.

Pages

Saturday, August 17, 2013

சவாரி

தந்தையின் அணுவும் கருவறை நோக்கித்
****தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
****முயற்சியால் வென்றதும் பயணம்
பந்துபோ லுருண்டு பதிவுடன் திங்கள்
****பத்தினில் கருவறைப் பயணம்
வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்
****வையகம் கண்டதும் பயணம்

கருவறைப் பயண மிருந்ததை மறந்து
****கனவினில் மிதந்திடும் நீயும்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும்
****உறுதியை நம்பியே மரணம்
வருவதும் பயணம்; அதுவரை உலகில்
****வாழ்வதும் நிலையிலாப் பயணம்
பருவமும் மாறி வளர்சிதை மாற்றம்
****படிப்பினை கூறிடும் பயணம்
மடியினில் சாய்ந்து தாயுடன் பயணம்
****மகிழ்வுடன் தந்தையின் தோளில்
நடைதனைப் பழக்கும் நண்பனாய் வந்த
****நடைபயில் வண்டியில் பயணம்
தடைகளை யுடைத்துப் புரளவும் முயன்று
****தவழவும் வாய்த்ததும் பயணம்
விடைகளாய் அறிவும் தெளிந்திடப் பள்ளி
****வகுப்பினிற் சேர்ந்ததும் பயணம்

பிழைப்பினை நாடி தாயகம் விட்டுப்
****பிரிந்ததும் சுவையிலாப் பயணம்
உழைப்பினப் பொருத்து ஊரெலாம் மாறி
****உலகினில் உழன்றிடும் பயணம்
தழைத்திடும் இளமைப் பருவமே எமக்குத்
****தந்தநற் றுணையுடன் பயணம்
அழைத்திடும் காலம் வரும்வரை நாமும்
****அவனியில் உலவுதல் பயணம்

மனிதனாய் வாழ நல்வழி தேடி
****மார்க்கமும் பயிலுதல் பயணம்
புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி
****புறப்படல் அருள்நிறைப் பயணம்
இனிவரும் மறுமை இனியதாய் அமைய
****இறைவனை வழிபடும் பயணம்
கனியென நினைத்த வாழ்க்கையின் பின்னே
****கடைநிலைப் பயணமே மரணம் !

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 15-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

24 comments:

  1. கவியன்பனின் இக்கவிக்கு என் கவி வித்தாய் இருந்தமை மகிழ்வு! அருமை! சிறப்பாய் தந்தை போற்றப்படுகிறார். தந்தையின் பொருத்தத்தில் இல்லாஹ்வின் பொருத்தம் உள்ளதாய் நபி[ஸல்]வாக்குண்டு

    ReplyDelete
    Replies
    1. இல்லாஹ்=அல்லாஹ்
      திருத்திக்கொள்ளவும்

      Delete
    2. தொழிலதிபர் அவர்களே! இந்தக் கவிதை 11/05/2011 அன்று இயற்றப்பட்டது;அந்நாள் என் வாழ்வின் பொன்னான நாள்! ஆம். இறையருளால், என் தலைமையில் சுமார் 33 கவிஞர்கள் கூடிய ஒரு கவியரங்கம் துபையில் “வானலை வளர்தமிழ்” என்னும் இலக்கிய அமைப்பினரால் நடத்தப்பட்டு ஆங்குத் தரப்பட்டத் தல்லைப்பு “பயணங்கள்”. அதில் என் தலைமைக் கவியாக யான் படித்தப் பாடல் தான் இது. (க்விஞர்கட்குள் எண்ண ஓட்டம் ஒன்றாய் இருக்கும் என்பதை நேற்று உங்கள் கவிதையைப் படித்ததும் உணர்ந்தேன்) இன்னும், அந்நாள் எனக்கு கவரவமும் மாபெரும் அங்கீகாரமும் தரப்பட்ட நாள்; காரணம். “பயணங்கள்” என்னும் தலைப்பில் தமியேனைத் தலைமைக் கவிஞனாய அமர்த்தி, அங்குப் பாட வரும் 33 கவிஞர்களையும் பாட அழைக்கும் போது அவரவர் குணநலன்களை சிலாகித்து “மரபுப்பாவில்” தான் அழைக்க வேண்டும் என்ற “கவியரங்க பாணி” யை முதன் முதலாக அமீரகக் கவியரங்கில் முழுமையாகச் செயல்படுத்தியமைக்கு எனக்கு நினைவு பரிசும் வழங்கப்பெற்றது. மேலும், இச்செய்யுளை மாபெரும் ஞானியின் முன்னால் பாடினேன்; அவர்களும் என்னை ஆசிர்வதித்தார்கள், “ சொல்நயம்; ஓசைநயம்; அசைகளின் ஓட்டம் நிறைவுடன் யாப்பின் இலக்கணம் பிறழாது வனையப்பட்ட இப்பாடலிலிருந்து அல்லாஹ் உதவியால் நீ மாபெரும் புல்வனாய் மிளிர்வாய்; என் ஆசிகளும் துஆக் களும் உண்டு” என்று என் தலைமீது அம்மகான் கைவத்து ஆசிர்வதிக்கக் காரணமானதும் இப்பாடல் தான்! மேலும், ரியாத் தமிழ்ச்சங்கத்தில் உலகளாவிய கவிதைப்போட்டிக்கு( 39 கவிஞரகள் கலந்து கொண்ட அப்போட்டியில்) - அவர்கள் கொடுத்தத் தலைப்பான “இயக்கம்” என்றிருந்ததால், “பயணம்” என்றிருந்த இடங்களிலெல்லாம், “இயக்கம்” என்று போட்டு இப்பாடலைப் போட்டிக்கு அனுப்பினேன், சென்ற ஜனவரி மாதம்; இறையருளால், என் கவிதைக்கும் ஓர் அங்கீகாரம் உலகளாவிய புலவர்களின் பார்வையில் கிட்டி ஆறுதல் பரிசை வென்றதும் எனக்குள் ஓர் ஆறுதல்!
      இலண்டன் வானொலியில், சென்ற வாரம் கொடுத்தத் தலைப்பு “சவாரி” எனக்குள்ள பணிச்சுமையால் எழுத நேரமில்லையாதலால், என் “பயணங்கள்” என்னும் இக்கவிதையே “சவாரி அல்லது பயணங்கள்” என்று தலைப்பிட்டுச் சென்ற வாரமே அவர்கட்கும் அனுப்பி விட்டு, இத்தளத்தின் நிர்வாகி அவர்கட்கு அப்படியே அனுப்பினேன்(அதனால், இப்பாடல் இத்தளத்தின் அட்டவணையில் சென்ற வாரமே அடங்கிக் கிடந்தது)

      எனவே, உங்களின் கவிதை வரிகள் என் கவிதைக்கு வித்தென கருதுவதில் உங்கட்கு மகிழ்ச்சி என்றாலும், உண்மை என்னவென்று உரக்கச் சொல்லுதலும் என் கடமை அன்றோ?

      ஆயினும், எனக்குள் “தந்தை” பற்றி ஓர் ஆழமான கவிதை வடிக்க வேண்டும் என்னும் அவாவும் நீண்ட நாட்களாய் உள்ளது; அதற்குத் தூண்டுகோலாய் உங்களின் நேற்றைய கவிதை இருந்தமைக்கு என் பாராட்டுகள்; ஆனால், அக்கவிதையை யான் படைக்க நாளாகும்; காரணம்; அல்லாஹ் மட்டும் அறிவான் என் உள்ளத்தில் உள்ளதை!

      உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. விந்தின் பயணம்
    கருவறைக்கு
    கருவரை பயணம்
    கல்லறைக்கு

    வாழ்வென்பது
    வாழ்வதற்கே
    மறைவு நிச்சயமென்றால்
    அதன்பேர்
    வாழ்வல்ல

    முடிவில்லா
    வாழ்க்கை
    துயரில்ல
    சிறப்பு
    கிட்டிடும்
    சொர்கத்தில்
    [மட்டுமே]

    நம்பியோர்
    அதன்படி
    வாழ்ந்தோர்
    கைவிடப்படுவதில்லை

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கவிப்”பயணம்”
      நாடுக இன்னும் சீர் நயம்!
      கரம்பிடித்து ஏற்றிவிட
      உரம்போட்டு வளர்த்துவிட
      என்றும் யான் இருக்க பயமேன்?

      Delete
  3. சிந்தனை தரும் படைப்பு !

    பயணத்தின் அருமை பெருமை.

    ரசித்து வாசித்தேன்

    நன்றி கவிக்குறள்

    ReplyDelete
    Replies
    1. //ரசித்து வாசித்தேன்\\

      இவ்வரிகளை யானும் இரசித்து வாசித்தேன்; ஈர்ப்புக்குத் தகுதியுடையா எல்லா இலக்கணமும் இச்செய்யுளில் செய்யப்பட்டதே உங்களால் இரசிக்க இயன்றமைக்கு முழுமுதற்காரணம்.

      என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆசான் அருட்கவி அதிரை தாஹா அவர்களும் என்னைப் பாராட்டி இருக்கின்றார்கள் என்னும் செய்தியினைக் கேட்டு என் செவிக்குள் தேனாய்ப் பாய்ச்சி என்னை களிப்பில் ஆழ்த்தி விட்டீர்கள். புலவர் அவர்களின் புகழாரம் என் கடின உழைப்புக்கும் கல்விக்கும் கிடைத்திட்ட அங்கீகாரம்! அன்னாரை விடுமுறையில் தாயகம் வரும் பொழுதிலெல்லாம் காண்கிறேன்; ஆயினும், என் கவிதைத் தொகுப்பைக் கேட்பார்கள்; இன்னும் என் மூத்த ஆசான் காப்பியக்கோ இலங்கை ஜின்னா ஷரிபுதீன் அவர்களின் அணிந்துரை வரவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்; , இலங்கையிலிருந்து அணிந்துரை வர இன்னும் தாமதமானால், இன்ஷால் அல்லாஹ் எப்படியும் அடுத்த விடுப்பில் அருட்கவி அதிரை தாஹா என்னும் என் ஆசான் அவர்களிடம் என் கவிதைத் தொகுப்பைக் காட்டி ஆசியுடன் அணிந்துரையும் பெறுதல் என் பேறாகும்! அவர்களிடம் கணிணி பயன்பாடில்லை என்றார்கள்; அதனால் என் கவிதைகளை அன்னாரிடம் அனுப்பி வைக்க இயலவில்லை; பின்னர், எப்படி என் கவிதைகளைச் சிலாகித்து “நேர்காணலில்” சொன்னார்கள்? என்பதே எனக்குள் இருக்கும் வியப்பும்; வினாவும்!
      அல்லாஹ் என்பால் காட்டும் அருளென்பேன்; அதனாற்றான், புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருக்கும் இன்னார் போன்றோர்களிடமும் என் செய்யுள் போய்ச் சேர்ந்திருக்கின்றது!
      எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

      Delete
    2. \\தகுதியுடையா \\ தகுதியுடைய என்று வாசிக்கவும்; தட்டச்சுப்பிழைக்கு மன்னிக்கவும். அண்மையில் கண்பார்வைக் கோளாறு உண்டாகி விட்டதால் இப்படி அடிக்கடித் தட்டச்சுப்பிழைகள் நிரம்பி விட்டன என் எழுத்துக்களில் எனபதும் எனக்கு வேதனையாக உள்ளது.

      இன்ஷா அல்லாஹ் அடுத்த விடுப்பில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாக உள்ளேன்; துஆ செய்யுங்கள்.

      Delete
  4. 'அதிரை நியூஸ்' என்ற அதிரையின் செய்தி வலைதளத்தின் சார்பாக சமீபத்தில் அவர்களின் நேர்காணல் காணொளியில் அதிரையின் மூத்தக்கவிகளில் ஒருவர் தாஹா அவர்கள் நமது கவிஞர் அபுல் கலாம் அவர்களை மிகவும் பெருமையுடன் நினைவுகூறியிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியை தரும்.

    வாழ்த்துக்கள் கவிக்குறள்...

    ReplyDelete
  5. அன்பின் தம்பி, விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம,
    அஸ்ஸலாமுஅலைக்கும்,

    என்னை நீங்கள் “நேர்காணல் “ காண வேண்டும் என்று துடித்துக் கொண்டும் பேரவாவுடன் பேட்டிக்கு ஆயத்தமா என்று என்னிடம் கேட்டுக் கொண்டும் இருந்த பொழுதிலெல்லாம், தமியேன் சொல்வேன்,”என்னைவிட மிகச் சிறப்பானவர்கள் தமிழ் இலக்கியத்தில் சாதனைப் படைத்தவர்கள் நிரம்ப உளர்; அவரக்ளை எல்லாம் முதலில் பேட்டி கண்டு முடித்து வாருங்கள்; என்னுடைய கவிதைத் தொகுப்பு வெளி வராமல் யான் பேட்டி அளிப்பதும் தகுதியன்று; இன்னும் என்னை நானே “விளம்பரப்படுத்த்தல்” என்னும் அவப்பெயரை உண்டாக்கி விடும் என்றும் சொல்வேன்.

    இப்பொழுது என் பொறுமைக்கு அல்லாஹ் கொடுத்த அன்பளிப்பு தான், என் பேட்டி வருவதற்கு முன்னால், எனக்கெல்லாம் முன்பாக பல்லாண்டுகளாக சொல்லாட்சி புரியும் சுந்தரத் தமிழின் அருட்கவி அவர்களைப் பேட்டி காணவும்; அப்பேட்டியின் ஊடே அடியேனையும் அருட்கவியார் அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காணும் பொழுது உணர்கிறேன்; இதுதான் நான் எதிர்பார்த்தது; நானாக என்னைச் சொல்லிக் கொள்வதை விட தகுதியும் திறமையும் புலமையும் மிக்கோர் வாயால் என்னை அங்கீகரித்தால் அதுவே என் ஆத்மதிருப்தியாகும்!

    நிற்க. என் வயதை விடச் சிறியவர்களாக இருந்தும் என் அன்புத்தங்கை - அதிரை வித்து- முத்துப்பேட்டை முத்து-கவியருவி மலிக்காஃபாரூக் அவர்களை இன்னும் பேட்டி எடுக்கவில்லையா? மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
    இணையம் என்றால் என்ன? வலைப்பூ என்றால் என்ன? முகநூல என்றால் என்ன? இப்படி எதுவுமே தெரியாமல் “கிணற்றுத்தவளையாக” இருந்த என்னை, “காக்கா இப்படிச் சென்றால் இகமெங்கும் உங்கள் பெயரும், ஊரின் பெயரும் விளங்கப்பெறும்” என்று எனக்குத் திசைகள் காட்டிய வழிகாட்டி; அத்தங்கையிடம் உடன் பெறுங்கள் ஒரு பேட்டி!

    நீங்கள் இரசித்துக் கொண்டிருக்கும் இந்த இலண்டன் வானொலியின் தொடர்பையும் அங்கு வாசித்துக் கொண்டிருக்கும் அன்புத் தங்கை தேன்குரல் மங்கை ஷைஃபா மலிக் அவர்களையும் எனக்கு நேரடித் தொடர்பில் ஏற்படுத்திக் கொடுத்து விட்டு இன்று ஒதுங்கிக்கொண்டிருக்கு ஓர் ஒப்பற்ற கவிதாயினிதான் என் அன்பிற்குரிய தங்கை முத்துப்பேட்டை மலிக்கா ஃபாரூக் ஆவார்கள். இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் அவர்களின் பேட்டியை காண அவா.

    ReplyDelete
  6. கவித்தீபத்தின் சவாரிப்பயணம் நல்ல பல கருத்துக்களைச் சொல்லி கடை நிலைப்பயணம் மரணம்மென்று முடித்திருக்கும் விதம் அருமை.

    வாழ்த்துக்கள்.

    சிறியதொரு வேண்டுகோள்.!

    ///தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்///

    விந்தெனும் வார்த்தையை வெளிப்படையாகச்சொல்லாமல் தவிர்த்து ''உயிரணு'' என்பதைப்போன்று சொல்லியிருந்தால் இன்னும் கவிதையில் மெருகேறும் என்பது எனது எண்ணம்.

    என் மனதில் ஒரு நெருடலாக இந்த வார்த்தை இருந்ததால் சுற்றிக்காட்டினேன்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி அதிரை மெய்சா.

    இக்கருத்தை உங்களின் நண்பர் அவர்களும் எனக்குத் தனிமடலில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இன்னும் ஒரு பாடலில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

    அவர்கட்கு யான் அனுப்பிய விடை இதோ:

    \\தமியேனும் விந்து என்ற சொல்லை என் இரு கவிதைகளில் பயன்படுத்தியுள்ளேன்; அப்பாடலைத் திருத்தத்துக்கு அனுப்பிய பொழுது அதனுள் ஒற்றுப்பிழைகளும் தளைதட்டலும் மட்டும் திருத்திய ஆசான்கள் இருவரும் (மிகப் பெரும் புலவர்கள்- ஒருவர் முஸ்லிம்; ஒவ்ருவர் ஹிந்து) என் அவ்விரு பாட்லகளிலும் “விந்து” என்ற வார்த்தையைக் குற்றம் காணாமல் விட்டதால் யானும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை; அவர்களின் திருத்தத்திற்குட்பட்டதால், அடியேனும் அப்படியே வெளியிட்டேன்; அக்கவிதைகள் என் சொந்த வலைத்தளத்தில் (”கலாமின் கவிதைகள்”) கீழ்க்காணும் தலைப்புகளில் காணலாம்:

    1) “பயணங்கள்” (இக்கவிதை இன்ஷா அல்லாஹ் நாளை இங்குப் பதிவில் வரும்)

    2)”பெண்ணைத் தாண்டி வருவாயா?”

    ஒருவேளை மார்க்கச் சட்டம் சொல்லும் வேளையில் கூட “விந்து” என்கின்ற சொல்லை அனுமதிப்பதனால் (”விந்து வெளியானால் குளிக்க வேண்டும்” என்ற சட்டம் சொல்லும் பொழுது) என்னுடைய கவிதைகளில் உள்ள அவ்வார்த்தைகளை ஏற்றிருக்கலாம்.//


    ReplyDelete
  8. // தந்தையின் விந்தும் //

    Assalamu Alaikkum Dear Uncle,
    Kindly request you to remove the above words as the lot of female readers read your poems regularly and they are chance to think wrong about you.

    I hope you didn't think wrong me.

    Thanking You


    ReplyDelete
    Replies
    1. Wa alaiikkum salam,

      I have no access to correct and anyway I shall tell to Moderator Mr.nijam to edit and insert the word அணுவும்.

      while It was being reviewed by two scholars, they didnt mind about it, and while it was being reviewed by judges for a poem competition in Riyadh where I sent this poem , they didnt mind it. Anyway, as you told the readers are women and they might think wrong about me, I agreed to edit.

      Delete
    2. Dear niece, I have sent a e=mail to Mr. Nijam right now

      please edit the word as follows in my poem posted SAVARI
      Inbox
      x


      Abulkalam bin Shaick Abdul Kader
      10:06 PM (9 minutes ago)

      to Shakkana
      edit as
      தந்தையின் அணுவும்


      Also, I have posted in my own blog: http://www.kalaamkathir.blogspot.com/ (கலாமின் கவிதைகள்)

      by editing the word as அணுவும்

      Delete
  9. தத்துவம் நிறைந்த கவிதை ...

    மனித வாழ்வின் நிலையை ..

    பயணமாய் சிந்தித்த கவி தீபம்

    கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கொடுத்தத் தலைப்போ, “பயணங்கள்” அதனால், வாழ்வில் கருவறை முதல் கல்லறை வரைக்கும் மனிதன் பயணிக்கும் பயணத்தை ஒரே பாடலில் கொண்டு வந்ததற்கு இத்தலைப்பும் ஒரு காரணம். மற்றும், ஓசை நயம், ஓட்டம் ஆகியன சிறப்பாய் அமைய எனக்கு யாப்பிலக்கணத்தில் இப்பா வகையான எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் (விளம்,மா, விளம், மா, விளம், விளம் , மா என்னும் வாய்பாட்டில்= இந்த வாய்பாட்டில் தான் சீறாப்புராணத்தில் அதிகமானப் பாக்கள் உள) இயற்றியதும் ஓர் ஈரப்பை உண்டாக்கி விட்டது.

      உங்களின் முதல்வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  10. தந்தையாக பயணம்
    தனையனாக பயணம்
    வந்தயிடம் பயணம்
    வார்த்தை பயணம்
    கொஞ்சம் இதில்
    கூர்ந்தால் அதில்
    மிஞ்சும் சொல்
    மீளும் வந்தது
    எங்கும் உள்ளது
    என்றே அறியும்.

    நல்லது கவிஞரே !
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ஞான குருவுக்குப் பட்டது தமியேனுக்கும் பட்டது.

      மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      தங்களின் இயற்பெயர் இப்றாஹிமா? தங்களைத்தானே அருட்கவி தாஹா அவர்கள் சிலாகித்துச் சொன்னார்கள், அவர்களின் பேட்டியில்?

      Delete
    2. அன்பு கவிஞரே !

      என்னைத் தேடாதீர்கள். நேரம் வரும் நானே தெரியபடுத்துவேன்.

      இப்ராஹீம் என்பது அண்மையில் காலமான c.இப்ராஹீம், கடற்கரைத் தெரு அவர்கள்.

      பற்றியவர்களை கவனமுடன் பற்றுக.

      நன்றி !

      Delete
  11. வாழ்க்கை பயணம் ..

    தந்தையின் பயணத்தின் முக்கியம்

    பற்றி நலம்மி கூறினீர்கள் ..தங்களை பற்றி

    அருட்கவி தாஹா அவர்கள் மெச்சியதை கண்டு

    மகிழ்ந்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன், தமிழூற்றே!

      Delete
  12. மனிதனாய் வாழ நல்வழி தேடி
    ****மார்க்கமும் பயிலுதல் பயணம்
    புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி
    ****புறப்படல் அருள்நிறைப் பயணம்
    இனிவரும் மறுமை இனியதாய் அமைய
    ****இறைவனை வழிபடும் பயணம்
    கனியென நினைத்த வாழ்க்கையின் பின்னே
    ****கடைநிலைப் பயணமே மரணம் ! அருமை!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய சகோதரி,
      அஸ்ஸலாமு அலைக்கும்
      நீங்கள் விரும்பும் வரிகளைச் சுட்டிக் காட்டியதிலிருந்து உங்களின் மார்க்கப் பற்றும் நம்பிக்கையும் அறிய முடிகின்றது. ஜஸாக்கல்லாஹ் கைரன். உங்களின் வருகைக்கும் “அருமை” என்ற அருமையான வாழ்த்துக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்!

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers