.

Pages

Tuesday, June 18, 2013

பள்ளி வாகனங்களா ! அம்மாடியோவ் !?

முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் இரு சக்கர வாகனமாகிய மிதி வண்டியை எல்லோருடைய வீட்டிலும் பயன்படுவதை காண்பது அரிதாக இருந்தது, அந்த நாட்களில் பள்ளி வாகன வசதிகள் இல்லாமல் இருந்தது, பள்ளிக்குச் செல்வது என்றால் நடந்துதான் செல்ல வேண்டும், யாராவது வசதி படைத்த வீட்டு பிள்ளையாக இருந்தால் மட்டும் இரு சக்கர வாகனமாகிய மிதி வண்டியில் வருவார்கள், இன்னும் சொல்லப்போனால் ஆசிரியர்கள்கூட நடந்தே சென்றார்கள். இப்படித்தான் அன்று கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் பள்ளிக்கு சென்று வந்தார்கள்.

இன்று எரிபொருளில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் படையெடுப்பும் சரி மற்ற வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என ஏகப்பட்ட வாகனங்கள் படையெடுத்து வந்து நம் அனைவரையும் ஆட்கொண்டு விட்டது என்று சொன்னால் அதுதான் உண்மை. இன்று வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒரு வீட்டிற்கு சாராசரியாக இரண்டு மூன்று என்ற கணக்கில் இருக்கின்றது, இதோடு நின்று விடாமல் மூன்று சக்கர மற்றும் நான்கு சாக்கர வாகனங்களும் பல வீடுகளில் உபயோகப்படுத்துவதை காணலாம்.

வாகனங்கள் பெருவாரியாக பெருகி விட்ட நிலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் கிடையாது, வாகனத்தை ஓட்டிச் செல்வதற்கு சாலை வசதிகளும் முறையாக இல்லாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கின்றது, நகருக்குள் பள்ளி வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு சரியான ஓட்டுனர்கள் கிடையாது,

திருமண மண்டபங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அங்காடிகள் போன்ற இடங்கள் நகருக்குள் பெருவாரியாக இருப்பதால் வருவோர் போவோர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். இதுமாதிரி சமயங்களில் வாகனங்களை முறையாக நிறுத்தி வைக்காமல் வருவோர் போவோர்களுக்கு இடைஞ்சலாகவும், நிறுத்தின வாகனங்களை வெளியில் எடுக்க முடியாமல் ஆங்காங்கே கண்டபடி நிறுத்தி வைப்பதும் பிறகு சண்டை சச்சரவுகள் வருவதும் வழக்கமாகி விட்டது. இது நம் இந்தியாவில் காலா காலமாக நடந்து வரும் சம்பவமாகும்.

கடந்த கல்வி ஆண்டில் மட்டும் நம் தமிழ் நாட்டில், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் வாகன ஓட்டுனர்கள், ஆயாமார்கள், பெற்றோர்கள், குழந்தையின் பாதுகாவலர்கள் இவர்களின் கவனக் குறைவால் எத்தனை பள்ளிக் குழந்தைகளின் உயிர்கள் அநியாயமாக துடிதுடித்து மாய்ந்தது? எத்தனை குடும்பங்கள் துடியாய்த் துடித்தன? மறந்து விட்டீர்களா?

தினம் தினம் பல ஊடகங்களிள் புகைப்பட ஆதாரத்துடன் செய்திகள் வந்ததே, ஞாபகம் இருக்குதா? இது குறித்து பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், வாகன ஓட்டுனர்கள், ஆயாமார்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஆலோசனை செய்தீர்களா? இது விஷயமாக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பள்ளி நிர்வாகத்தின் பொறுப்புகள்:-
பள்ளி முடிந்து பிள்ளைகளை வாகனங்களில் ஏற்றி வீடுவரை பாதுகாப்போடு கொண்டு செல்வது, வாகனங்களில் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றாமல் பார்த்துக்கொள்வது, வாகனங்களை வாரத்திற்கு ஒருமுறை சரியான முறையில் பராமரித்து வைத்துக் கொள்வது, முறையான உரிமம் பெற்ற நடுத்தர வயதுடைய எந்த தீய பழக்கமும் இல்லாத ஓட்டுனர்களை அமர்த்துவது, ஓட்டுனர்கள் மற்றும் ஆயமார்கள் பணியில் இருக்கும்போது பள்ளிச் சீருடை அணித்துருக்க வேண்டியது, இன்னும் அனேக பொறுப்புகள் பள்ளி நிர்வாகத்துக்கு உண்டு.

வாகன ஓட்டுனர்களின் பொறுப்புகள்:-
வாகனத்தினுள் எல்லாக் குழந்த்தைகளும் பத்திரமாக இருக்கையில் அமர்ந்து விட்டனரா என்று பார்த்துக் கொள்வது ஓட்டுனர் மற்றும் ஆயாவின் பொறுப்பு, வாகனத்தை மிதமான வேகத்தில் ஓட்டிச்செல்வது, எந்த ஒரு அசம்பாவிதத்துக்கும் இடம் உண்டாகாமல் கவனமாக இருப்பது, குழந்தை இறங்கி வீட்டினுள் சென்ற பிறகே வண்டிய நகர்த்த வேண்டியது, அவசரப்பட்டு வாகனத்தை நகர்த்தக் கூடாது..

ஆசிரியர்களின் பிற பொறுப்புகள்:-
ஆசிரியர்கள், பிள்ளைகளுக்கு வாகனத்தில் எப்படி ஏற வேண்டும், புஸ்தக பைகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், வாகனத்தில் அமர்ந்து இருக்குபோது மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாகனத்தை விட்டு இறங்கும்முன் வண்டி நின்றபின் கவனமாக மெதுவாக இறங்க வேண்டும், சாலையைக் கடக்குமுன் இருபுறமும் வாகனங்கள் ஏதும் வருகின்றனவா என்று நன்றாக கவனிக்க வேண்டும், போன்ற விதி முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இந்த விஷயங்களில் பெற்றோர்களின் பொறுப்பு என்று எடுத்துக் கொண்டால் கணக்கில் அடங்காமல் விவரித்துக் கொண்டே போகலாம். ஒரு பெண் கருவுற்றது முதல் பிரசவமாகும் வரை தன் பிள்ளை நல்ல விதமாக பிறந்து வரணும் என்று எந்த அளவுக்கு கவனமாக இருக்கின்றாரோ, அதைவிட அதிக கவனமாக இருக்கவேண்டும் அந்தப் பிள்ளை இம்மண்ணில் பிறந்த்ததுக்குப் பின்.

இக்கால கட்டத்தில் அதிகமான தேவைகளின் ஆடம்பர வாழ்க்கை என்ற போர்வையில் அளவுக்கு அதிகமான பேராசையை வளர்த்துக் கொண்ட பல பெற்றோர்களை நாம் பார்க்கின்றோம், இதனால் அவர்கள் காலை ஐந்து மணிக்கெல்லாம் வேலைக்குப் போக தயார் ஆகிவிடுகின்றனர், வேலை முடித்து நேராக வீடு வராமல் ஆங்காங்கே குட்டி குட்டி மீட்டிங் போட்டு ஊர் கதையெல்லாம் பேசிவிட்டு வீடு வந்து அடைய மாலை ஏழு மணிக்கு மேல் ஆகி விடுகின்றது, இதற்கிடையில் குழந்தை தூங்கிவிடும், பெற்றோர்களின் குரல்களைக் கேட்க்க அந்தக் குழந்தை பாடாய்ப் பட்டுப்போகும், இதனால் பாதிப்பது குழந்தைகள்தான், குழந்தைகளை கவனித்துக் கொள்ள வீட்டினுள் பணிப்பெண்களை வைத்துக் கொள்கின்றனர், நூறு சதவிகித வேலைகளை பணிப்பெண்களே கவனித்துக் கொள்வதால் பாதிப்பை சந்திப்பது குழந்தைகளே. பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போவதால் அவர்களின் கவனங்கள் முழுக்க முழுக்க வேளையிலேயே இருப்பதால் பிள்ளைகளை கவனிப்பதில் இருந்து அவர்களது சிந்தனைகள் விலகி விடுகின்றது. எதிர்காலத்தில் தன் பிள்ளைகள் எப்படியெல்லாம் வரணும் என்று கனவு காணும் பெற்றோர்களே உங்களுக்கு இந்த ஆசைவிட மற்ற பேராசை தேவையா? சிந்தித்து பாருங்கள், இருவரும் அமர்ந்து இருந்து சிந்தித்து பாருங்கள். தெளிவான விடை கிடைக்கும்.

ஆக மொத்தத்தில் இன்னும் ஒரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? “உடையவர் இல்லையென்றால் ஒரு முழம் குட்டை” இது முன்னோர்கள் சொன்னது.

பள்ளி வாகன விஷயத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், வாகன ஓட்டுனர்கள், ஆயாமார்கள் இவர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வாகன விபத்துக்களை முழுமையாக தவிர்க்கலாம்.

முடிவுரை :
பள்ளி நிர்வாகத்துக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு தொடர்பை உண்டு செய்யணும், அதாவது வீட்டிலிருந்து குழந்தை பள்ளி செல்ல வாகனத்தில் ஏறும் முன்பு குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் ஒட்டுனர்களிடத்தில் ஒப்புதல் கையெழுத்து வாங்கி விட்டு பிள்ளையை வாகனத்தில் அமர்த்த வேண்டும், அதேபோல் பள்ளி முடிந்து குழந்தையை வீட்டினுள் ஒப்படைக்கும் முன்பு ஓட்டுனர்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் அல்லது பாதுகாவலரிடம் குழந்தையை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்து வாங்கிய பின்னரே வாகனத்தை நகர்த்த வேண்டும், சில குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறமுடியாமல் நேரத்தை தவற விட்டு விடுவார்கள், பின்பு பாதுகாவலர் உதவியோடு பள்ளிக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள், அதே குழந்தை பள்ளி விடும்போது வீட்டிற்கு போவதற்கு பள்ளி வாகனத்தில் வருவார்கள், சில குழந்தைகள் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வந்து பின்பு ஏதோ காரணத்தினால் பள்ளியின் நேர இடையிலேயே பள்ளி வாகனத்தை உபயோகப்படுத்தாமல் பாதுகாவலர் உதவியோடு வீட்டுக்கு சென்றுவிடுவார்கள், ஆகையால் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனத்துடம் இருப்பது சம்பத்தப்பட்ட எல்லோருடைய கடமையாக இருக்கும்போது இதை ஏன் பள்ளி நிர்வாகம் உடன் செயல் படுத்தக்கூடாது?

வீதிகளிலும் சாலைகளிலும் பள்ளி வாகனங்கள் அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்றால், பொதுமக்கள் அந்த வாகன பதிவு எண்களையும் நேரத்தையும், வாகனம் சென்ற இடத்தையும் குறித்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்திடமும் காவல் துறை இடமும் புகார் செய்ய வேண்டும்.

இது குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பை கொடுப்பதோடு குழந்தைகள் தவறுவதற்கு சந்தர்பமே கிடையாது. பள்ளி நிர்வாகமும், பொதுமக்களும், காவல் துறையும்  ஒத்துழைப்பு தர முன்வரவேண்டும்.      

குறிப்பு : இந்த ஆக்கம் பொதுநலன் கருதியும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பள்ளிகள்  சம்பந்தப்பட்ட அனைவர்களுடைய நலன் கருதியும் எழுத்தப்பட்டதாகும்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

18 comments:

  1. காலச்சூழலுக்கேற்றப் பதிவு !

    விபத்தினை தவிர்ப்போம் - குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்போம்

    ReplyDelete
  2. வாகனங்களை இயக்குவது பள்ளி நிர்வாகங்களின் சொந்த பொறுப்பாகும். மாணவர் / மாணவியர் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பாக கீழ்க்கண்ட விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே அரசின் விதி ஆகும்.

    1. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012 அரசு இதழில் வெளியிடப்படும். அது வெளியிடப்படும் நாள் [ 31-08-2012 ] முதல் உடனடியாக அமலுக்கு வரும். இது தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளி வாகனங்களுக்கும் பொருந்தும்.

    2. மோட்டார் வாகன விதிப்படி அனைத்து பள்ளி வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். உதவியாளர்கள், மாவட்ட குழு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி குழு, சிறப்புபடை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

    3. பள்ளிக்கூட பஸ்களை வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக்கூடாது. பள்ளி பேருந்துகள் முறையாக போக்குவரத்து துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

    4. பள்ளிக்கூட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் முறைப்படி உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்கள் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தண்டனை பெற்றிருக்க கூடாது. கண்டிப்பாக அவர்கள் காக்கி உடை அணிந்திருக்க வேண்டும். அதில் டிரைவரின் பெயர் கொண்ட பேட்ஜ் அணிய வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்துடன் வாகனங்களை இயக்க கூடாது.

    5. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கண்டிப்பாக உதவியாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அந்த வாகனத்திலேயே செல்ல வேண்டும். அவர்கள் கண்டக்டர்களுக்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பொறுப்பில் இருப்பவர்கள் 21 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மாணவ-மாணவிகளை கையாள்வதற்கு போதுமான பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும்.

    பள்ளி குழந்தைகளை பஸ்சில் ஏற்றி வருவது முதல் மாலையில் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக் கும்வரை உதவியாளர்கள் தகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாணவிகள் மட்டுமே செல்லும் வாகனமாக இருக்கும் பட்சத்தில் அந்த வாகனங்களில் பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்து நெக்லஸ் போட்டது மாதிரி இருக்கு. நன்றி.

      Delete
  3. 6. பள்ளி வாகனங்கள் சரியாக பராமரிக்க படவேண்டும். ஒவ்வொரு பள்ளி பேருந்தும் செமிசலூன் டைப்பாக இருக்க வேண்டும். டெம்போ வேன் போன்று இல்லாமல் வாகனங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பள்ளி பேருந்துகள், வாகனங்கள் அனைத்துக்கும் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும்.

    தூரத்தில் இருந்து பார்க்கும்போதே இது பள்ளி வாகனம் என்று தெரியும் அளவுக்கு பெரிய அளவில் பள்ளியின் முத்திரை பொறிக்கப் பட்டிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் ஏறி இறங்கும் கதவுகள் எளிதாக திறக்கும் வகையில், எளிதாக மூடும் வகையிலும் இருக்கிறதா- என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    7. பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லக்கூடாது. ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் லாக் புக் பராமரிக்கப்பட வேண்டும். அந்த புத்தகத்தில் டிரைவர் தினமும் குறிப்பு எழுத வேண்டும். பஸ்சில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அதுபற்றி டிரைவர்கள் தவறாமல் லாக்புக்கில் எழுதி வைக்க வேண்டும்.

    8. பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வதற்கு சிறப்பு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டியில் பள்ளி நிர்வாகிகள், கல்வித் துறையினர், போலீசார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், போக்குவரத்து அதிகாரிகள் இடம் பெறுவார்கள். இந்த கமிட்டி மாதந்தோறும் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யும். இந்த கமிட்டியில் இருப்பவர்கள் டிரைவர்கள் குறிப்பு எழுதும் லாக் புத்தகத்தை வாங்கி சரிபார்க்க வேண்டும். அந்த புத்தகத்தில் பள்ளி பஸ்கள் பற்றி டிரைவர் ஏதேனும் குறிப்புகள் எழுதியிருந்தால் அதை பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து அதை சரிசெய்ய அறிவுறுத்த வேண்டும்.

    9. மாவட்ட அஎளவிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். இந்த கமிட்டியில் வட்டார போக்குவரத்து அதிகாரி, போலீஸ் துணை சூப்பிரண்டு, மாவட்ட கல்வி அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இந்த கமிட்டி மாதம் ஒருதடவை கூடி பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வார்கள். பள்ளி பேருந்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகிறதாப என்பதை உறுதி செய்வார்கள். இந்த கமிட்டியினர் பறக்கும் படையாகவும் செயல் படலாம். இதன் மூலம் பள்ளி பேருந்துகளில் செல்லும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கா விட்டால் வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு இது தொடர்பான தகவல்களை அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய இந்த கமிட்டிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    10. பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்களும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய மாதம் ஒருதடவை கூடி ஆலோசிக்க வேண்டும். தங்கள் கருத்துக்களை மற்றும் புகார்களை அவர்கள் பள்ளி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த புகார்கள் பள்ளி கமிட்டிக்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளி கமிட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறும் குறைகளை உடன்குடன் நிவர்த்தி செய்ய உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    11. பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலத்தில் ஒரு கமிட்டி அமைக்கப்படும். மண்டல இணை போக்குவரத்து ஆணையர் தலைமையில் இந்த கமிட்டி செயல்படும். பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் குறித்து இந்த கமிட்டிதான் இனி முடிவு செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கருத்து சிவப்புக்கல் தங்க பதக்கம் போட்டதுபோல் இருக்கு. நன்றி.

      Delete
  4. சூழலுக்கேற்ற ஆக்கம் ...

    விபத்தினை தவிர்ப்போம் ..

    மாணாக்களை..கண் இமைப்போல் காப்போம்

    நல்ல கருத்துக்களை தொகுப்பாய் புத்தகமாய் வெளிவர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இது வளைகாப்பு போட்டது போல் இருக்கு.

      Delete
  5. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இது மல்லிகைப்பூ பூத்தது போல் இருக்கு.

      Delete
  6. 1.என் கண் முன்னே தாங்கள் சைக்கிள் ஒட்டிக்கொண்டு போவதுதான் நியாபகம் வருகிறது!
    2.உங்கள் வண்டியில் லைட்கள் செட்பண்ணி இருப்பிர்களே அதுவும் நியாபகம் வருகிறது!
    3.நிஜாம் அவர்களின் துணை கட்டுரைபோல் விளக்கங்கள் அருமை
    4.பள்ளி வாகனத்திற்கு பின்னால் ஓர் வாசகம் இருக்கும் என்னவெனில் உள்ளே பள்ளிகுழந்தைகள் இருக்கின்றானே கவனமுடன் செல்லவும் இது பின்னால் வரும் வாகன ஓட்டிக்கா அல்லது உள்ளே இருக்கும் ஓட்டுனருக்கா கவனம் என்பது நீங்கள் சொல்லியதுபோல் அனைவருக்கும் அவசியம் ஆசிரியர்முதல் சாலையில் செல்லும் அனைத்து ஒட்டுனர்கள்வரை வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இது தங்க ஒட்டியாணம் அணிந்ததுபோல் இருக்கு.

      Delete
  7. இப் பதிவு பதிந்து அனைவரையும் உஷார் படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    வாகனங்கள் பெருத்துவிட்ட இக்காலகட்டத்தில் விபத்துக்களும் பெருத்து விட்டன. ஆகவே வாகனச்சட்டத்தை சட்டமாக மட்டும் இல்லாமல் முறையாக செயல்படுத்த வேண்டும். பொதுமக்களும் அனைத்திலும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.தெருக்களில் கடைவீதி பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டிவருவதை வருவதை தடைசெய்ய எச்சரிக்கும் வண்ணம் காவல்துறையின் அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் விபத்துக்கள் குறைய வாய்ப்பிருக்கும்,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      தாழம்பூ தோகை இதழ்களை போல் தங்கத்தில் செய்து தலை முடி பின்னலில் மாட்டி விட்டது போல் இருக்கு.

      Delete
  8. கருத்துக்களை அள்ளித் தெளித்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  9. தங்கள் ஆக்கத்தை படித்துவிட்டு ..

    சற்று நேரத்தில் புதிய தலைமுறை தொலை காட்சியில் ஒரு செய்தி

    அறந்தாங்கி அருகில் உள்ள ஒரு ஊரில் ஆட்டோவில் சென்ற ஆறு

    மாணவ கண்மணிகள் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மரணம்

    என்ற செய்தி தான் அது ..விளிப்புனவுள்ள ஆக்கம்

    ReplyDelete
    Replies
    1. அதை நானும் பார்த்தேன்,

      திருந்துவதற்கு சான்சே கிடையாது.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers