.

Pages

Monday, July 8, 2013

சமுதாயத்தின் உண்மையான முகம் எப்படி இருக்க வேண்டும் ?

எழுத்துக்களையும், நல்ல எண்ணங்களையும் நேசிக்கும் ஒரு நேசரிடம் கடந்தவாரம் உரையாடிக்கொண்டிருந்தபோது அடுத்து என்ன தலைப்பில் பதிவு தரப்போகிறீர்கள் என்று கேட்டார். இன்னும் முடிவு செய்யவில்லை தோலுரித்துக்காட்ட வேண்டியவை அதிகம் இருக்கின்றன - எதைப்பற்றி என்று முடிவு செய்யவில்லை – வேண்டுமானால் என்னை “வம்பில் மாட்டிவிடாத” ஒரு தலைப்பாக நீங்களே தாருங்களேன் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர் தந்த தலைப்புதான் இந்த தலைப்பு. இந்த தலைப்பை தந்தவரைப்பற்றிய விடுகதைதான் இந்த ஆக்கத்தில் வாசகர்களுக்கான என் கேள்வி.  (எனக்கும் கேள்வி கேட்க ஆசை இருக்காதா?)

தலைப்புக்கு சம்பந்தப்பட்ட  சங்கதிகளை விவரிக்கும் முன்பு தலைப்பு தந்தவரைப்பற்றிய விடுகதையை கூறிவிடுகிறேன். இவர் ஒரு ரசிகமணி. “ பொடி” வைத்துப்பேசும் அதிரையின் வகையறாவில்  வந்த வல்லவர். கை  சொடுக்கும் நேரத்தில் கவிதை வடிப்பவர். பாராட்டுவதில் பாரிவள்ளல். நாலும் தெரிந்த நல்லவர் என்பதைவிட “பத்து”ம் படித்த பண்பாளர். தொப்பி போடுவதைப்பற்றி விவாதங்கள் நடைபெறும் நாட்டில் தலையில் மகுடம் சூடிக்கொண்டவர். இவருக்கு பிடித்த பானம் பாதாம் “கீர்” என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இதற்குமேல் அடையாளங்கள் சொல்ல விதிகள் தடுக்கின்றன. விடுகதைக்கு பதில் கூறி பரிசை ( அவரிடமிருந்தே) பெற்று செல்லலாம். இப்போது தலைப்புக்குப்போவோம்.

சமுதாயத்தின்  உண்மையான முகம் எப்படி இருக்க வேண்டும்.? எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்? நான் குறிப்பிடப்போவது  சில நடப்புகள், உண்மைகள், வரலாற்று சம்பவங்கள், திட்டங்கள் மட்டுமல்ல என்னுடைய ஆசையும் இதில் அடங்கி இருக்கும்.

பொதுவாக எழுதுபவர்கள் தங்களின் ஆசையை தங்களின் எழுத்தில் ஏற்றி எழுதுவது பழக்கமான ஒன்றாகும். அந்த ஆசைகள் பலிக்காத ஆசைகளாகக்கூட இருக்கலாம். ஆனாலும் பொதுநலனுக்கான  ஆசைகளே.

உதாரணமாக ஒரு கவிஞர் பேராசையாக எழுதினார்  இப்படி ,

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

என்று எழுதினார்

இவைகள் நடக்குமா ? நடக்கலாம் நடக்காமல் இருக்கலாம்  என்று எழுதியவர்களுக்குத்தெரியும். ஆனாலும் கவிஞர்களின் ஆசை அப்படி. இவை போல்தான் எழுதுபவர்களின் ஆசைகளும். அந்த அடிப்படையில் நானும் என்னுடைய ஆசைகளையும் சேர்த்தே எழுதுகிறேன். சில ஆசைகள் நடக்காத பேராசைகளாக இருக்கலாம். ஆனால் பல ஆசைகளோ முயன்றால் – இணைந்தால்- ஈடுபட்டால் நடக்கக்கூடிய – நிறைவேறக்கூடிய ஆசைகளே.
மனித சமுதாயம் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் வரையறைக்குட்பட்ட, ஒரே வகையான அரசியல் சட்ட திட்டங்களுக்குட்பட்டு  வாழும் பலதரப்பட்டவர்கள் ஒன்றிணைந்து கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வாழ்வது என்றெல்லாம் சமூக அறிவியலில்  ( SOCIAL SCIENCES) கூறப்பட்டுள்ள விளக்கங்களை புரிந்துகொள்ளமுடியாமல் முடியைப் பிய்த்துகொள்ளவேண்டியதில்லை. நமக்குப் புரியும்படி சொல்லப்போனால் நம்மைப்பற்றி, நம்மைச்சுற்றி, நம்மைப்போல, நம் காலத்தில், நம் நாட்டில், நம்முடன் வாழ்பவர்களுடன் இணைந்து வாழும்  கூட்டம்தான் நமது சமுதாயம்  என்று சிம்பிளாக புரிந்து கொண்டால் போதும். இது நம் கூட்டம், நம்முடன் வாழும் கூட்டம். நம் கூட்டத்தின் உண்மை முகமும் நிலையும் எப்படி இருக்கவேண்டும் ?

ஒரு சமுதாயத்தின் உண்மை முகம் எப்படி இருக்க வேண்டுமென்று கணிக்கும் முன்பு- ஒரு தனி மனிதனுடைய உண்மை முகம் எப்படி இருக்க வேண்டுமென்று நாம் விரும்புவோம்? தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். ஒரு தனி மனிதனின் ஊண் முகம் ( PHYSICAL FACE)  எப்படி இருக்கவேண்டும் ? பல் நீட்டி, மூக்கொழுகி, நாக்குத்தொங்கி, உதடு பிளந்து , காது சிறுத்து, கபாலம் பெருத்து, கண்கள் தள்ளி இப்படி ஏழேகால் லட்சணத்தில் தனி மனிதன் இருந்தால் காண சகிக்குமா ?  [ இறைவனின் படைப்பையும், உடல் ஊனமுற்றவர்களையும் நான் பழிப்பதாக தயவு செய்து யாரும் கருதிவிட வேண்டாம். தலைப்புக்கு ஏற்றபடி சில விளக்கங்களை நான் அளிக்கவேண்டியிருப்பதாலேயே இதைக்குறிப்பிடுகிறேன். ]

தனி மனிதனின் அங்க   அவயங்களில் எப்படி குறைபாடுகள் இல்லாமல் காண விரும்புவோமோ அப்படித்தான் சமுதாயத்தையும் குறைபாடுகள் இல்லாமல் காண விரும்புவோம். தனிமனித குறைபாடுகள் அவனது உடல் உறுப்புகளிலும் , உள்ளத்திலும் என்று கருதுவோமானால் , சமுதாயத்தின் குறைபாடுகளை அப்படிப்பட்ட அவயக்குறைபாடுகளோடு உதாரணமாக ஒப்பிட்டு பல் நீட்டியை வறுமைக்கும், மூக்கொழுகியை  முட்டாள்தனத்துக்கும், உதடு பிளந்தவனை ஊழலுக்கும், கபாலம் பெருத்தவனை வேலையின்மைக்கும், & so on  ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

தனி மனிதனின் சிரித்த, செழித்த முகம் எப்போது வெளிப்படும் ? அகமது மலர்ந்தால்தான் முகமது மலரும். அகம மலரவேண்டுமென்றால் , அடிப்படை அமைப்புகள்  மட்டுமல்ல , வயிறும் நிறைந்து இருக்க வேண்டும். சமுதாய மக்களின் மனமும் வயிறும் நிறைந்திருக்க வேண்டுமென்றால் வாழ்க்கை  பயமற்ற, பதட்டமற்ற வறுமை இல்லாததாக இருக்க வேண்டும். ஆகவே ஒரு சமுதாயத்தின் உண்மை முகம் சிரிப்பும், செழிப்புமாக இருக்க வேண்டுமானால் அந்த சமுதாயம் வறுமையில் உழலக்கூடாது. சமுதாயம் வறுமையிலே உழலக்கூடாது என்றால் என்ன செய்யவேண்டும்? சமுதாய மக்களுக்கு தங்களது அவசியங்களை தட்டுப்பாடு இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள வருமானம் வரவேண்டும். பொருளீட்ட வேண்டும். வேலை செய்வதன் மூலமும், தொழில் செய்வதன் மூலமும் பொருளீட்டவேண்டும்; அதற்குரிய வாய்ப்புக்களும் - நிர்வாகமும் வேண்டும்.  . உழைப்பு இல்லாமல் வருமானமும் வராது ; வறுமையும்  ஒழியாது.

‘காஞ்சி புரத்திலே போய் காலாட்டிகொண்டிருந்தால் கஞ்சி கிடைக்கும்’ என்று பழமொழி உண்டு. இதன் பொருள் காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டு வெறுமனே உட்கார்ந்திருந்தால்  வேளாவேளைக்கு உணவு நம்மைத்  தேடி திண்ணைக்கு வரும் என்பதல்ல. காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. அங்கு போய் நெசவுத்தறியில் காலை ஆட்டி வேலை செய்தால் உனக்கு கஞ்சி குடிக்க வருமானம் வரும் என்பதே பொருள். ‘ வாழை ஒன்று தென்னை போல வளர ஆசை கொள்ளலாம். ஆழமான வேர்களின்றி அது நடக்ககூடுமா ?” – ( கண்ணதாசன் ). ஆகவே வறுமை ஒழிய வேண்டுமானால் உழைப்பு பிரதானம். சமுதாயத்தின் முகம் சிரித்தமுகமாக இருக்க வேண்டுமானால் உழைக்கும் வாய்ப்புக்களும், வேலைவாய்ப்புகளும் அவசியம்.

வேலை என்பது சும்மா கிடைத்து விடுமா ? அதற்கு கல்வி வேண்டும். ஆகவே சமுதாயத்தின் உண்மை முகம் கல்வி அறிவால் மலர்ந்த முகமாகவும்  இருக்க வேண்டும்.  ஒரு சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி கல்வியின் வளர்ச்சியின் அடிப்படையிலேதான் அமையும். கல்வியில் வளராத சமுதாயம் செல்வங்களை உற்பத்தி செய்ய இயலாது. செல்வ வளங்களால் மட்டும் சூழப்பட்டு கல்வி வளத்தில்  பின் தங்கிய சமுதாயம் தனது செல்வ வளங்களை பாதுகாத்துக்கொள்ளும் அறிவின்றி – கற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி தனது வளங்களை சூறையாட விட்டு அடிமைப்படும். தென் ஆப்ரிக்காவின் வரலாறும்,   ‘அபார்தீட்’ கொள்கையால் அது அடிமைப்பட்ட அவலமும் இந்த கருத்துக்கு சமீபகாலச் சான்றாகும் .

கல்வி வளரவேண்டுமானால் கல்வியை ஒரு குடுவைக்குள் போட்டு அடைத்து கடலுக்குள் வீசி இயன்றவர்கள் நீந்திப்போய் எடுத்துக்கொள்ளுங்கள் என்றால் வலிமை உடையோர் நீந்தியும், கப்பல், படகு  போன்ற கருவிகள்  படைத்தோர் கடல் தாண்டியும் பெற்றுக்கொள்வார்கள். எல்லோருக்கும் கல்வி இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட வலிய சமூகம் மட்டுமே வளரும் . ஒட்டு மொத்த சமுதாயமும் வளராது. அதற்கு கல்வியை பரவலாக்க வேண்டும். இல்லாதோரும் கற்றுக்கொள்ளும் வகையில் முறைகளை எளிதாக்க வேண்டும். அதற்குத்தான் சாதிவாரியாகவும், இனவாரியாகவும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட மக்களும் உயரும் வகையிலும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று இயக்கங்கள் காணுகிறார்கள். ஆகவே கல்வி வளரவேண்டுமானால் சமத்துவமும் வளரவேண்டும். சமுதாயத்தின் உண்மை முகத்தில் சமத்துவத்தின் சாயல் வேண்டும்.

சமத்துவம் எங்கிருந்து வரும் ? நம்மை ஆளும் கருத்துக்களாலும், நாம் பின்பற்றும் மார்க்கங்கள் போதிக்கும் நெறிமுறைகளாலும்தான் தான் நம்மிடையே  சமத்துவம் வரும். மக்களில்- சமுதாயத்தில் உயர்வுதாழ்வு கற்பிக்கும் கொள்கைகளைப் பற்றி பிடித்துக்கொண்டிருப்போரை நம்மை ஆளவிட்டால் சமத்துவம் வளருமா? ஆண்டான், அடிமை பேதங்கள் அரசின் கொள்கைகளானால் அனைவரும் எப்படி ஒரு சமுதாயமாக , ஒன்றுபட்டு வாழ முடியும்? வளர முடியும்? சாதிக்கொரு சங்கமும், சாதிக்கொரு கட்சியும் ஒரு சமுதாயத்தில் முள் செடிகளாக வளர்ந்தால் சமத்துவம் எப்படி உண்டாகும்? ஒரு சமூகத்துக்குள்ளேயே ஓராயிரம் பிரிவுகள் இருந்தால் உருப்படுவது எப்படி?

எத்தனை சட்டங்களை சந்தைக்கடை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் அடிப்படையான மார்க்க சட்டங்களைக்கொண்டு சமுதாய மக்களை ஆளும்வரை சமத்துவம் என்பது இருட்டு அறையில் குருட்டுக் கிழவனால் தேடப்படும் கருப்புப்பூனைதான். அதை விட்டு தனது ஐந்து கடமைகள் என்ற ஐந்து தூண்களிலும் சமத்துவத்தின் சாரத்தைப் பதிவு செய்திருக்கிற இஸ்லாத்தைப் பின்பற்றினால் இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தின் உண்மை முகம் நெற்றியில் தோன்றும் தொழுகைத் தழும்புகளுடன் முழு நிலவாக பிரகாசிக்கும்.

இஸ்லாத்தை ஏற்க, யாராக இருந்தாலும் கலிமா சொல்; ஏழை பணக்காரன் இணைந்து நின்று தொழுது கொள்; இல்லாதவன் பசியை இருப்பவனும் சமமாய் உணர நோன்பிரு; இருப்பவர்கள் தங்களின் செல்வத்தில் இல்லாதோர்க்கு வழங்கிவிட ஜகாத் கொடு ; கரு நிறத்தின் ஹபஷியரும், காதல்மிகு பார்சியரும், பெருஞ்சினத்தின் அரபியரும் தோளோடு தோள் நின்று உலகமக்கள் எல்லாம்  சமத்துவமாய் ஒன்று கூடிநின்று வணங்க ஹஜ் செய் என்று தனது ஐந்து கடமைகளில் சமத்துவத்தை – சகோதரத்துவத்தை அடிப்படையாக வைத்தது இஸ்லாம். 

மனிதருக்கே நீதி தராத மனு நீதி தர்மங்களும், பிறப்பிலேயே பேதம் கற்பிக்கிற ஆரிய , வைசிய, பார்ப்பன, வர்ணாசிரம தர்மங்களும் அரசாலும் கொள்கைகளின் அங்கமாக இருந்தால் சமுதாயத்தின் உண்மை முகம் எப்படி மலர்ச்சியாக இருக்கும்? வறுமை ஒழியவேண்டும், வாய்ப்புக்கள் பெருகவேண்டும், செல்வங்கள் சிறப்புடன் நிர்வகிக்கப்படவேண்டும், கல்வி வளரவேண்டும், பண்புகள் தழைக்க வேண்டும், சமத்துவமும், சகோதரத்துவமும் தழைக்கவேண்டுமானால் ஆளும் நெறிகள் – அரசின் சட்டங்கள் அல்லாஹ் வகுத்ததன் அடிப்படையில்  இருக்க வேண்டும். இஸ்லாத்தின் நெறிமுறைகள் கோலோச்சுமானால்  சமுதாயத்தின் உண்மை முகம் செழித்த முகமாக காணப்படும். இதை நான் கூறவில்லை. ஹஜரத் உமர் உடைய ஆட்சி வரவேண்டுமென்று இந்த இந்திய நாட்டின் தேசத்தந்தை என்று கூறப்படும் காந்தி கூறினார்.

இந்தக் கருத்தை,  காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற மலிவான கருத்தின் அடிப்படையில் சுட்டவில்லை.  இன்றைக்கு உலகம் இந்த உண்மையின்பால் திரும்பிக்கொண்டிருப்பதை நிகழ்கால வரலாறு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கிறது. உலக நாகரிகம் வளர்ந்தோங்கிய நாடுகளின் ஆண்கள் அதிகமல்ல – படித்த பெண்கள், கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டு இருககிறார்கள்.  (ஆதாரம்: Association of Statisticians of American Religious Bodies (ASARB) . யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். மாஷா அல்லாஹ்!. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. எண்ணற்ற “மோடி” மஸ்தான்கள் “சோ” ம்பேரிகள், பாப்பா  காமதேவ்கள், அதர்மவானிகள், “சிறு” மூர்த்திகள், “காம” கோபாலர்கள்   கை கோர்த்து இஸ்லாத்தை அழிக்க நினைத்தாலும் இறைவனின் அருளால் திட்டங்கள் தவிடு பொடியாகிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான் இன்றைய வரலாறு.

நாம் விரும்பும் சமுதாயத்தின் உண்மை முகம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பது என் ஆசை. வறுமையற்ற , தனி மனித சுதந்திரம், மதிக்கப்படும் தனி மனிதனுடைய சுய மரியாதை , தனி மனித ஒழுக்கம், அடக்குமுறை இல்லாத அரசியல் அமைப்பு,  இறை நம்பிக்கையுடன் ஒருவரை ஒருவர் நம்பியும் மதித்தும் வாழும் மக்கள்,   மனிதரை துதிபாடாத மக்கள் , அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பு மற்றும் உறுதி, பரவலான பொருளாதாரம் , சுயநலம் ஒழிந்த ஆட்சியாளர்கள், சுரண்டல் இல்லாத வர்த்தகம், தவறு செய்தால் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவோம்,  என்ற இறை அச்சம் ஆகிய அனைத்தும் அமைந்ததாக அந்த முகம் இருக்க வேண்டும். இந்த தன்மைகள் அற்ற சமுதாயத்தின் முகம் உண்மை முகமல்ல ; அழகு நிலையம் சென்று அலங்கரிக்கப்பட்ட  பொய்மையின் கூடாரமாகும். கணத்தில்  கலைந்துவிடும். இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று வாழும் சமுதாயத்தின் முகம் தான் உண்மையான முகமாக இருக்க முடியும். அதற்காகவே அழைப்புப்பணியில் அனைத்து சாராரும் இயக்கங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

திருமறை கூறுவதன்படி ,
“காலத்தின்மீது சாத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்துக்கொண்டும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத்தவிர’” ( 103: 1-3)

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி


குறிப்பு: கட்டுரை தந்த காரத்தில்  போட்டிக்கான கேள்வியை மறந்துவிடாதீர்கள்.

11 comments:

  1. உங்கள் விடுகதையின் விடைக்கு முதல் எழுத்து அ வில் ஆரம்பம் ஆகுமோ?
    இஸ்லாமியர்களை பொறுத்தவரை முகமது மலர்ந்ததால் அகமது நிறைந்தது

    ReplyDelete
  2. // வறுமையற்ற , தனி மனித சுதந்திரம், மதிக்கப்படும் தனி மனிதனுடைய சுய மரியாதை , தனி மனித ஒழுக்கம், அடக்குமுறை இல்லாத அரசியல் அமைப்பு, இறை நம்பிக்கையுடன் ஒருவரை ஒருவர் நம்பியும் மதித்தும் வாழும் மக்கள், மனிதரை துதிபாடாத மக்கள் , அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பு மற்றும் உறுதி, பரவலான பொருளாதாரம் , சுயநலம் ஒழிந்த ஆட்சியாளர்கள், சுரண்டல் இல்லாத வர்த்தகம், தவறு செய்தால் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற இறை அச்சம் ஆகிய அனைத்தும் அமைந்ததாக அந்த முகம் இருக்க வேண்டும் //

    சரியாகச்சொன்னீர்கள்...

    சமுதாயத்தின் முகம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. தனிமனித வளர்ச்சிக்கு கல்வி முக்கியம். இதன் மூலம் சமூகம் மேம்பட முடியும்.

    ReplyDelete
  4. நம்ம தம்பி தஸ்தகீரை பற்றி தான் கூறுகிறீர்கள்

    அவர் தானே கிரௌன் என்ற மகுடத்திற்கு சொந்த காரர்

    அவரை வி.பக்கங்களுக்கு அழைத்து வாருங்களேன் ..

    கவிதைக்கு ..பக்கம் பக்கமாய் பதவுரை தருவார்

    கவிஞ்சரின் கவிதையை மிஞ்சும் அவர் பின்னூட்டம்

    நான் கூறியது சரியா

    ReplyDelete
  5. காலத்திற்க்கேற்ப அருமையான ஒரு கட்டுரை.
    நகைச்சுவை வார்த்தை கலந்த நல்லதொரு ஆக்கம்
    வாழ்த்துக்கள் காக்கா.

    நமது சமூகம் முன்னேற கல்வி ஒரு அவசியமாக இருந்தாலும் போட்டிபொறாமை,அடுத்தவன் முன்னேற்றம் கண்டு மனம்கொதிப்பது,அவதூறு பேசுவது கெடுத்துவாழ்வது,எப்படா கேட்டு அலைவான் என்று எதிர்பார்ப்பது இதை நிறுத்தி சகோதரத்துடன் வாழ்ந்தாலே எத்தனையோ சாதிக்கலாம். இங்கே தான் ஆயிரத்தெட்டு பிரிவினை இருக்கிறதே SO போலி முகங்களுக்கே புகழாரமும் செல்வாக்கும் இருக்கும்

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    காக்கா,

    உங்கள் ஆக்கமும், எங்கள் ஏக்கமும், சந்தித்த இந்த வேளையில் சொல்வது அறியாது திகைக்கின்றேன்.

    என்னதான் நடந்தாலும் ஒருநாள் உண்மை வெளிவரும், அதை எவராலும் தடுக்க முடியாது.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  7. சகோதரர் சித்தீக் அவர்கள் பரிசைத் தட்டிச் செல்கிறார். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. போட்டிக்கான பதில் நண்பர் தஸ்தகீரா !? நான் முதலில் நினைத்தது ஆசிரியரையும்... பேராசிரியரையும் தான்...பின்னர் நண்பர் தஸ்தகீரையும் என்னால் யூகிக்க முடிந்து.

      பரிசை தட்டிச்சென்ற பத்திரிக்கைதுறை நிபுணருக்கு வாழ்த்துகள்...

      சரி... சரி... பரிசை என்னான்னு சொல்ல மறந்திட்டியலே :)

      Delete
  8. பரிசு தம்பி கிரவுன் சார்பாக ஒரு டஜன் வாடா ஒரு டஜன் சமூசா ஒரு பொட்டலம் பக்கோடா. ஒரு ரூஹ் அபஜா சர்பத் பாட்டில்.

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவிலேயே பட்டு”வாடா” ஆகியிடுமா, பார்சல்?

      Delete
  9. கல்வியில் பின் தங்கியதனாற்றான், நம் சமுதாயம் இன்னும் பின் தங்கியும், அரசு வேலை வாய்ப்புகளை அடையாமல், அன்னிய நாட்டை மட்டும் நம்பியிருப்பதும்; அப்படியே அன்னிய நாட்டில் அடிமைகளாய் உழைத்தாலும் ஓர் உயர்பதவியை எட்ட முடியாத அளவுக்கு கல்வியறிவின்மையும் ஒரு காரணியமாக இருப்பதும், இற்றைப் பொழுதில் காணும் நிதர்சனமான உண்மைகள்; இதனை எண்ணியே தாங்களும் இக்கட்டுரையை வடித்துள்ளீர்கள்; வார்த்தைச் சித்தர்- மகுடக்கவிஞர் - பாதாம்”கீர்” இரசிகர்- தஸ்த”கீர்” அவர்களும் தங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers