.

Pages

Thursday, February 20, 2014

அவன் இரகசியம் !?

எல்லாமா யெங்கணுமே உள்ள ஏகன்
......என்னுள்ளு மெல்லாமா யாகும் நாதன்
வல்லமையி னுருவமைத்து நாதர் தந்தான்
.....வழிகாட்டும் நிகரில்லா வேந்தர் பெற்றோம்
சொல்லிடவோ சொற்களுமே தருவ தில்லை
.....சொன்னாலும் புரிவதிலு மிலகு மல்ல
இல்லாமை இல்லாஉள் ளஎல்லா மென்றும்
.....இருப்பதெது வுமேஅல்லச் சொல்ல என்றார்

இல்லமையி லுள்ளமையாய் நிற்கும் சொந்தம்
.....இருப்பதுவு மவனல்லா மலில்லை நித்தம்
பொல்லாத வழிகளையே நாடு மெண்ணம்
.....புரிந்திட்டால் புனிதமாய் நிற்கு மென்றும்
நில்லென்று நிகரில்லாச் சொத்துத் தன்னில்
.....நீநின்றிட நிகரற்றோன் விருப்ப முன்னில்
நல்லிதிலே நிலைபெற்று நிலைக்க நன்கு
.....நாம்நாட்டம் நிறைவு(ச்)செய்தே நிலைப் போமே

பன்வடிவம் மிளிருமணி கலனாம் தங்கம்
.....படைத்தவனும் பற்பலவா யுள்ளா னெங்கும்
நன்கிதனில் நாம்கொள்ள நமனை வெல்வோம்
.....நற்சாந்தி மனம்ப்பெற்றே என்றும் வாழ்வோம்
மின்னலாகத் தெளிவுவேகம் அவனில்க் கொண்டு
.....மேன்மையாகி முன்நின்றுக் காண்போம் நன்கு
பொன்பொருளில் பற்றற்றப் பண்பில் நிற்போம்
.....புனிதவாழ்வில் பற்றாப்பற் றியுமே வாழ்வோம்

தன்னாலே தருகின்றத் தகவ லெல்லாம்
.....தந்திடுவான் தனுள்ளம்கொள் நாதர்ச் சொல்லால்
ஒன்றிலுமே அவனொன்றி இல்லை என்றால்
.....ஒன்றித்தான் வரத்தூதன் றிவேரு முண்டோ ?
என்றாலு மென்றுமவர் சொல்லில் நானே
.....இல்லைஅவன் தூதன்றி என்றேப் பேண
நன்வழியே வாழ்ந்து(க்)காட்டி நாமும் பற்ற
.....நல்மணியாய் வாழ்ந்திடுவோ மேநா மேற்றே

மாம்பழமும் உருசிக்கு மென்பார் உண்டோர்
.....மாநிலையும் படிப்பதினால் பற்றக் காணோர்
தாமதனில் தங்கிடவும் தகுந்தோர் வேண்டும்
.....தவறாதுத் தேடியேத்தான் பணிந்துக் கேளும்
தாம்பெற்ற நுட்பமிழந் து(த்)தாகிப் போனோர்
.....தந்ததிலே அகத்தாகித் தனித்தே நிற்பார்
நாமென்றேத் தலைத்தாங்கி நாளும் நிற்போர்
.....நாட்டமதில் நீங்கித்தான் நெருங்கார்ப் பாவம்

கோனறிவுக் கொண்டோர்கள் நானே என்பார்
.....குறைமதியும் கூறிடுமேத் தானே என்றும்
தனென்ற நல்லோர்கள் கரைந்தில் லாமல்
.....தலைவனேத்தான் இருப்பதுப்போல் அல்ல அல்லோர்
நானென்றுச் சொன்னதிலும் அவர்கள் இல்லை
.....நானேயன் றஇவனிலோ இவனே உண்டு
வானறிவுப் பெற்றாலும் வல்லோன் ஆகான்
.....வல்லோனில் வந்தவைகள் வந்த தேயாம்

நபிதாஸ்

4 comments:

  1. இடைவிடாமல் பாவனைய பரமனரு ளாசி
    ...இருப்பதனால் விருத்தமெழு துமுறுதியைப் பூண்டாய்
    தடைகளெவை வரினுமனந் தளராது செவ்வைத்
    ...தமிழ்ப்பணியே தினந்தவமாய்ப் புரியவரம் பெற்றாய்
    கொடையினனி சிறந்ததென மரபுவழி கற்றுக்
    ...கொடுத்ததனன் மாணாக்கர் உளங்கொள்ளு மட்டும்
    படைவெல்லும் பக்குவமும் புகழும்தான் சேரும்
    ...படிப்பித்த குருவையும் மறவாதப் பற்றால்!

    ReplyDelete
    Replies
    1. படிப்பித்த குருக்களையும் மறவாத பற்றால்
      .....பாவனையும் பக்குவமும் சொத்தாகி நிற்கும்
      துடிக்கின்ற இதயமுமே மறந்திட்டால் சோகம்
      .....தொடர்பயிற்சி நின்றாலும் மறந்திடுமே உள்ளம்
      வடிகின்ற நீர்தனினும் தடுத்திட்டால் காணும்
      .....வசதியான வழிகளிலே தேடித்தான் ஓடும்
      கடிதத்தில் கேட்டிட்டேன் சந்தேகம் தோன்றி
      .....கலிவிருத்தம் கண்டுகொண்டேன் களத்தினிலே ஆழ்ந்தே.

      Delete
    2. படிப்பித்த குருக்களையும் மறவாதப் பற்றால்

      ஒற்று கவனம் விட்டதால் மீண்டும் முதல் adi

      Delete
    3. ஆழ்ந்திட்டே கும்பகோணம் மாநாட்டில் தந்தார்
      .....ஆன்றோரும் சான்றோரும் குழுமிட்டே நன்றே
      வாழ்த்துடனே நற்கவிக்கோ இசைகளுமே உண்டு
      .....வல்லவனின் மறைதனையும் இசைகொண்டே என்று
      வீழ்ந்திட்டார் உமர்கலிபா மறையிசையில் அன்றே
      .....வேண்டிடுமோ இன்னமுமே ஆதாரம் என்றும்
      யாழ்கருவிப் போன்றதுப்போல் இஸ்லாத்தில் ஆகும்
      .....யாரெவரும் நல்லாக்கம் படிப்பதுப்போல் தானே.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers