.

Pages

Friday, August 23, 2013

பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும் பாடம் !

1)
சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி
அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு
துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம்
வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ ?

2)
இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே
கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார்
விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி
தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ ?

3)
பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க
பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய்
காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு
ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்

4)
இளமைக் கருக்க இரத்தம் சுருங்க
வளமைப் பெருக்க வடிக்கு முழைப்பை
களவாய்ச் செலவு; கடும்விலை ஏற்றம்
உளமே வெடிக்க உறிஞ்சிக் குடிக்கும்

ஓலை = காசோலை (cheque)
களவாய்ச் செலவு = களவாகுதற்போல் வீண் செலவு
--
யாப்பிலக்கணம்:
பாடல் 1 & 2 = இயற்றரவு கொச்சகக் கலிப்பா
பாடல் 3 & 4 = வெண்டளையால் வந்த கலிவிருத்தம்


"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 24-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

13 comments:

  1. Fantastic Poem

    It is 100 % true

    Recent survey among low-and middle-income Indian expatriates in the Gulf states about their saving habits, which found that 95 per cent of them would not be able to continue the same comfortable life, if they were to go back home.

    As Gulf News reported recently of the 10,100 respondents, about 34 percent do not save money at all from their income. The remaining two-thirds claim they regularly save money but not for any productive purposes which would give them a regular income.

    ReplyDelete
  2. Thanks for your comments and information shared here.

    ReplyDelete
  3. சோதனைகள் வேண்டாம்
    வேதனைகள் வேண்டாம்
    சாதனைதான் என்றுணர்.

    பாரமாய் உணர்ந்திடல்
    வீரியமாய் மனதில்
    சோகமதை ஏற்றிடும்.

    நோக்கங்கள் மாற்றிட்டால்
    தாக்கங்கள் நீங்கியே
    ஊக்கமாய் வாழலாம்.

    வாழ்வது ஒருமுறை
    வாழ்ந்திடு வனப்புடன்
    நீக்கிடு சலிப்பை.

    அன்றியே வாழ்ந்திடல்
    நின்றிடுமே சோகம்
    வேண்டுமோ வாழ்வில் ?

    என்றுமே ஆனந்தம்
    நின்றிடுதல் சிறப்பன்றோ !
    கொண்டிடுமன தில்நலமே.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் குருவின் வருகைக்கும் வனப்புடன் வரைப்பட்ட கவிதைக்கும் நன்றி.

      Delete
  4. கப்பலுக்கு போனமச்சான்
    கண்ணிரஞ்ச ஆச மச்சான்
    எப்பத்தான் வருவீங்க
    எதிர் பார்க்கிறேன்
    நான் இறைவனிடம்
    அழுது தொழுது
    கேட்கிறேன்
    துஆ கேட்கிறேன்

    ஜோசியக்காரனிடம் குறி கேட்க போன ஒருவருக்கு ஜோசியன் சொன்னானாம் இந்த வருடம் கஷ்டமாகத்தான் போகுமென்று அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு மேலும் கஷ்டம் வரும் என்று சொல்ல மறு வருடமாவது சரியாகிவிடுமா என்று ஆவலாய் கேக்க ஜோசியன் தலையை ஆட்டி இந்த கஷ்டம் பழகிப்போய்விடும் என்றானாம்
    நிறையப்பேர்களின் வாழ்க்கை இப்படியே வெளிநாட்டு வாழ்க்கையோடு காலம் கழிகின்றது கஷ்டங்கள் பல இருந்தாலும் சுகமான சுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. ஆம். தொழிலதிபரே. பழக்கமாகி விட்டால் துயரங்களும் சுமைகளும் அறியா. எனினும், எம்மையும் அறியாமல் இங்குக் கஷ்டப்படும் நம்மவர்களின் வாழ்வை எண்ணாமல்- எழுதாமல் இருக்க முடியவில்லையே?

      உங்களின் வருகைக்கும், பிரபலமான நாகூர் கவிஞர் சலீம் அவர்களின் பாடலை, காயல் ஷேக் முஹம்மத் அவர்களின் உச்ச நிலைக் குரலில் என்றும் செவிக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் “கப்பலுக்குப் போன மச்சான்” பாடலை நினைவு படுத்தியமைக்கும் நன்றிகள்.

      Delete
  5. உழைப்பாளிகள் மீது அனுதாபத்தை வரவழைக்கின்ற சிறந்த படைப்பு !

    வாழ்த்துக்கள் கவிக்குறள் !

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இதனை விட உருக்கமானக் கவிதைகளும் வெளியாகி உள்ளன; அனைவரும் இப்பாலை வெய்யிலிலிருந்து கொண்டுப் பாடிய பாடல்களே! அனுப்வங்கள் தான் இப்படிப்பட்ட அனுதாபங்களை வரவழைக்கும் பாடல்களை எழுத வைக்கும்.

      உங்களின் வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  6. அய்யாவின் கவிதை என்றுமே நல்ல ஒரு கருத்தைக்கொண்டிருக்கும்

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்பற்று

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தமிழன் அய்யா அவர்கட்கு.

      Delete
  7. அயல் நாட்டுக் கஷ்டங்களை நயம்படச் சொல்லி இருக்கிறீர்கள். அருமை. வாழ்த்துக்கள் கவித்தீபம் அவர்களே.!

    சிலருக்கு சுயமாக தொழிலிருந்தும் தன்னம்பிக்கை இழந்தவர்களாய் மீண்டும் இந்த அயல் நாட்டுப் பள்ளத்தில் வந்தே விழுகின்றனர்.

    இவர்களை என்னென்று சொல்வது.?

    ReplyDelete
  8. மிக்க நன்றி அதிரை மெய்சா. ஆயினும் படித்தவர்களில் பலர் தற்பொழுது உள்நாட்டில் வேலை செய்வதையே விரும்பி ஏற்கின்றனர் என்ற செய்திகளும் ஓரளவுக்கு ஆறுதலைத் தருகின்றன.

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி.

    அருமையான கவிதை, மனிதன் உணருவானா?

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers