.

Pages

Friday, June 14, 2013

”யார் ?”

அந்தரத் தோரணம் வானவில்
.. அழகை இறைத்தவன் யார் ? - பிறைச்
சந்திரன் கூடவே தாரகை
.. சமைத்து மறைத்தவன் யார் ?

வண்ணத்துப்  பூச்சிகளில் வரிகளை
.. வகையாய் நெய்தவன் யார் ? - எழில்
எண்ணற்றப் பூவினங்கள் மணங்களை
.. எழுப்பச் செய்தவன் யார் ?

பகலும் இரவும்  மாறிவர
.. பூமியைச் சுழற்றுபவன் யார் ? - வாழ்வில்
சுகமும் துயரும் மாறிவரச்
.. சோதனை வழங்குபவன் யார் ?

மாமறையை வழங்கி போதனைக்கு
.. மாநபியைத் தந்தவன் யார் ? - அதனை
தேமதுர நடையில் ஓதுவோர்க்குத்
.. தேர்ச்சிகளைத் தந்தவன் யார் ?

ஓடை களில்நீர் உருண்டெழுந்தால்
.. ஓசைகளை அமைத்தவன் யார் ? - சிறு
காடைக் குருவிச் சிறகடிக்கக்
.. காற்றைச் சமைத்தவன் யார் ?

சொற்களிட்  பொருளைப் புகுத்திச்
..  சுவையறிவுப் படைப்பவன் யார் ? - பசும்
புற்களில் உறங்கும் பனியை
.. பகலவனால் துடைப்பவன் யார் ?

அணிஅணி யாக  மரங்களை
..அழகுற வைத்தவன் யார் ? - அவற்றுள்
பிணிகளைப் போக்கும்  மருந்தினைப்
.. பிழையறத் தைத்தவன் யார் ?

தூணின்றி வானை உயரத்
...தூக்கி வைத்த இறைவன் - எவனோ
வீணின்றி வாழ்வை உனக்கு
..வாய்ப்பாய்த் தந்த அவன்தான்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 13-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

11 comments:

  1. யார்..? யார்..? என சிந்திக்க வைத்து அருமையாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சிந்தனையைத் தூண்டும் வினாக்களில் “யார்?” என்பதும் “ஏன்?” உள. உங்களைச் சிந்திக்க வைத்ததாக நீங்கள் எழுதிய வாழ்த்துக்கு என் சிந்தை மகிழும் நன்றிகள்.

      Delete
  2. யார் ? அருமையான தலைப்பு !

    அனைவரையும் சுண்டி இழுக்கக்கூடிய தலைப்பு

    // தூணின்றி வானை உயரத்
    ...தூக்கி வைத்த இறைவன் - எவனோ
    வீணின்றி வாழ்வை உனக்கு
    ..வாய்ப்பாய்த் தந்த அவன்தான் //

    நச் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. இக்கவிதையின் முத்தாய்ப்பான இவ்வரிகளே தொடர்ந்து கேட்டு வரும் “யார்?” என்னும் வினாவின் விடைகளாகும் என்பதை உணர்ந்து பாராட்டிய உளப்பூர்வமான உங்களின் வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  3. இறைச் சிந்தனையை மனதிலூட்டி இன்புறச்செய்து தேனும்பாலும் ஒன்றரக்கலந்து தெவிட்டாத கவிதை நடையாய் யார்...? அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //தெவிட்டாத கவிதை நடையாய் யார்...? //

    யார் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக நினைக்கின்றாரோ அவரே உங்களின் உள்ளம் வாழ்த்தும் அவரே அவரே தான்!

    அருமையான வாழ்த்தளித்த அதிரை மெய்சா அவர்களே, உங்கள் பக்கமாக என் நன்றியை அறிவிக்கிறேன்.

    ReplyDelete
  5. கேள்விக்கவிதை?
    மறைமுகமாய்
    பதிலும் அதிலே!
    இறை மறையும்
    மானபியும்
    மகத்துவமாய்
    தங்கள் கவிக்குள்ளே

    வாழிய,,,உங்கள் பனி

    ReplyDelete
    Replies
    1. என் பணியை வாழ்த்திய உங்களின் நற்பணிக்கு நன்றி.

      Delete
  6. பதிவுக்கு நன்றி.

    யார் யார் யார் அவன் யாரோ?
    யாரயும் நம்பி நான் பிறக்கலே.
    யாரைத்தான் நம்புவதோ.

    யார்?

    நல்ல தலைப்பில் கவிதை.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  7. தெரிந்த விடை

    இது வரை கேட்டிராத விளக்கம்

    இயற்கை படைப்புகளின்

    அமைப்பை வியந்த விதம் அற்புதம்

    வாழ்த்துக்கள் கவியன்பரே

    ReplyDelete
  8. யார் யார் என்பது கேள்வி அதன் பதிலோ எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே. என்பது உங்களின் முடிவில் மிக அருமைகாக முடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள் உங்கள் சேவை, சமுக, கவி, பணிகள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers