.

Pages

Monday, March 25, 2013

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு மீண்டும் சாத்தியமா ?

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டுமென்று பலதரப்பிலிருந்தும்  குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சில அரசியல் கட்சிகள் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ தமிழகத்தின் பல பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு மதுக்கடைகள் ஒழிப்புக்கு ஆதரவாக மக்கள் ஆதரவைத் திரட்ட முற்பட்டார். பல இஸ்லாமிய இயக்கங்கள் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்திக் காட்டின. பல மகளிர் அமைப்புகள் அடையாள உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தின. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. திரு. சக்தி பெருமாள் என்ற ஒரு பெரியவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து சாகும் நிலையில் கைது செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டார். இவைகளைத் தொடர்ந்தும் கண்ணால் காணும் காட்சிகளின் அவலங்களையும் முன்னிட்டு முழுமதுவிலக்கை தமிழ் நாட்டில் மீண்டும் அமுல் படுத்த வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.  இந்த பிரச்னை பற்றி நாமும் சற்று விவாதிக்கலாம்.

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நீதிக் கட்சியும் பிறகு காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்த காலங்களில் தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்தது. அப்போது கூட திருட்டுத்தனமாக சிலர் மறைவான இடங்களில் சாராயம் போன்றவற்றைக் காய்ச்சி அச்சத்துடன் குடித்து வந்தார்கள். அந்தப் பழக்கம் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு பேரூராட்சி என்று எடுத்துக் கொண்டால் அங்கு அதிகபட்சமாக  ஐந்து பேர்கள் மட்டுமே அப்படி இருப்பார்கள். சில நேரங்களில் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வார்கள். எனக்கு சிறுவயதாக இருந்த போது இப்படி சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்து  சேது ரோடு வழியே கையைக் கட்டி காவல்துறை இழுத்துச் சென்றதை ஊரே கூடி  வேடிக்கை பார்த்தது நினைவில் நிற்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்களை முதலமைச்சராகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. அந்நேரம் மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்தபோது " அரசின் வருமானத்துக்காக மதுவிலக்கை ரத்து செய்வது  மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பானது " என்று கூறினார். இந்த நேரத்தில் அண்ணா மறைந்தார்.

அண்ணா அவர்கள் மறைந்த பிறகு அண்ணாவின் இதயத்தைக்  கடனாகக் கேட்டு இரங்கற்பா எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணாவை புகழ்ந்து பாடியபோது
  
" ஆந்திரத்து பிரம்மானந்த ரெட்டிகாரும் 
ஆஹா நீதானே அசல் காந்தியவாதி என்று 
ஆராதனை செய்திட்டார் 
மதுவிலக்கை தீவிரமாய் ஆக்குகின்றீர்!
பல மாநிலத்தில் கை கழுவி கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே என்று 
கிரி என்றால் மலையன்றோ! 
அந்த மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா ""

என்று  குறிப்பிட்டு  கவி பாடிவிட்டு அண்ணாவுக்குப் பிறகு தானே  முதலமைச்சராக வந்த பிறகு ஒரு சுப முகூர்த்தநாளில் மதுவிலக்கை தமிழ் நாட்டில் ரத்து செய்து மதுக்கடைகளை திறந்துவிட்டார். மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என்று தி மு க ஆட்சிக்கு வருவதற்கு துணையாக நின்ற முஸ்லிம் லீக் மற்றும் இராஜாஜி ஆகியோர் விடுத்த கோரிக்கைகள் கலைஞரின் காதுகளில் விழவில்லை.
  
கலைஞர் கருணாநிதியின் மீது ஏற்பட்ட கருத்துமாறுபாடுகளால் தி மு க வை விட்டு விலகி தனிக் கட்சி கண்டு வென்று ஆட்சியைப் பிடித்த எம் ஜி ஆர் காலத்தில் மீண்டும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவரப்படுமென்று நன் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ " தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா? இல்லை!  நீதான் ஒரு மிருகம்! இந்த மதுவில் விழும் நேரம்! " என்ற திரைப் பாட்டுக்கு வாயசைத்துவிட்டதோடு தன் கடமை முடிந்தது என்று எண்ணி மதுக்கடைகளை தனது ஆட்சிக் காலம் முழுதும்  தொடர்ந்தார். அத்துடன் வெறும் சாராயக் கடைகளாக இருந்தவை ஒயின் ஷாப் என்று அழைக்கப்படும்  சீமைச்சாராயம் விற்கும் கடைகளாகவும் அப்பனே !  ராமச்சந்திரா ! என்று கோஷம் போட்டுத் துவக்கப்பட்டன. 

அதன்பின் கருணாநிதி முதல்வராகி பின் ஜெயலலிதா அம்மையார்  முதல்வரானாலும் எத்தனையோ மாற்றங்கள் கண்டாலும் மதுவிலக்கு மட்டும் மீண்டும் அமுல் படுத்தப் படவில்லை. மாறாக, ஜெயலலிதா ஆட்சியில்  மது விற்பனைக்காக   டாஸ்மார்க் என்ற அரசின் நிறுவனத்தை ஏற்படுத்தி , படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அரசே சொந்தமாக மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அந்த மதுக்கடைகளை ஒட்டி அரசே " பார்" என்று அழைக்கப்படும் மதுபானம் அருந்தும் வசதிகளைக் கொண்ட விடுதிகளையும் நடத்த ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. 

1983 ஆம் ஆண்டில் வெறும்  139 கோடி ரூபாய்களாக இருந்த மதுக்கடைகளின் ஏலத்தின் மூலம் இருந்த அரசின் வருமானம்  2002 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த அரசு மதுக்கடைகள் மூலம்    2,800  கோடி ரூபாய்களாக வானுக்குயர்ந்தது.  இந்த வருமானம்   2013ஆம் ஆண்டில்  25,000 கோடி ரூபாய்களாக இன்னும் உயர உயர்ந்து இருக்கிறது.  

இப்படிப்  பல ஆயிரம் கோடிகளாக மதுவிற்பனை மூலம் தமிழக அரசு கொட்டிக் குவித்திருக்கும் வருமானத்துக்குக் காரணமாக இருப்பது செல்வந்தர்கள் தரும் வரிகளல்ல. இந்த வருமானத்தின் பின்னணியில் இருப்பது ஒரு சமூக அவமானம். அரசு தனது வருமானத்தைப் பெருக்க எவ்வளவோ வழிகள் இருந்தும் இப்படி சாராயக்கடைகள் மூலம் பெறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பிக்கொள்வதற்கு ஈடானது. 

கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலான ஏழைத் தமிழர்கள் , கூலித் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர் , பள்ளி கல்லூரி மாணவர்கள், சொல்வதற்கு வெட்கக்கேடாக இருந்தாலும் உண்மையில் பல பெண்கள் ஆகியோர் மதுவின் போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்வையும் தாங்கள் குடும்பத்தினரின்  வாழ்வையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கவுரவத்தையும் துயருக்குள்ளாக்குகின்றனர்.  

முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்  போன்ற அனைத்துப் பாதகங்களுக்கும் குடியே அடிப்படைக் காரணமாக அமைந்து இருக்கிறது.  

அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சாலை விபத்துக்கள் குடிப்பழக்கத்தின் காரணமாகவே நிகழ்வுறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

குடும்ப வன்முறையை கோலோச்சி  நிற்கச்செய்வதும் குடிப்பழக்கமே. குடிகாரக் கணவன்மார்களால் கொடுமைப் படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பெற்ற குழந்தைகளை பேணாமல் அவர்களுக்கு கல்வி யறிவு தருவதில் சிந்தை செலுத்தாமல் இள வயதிலேயே அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்களின் கூலியைக் கூட தனது குடிப்பழக்கத்துக்கு பறித்துக் கொள்ளும் பாவிகளாக பெற்றோர் மாறும் சமூக அவலம் சந்தி சிரிக்கிறது. 

குடிக்கும் நிகழ்ச்சி இல்லாத சமுதாய நிகழ்ச்சிகளை சந்திக்க முடியவில்லை. பிறந்தநாள், கருமாதி செய்யும் நாள் முதல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட குடிப்பதற்கும் குடிப்பவர்களுக்கும்  சிறப்பு ஏற்பாடுகள் செய்து வைப்பது சமூகப் பழக்கத்தில் தொத்து வியாதி போல்  குடியேறிய குஷ்டரோகமாகிவிட்டது. 

மனிதனுடைய ஒரு சில மணித்துளிகளின் சிறிய மகிழ்ச்சிக்கான விலை பண்பாட்டுச் சீரழிவு என்று ஆகிவிட்டது. 

படிக்கும் மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு வரும்போதே குடித்துவிட்டு வரும் பழக்கத்துக்கும், தொழிலாளர்  கொஞ்சம் ஊத்தாமல் வந்தால் வேலை  செய்ய முடியவில்லை என்கிற நிலைமைக்கும் ஆளாகிவிட்டார்கள்.   

அரசியல் காரணங்களுக்காகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் வாடகைக் கொலையாளிகளுக்கு வழங்கப்படும் இன்றியமையாதவைகளில் மது பாட்டில்கள் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டன. மது குடித்த மயக்கத்தில் அடையாளம் காட்டப் படுபவர்களை வெட்டவும் குத்தவும் பின் விளைவுகளை சிந்திக்காமல் தலைப்பட்டுவிடுகிறார்கள். மது உள்ளே போனதும் மதி வெளியே வந்துவிடுகிறது.  மதுக்கடைக்குப் போக பணம் தராத தாயைக் கொன்ற மகனையும், மதுப்  பழக்கத்துக்காக பணம் இல்லாமல் பெற்ற மகளை விபச்சாரச் சந்தையில் விற்ற தகப்பனையும், மது போதையில் மருமகளை பெண்டாள நினைத்த மாமனாரையும், மதுக்கடைகளில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட நண்பர்களையும் சமீப கால  சரித்திரம் சந்தித்துவருகிறது.  

மாலை நேரங்களில் குடும்பங்களுடன் பொதுப் பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை. அருகில் வந்து அமர்பவர்கள் அடித்துவிட்டு வருவதால் ஒரு 'சக்தி பிறக்குது நம் மூச்சினிலே. '

கோயில்கள், பள்ளிவாசல்கள் , தேவாலயங்கள்  பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை அமைந்திருக்கும் இடங்களுக்கு நெருக்கமான இடங்களில் மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது என்பது விதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்  இந்த விதிகள் நடைமுறையில் விடைகொடுத்து அனுப்பப்பட்டு விட்டன.  

நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல்  இப்படி இந்த மதுக்கூடங்களை அரசே முன்னின்று நடத்துவது ஏன்?   மதுவிலக்கை ஏன் மீண்டும் நடைமுறைப் படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினால் இதற்காக சொல்லப்படும் தலையாய  காரணங்கள் (1) கள்ளச்சாராயமும் கள்ளச்சாராய சாவுகளும் அதிகரிக்கும் என்பதும் (2) குடித்துப் பழகியவர்கள் அண்டையில் உள்ள மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் அயல் மாநிலங்களுக்குச்  சென்றுவிடுகிறது என்பதுமேயாகும். 

கள்ளச்சாரயத்தைக் கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க அதிகாரம் பெற்ற அரசு இயந்திரம் தனக்குத்தானே நாங்கள் ஒரு வேஸ்ட் என்று ஒப்புக்கொள்ளத்தான் இந்த விவாதம் உதவும். ஆட்சி அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் அரசு இப்படிச்  சொல்வது கையாலாகத்  தனம்  என்றுதான் வருத்தத்துடன் குறிப்பிடவேண்டி இருக்கிறது. கள்ளச்சாராயத்தை முழுதுமாக ஒழித்துவிட  முடியாது என்று அரசே நினைத்து  சாராயக் கடைகளை திறந்து வைத்திருப்பது போல் கொலை, கொள்ளை குற்றங்களை முழுதுமாக ஒழிக்க முடியவில்லை என்று இந்திய தண்டனை சட்டத்தை இரத்து செய்துவிடலாமா? 

தமிழகத்துக்கு வரவேண்டிய வருமானம்  அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது என்கிற வாதமும் பொருளற்றது. குடிக்கும் எல்லோரும் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸை எடுத்துக் கொண்டு அடிமடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு அண்டை மாநிலங்களுக்கு  தினசரி போய் குடிப்பதில்லை.  அந்தந்த மாநிலங்களின் எல்லை ஓரங்களில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே போய் வர முடியும். மொத்த மக்கள்தொகையில்,  இப்படிப் போவோரின் அளவு, கடலில் கரைக்கப்பட்ட  பெருங்காய அளவே. மேலும் வருமானம் என்பதைப் பார்க்கும் அரசு தனது மாநில மக்களின் மானம் போவதை ஏன் பொருட்படுத்த மறுக்கிறது?  வருமானத்துக்காக மானத்தை இழக்க அரசுகள் தயாராக இருக்குமானால் மானம் தொடர்பான வேறு தொழில்களையும் அரசே விடுதிகள் தொடங்கி வியாபாரமாகச் செய்யலாமே.  அத்துடன் கஞ்சா முதலிய போதைப் பொருள்களையும் அனுமதித்து கல்லூரி வாசல்களில் அரசின் சார்பில் கடை திறந்து நடத்தலாமே!  இவையெல்லாம் கண்துடைப்புக் காரணங்கள். 

உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இரு அரசியல் கட்சிகளே முதன்மைக் கட்சிகள். இந்த இரு முதன்மைக் கட்சிகளில் மாறி மாறி ஒன்று ஆளும் மற்றது எதிர்க் கட்சியாக மக்கள் மன்றத்தில் இருக்கும்.  இந்த இரு கட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூக அல்லது சாதியைச் சேர்ந்த சக்தி படைத்த மோகனர்களும் பாலர்களும் ரட்சகர்களும் உடனுறைத் தோழிகளும் தோழர்களும் இளவரசிகளும் மொடாக்குடியாக்கும் மிடாசுகளும்  மிகப் பெரிய அளவில் மதுபான ஆலைகளை ஏழைத்  தமிழ் மக்களை நம்பியே நடத்தி வருகிறார்கள். இவர்களில் விஜயம் செய்யும் யாரையாவது அழைத்து ஐயா! சொல்லய்யா! என்று கேட்டால் இல்லைய்யா! என்று சொல்லிவிடுவார்கள்.   இந்த அரசு நடத்தும் மதுபான விடுதிகளின் 'சாக்கனாங்கடை' என்று அழைக்கப்படுகிற உள்ளுறை உணவுக்கூடங்களை நடத்துபவர்களும் இந்தக் குறிப்பிட்ட  சமூகத்தினர்  அல்லது இவர்களின் பங்காளிகளே.  தவிரவும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் வார்டு கவுன்சிலர் வரையும்  மாவட்டச் செயலாளர்கள், வட்டங்கள்  ஒன்றியங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களே  டெண்டர் என்ற பெயரில் கூத்தடித்து கொள்ளையடிக்கிறார்கள்.  இந்த உள்ளுறை உணவு விடுதிகளுக்காகவே ஆட்சி மாறும்    போதெல்லாம் கட்சி மாறுபவர்களும்  இருக்கிறார்கள். மதுக்கடைகளை அரசு மூட முடியாமல்  இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம் . யாராலும் தொட முடியாத சக்திகள் படைத்த சாம்ராஜ்ஜியம் இந்த சாராய சாம்ராஜ்ஜியம். இது நமக்கு சொல்ல முடிந்த கதை . நெருக்கத்தில் இருக்கும்  அரசுக்கோ சொல்ல முடியாத கதை.   

மதுபான ஆலைகளாலும் மதுபானக் கடைகளாலும்  அரசுக்கு கணக்கில்  வருவது ஒரு வகை வருமானமாகக் காட்டப்பட்டாலும் அரசுக்  கணக்குக்கு வராமல் அரசாளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நிதிகளுக்காக ஆலை அதிபர்களால்   வழங்கப் படும் பெரும் தொகையான  கட்சி நிதிகள் கட்சிகள் தேர்தல்களில் அதிகாரம் பெற்று மீண்டும் ஆட்சிக்கு  வர   வாக்காளர்களுக்கு வழங்கவே பயன்படும் என்பதும் பூசனிக்காயைப் போட்டு உடைப்பதுபோல் உடைக்கவேண்டிய  ஊரறிந்த சிதம்பர ரகசியம். 

அரசின் தரப்பில் வைக்கப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க வாதம் அரசு ஏழைகளுக்கு வழங்கும் இலவசம் அல்லது விலை இல்லாப் பொருள்கள் மற்றும் இலவச சலுகைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மதுக் கடைகளால் வரும்  வருமானம் பொருளாதார ரீதியில் அரசின் கஜனாவுக்குத் தேவை என்று கூறப்படுகிறது.  " கண்ணிரண்டும்  விற்று சித்திரம் வாங்கினால் உலகம் கை கொட்டி சிரியாதோ ? " என்று பாரதியார் பாடிய வரிகளைத்தான் இந்த வாதம் நினைவூட்டுகிறது.  குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு ஏழைத் தொழிலாளி ஒவ்வொருநாளும் ஒரு மது பாட்டில் வாங்கிக் குடித்தால் ,  ஐந்து ஆண்டுகளில் அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் செலவு செய்து இழக்கும் தொகை ஒரு இலட்சத்து இருபத்து ஆறு ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருட்களின் மொத்த மதிப்பு  பதினாறு ஆயிரம்  ரூபாய் மட்டுமே. குரங்கு ஆப்பம் பங்குவைத்த கதை போலத்தான் இருக்கிறது இந்தக் கதை.  ஏர் ஓட்டுபவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் என்று கூப்பிடுமாம். அப்டித்தான் இந்த அரசுகள் இலவசம் என்று சின்ன மீனைப் போட்டு ஏழைகளின் உழைப்பின் வருமானம் என்கிற  பெரிய மீனை  ஒரேயடியாக தட்டிப் பறிக்கின்றன.  

குடிப்பவர்கள் தரப்பில் வைக்கப்படும் விவாதம் குடிப்பது அவரவர் தனி மனித உரிமை . இதில் அரசு தலையிடக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நல்லதை கற்பித்து தீயவற்றில் இருந்து விலகி இருக்கும்படி போதிப்பதும் அரசின் கடமை. குடிப்பது தனிமனித சுதந்திரம் என்றால் விபச்சாரம் செய்வது மட்டும் தனி மனித சுதந்திரம் இல்லை என்று ஆகிவிடுமா? காசுவைத்து சூதாடும் உரிமையையும் இந்தப் பட்டியலில் செர்த்துவிடலாமா? சுதந்திரம் கருதி அனுமதித்துவிடலாமா? பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்று அரசு போட்ட சட்டம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காதா? பூக்களைப் பறிக்காதீர்கள் என்று ஏன் பூங்காக்களில் எழுதிவைக்கவேண்டும்? இந்த இடத்தில் சிறு நீர் கழிப்பவர்கள் தண்டனைகுள்ளாவார்கள் என்று ஏன் அறிவிப்புகள் தொங்குகின்றன?  மக்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துவது அரசின் கடமை. பொது அமைதிக்காக தனிமனித சுதந்திரத்தை கிள்ளிப் பார்ப்பது  தவறில்லை.  

அடுத்து அரசே நடத்தும் கடைகளாக இருப்பதால் நல்ல சரக்கு கலப்படமில்லாமல் கிடைக்கிறது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மது குடிப்பது உடலுக்கும் உடமைக்கும் கேடு விளைப்பது என்பது மருத்துவம் நிருபித்த உண்மைகள்.  இதில் அரசு தரும் மது மட்டும் நன்மை பயக்கும் என்று எண்ணுவது அறியாமையின் அரிச்சுவடி.   அரசே தன் பொறுப்பில் நடத்துவதால் குடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அரசாங்கமே குடிக்கச் சொல்லி கடை நடத்துகிறது  என்கிற ஒரு மன தைரியம் வருகிறது. இதனால் குடிப்பது சமுதாயத்தின் முன்னால்  நல்ல மரியாதையைத் தராது என்று தெரிந்தும் புதிய புதிய குடிகாரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு தேசிய அளவிலான புள்ளி விபரம்  நூற்றுக்கு தொண்ணூறு ஓட்டுனர்கள் குடிப்பழக்கம் உடையவர்கள்  என்று கூறுகிறது. ஆனால் மதுபானக்கடைகள் யாவும்  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலேயே அமைந்திருப்பது ஒரு ஆபத்தை கைகாட்டி அழைக்கும் செயலாகும். அத்துடன் ஒரு ஊரின் எல்லையில் நான்கு திசைகளிலும் மதுபானக் கடைகள் திறக்கப் பட்டு ஜெகஜோதியாக ஒளிவீசிக் கொண்டு இருக்கின்றன. எல்லா நேரமும் அங்கு கூட்டம் அலை மோதிக்கொண்டு இருக்கிறது. 

இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த அல்லது துவக்கி வைத்த பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி விட்டார்கள். அண்ணா பெயரில் ஆசியாவிலேயே பெரிய நூலகம் திறக்கப் பட்டதை மூடிப் போட்டு அதை திருமண மண்டபமாக முயற்சிக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை அங்கு செயல் பட விடாமல் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றி விட்டார்கள். கலைஞர் பெயரில் காப்பீட்டுத்திட்டம் உட்பட பல திட்டங்களை அனாதையாக விட்டுவிட்டார்கள்.  அதே முறையைப் பின்பற்றி  கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின்  காலத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட மதுக்கடைகளையும் மூடினால் இந்நாள் முதல்வரை மக்கள் அம்மா என்று அழைப்பதற்கு ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும். பெண்கள் எல்லாம் இந்த அம்மையார்  இருக்கும் திசை நோக்கி திருப்புகழ் பாடுவார்கள். 

அரசு நினைத்தால் இந்த தற்கொலைப் பாதையை நோக்கி தமிழக மக்கள் மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த முடியும். அரசு நினைத்துத்தான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது; இராஜ மானியம் ஒழிக்கப் பட்டது; வங்கிகள் தேசியமயமாகப்பட்டன. இன்றைய முதல்வர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நிறுத்தப் பட்டது. இன்றைய முதல்வர்தான் கந்துவட்டியில் இருந்து மக்களை காப்பாற்ற சட்டம் இயற்றினார்; கட்டைப் பஞ்சாயத்துக்கள் காவல் நிலையத்தில் கூட நடைபெறக்கூடாது என்று சட்டம் இயற்றினார்.  இதனால்தான் இவரை தைரிய லட்சுமி என்றும்  புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

தமிழக சரித்திரத்தில் இலவசக் கல்வி தந்ததற்காக  காமராசரின் பெயர் நிலைத்து நிற்கிறது. தமிழக சரித்திரத்தில் சத்துணவு தந்தற்காக எம் ஜி ஆர்  புகழ் நிலைத்து நிற்கிறது. அதே போல் மதுவிலக்கை மீண்டும் துணிச்சலுடன் அறிமுகப் படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் என்றென்றும் நிலைக்கும் பெருமையும் புகழும் பெறவேண்டும்.  பெண்களின் பிரதிநிதியாக இவர் இதைச் செய்ய வேண்டும்.  எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தில் தமிழகம் முழுமைக்கும் மீண்டும் மதுவிலக்கை தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா ?

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

13 comments:

  1. மதுவிலக்கை எங்கே கொண்டுவந்தார்கள் !? அதைப்பற்றி கப்சுப் ! அரசிற்கு அதிக வருமானம் தரக்குடியதே இவைதான்.

    ஆட்சி மாற மாற... டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் செல்கின்றன

    நல்லதொரு விழிப்புணர்வு தமிழக அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணரின் கருத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுத்தினால் நல்லதொரு வளமான தமிழகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  2. குடி குடியைக் கெடுக்குமா !?

    'ஆல்கஹால்' என்பது ஒரு போதைப் பொருளா ?

    ஆம். சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு 'நோயே' !

    1. பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...

    2. இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவர்களும்...

    3. விஷேசத் தினங்களில் தங்களின் மகிழ்ச்சியை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவர்களும்...

    4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...

    5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...

    6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...

    7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...

    8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...

    9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...

    10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...

    11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் '420' களும்...

    12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“

    என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

    ReplyDelete
  3. 'குடி' நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

    என்னதான் தீர்வு ?

    1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.

    2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.

    3. போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

    4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.

    5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு 'கவுன்சிலிங்' செய்வதன் மூலம் குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.

    6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான 'ஜூன் 26' அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.

    7. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் 'பூரண மதுவிலக்கு சட்டத்தை' இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

    ReplyDelete

  4. அரசு நினைத்தால் இந்த தற்கொலைப் பாதையை நோக்கி தமிழக மக்கள் மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த முடியும்.

    ReplyDelete
  5. மதுத் திணிப்பால் குடிப்பவரின் உடல் நலம் கெடுகிறது; குடும்பப் பொருளாதாரம் சீரழிகிறது; மனைவி , குழந்தைகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்; சட்டம் ஒழுங்கு பாதிப்பு; குடித்து உடல்நலனைக் கெடுத்துக் கொண்டவருக்கு, அரசு மருத்துவமனைகளில் தரப்படும் சிகிச்சையால் அரசிற்கு ஏற்படும் செலவீனம் போன்ற எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மதுவை தடைசெய்யும் பொருட்டு, மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  6. ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் வந்தாலும்... இருந்தாலும், அரசு கண்டிப்பாக நடைமுறை படுத்த வேண்டும்...

    ReplyDelete
  7. நல்ல பதிவு ..

    மது விளக்கு என்பது தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி

    மாறாத நிலை

    ReplyDelete
  8. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் மதுவின் தீமைகள் பற்றி அறிந்தவர்களே அதிகம் மதுப்பிரியர்களாக இருக்கின்றனர். அரசு தடை செய்யாவிடினும் தீமைகள் அறிந்து திருத்திக்கொள்ளலாமே..!. எப்படித்தான் தடை செய்தாலும் குடிப்பவர்கள் தீமையை உணராத வரையில் குடிப்பழக்கம் நிற்காது.
    குடிப்பழக்கம் நிற்காதவரை குடும்பப்பிரச்சனை நிற்காது குடும்பப்பிரச்சனை நிற்காதவரை நாட்டில் அமைதி இருக்காது.

    முடிவு என்னவெனில் சரியான முறையில் மதுவின் தீமைகள் பற்றி அடிக்கடி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம்.



    ReplyDelete
  9. பணம் தரும் போதை, மது தரும் போதையைக் குற்றமெனக் கருதுமா? குணம் என்றால் என்னவென்றே தெரியாத குறுமதியாளர்களான அரசியல் வியாதிகளிடம் அகப்பட்டுக் கொண்ட நாடு, அல்லாஹ்வின் மீது பயமும், நம்பிக்கையும் வராத வரைக்கும் எத்தீமையும் ஒழியுமா?

    இருபெருநாட்களில் நம் இளைஞர்கள் பற்றிய அச்செய்தி இருதயத்தை மிகவும் வேதனைப்படுத்தியது. நம்மவர்களை முதலில் நாம் திருத்துவோம்; பின்னர் மற்றவர்களைப் பற்றி வருந்துவோம். இருதயம் கெட்டுவிட்டால் எல்லாம் கெட்டுவிடும் என்பதற்கிணங்க, முதலில் நம்மவர்களின் இருதயங்களில் இறையச்சத்தை விதைப்போமாக!

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி.

    அ.என்னப்பா அங்கே?
    ஆ.தண்ணி அடிச்சிட்டான் சார்.
    இ.என்னது தண்ணி அடிவாங்கிடிச்சா?
    ஈ.இல்ல சார், அவன் அத குடிச்சிருக்கான் சார்.
    உ. ஓ, அதுவா? அட, மதுவா?

    உலகம் போற போக்கை பார்த்தால் டிங்கிரி டிங்காலோ, மதுவை குடிக்கின்றவன் வாழ்க்கையைப் பார்த்தால் டக்கிரி டக்காலோ.

    மனிதன் திருந்துவானா?

    மனிதன் திருந்தினாலொழிய மதுவை யாராலும் ஒழிக்க முடியாது.
    மது இன்று நேற்று அல்ல, கி.பிக்கு முன் கி.மு முதல்கொண்டு மனிதன் மத்தியில் வளம் வந்து கொண்டிருக்கும் ஒரு போதை பொருளாகும், அதை மற்றவர்கள் ஒழிக்க முயற்சிப்பது வீண்.

    மனிதன் திருந்த வேண்டும்.
    மனிதன் திருந்தினால் மதுவும் தன் போதைத் தன்மையை மாற்றிக்கொண்டு எல்லோரும் அருந்தும் பானமாக மாறிவிடும்.

    மனிதன் திருந்தினால்?
    மது திருந்தினால்?
    மாது திருந்தினால்?
    சமூகம் திருந்தினால்?
    மாநிலம் திருந்தினால்?
    நாடே திருந்தினால்?
    உலகமே திருந்தினால்?

    கேட்க்கும்போது எவ்வளவு அழகாக இருக்குது?
    எல்லாமே நம் கையில் இருக்கது, பின்னே கவலை எதுக்கு?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  11. மக்களின் நன்மை கருதி அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல பகிர்வுங்க.

    ReplyDelete
  12. திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அது போல்த்தான் இதுவும்.

    மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிர்க்கும் கேடு.முயற்சித்தால் முடியாதது இல்லை போராடி வெல்வோம்.

    ReplyDelete
  13. கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் சகோதரிகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers