.

Pages

Thursday, June 13, 2013

யார் அனாதை ?

யாருமற்றுப் போனாயோ
கண்ணே ஏக்கவிழி
அலைந்தாயோ

வேரொழிந்த பூங்கொடியோ
கண்ணே விரலெறிந்த
நகச்சிமிழோ

யாருந்தான் அடிக்கலியே
கண்ணே ஏனழுது
நிற்கின்றாய்

யாருந்தான் அடிக்கலியே
கண்ணே அதற்கழுதோ
நிற்கின்றாய்

தெருவோரம் கிடந்தாலும்
கண்ணே தெய்வத்தின்
உயிர்தானே

வருவோரும் போவோரும்
கண்ணே இருப்போரின்
தொடர்தானே

வயிறெல்லாம் வேறென்றால்
கண்ணே உறவென்றால்
பொருளுண்டோ

துயருள்ளம் கதறுகையில்
கண்ணே துணைநிற்கும்
தூணுண்டோ

கையோடு கைகுலுக்கு
கண்ணே கைவளர்ந்து
வான்கிள்ளும்

கையிரண்டும் உனதென்று
கண்ணே கர்வமனம்
புவிவெல்லும்

மெய்யான உறவுதேடி
கண்ணே பொய்யான
பூதலத்தில்

மெய்யறியும் வேளையுந்தன்
கண்ணே கைதானே
கவசமாகும்

இடதுகையோ யாசிக்க
கண்ணே இல்லாளும்
யோசிக்க

வலதுகையும் வந்துதானே
கண்ணே வாட்டத்தைத்
தூசாக்கும்

கொடுக்கின்ற மாந்தருக்கு
கண்ணே எடுப்போர்கள்
உறவாவர்

கொடுப்போனாய் நிலைத்துவிடு
கண்ணே குறையில்லா
உயிராவாய்
அன்புடன் புகாரி

7 comments:

  1. // கொடுப்போனாய் நிலைத்துவிடு
    கண்ணே குறையில்லா
    உயிராவாய் //

    வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பற்று.

    ReplyDelete
  2. வாசித்து நெகிழ்ந்தேன் :)

    ReplyDelete
  3. உறவுகள் இல்லா

    அனாதைகள் மனம்

    வருடும் கவிதை..

    அன்பை பெருக்கி

    அனைவரையும் ஆதரிப்போம்

    ReplyDelete
  4. வேரொழிந்த பூங்கொடியோ
    கண்ணே விரலெறிந்த
    நகச்சிமிழோ

    ஏக்க வரிகள் வெட்டி வீசும் நகத்தை
    இப்படுயும் சொல்லலாமோ

    ReplyDelete
  5. அனாதைகளிடம் அன்புகாட்டுவோம் கொடுத்துதவுவோம்.. அவர்களும் இவ்வுலகவாழ்க்கையில் நம்மோடு ஒட்டி வந்த உறவுதான் என்பதை அழகாச்சொல்லியிருந்தார் நண்பர் அன்புடன் புகாரி. அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உருக்கமும் உனக்குள்
    நெருக்கமாய் இருப்பதனாற்றான்
    நெக்குருகும் வலிகளை
    நெகிழும் வரிகளால்
    நாட்டுப்புற நயத்தில்
    பாட்டெழுத முடிகின்றதோ?

    ReplyDelete
  7. உங்கள் கவிதையை வாசிக்க வாசிக்க எனக்குள் பலம் கூடுக்கிறது அருமையான வரிகள் வாழ்த்துக்கள் புஹாரி காக்கா அவர்களே. .

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers