.

Pages

Saturday, November 22, 2014

கால்களும் காலணிகளும்

காலணியும் கால்களும்
கணவன் மனைவி போல
கால்களைப் பார்த்துக்
காலணிகள் கதைப்பதைக் கேளுங்கள்:

இன்னார்க்கு
இன்னாரென்று
எழுதி வைத்தான்
இறைவன் அன்று
உன்னோடு இருப்பேன் என்று
உனக்குத் தெரியுமா அன்று?
உன்னோடு எனக்கென்று
“ஜோடி” சேர்த்தது யார் இன்று?

என்னை “ஜோடி” என்பர்
நீ தான் என்றன் “ஜோடி” யானாய்

கல்லும் முள்ளும் படாமல்
காத்து வருகின்றேன்
அல்லும் பகலும் உன்னை
அயராத உழைப்பில் மனைவியாய்!

என்னை விட்டுச் சிலநேரம்
இருக்கும் பொழுது மனபாரம்
உன்னைக் காண மீண்டும்
உன்வாசலில் இருப்பேன் பலநேரம்!

வீதிவரை உறவானாய்
வீடுவந்ததும் கழட்டி விடுகின்றாய்
நாதியற்றவன் அல்லன்;
நான் உன்றன் துணைவி!

இறையில்லம் சென்று
இறைவனைத் தரிசித்து
இன்முகமாய் வரும்வரை
நிறைமனமாய் நானும்
நிற்கின்றேன் வாயிலிலே!

இருட்டிலே நீ
என்னை விட்டு விட்டு
குருட்டுப் பார்வையில்
குழம்பி மாற்றிப் போட்டாலும்
குத்திக் காட்டுவேன்
புத்தியில் படும்வரைக்கும்!

விடுப்பில் வந்து போகும்
வெளிநாட்டுக் கணவ்ன
விடுப்பு முடிந்ததும் என்னை
விட்டு விட்டுச் சென்றாலும்
வீடு வரும்வரை உனக்காக
வீட்டுக்குள் ஒளிந்திருப்பேன்!

ஆயினும்,
கல்லறைக்குச் செல்லும்
காலம் வந்து விட்டால்
சொல்லொணாத் துயரத்தில்
சோகமுடன் நானிருப்பேன்
சொல்லி விட்டேன் இப்பொழுதே!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

16 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதரர் நிஜாம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் என்றன் கவிதையைத் தங்களின் தளத்தில் காண பேரானந்தம்.
    மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்


    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎

    மச்சானின் எண்ணங்களை எழுத்துவடிவில் பார்ப்பதற்கு பல நாட்கள் ‎காத்திருந்த எனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷமாக இந்தக் கவிதையை ‎ஏற்கின்றேன்.‎

    உங்களின் எழுத்து நடைகள் மெல்ல மெல்ல மீண்டும் நடந்தது வர ‎வாழ்த்தி பாராட்டுகின்றேன்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. காலணி என்பது மாந்தர்கள் பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்தும் காக்கவும், அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவைகளுக்காவும் காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். காலணிகளில் எளிதாக அணிந்து கொள்ளவும் கழற்றவும் வசதியான செருப்பு, மிதியடி போன்றவைகளும், புறங்கால்களையும் குதி கால்களையும் மூடியிருக்கும் ஷூ , பூட்ஸ் முதலிய கால்பூட்டணிகளும், கணுக்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும், கெண்டைக்கால், முழங்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும் உண்டு. கால்பூட்டணிகள் பெரும்பாலும் துணியால் அல்லது தோலால ஆன வாரினால் கட்டி, முடிச்சிட்டு ,பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச் சூழல்களுக்கும், தொழில்களுக்கும், தட்ப வெப்பத் தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாகும்.

      Delete
    2. ஒரு பெண் தனது அழகை எந்த விதத்தில் பராமரிக்கிறாள் என்பதை அவர் போட்டுக்கொள்ளும் நெயில் பாலிஷையும், காலணியையும் பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். சிலர் அதிலெல்லாம் அதிகம் ஆர்வம் காட்டமாட்டார்கள், அது ஒன்றும் குற்றமல்ல.

      Delete
    3. எப்போது காலணி அணிவதாக இருந்தாலும், அவை நடப்பதற்கு எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும். மேலும் ஸ்டைல் என்று ஹீல்ஸ் போட்டு நடந்தால், கால் மற்றும் குதிகால்களில் வலி ஏற்படுவதோடு, இடுப்பு வலியும் ஏற்படும்.

      Delete
    4. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது பாதங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதாவது பாதங்களை நன்றாக பராமரிக்க வேண்டும்.
      1. பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராயுங்கள். உங்களால் அடிபாகத்தை பார்க்க முடியவில்லை என்றால் கண்ணாடியையோ, மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள்.
      2. கால்களை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருங்கள். வெதுவெ துப்பான நீரில் தினமும் கால்களை கழுவுங்கள். விரல் இடுக்குகளில் கரபெரள வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
      3. சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதக்கப்படுவதால் வியர்ப்பது குறைந்து தோல் வறண்டு விடும், வறண்ட தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்பட்டுத் தொற்று ஏற்படலாம், எனவே தோல் வறண்ட நிலை ஏற்பட்டால் அதனை ஈரப்படுத்துங்கள்.
      4. இரத்த ஓட்டம் ஒழுங்காக நடைபெற உட்காரும்போது கால்களைத் தூக்கி வையுங்கள். மேலும் கணுக்கால்களையும் விரல்களையும் அசைத்துக்கொண்டே இருக்கவும். இறுக்கமான காலுறைகளை அணிய வேண்டாம். கால் மேல் கால்போட்டு அமருவதை தவிர்க்கவும்.
      5. வியர்வையை உறிஞ்சும் பருத்தியினாலான காலுறைகளையே தேர்ந்தெடுத்து அணியவும். நைலான் வகைகளை தவிர்க்கவும்.
      ரப்பர் மற்றும் எலாஸ்டிக் வளையங்கள் உள்ளவற்றை தவிர்க்கவும். சரியாக பொரு ந்தாத காலுறைகள் தோலில் உரசிக்காயங்கள் ஏற்படுத்து மாதலால் அதனையும் தவிர்க்கவும்.
      6. கால் நகங்களை வெட்டும் போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் விரல் நுனி வரை உள்ளவாறு பார்த்து நகங்களை வெட்டவும்.
      ஓரங்களில் உள்ள கூர்மையான பகுதயைத் தேய்த்து மழுங்கச் செய்யவும்.உங்கள் விரல் நகங் களைச் சுற்றித் தோல் சிவந்து காணப்பட் டால் உடனே உங்கள் மருத்துவரிடம் காட் டவும்.
      7. வெயில் காலங்களில் சூட்டுக் கொப்புளங்கள் ஏற்படாத வகையில் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். வீட்டிரும்கூட சாதாரணக் காலணிகளுடன் இருக்கபே நல்லது.
      சில பேர் காலணிகளை அதிக விலைக் கொடுத்து வாங்குவார்கள். அந்த காலணிகள் அவர்களின் காலுக்கு அணியாக இல்லாமல் விலங்காகவும் மாறி விடுகிறது.
      காலணிகள் கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எள்ளளவு ம் மாற்றுக் கருத்தி ல்லை என்றாலும் அது நமக்கு வசதியாகவும் இருக்க வேண்டும்.
      சில காலணிகள் கால்களை இறுக்கி பிடித்தபடி இருக்கும். நடக்கிறபோது காலில் உரசி உரசி சின்ன சின்ன புண்களை ஏற்படுத்தும்.
      ஆகவே சர்க்கரை நோயாளிகள் செருப்புகளை வாங்கும்போது தன் காலுக்கேற்ற பாதிப்பில்லாத வசதியானதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

      Delete
    5. மச்சானின் வாழ்த்துரைக்கும், நீண்ட விளக்கவுரகளுக்கும் நன்றி.

      Delete
  3. கவிக்குறள் மீண்டும் தளத்தில் மிளிர்வதை கண்டு மகிழ்கின்றேன்.

    தொடர்ந்து படைக்க வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. இன்ஷா அல்லாஹ் தொடரும்

      Delete
  4. பாதத்தைப் பாதுகாக்கும் காலணிக்கும்
    பா வெண்பா நான்கண்டேன் கலாம் எழுத
    நீர்வடித்த இக்கவிக்கு பாதங்களும்
    நிமிர்ந்து நடக்கும் பாதுகாப்பாய்
    காலணிகொண்டு

    நீண்ட இடைவெளிக்குப் பின் கவித்தீபம் அவர்களின் கவிகண்டு அகம் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள். தொடர்வீராக.! தொய்வில்லாமல்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அதிரை மெய்சா! இன்ஷா அல்லாஹ் தொடரும் என் கவிப்பயணம்.

      Delete
  5. காலணிகள் காதலிப்பதை காண்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காலை விட்டுக் காலணி தனித்து விடப்பட்ட வேளையில் தான் காலுக்கும் காலணிக்கும் உண்டான காதலை அறிந்தேன். “கவிஞன் உருவாகுவதில்லை; உருவாக்கப்படுகின்றான்; ஒரு வீட்டின் வாசலில் பூச்செடி இருந்தால் மற்றவர்கள் அதைப் பார்த்தும் பார்க்காதது போல் செல்வர்: ஆனால் எவனொருவனைப் பார்த்து அந்தப் பூச்செடி ஏதோ ஒன்று பேசுவது போல் உணர்ந்தால், அந்த உணர்வே கவித்துவம்; அவனே கவிஞன்” என்றார் கவிஞர் மு.மேத்தா அவர்கள். எனக்கும் அப்படி ஒரு நிலைமை தான். நான் கழற்றி விட்டு வந்த என் காலணிகள் என்னிடம் இவ்வாறெல்லாம் காதால் பேசியதை காதால் உணர்ந்தேன்; கவிதையாய் வடித்தேன். வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி, சகோதரர் சாதிக் பாஷா.

      Delete
  6. ஆமாம்,
    நான் சொல்லொண்ணாத் துயரத்தில்
    நவின்றது சிந்திக்க வேண்டியே !
    வான் புகழ் நீ பெற்றுவிட்டால்
    வரும் தலைமுறை என்னை
    உன்னினைவாய் பார்த்தே போற்றிடும்
    உயர்ந்த இடத்தில் வைத்துவிடும்.
    என்சொல்லில் சிந்தித்தே அவ்வாறே
    ஏற்றம்பெறச் சிறந்தவனாய் வாழ்ந்துவிடு !

    ReplyDelete
    Replies
    1. புரியவில்லை நபிதாஸ்; இந்தப் பின்னூட்டம் சொல்லும் கருத்து யாது?

      Delete
    2. .........................
      ...................
      விடுப்பில் வந்து போகும்
      வெளிநாட்டுக் கணவ்ன
      விடுப்பு முடிந்ததும் என்னை
      விட்டு விட்டுச் சென்றாலும்
      வீடு வரும்வரை உனக்காக
      வீட்டுக்குள் ஒளிந்திருப்பேன்!

      ஆயினும்,
      கல்லறைக்குச் செல்லும்
      காலம் வந்து விட்டால்
      சொல்லொணாத் துயரத்தில்
      சோகமுடன் நானிருப்பேன்
      சொல்லி விட்டேன் இப்பொழுதே!

      ஆமாம்,
      நான் சொல்லொண்ணாத் துயரத்தில்
      நவின்றது சிந்திக்க வேண்டியே !
      வான் புகழ் நீ பெற்றுவிட்டால்
      வரும் தலைமுறை என்னை
      உன்னினைவாய் பார்த்தே போற்றிடும்
      உயர்ந்த இடத்தில் வைத்துவிடும்.
      என்சொல்லில் சிந்தித்தே அவ்வாறே
      ஏற்றம்பெறச் சிறந்தவனாய் வாழ்ந்துவிடு !



      தாங்கள் எழுதிய கவிதையின் தொடராக எழுதிவிட்டேன்,

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers