.

Pages

Wednesday, July 31, 2013

வணக்கம்

ஒன்றை ஒன்று
தெளிவாய் அறிந்தும்
நன்றாய் வணங்க -அது
உருவ வணக்கம்.

வணங்கும் ஒருவன்
வணங்கபட ஒருவன்
இங்கே அவசியம் -இது
உருவ வணக்கம்.

ஒன்றது உருவம்
மற்றது அறியா
இருப்பினு மதுவும்
உருவ வணக்கம் !

எண்ண அசையும்
நினைக்க நடக்கும்
எண்ணமும் புலனும்
இதுவும் வணக்கம் !

இனிதது வாழ்வு
இதனை புரிய
மனிதன் மற்றவை
வணங்க படைத்தான்.

வல்லவனின் சொல்லது
வணக்கத்தி லனைத்தும்
வழுவாதிருக் கின்றன -அது
அரூப வணக்கம் !

பரத்தின் செயலில்
பலவது இருந்தும்
ஒன்றின் செயலாய்
அறிதல் ஞானம் !

நடக்க நினைக்க
காலது நடக்கும்
காண பார்க்கும் -இது
அரூப வணக்கம் !

அரூபம் எண்ணம்
உருவம் தன்னில்
நிகழும் செயலாய்
அதுதான் வணக்கம் !

வணங்கும் ஒருவன்
வணங்க 'அவனில்'
இணங்கி இழந்து
இல்லா திருப்பான் !

அவனல்லா திருப்பான் !
இவனில்லா திருப்பான் !
அவன்செயலா யிருப்பான் !
அருவுருவா யிருப்பான் !
ஒன்றாய் இருப்பான் !
இல்லாது இருப்பான் !
இரன்டற் றிருப்பான் ! -இது
அரூப வணக்கம் !

ஒன்றிலே உண்டானது
ஒன்றேயது பலவானது
உண்டாகும் முன்வொன்றே
நன்றேயிது அறிவீரே !

ஒன்றே இருப்பது
உருவா கிருப்பது
ஒன்றின் உருவம்
என்பது எதுவது ?

ஒன்றே இருந்து
பார்த்தல் கேட்டல்
தன்னில் நிகழ்தல் -இது
அரூப மன்றோ !

பலவா பழுத்து
மாவது முளைத்து
வேறா உணர்கிறது
உருவ மாகிறது !

ஒன்றது உருவம்
தானது இன்றி
தலைவன ரூவில்
சமைந்தது உருவம் !

கண்ணது பார்வை
உன்னது பார்வை
கண்ணைக் காண
கண்ணுரு தெரியும் !

ஒன்றாய் உணர்ந்தால்
உருவம் இல்லை !
பலதாய் உணர்ந்தால்
உருவங்க ளுண்டாம் !

வணங்க படைத்தேன்
வல்லவன் சொல்லில்
விளக்கம் கொள்ளுதல்
வகையிது வுமன்றோ !

அரூப வணக்கம் -அதில்
இரண்டு இல்லை !
ஒன்றில் உண்டு
ஒன்றாய் உண்டு !

ஆண்டவன் உண்டு
அடியவன் உண்டு
அத்தஹி யத்ததில்
அவனிவர் பேசுவர்.
வணங்கும் ஓன்று
வணங்கப்பட ஒன்று -இது
வணக்கம் அல்ல !
வழிபாடு அன்றோ !

உருவ வணக்கம்
அதுவே வழிபாடு !
அரூப வணக்கம்
அதுதானே வணக்கம் !

* அத்தஹியத்து - இஸ்லாமியர் வணக்கத்தில் இறைதூதர்(ஸல்) அவர்களும் இறைவனும் சம்பாசனை புரியும் ஒரு நிலை.

நபிதாஸ்

15 comments:

  1. திரும்ப திரும்ப வாசிக்கிறேன்... பொருளை விளங்கிக்கொள்வதற்காக

    ReplyDelete
    Replies
    1. அன்பரே !
      எழுதுவது விளங்கிகொள்ளத்தான். எதில் விளக்கம் வேண்டுமோ அதைப்பற்றி கேளுங்கள். விளக்கம் தருகிறேன்.

      நன்றி !

      Delete
    2. உரைநடையில் விளக்கம் கொடுத்தால் இந்த சிறியவனுக்கு விளங்கிக்கொள்ள இலகுவாக இருக்கும்.

      Delete
    3. தாங்கள் உரைநடையாக விளக்கம் அனைத்திற்கும் கேட்பதால் இன்ஷா அல்லாஹ் ஒரு கட்டுரையாகவே எழுதித்தருகிறேன்.

      Delete
  2. /// ஒன்றாய் உணர்ந்தால்
    உருவம் இல்லை ! ///

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அழகாய் கருத்துக்களை உள்வாங்குகிண்றீர்கள்.

      நன்றி !

      Delete
  3. நீர்க்குமிழியை நீர் தேடும்
    நீரை நீர்க்குமிழி தேடும்
    நீருக்குள் நீர்க்குமிழ்யும் உண்டு
    நீர்க்குமிழிக்குள் நீரும் உண்டு

    இப்படியான தேடலின் ஞானத்தோட்டத்துப் பழஙகளை எங்கள் முன் விருந்தாக்கி வைத்து,

    அகக்கண் திறக்கும் அறிஞராம் உம்மை
    முகக்கண் தெரியவே முன்னின்று பேச
    முடியாமற் போனது முன்செய்த தீங்கோ
    அடியேனின் ஐயம் அது

    ReplyDelete
    Replies
    1. அன்பு கவிஞரே !

      //
      நீர்க்குமிழியை நீர் தேடும்
      நீரை நீர்க்குமிழி தேடும்
      நீருக்குள் நீர்க்குமிழ்யும் உண்டு
      நீர்க்குமிழிக்குள் நீரும் உண்டு
      //
      அருமையான கவிதை.

      என் நண்பர் சொல்வார்
      மோதிரத்தில் தங்கம் உண்டு.
      தங்கத்தில் மோதிரம் உண்டு.
      அதுபோல் அழகாக எழுதியுள்ளீர்கள்.

      உண்மையில் தான் இருக்கின்றீர்கள்.

      வாழ்க ! நன்றி !

      Delete
    2. ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா நபிதாஸ் என்னும் நற்குருவே!

      “தேடல்” என்னும் தலைப்பில் தமியேன் வனைந்துள்ள ஒரு கவிதைக்குக் கருவே மேற்காணும் நீர்க்குமிழியின் தத்துவமே!
      அப்பாடல் இன்ஷா அல்லாஹ் ஈண்டு விரைவில் பதியப்படும்.

      \\உண்மையில் தான் இருக்கின்றீர்கள்.\\

      உண்மையில் உண்மையில் தான் இருக்கின்றேன் என்பதை உண்மையில் உண்மையாக உணர்ந்து கொண்ட உங்களைத் தான் உண்மையான குருவாக என் மனத்தினில் வைத்துக் கொண்டேன்.

      கற்றது கையளவு கல்லாதது உலகளவு
      படிப்பாளியே படைப்பாளியாவான்
      கண்டது கற்கின் பண்டிதனாவான்
      நூலகமே என் உலகம்; இன்று
      இணையமே என் இதயம்!

      Delete
  4. நபிதாஸ்,

    >>>ஒன்றாய் உணர்ந்தால்
    உருவம் இல்லை !<<<

    இந்த வரிகள் சட்டென்று புரிந்தது எனக்கு. பி.ஜே ஜெயினுல்லாபிதீன் என்ற மார்க்க அறிஞர்(!) இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்கிறாரே? அது பற்றி உங்கள் கருத்து என்ன?

    அன்புடன் புகாரி

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாம் மார்கத்தின் அடிப்படைகளில் ஒன்று இறைவனுக்கு உருவம் இல்லை. அதனை ஏற்றவர்தான் இஸ்லாமியர்.

      நன்றி ! கவிஞரே !

      Delete
    2. அன்பின் நபிதாஸ்,

      அழகாகச் சொன்னீர்கள். இந்தத் தெளிவை நான் மனதார வரவேற்கிறேன்.

      என்றால் இந்த் ஜெயினுல்லாபிதீன் போன்ற இடைத்தரகர்களை என்ன செய்வது. அவர்கள் மார்க்கத்துக்குப் பொய் முகம் சூட்டுகிறார்களே? இவர்களை எப்படி ஒழிப்பது?

      உங்கள் கருத்தறிய ஆவல்.

      Delete
  5. அன்பரே.

    ஒழிப்பது, அழிப்பது என்பது சக மனிதனின் வேலையல்ல. அது இறைவனுடையது.

    ஆக்கபூர்வமான செயல்களை அவரவர் செய்து தனக்கும், பிறர்கும் மன அமைதி கெடாமல் மனிதனாக வாழ்வதே உயர்வு. பெருமானார் (ஸல்) அவர்கள் போதனை அதுதானே.

    ReplyDelete
  6. இறைவனுக்கும் இறைவனின் நூலுக்கும் மாற்றாக இருந்துகொண்டு தன்னை இடைத்தரகராக்கி லாபம் பெறுவோரை என்னதான் செய்யப் போகிறீர்கள், ஓர் இஸ்லாமியனாய்?

    ReplyDelete
  7. இஸ்லாமியனுக்கு வேதத்தின் வழிகாட்டல்

    'லக்கும் தீனுக்கும் வலியத்தீன்'

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers