.

Pages

Saturday, November 1, 2014

[ 5 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(13)
அகத்தில் அனைத்தாக அன்பு மிளிரும்
முகத்தில் கருணை முகிழும் - இகத்திலே
துன்பம் நிகழத் துவளும் இவையெல்லாம்
இன்மை இயல்பின் எழில்

(14)
எழில்மிக்கத் தோற்றம் இலங்கும் நிதமும்
மழித்திடுமே தீயதான மாயை - மொழிந்திடுமே
முன்பின் நிகழ்வு முதிர்வான முக்தியில்
அன்பில் உயர்ந்த அறிவு

(15)
அறிதலே நாட்டமாய் ஆதியில் தன்னில்
அறிந்திடும் தோற்றங்கள் ஆனதே - அறிவுத்
தெளிதலில் தன்னையே திண்ணமாய் கண்டே
தெளிவதே உண்மைத் தேடல்

(16)
தேடியேஎங்கும் திரிந்தாலும் காணாதே
வாடியே வந்தே வருந்துவாய் - ஆடிப்பாடி
ஓடுவதில் இல்லையே ஒன்றும் அமைதியில்
தேடுவதில் உள்ளதே தீர்வு.
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (13)
பொருள்: இருக்குமனைத்தையும் தன் உள்ளத்தில் தானாகிக்கொள்ள, ஒவ்வொன்றின்மீதும் அந்த எழிலான அன்பு வெளிப்படும்; முகம் என்றுமே கருணையே வடிவாக பிரகாசித்தே ஈர்க்கும்; இவ்வுலகில் எங்கும் எதிலும் துன்பம் நிகழ்ந்தாலும் வேதனைப்படும். இவ்வாறான எச்செயலும் இன்மை என்ற இல்லாதிருக்கும் இப்பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த தன் நிலையில் இயல்பானவைகள். இவ்வியல்பானச் செயலகள் எல்லாம் பிரபஞ்சத்தின் எழிலானவைகள். இது ஒன்றின் இரகசியம். (இல்லாதிருத்தல் என்பது புரிதலுக்கு வேண்டி உள்ளத்தைச் சொல்லலாம். உள்ளம் இருக்கின்றது. அது எப்படி என்பது புரியாத புதிரே !)

வெண்பா (14)
பொருள்: இறைவனை நேசித்து, நேசித்து அதன்மூலம் முக்த்தி அடைந்ததானதின் தோற்றம் என்றும் எழில் மிகுந்து, என்றும் அறிவை பிரகாசித்து எல்லோரையும் கவரும். என்றும் தீமையை உண்டாக்கும் மாயையைகளை அறிந்து அதனிலிருந்து உண்டாகும் துன்பத்திலிருந்து காத்திட வழிகாட்டி அதனை இல்லது நீக்கிவிடும். நடந்ததையும் இனி நடக்கப்போவதையும் சொல்லும். இது இறைவனை நேசித்ததால் கிடைக்கப்பட்ட உயர்ந்த அறிவு.

வெண்பா (15)
பொருள்: தன்னை அறியவேண்டும் என்ற நாட்டம் ஆதி நிலையில் உண்டாகியது. தன்னின் ஆற்றலை ஒவ்வொன்றிலும் கண்டே தெளிந்தே உண்டாகும் அனைத்தையும் அது அறிய நாடியது. அறிய வேண்டும் என்ற நாட்டத்தில் அனைத்தும் உருவானது, அறிகின்றது. இவ்வாறு அறிவதே உண்மைத்தேடல் ஆகும்.

வெண்பா (16)
பொருள்: எங்கும் நிறைந்த இறைவனை அறிந்திட வனவாசம் போன்ற எங்கும் தேடி அவனைக்காணாது வாடி வதங்கி வருத்தத்தில் சோகமாக இருப்பார். இவ்வாறு எங்கும் நிறைந்தவனை எங்கும் தேடி புரிய முடியாதவனை தனிமையில் அமைதியில் தேடினால் அங்கு உண்மைத் தெளிவில் தீர்வு கிடைத்திடும்.

6 comments:

  1. தீர்வொன்று தேடி தினமும் அலைவார்கள்
    சீர்கொள்ள உள்ள தவன்சிந்தை - வேர்கொண்டு
    நிற்கபிற இன்னல் நெருங்கிடுமோ மெய்யொளியைக்
    கற்கவுள தாகும் கருத்து!

    அருமையான அந்தாதி தொடரட்டும் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. வேர்கொண்டு நின்றிட வேந்தன் வெளிப்படுவான்
      பார்நின்று பாரும் பதியினில் - ஆர்ந்தவனில்
      இன்னலுமே ஓடிவிடும் எப்போதும் எல்லாமும்
      இன்பமுமே ஆகிவிடும் இங்கு

      ஊமைக்கனவுகள் வார்த்தைகளாய் வந்தமைக்கு நன்றிகள் பல.

      Delete
  2. தெரிந்திட்ட பொருளினில்
    புரிந்திட்ட வெண்பாக்கள்
    தேனாக பாயுமிந்த
    தெவிட்டாத அருந்ததியில்
    தொடருங்கள் தொய்வில்லாது
    துனையதனைன் கையோடு

    ReplyDelete
    Replies
    1. துணையவன் கையோடு
      தூரிகை எழுதிடும்
      இணையில்லா அவனின்
      இசைவின்றி அசையாது
      வினைகளெல்லாம் அவனுடையதே
      விதைப்பதே இன்பம்
      முனைப்புகள் தந்த
      முகமுங்களுக்கு நன்றியே.

      Delete
  3. ஊமைகளின் உணர்வுகள்-உள்ளத்தில்
    உண்மையாய் உறைந்து இருப்பதுபோல்-அதன்
    பொருள் உணர்ந்து புவி ஏற்று போற்ற வேண்டும்,
    என்பது போல், அடிமை என்ற கவி சொல்லி
    அதன் விளக்கம் தந்து மிகவும்
    அருமை. பாரட்டுக்கள் .

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் நன்றி; தங்கள் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers