளத்திலிருந்து நீர் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அருகிலுள்ள தாழ்வானப் பகுதியாகக் கருதப்படுகிற பிலால் நகர் வெள்ளத்தால் மிதக்கின்றன.




Tuesday, October 30, 2012

சந்திப்பு : 'பதிவர்' சகோ. ஜஃபருல்லாஹ் [ஜாஃபர்] - காணொளி


இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் அடுத்தக் கட்டம் என்று அழைக்கும் இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் பயனுற உறுதுணையாய் இருப்போம் [ இறைவன் நாடினால் ! ]

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
நமதூர்  காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுயதாய அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், .ஊடக ஆர்வலர், அதிரை எக்ஸ்பிரஸ் தள  நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது இவருக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை நமதூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன.

இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Monday, October 29, 2012

வரலாறு : நெசவுத்தெரு சங்கம் [ Since 1913 ]

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சரியாக 1900 வருடங்களில் அதிரைப்பட்டினத்திலிருந்து குறிப்பாக நெசவுத்தெரு வாசிகள் தொழில் மற்றும் சம்பாத்தியம் தேடி பர்மா நாட்டை நோக்கி படையெடுத்தனர் [அன்று அவர்கள் காட்டி கொடுத்தது இன்றும் தொடருகிறது ஆனால் நாடுகள் வெவ்வேறு], சொந்த தொழில் செய்தும், சம்பளத்துக்கு வேலை செய்தும் நல்ல சம்பாத்தியம் செய்தார்கள். நிறைய பணம் சம்பாதித்தார்கள். ஓரளவு பணம் சேர்ந்தவுடன் நாம் பிறந்து வளர்ந்த ஊருக்கு/தெருவுக்கு அதன் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கம் [அது இன்றும் தொடர்கிறது] அனைவரிடையே இருந்தது. இவர்களின் முயற்சியால் சேமிப்பு முலம் சில ஆயிரங்கள சேர்ந்தன. அந்த பணத்தை ஊருக்கு எடுத்து சென்று எதாவது நல்ல காரியங்களில் ஈடுபடுத்த முயற்சி செய்தார்கள். அதன் விளைவாக தெருவாசிகள ஒன்றுகூடி விவாதம் செய்தார்கள்.





அதன்படி 1910 ம் அம்பலகாரவீடு இபுறாகீம்ஷாகிப் அவர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கபட்டு ஊரில் உள்ள பெரியவர்களிடம் யோசனை கேட்கப்பட்டது. நடுதெருவை சேர்ந்த சேகுதம்மி ஹாஜியார் மறறும் அரபு மரைககாயர் வாப்பா ஆகியோர் தோப்பு-துரவு வாங்கி போடுங்கள் வரும் சந்ததியர்களுக்கு பயன்படும் என்று ஆலோசனை சொன்னார்கள். மற்றவர்கள தெரு முஹல்லாவுக்கு ஒரு சங்கம் கட்டுங்கள் அதுவே சமுதாயக்கூடமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.

இரு வேறு கருத்து எழுந்ததால் தெருவிலும் இரன்டு பிரிவாக ஆகி சங்கமா, தோப்பா எனறு குழப்பத்தில் இருந்துகொண்டிருந்த்து. எனவே மேலும் ஆலோசனை பெற மேலத்தெரு அண்ணாவியார் அவர்களிடம் சென்றனர், அவர் தந்த ஆலோசனை படி சங்கம் கட்டினால் அது ஒரு சமுதாய கூடமாக அனைத்து மக்களும் பயன் படுத்த ஏதுவாக அமையும் என்ற ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே நெசவுத்தெரு வாழ் பர்மாவாசிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மஆதினுல் ஹஸனாத்தில இஸ்லாமிய சங்கம் என்ற பெயரையும் அங்கேயே தீர்மானித்தார்கள் .

[முக்கிய குறிப்பு: இதற்கு பதில் ஒரு பள்ளிவாசல் கட்டிருக்கலாம் என்று நினைக்கலாம் ஆனால் இன்று உள்ள “மரைக்காயர் பள்ளி” நெசவுத்தெரு எல்லைக்குள் அடங்கி இருந்ததால் அது பற்றி யாரும் விவாதிக்கவில்லை]

சரியாக 1913-16 ஆம் ஆன்டு சங்கத்திற்கு அஸ்த்திவாரம் போடப்பட்டது. சங்கம் கட்ட மண் குளத்திலேயே [மரைக்கா பள்ளிக்கும் சங்கத்துக்கும் இடையில் உள்ளது] வெட்டபட்டது..மரஙகள் மற்றும் இரும்பு பீம் பர்மாவிலிருநது நேரடியாக கப்பலில் வந்தது. மரங்கள் மற்றும் பீம் களை இன்று கிரேனின் உதவியால் மட்டுமே சாத்தியம் ஆனால் அந்த உதவி இல்லாமலே கட்டிமுடித்தார்கள்.

சரியாக 10 ஆண்டில் [கட்டிடப்பொருட்கள் பர்மா மற்றும் கேரளாவிலிருந்து வந்து சேருவதுக்கு அதிக நாள்எடுத்துக்கொண்டதாம்]. 1926 ம் ஆண்டு சங்க கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு, இதன் திறப்பு விழாவுக்கு பர்மாவிலிருந்து எல்லாரும் ஊர் வந்தார்கள். அவர்களை ரயில்வே ஸ்டேஷன் சென்று பூமாலை போட்டு வரவேற்று அழைத்து வந்தார்கள். பிறகு திரும்பி போகும் போதும் மாலை போட்டு அனுப்பி வைத்தார்களாம். இந்த பழக்கம் கொஞ்ச நாள் வரை இருந்தது.
                   

சஙகத்தின் முதல் தலைவர் இபுறாகிம்ஷா அவர்களாலும்., செயலாளர் கு.மு. காசிம். அவர்களாலும் நிர்வாகக்குழு அமைக்கபட்டது

சஙகத்தின் சார்பாக எல்லா வருஷமும் மீலாதுநபி விழா சிறப்பாக கொண்டாடுவார்கள். அதன்படி ஒரு வருடம் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணா சிறப்பு பேச்சாளராக அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று இரவு விடிய விடிய மழை பெய்த காரணத்தால் நடு இரவு தாண்டி வந்து சேர்ந்தார். அதற்குப்பிறகு விழா ஆரம்பித்து சிறப்பாக முடிந்தது, மேலும் விழா முடிந்தவுடன்தான் அண்ணாவுடன் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு இரவு விருந்து நடந்தது. இந்த மீலாது விழா 1985 வரை அதே சிறப்புடன் நடந்தது.

சங்கத்தின் சிறப்பு
  1. கட்டிட அமைப்பு களிமண்ணால் கட்டபட்டது.
  2. சுவர்களுக்கு சுண்ணாம்பு மற்றும் முட்டை கலந்து பூச்சு பூசப்பட்டது.
  3. பாடர்கள் (சுவர் ஓரங்கள்) வர்ண கலர்களால் வண்ணம் செய்து பல  பொன்மொழிகள் எழுதபட்டு இருக்கும்.
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் 
உன் கடமையை செய்.

எழுதப்பட்டிருந்த பொன்மொழிகளில் மேலே உள்ளது ஒரு உதாரணம்

   4.  சங்க கட்டிடம் முழுவதும் தேக்கு மரங்கள் , ஓடுகள் கேரளாவிலிருந்து வந்தது..

   5.  தெருவெல்லாம் குடிசைகள், சஙகம் மட்டும் பெரிய கட்டிடம்.
அதிராம்பட்டினத்தில் முதன்முதலில் நெசவு தெருவில்தான் சஙகமும், ஜமாத்தும் உருவானது. எல்லா வருடமும் மவுளுது  நடக்கும், அதன் கடைசி நாள் அன்று பெரிய அளவில் ஒமல் சோறு தப்ரூகாக வழங்கபடும். [இன்று சந்ததியினரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது]

  6.  சங்க கட்டிடத்தை பாதுகாப்பதற்காக காவலுக்கு ஆள் போடபட்டது. அவரை எல்லாரும் சங்கத்து அப்பா என்று அழைத்தார்கள்.

இன்றும்... சங்க கட்டிடத்தில் நடக்கும் சில முக்கிய விடயங்கள்....
  1. நோன்பில் காலை முதல் லுஹர் வரை பெண்களுக்கான பயான்
  2. இரவில் பெண்களுக்கான தராவீஹ் தொழுகை
  3. நோன்பு கஞ்சி காய்ச்சி ஊர் முழுதும் வினியோகம்
  4. வாரந்தோறும் ஜனாப் ஹாஜி அதிரை கவிஞர் மு.மு தாஹா அவர்களின்   பெண்களுக்கான சிறப்பு பயான்
  5. நாள் தோறும் காலை/மாலை சிறுவர்களுக்கான குரான் மதரஸா
  6. நாள் தோறும் இரவில் பெண்களுக்கான சிறப்பு குரான் & ஹதீஸ் மதரஸா
  7. திருமண நிக்காஹ் வைபோகம்
  8. திருமண விருந்து சமையல் மற்றும் விருந்து சாப்பிடும் கூடம்
  9. தெரு ஜமாத் கூட்டம் நடக்கும் இடம்
  10. அரசாங்கம் சம்பந்தப்பட்ட அலுவல்கள் [ஓட்டு கணக்கெடுப்பு, தடுப்பூசி, போலியோ, சிகிச்சை முகாம், மற்றும் பல....]
கடந்த 86 வருடங்களாக இந்த சங்கத்தை நிர்வகித்து வரும் தெரு ஜமாத் தலைவர்கள் விபரம் :

சங்க தலைவர்கள் :
  1. இபுறாகிம்ஷா
  2. கு.மு. காஷிம்
  3. மு.மு.மீராஷாகிபு
  4. மு.செ. பெரியதம்பி
  5. மீ.ப. பக்கீர் முகமது
  6. மு.செ. சேகுதாவூது
  7. மு.சே. சேக்காதியார்
  8. மு.சே. சம்சுதீன்.
  9. அ.யி.செ. முகமது தம்பி
  10. அ.யி.செ உமர்
  11. மு.செ. அப்துல் சமது.
  12. கா.மு.கலுஙகு முகமது
  13. மு.மு. சம்சுதீன்
  14. ப.அ.அப்துல் கரீம்
  15. மு.சே. நூர் முகமது
  16. செ.மு.முஸ்தபா
  17. கா.மு.அகமது ஜலாலுதீன்
  18. ப.அ.அப்துல் ஸமது
  19. மு.மீ. தாஹா
  20. மு. சேகுதாவுது.
  21. அ.யி.செ. முகைதீன் அப்துல் காதர்.
  22. அ.யி.செ. அப்துல் கபூர்
  23. அ. முகமது முகைதீன்.
அப்துல் மாலிக் 

தகவல் உதவி :
ஜனாப். ஜெகபர் அலி
மற்றும் நெசவுத்தெருவாசிகள்...

Sunday, October 28, 2012

‘சந்திப்பில் கலந்துரையாடல்’... அறிமுகம் [ காணொளி ]


[1] சமுதாய விழிப்புணர்வு...
[2] ஆசிரியர், மாணவன், பெற்றோர் ஆகியோரின் செயல்பாடுகள்...

மேற்கண்ட தலைப்புகளை எடுத்துக்கொண்டு சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் இல்லத்தில் இன்று [ 28-10-2012 ] மாலை நடைபெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடல் நிகழ்ந்தது. இதில் இணையத்தோடு தொடர்புடைய நமது சகோதரர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இப்பயனுள்ள நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலில் பங்குபெற்றோர் :

 ‘தமிழ் அறிஞர்’ அதிரை அஹமது
 ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன்
 ‘மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்’ இப்ராகிம் அன்சாரி
 ‘கணினித் தமிழ் அறிஞர்’ ஜமீல் M. ஸாலிஹ்
 ‘நாவலர்’ நூர் முஹம்மது
 ‘கவியன்பன்’ அபுல் கலாம்
 ‘தொழில் அதிபர்‘ சபீர் அஹமது [மு.செ.மு]
 ஜமாலுதீன் [ அதிரைக்காரன் ]
 சேக்கனா M. நிஜாம்
 தாஜுதீன் [ அதிரை நிருபர் ]
 ஆஷிக் அஹமது [ அதிரை.இன் ]
 இர்பான் [ அதிரை தென்றல் ]
 முஹம்மது தம்பி [ வழக்கறிஞர் ]
 ரியாஸ் [ அதிரை.இன் ]
 முபீன் [ அதிரை எக்ஸ்பிரஸ் ]






பங்களிப்பாளர்களின் அறிமுகங்கள் :

இறைவன் நாடினால் ! விரைவில் விவாதங்கள் சூடு பிடிக்கும்...

Saturday, October 27, 2012

[ 6 ] ஏன் அழுதாய்...? ‘அழும் குரல்’ தொடர்கிறது...

தள்ளு வண்டி தள்ளி நாளும்...!
பிழைத்து வந்த பழனியாண்டி..!
பழங்கள் பல விற்று
பணம் காசு பார்த்து வந்தான் 
பலம் கொண்ட முரடனின்
தொல்லைகள் வந்திடவே 
போலீசில் புகார் செய்து 
நிம்மதியாய் வீடு வந்தான் 
மறுநாள் ..விம்மி அழுதான் ஏன்..?

கல்லூரி சென்று வந்த கீதா
நாள் தோறும் இளைஞனின் சீண்டல் 
சினம் கொண்டு எதிர்த்தாலும் 
தொல்லைகள் தீர வில்லை 
போலீசில் புகார் செய்தாள்
மறுநாள் மனமுடைந்து அழுதாள் ஏன்..?

மூக்காயி...சேர்த்து வைத்த 
முன்னூறு ரூபாய் களவு போக 
மூக்கை சிந்தி அழுதவாறு 
போலீசில் புகார் செய்தாள் 
புகார் செய்த மறுநாளே 
மாரடித்து அழுது புரண்டாள் ஏன்..?

பழனியாண்டி ..முரடனிடம் .
பறிகொடுத்தது ..சில ரூபாய் 
போலிஸ் கேட்ட கையூட்டு பலநூறு 
பதறி அழுதான் பழனியாண்டி..!

கல்லூரி சென்று வந்த கீதாவுக்கு 
இளைஞனிடம் கேலி மட்டுமே...!
பாது காப்புக்கு கற்ப்பை விலை கேட்ட 
போலிசின் கொடூர காம பசி கண்டு 
பதறி அழுதாள்...!

முன்னூறு பரி கொடுத்த 
மூக்காயி இடம் மூன்றாயிரம் 
பேரம் பேசிய போலிசின் 
நிலை கண்டு பதறி அழுதாள் 
புகாரினை பெற்றுக்கொள்ள 
போலிசின் நிலை தன்னை  
விவரிக்கும் கவியாக 
இந்த "ஏன் அழுதாய் "கவியாகும்

அதிரை சித்திக்
‘அழும் குரல்’ தொடரும்...
[ ஐந்தாவது அழும் குரலை கேட்க ]

Thursday, October 25, 2012

அவனை நீ நம்பவில்லையா ?


கண்களே நீ எதை பார்க்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே பார்ப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

கால்களே நீ எந்த பாதையில் நடக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்ல பாதையில் நடப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

கைகளே நீ என்ன செய்ய ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே செய்வாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

இதயமே நீ எதை நினைக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே நினைப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

நாக்கே நீ எதை பேச ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே பேசுவாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

வாயே நீ எதை உட்கொள்ள ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே உட்கொள்வாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

காதுகளே நீ எதை செவிமடுக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே செவிமடுப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?

ஓ மனிதா, படைத்த ஜீவராசிகளிலேயே உன்னை உன்னதமான படைப்பு என்று அல்லாஹ் புகழ்கின்றானே ? 
நீ அவனை புகழ்ந்தாயா ?

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

[ 5 ] ஏன் அழுதாய்...? ‘அழும் குரல்’ தொடர்கிறது...

குளிர்ந்த அறை அலுவலகம்..!
பலர் மதிக்கும் பதவி 
புன்முறுவல் மரியாதை 
பலர் கொடுத்தான் அவர் மனம் 
பரிதவித்து அழுதது ஏன்...?

உலகின்  உயரே...! 
வெண் மேகம் பல கிழித்து 
விமான பயணம் 
சென்ற அவர் மனம் 
விம்மி விம்மி அழுதது ஏன்...?

தான் வாழும் இடம் தன்னில் 
குறைவொன்று இல்லை இல்லை 
பஞ்சணைகள் பல இருந்தும் 
நிம்மதிகள் குறைந்த அவர் 
நித்தம் நித்தம் அழுதது ஏன்...?

அழகு மனைவி அருகில் 
அள்ளி கொஞ்ச அழகு குழந்தை 
மழலை சொல் கேட்டும்
அவர் மனம் மகிழவில்லை
மாறாக அவர் அழுதது ஏன்...?

ஆட்சி பங்கு எங்களுக்கு 
வேண்டும் என்று ஒருசாரார் 
கூறியதன் விளைவாக 
கொன்றனரே ஆட்சியாளர்...! 
குழந்தையென்று பார்கவில்லை
கிழவர் என்று பார்க்கவில்லை 
கோவில் என்று பார்க்கவில்லை 
கல்வி தரும் பள்ளியென்று பார்க்கவில்லை 
கொன்று குவித்த சிங்களவர் 
கொடுமை கண்ட ஈழ  தமிழர்

நாடு கடந்து செல்வமாக வாழ்ந்தாலும் 
இனமது அழிந்த காட்சி 
கண் முன்னே வந்து போக 
அழுகின்றான் ஈழ மறவன்...!
ஈழத்தை அடுத்து சிரியாவில் 
நடந்தேறும் கொடுமைக்கு 
அழ கூட ஆளில்லை
அழுகின்ற காரணத்தை 
அறிந்தால் ஆட்சியாளன் மாறுவானா...?

அதிரை சித்திக்
‘அழும் குரல்’ தொடரும்...
[ நான்காவது அழும் குரலை கேட்க ]

Wednesday, October 24, 2012

டெங்கு நமது பங்கு !!!


பஞ்சனைகள் சுகம்
தன்னில்
பங்கு கேட்கும்
பாவிக் கொசு
பாயினில் படுக்கையிலே
பதுங்கி வந்த
பாவிக் கொசு
பாயோடு கிடத்திவிடும்
பாடையிலும் ஏற்றிவிடும்
பல்இழந்த
பாட்டியென்ன
பல் இல்லா
பாலகரென்ன
பல்லில்லாக்
கொசுக்கூட்டம்
பாடாய்
படுத்திவிடும்
சினம் கொண்ட
சிங்கமுண்டு
பயம் கொண்ட
சிங்கமுண்டா
கொசுவிடம்
கேட்டால்
கதை கதை யாய்
அது சொல்லும்
காலரா பேதி டெங்கு
கொசு இருக்கும் அங்கு
அலட்சியம் வேண்டாம்
இங்கு
ஊதிடுவான் சங்கு

டெங்கு நோயின் அடையாளங்கள்
1. கடுமையான காய்ச்சல
2. தலைவல
3. கண்களுக்கு கீழாலும் தசைகளிலும் மூட்டுக்களிலும் வலி ஏற்படுதல்
4. பசியின்மை/உணவில் விருப்பின்மை.
5. வாந்தி ஏற்படுவதோடு தோலில் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுதல் 

நோய் அடையாளங்கள் வெளிப்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?
1. காய்ச்சலின் போது ஓய்வெடுக்க வேண்டும்.
2. காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நீரினால் உடம்பு முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
3. ஒவ்வொரு 6 மணித்தியாலயத்தின் பின்னரும் பெரசெடமோல் வகையைச் சார்ந்த வில்லைகளை உட்கொள்ள வேண்டும்.
4. இரத்தப் போக்கிற்கான அடையாளங்கள் வெளிப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
1. நீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும்.
2. கொங்ரீட் கூரைகள், பீலிகள், கான்கள் போன்றவற்றிலுள்ள இலைகுலைகளை அகற்றி, நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
3. சூழலிலுள்ள தண்ணீர் தேங்கக் கூடிய சிரட்டைகள், போத்தல்கள்,பொலித்தீன் பைகள் போன்றவற்றை புதைத்து விட வேண்டும்/எரித்து விட வேண்டும்.
4. பாவிக்கக் கூடிய பாத்திரங்கள், வாளிகள் போன்ற வற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். 
5. பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
6. எறும்பு வராது மேசை கால்களுக்கு வைக்கும் பாத்திரங்களின் தண்ணீரையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். 
7. குளிரூட்டிகளிலிருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும்.
8. தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பை சேர்த்து விடவும்.
9. தண்ணீர் தாங்கிகளில் வாளியை விட்டு நீர் எடுக்காதபோது அங்கும் நுளம்புகள் பெருகலாம். எனவே, அதன் மூடியை ஒழுங்காக மூடவேண்டும்மூடி இல்லாதபோது மெல்லிய வலையினால் மூட வேண்டும்.
10. பழைய ரயர்களை அகற்றி புதைத்து விட வேண்டும்.

எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?
திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f)காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல்
திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல்.காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல்

காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன

எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும் ?
கண்களில் பின்புறம் வலி
தசை வலி
மூட்டு வலி
தோலில் சினைப்பு
வயிறு வலி,வாந்தி
டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.

டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன ?
இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும்.

டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு (தொற்றுமா) பரவுமா ?
இல்லை. நுளம்புக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது.

நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது ?
நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன.

டெங்கு காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா ?
முடியும். மருத்துவரிடம் ஆலோசித்து வீட்டிலேயே நன்கு ஓய்வெடுத்து நீராகாரங்களும், சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராகாரங்கள் நிறைய எடுப்பதன் மூலம் டெங்கு இரத்தக்கசிவு நோயையும் தவிர்க்க இயலும். மேலும் அபாய அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் கொண்டு போக வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா ?
டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின்,பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். 

டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா ?
டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும்.

டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும் ?
டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது () டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது.

மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு () ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். 


எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும்.

டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா ?
ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்.

டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா ?
1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது ?
இந்த நுளம்பு இட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் நுளம்பு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.

இந்த நுளம்பு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?
டெங்கு நுளம்புகள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும்.கொசுவலை, நுளம்புகளை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா ?
டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி நுளம்புகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?
டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை? 
ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும். 


டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன ?
பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் நுளம்பு உற்பத்த்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனவே நுளம்புகள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் நுளம்புகள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.


மு.செ.மு.சபீர் அஹமது
Pro Blogger Tricks

Followers