.

Pages

Sunday, September 30, 2012

பிலால் நகரும் அதன் சிறப்புகளும்...

பிலால் நகர் – இப்பகுதியின் வடக்கே செடியன் குளமும், தெற்கே சேது பெருவழிச்சாலையும், மேற்கே குறுகிய ரயில் ( மீட்டர் கேஜ் )பாதையும், கிழக்கே காதிர் முகைதீன் கல்லூரியும் அமைந்துள்ளன.

பெரும்பாலான இடங்கள் முள்ளும் முள்ளு சார்ந்த பகுதியாக இருந்தாலும் நமதூரைச் சேர்ந்த பல்வேறு தெருக்களிலிருந்து குடிபெயர்ந்தோராக ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேர் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளியூர்வாசிகள், ஆதி திராவிடச் சகோதரர்கள் போன்றவர்கள் வசிக்கின்ற இப்பகுதியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம், குடிநீர், சாலை வசதி போன்றவற்றில் பின்தங்கியிருப்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு பெருத்த லாபத்தை அள்ளித்தந்த பகுதி என்ற சிறப்பைப் பெறுகின்றது. 
மஸ்ஜீத் பிலால் ( ரலி ) :
அல்லாஹ்வின் உதவியால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நமதூரைச் சேர்ந்த கண்ணியத்திற்குரிய சகோதரர்களின் பெரும் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட இப்பள்ளியால் இப்பகுதி பெரும் சிறப்பைப் பெறுகின்றன. குறிப்பாக தனி மஹல்லா என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றது. இப்பள்ளியில் புனித ரமலான் மாதத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி நமதூரில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பிலால் நகரின் நுழைவாயில் :
சேது பெருவழிச்சாலையில் அதிகாலை, மாலைப் பொழுதுகளில் நடை பயணம் மேற்கொள்ளும் நமதூர் சகோதரர்கள் இந்நுழைவாயிலைக் கண்டவுடன் அருகிலுள்ள பள்ளிக்கு சென்று தனது தொழுகையை நிலை நிறுத்த வேண்டும், அதன் பிறகு அருகிலுள்ள கடைகளில் சூடான/சுவையான டீ அருந்து வேண்டும் போன்ற நினைவூட்டல்களைப் பெறுகின்றனர்.

NCC : துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் :
மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும். இளைஞர்கள் நாட்டு நற்பணி சேவைகளில் ஈடுபட்டு, ஆபத்து காலங்களில் ராணுவத்தினருடன் சேர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் உதவி புரியவும், மனிதனின் ஆளுமைத் தன்மையை வளர்க்கவும், நாட்டுக்காக சேவை புரிவதிலும் முழுப்பங்களிப்பு செய்வதே தேசிய மாணவர் படையின் நோக்கமாக உள்ளன. துப்பாக்கி சுடுதல், சமூக சேவையில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கான பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் அமைந்துள்ள  NCC – துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமில் டமால், டுமீல், டிஸ்  என்ற சப்தத்துடன் கேட்ட ஓசைகள் இன்றோ மிகவும் அடக்கமாகக் காணப்படுகின்றன. கம்பீரமாக காட்சியளித்த மதில்சுவரோ இன்று கருவமுள்ளு பாதுகாப்புடன் கழிவறைச் செல்லும் முகாமாக இருப்பது வேதனைத் தருவதாக உள்ளது.

அதிரை தாருத் தவ்ஹீத்தின் ‘மக்தப்’ :
பிலால் நகரில் வசிக்கும் சிறார்களுக்கு குர்ஆன் ஓதிக்கொடுப்பதற்கும், பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெறுவதற்கும் சமுதாய அமைப்பான அதிரை தாருத் தவ்ஹீத்தின் சார்பாக மக்தப் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இறைவன் நாடினால் இதன்மூலம் இப் பகுதியில் வசிப்பவர்கள் மார்க்கக் கல்வியை அறிந்துகொள்ளும் சிறப்பைப் பெறுவார்கள்.

பிலால் நகரின் முதல் வீடு :
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் H. முஹம்மது புஹாரி அவர்களால் கட்டப்பட்ட இவ்வீடு இப்பகுதியின் முதல் வீடு என்ற சிறப்பைத் தட்டிச்செல்கின்றது.

காதிர் முகைதீன் கல்லூரியின் மகளிர் விடுதி :
காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக கட்டப்பட்ட மகளிர்க்கான தங்கும் விடுதி இப்பகுதியில் அமைந்துள்ளன. மிகப்பிரமாண்டமான இக்கட்டடத்தில் மகளிர் கல்லூரி அல்லது மகளிர் மேல் நிலைப்பள்ளி இதில் ஏதாவது ஓன்று எதிர்காலத்தில் அமையவேண்டும் என்பது இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கோரிக்கையாக இருக்கின்றது.

வாடகை வீடுகள் :
பிலால் நகர் என்றாலே வாடகை வீடுகளுக்கு பஞ்சமில்லை. குறைந்த முதலீட்டில் வீடுகள் கட்டப்பட்டு ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகைத் தொகையை நிர்ணயம் செய்து அதாவது மாதம் ஒன்றிற்கு ரூ 500/- லிருந்து ரூ 700/- வரை என்று விடப்படுகின்றன. இதில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : இறைவன் நாடினால் மற்ற தெருக்களின் சிறப்புகளும் பதியப்படும்...
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.
    தம்பி நிஜாம் அவர்களே! பாராட்டுகள். இதுபோல் புதிதாக நமதூரில் உருவாகிய நகர்களையும் பற்றி எழுதுங்களேன். உதாரணமாக எம். எஸ். எம் நகர், ஹாஜா நகர் ஆகியன.

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு நிஜாம், ஒரு காலத்தில் சினிமா (நியூ சினிமா) கொட்டகை இருந்து அதை அகற்றி ராணுவ பயிற்சி மையம் இருந்த்து, அங்கே பெண்கள் ஹாஸ்டல் கட்டி சில காரணங்களால் பயன்பாட்டில் இல்லை, அதை வேறு சமூக நல கூடமாக மாற்றி பயனடைய செய்யலாம்..

    ReplyDelete
  3. // அஸ்ஸலாமு அலைக்கும்.
    தம்பி நிஜாம் அவர்களே! பாராட்டுகள். இதுபோல் புதிதாக நமதூரில் உருவாகிய நகர்களையும் பற்றி எழுதுங்களேன். உதாரணமாக எம். எஸ். எம் நகர், ஹாஜா நகர் ஆகியன.//

    வலைக்குமுஸ்ஸலாம் காக்கா

    நமது பங்காளித் தெருக்களின் சிறப்புகளைப் பற்றி எழுதாமல் இருப்பேனா !?

    இறைவன் நாடினால் ! தொடரும்...

    ReplyDelete
  4. பிலால் நகரில் இவ்வளவு

    விசயங்களா ..!தம்பி நிஜாம்

    ஒவ்வொரு தெருவா ..அலசி ஆராய்ந்து

    விடுங்க ,,அன்சாரி காக்கா கூற்றுப்படி

    தொடருங்கள் ...

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers