.

Pages

Wednesday, July 3, 2013

தனியாரின் கையில் கல்வி ! வரமா !? சாபமா !?

ஒரு அரசானது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு சில அமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது

உதாரணம் குடி நீர் தேவை சுகாதார மேம்பாடு போன்ற விஷயங்களை பூர்த்தி செய்ய உள்ளூர் நிர்வாகமான பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற நிர்வாக அடிப்படையில் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம், குப்பைகளை அப்புறப்படுத்துதல் கழிவு நீர் வடிகால் போன்ற விஷயங்களை கவனிக்கின்றது.

அடுத்து உணவு பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசாங்கம் தனது  கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மாநிலங்களுக்கு சூழ்நிலைக்கேற்ப மானிய அடிப்படையில் உணவு தானியங்களை வழங்குகிறது. [ உணவு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் மத்திய அரசின் ஆணைக்கு இனங்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும், இயற்கை பேரழிவுகள் ஏற்படும் பொழுது மத்திய அரசின் உணவு கழகம் துரிதமாக செயல்படும் ]

முக்கியமான சுவாசத்திற்கு மாசுயில்லாத காற்று ! யார் தருவது ? இதை முழுவதும் அரசு பொறுப்பேற்க முடியுமா ? நிச்சயமாக அரசானது சட்டங்களும், திட்டங்களும் இடலாம் பொதுமக்களாகிய நாம்தான் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் போதிய சுற்று சூழல் அறிவு மக்களிடையே ஏற்படவேண்டும் அண்டை வீட்டாருக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்ற நல்லெண்ணமே பாதி சுற்றுபுற சூழல் நல்லபடி அமைய வழிவகுக்கும்.

அடுத்து கல்வி மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய பங்கு கல்விதான் ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா ? ஒரு நாடு முன்னேற வேண்டுமா ? கல்வி அறிவு சதவிகித அடிப்படையில் கூடுதலாக இருக்கும் நாடோ, சமுதாயமோ தான் சிறந்ததாகக் கருதப்படும்

அப்படிப்பட்ட கல்வியை அந்த நாட்டின்  அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் உணவிற்கும், நீருக்கும், சுகாதாரத்திற்கும் எப்படி பொறுபேற்றதோ அதுபோல் கல்வியை சமமாக அனைவருக்கும் இனாமாக வழங்கவேண்டும் இதன் அடிப்படையில் நமது தமிழ் நாட்டின் நிலை எப்படி ?
                                 
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

நாம் கற்ற நல்ல விஷயங்கள் போல் நாம் வாழவேண்டும். இதுதான் அதன் பொருள் நடக்கின்றதா அதுபோல் ?

கந்து வட்டிக்காரன், கள்ளச்சாராயம் காய்ச்சியவன், வியாபாரம் என்ற பெயரால் கொள்ளையடித்தவன், அரசியலில் ஊழல் புரிந்தவன், மழைக்காக கூட பள்ளிப்பக்கம் ஒதுங்காதவன் இவர்கள்தான் இன்று கல்வியின் தந்தையர்கள் !? பள்ளி தாளாளர்கள் !?

இந்த சூழ்நிலைக்கு காரணமென்ன கல்வியை கவனிக்க வேண்டிய அரசாங்கம் சாராய வியாபாரம் செய்கின்றது சாராய கடையை ஏலம்  எடுத்தவன் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறான் ஏலம் எடுத்த நியாபகம் மாணவர்களின் சீட்டை  ஏலம் விடுகிறான் ஒரு மருத்துவர் உருவாக 60 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது பிறகு டாக்டர்கள் உருவாகி சேவை செய்வார்களா!? போட்ட  பணத்தை எடுக்க பார்ப்பார்களா ?

30 வருடங்களுக்கு முன்னாள் கல்லூரியின் விளம்பரமோ, மருத்துவமனைகளின் விளம்பரமோ பார்த்திருபோமா கல்லூரியில் படித்தவரும் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றவரும் தான் தாம் மன நிறைவு பெற்றதை விளம்பரப் படுத்துவர். இன்றோ அனைத்தும் வியாபாரமாகி விட்டது.

மேலே படித்த அத்துணை விஷயங்களும் ஒவ்வொரு தமிழரின் ஆழ் மனதில் தோன்றும் விஷயங்கள் தான் நான் கூட்டி குறைத்து எதையும் கூறி விடவில்லை .

இனி என் பார்வையில்... 

நாம் இன்று தொலை தொடர்பு விஷயத்தில் எவ்வளவோ முன்னேறி இருக்கின்றோம் நமது தொலை பேசி விசயத்தில் நமக்கு உறுதுணையாக இருப்பது BSNL எனும் அரசு சார்ந்த நிறுவனமா ? அல்லது ஏர்செல், ஏர்டெல், டாடா டோகோமோ வோடோ ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களா ?உங்கள் நெஞ்சை தொட்டு சாரி நெஞ்சுக்கு அருகில் இருக்கும் செல்லை தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் பயன்படுத்தும் நிறுவனத்தின் பெயரென்ன ஏன்  அதை பயன் படுத்துகின்றீர் ?

அடுத்து ஒரு விஷயம் தாங்கள் வெளியூர் பயணம் மேற்கொள்கிறீர்கள் பேருந்து நிலையத்தில் அரசு வாகனமும் தனியார் வாகனமும் நிற்கின்றது எதை தேர்ந்தெடுப்பீர் ? காரணமென்ன ! தனியார் வாகனம் நல்ல பராமரிப்பில் இருக்கும், நல்ல வேகம் செல்லும், வீடியோ சாதனங்கள் இருக்கும் போன்ற விசயங்கள் தானே தனியார் பேருந்தை தேர்ந்தெடுக்க காரணம் ஆகிறது.

நமது cellம், நாம் செல்லும் busம், இப்படி இருக்க நமது அடுத்த தேர்ந்தெடுப்பு மருத்துவமனை. அரசு மருத்துவமனையா ? தனியார் மருத்துவமனையா ? அநேகம் பேர் தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுக்கின்றனர் பணம் போனால் பரவாயில்லை உயிர் பிழைக்க வேண்டாமா ! என்ற நோக்கம். இன்று அரசு மருத்துவமனைகள் சுகாதாரக்கேடாக இருக்கின்றது ஏழைகளுக்கென்றே ஆகிவிட்டது பணத்தை அடிப்படையாக கொண்டே மருத்துவமும், படிப்பும் என்றாகி விட்டது.
 
தமிழகத்தை நோக்கி அண்டை மாநிலத்தவர் அயல் நாட்டுக்காரர்கள் கல்வி பயில படை எடுக்கின்றனர் இதற்க்கு காரணம் கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் அயல் நாட்டு தொழில் நிறுவனங்கள் உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர் படித்து முடித்த உடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கின்றனர் புதிய தொழில் நுட்பத்தை கல்லூரிகளில் புகுத்துகின்றனர் இதன் காரணமாக இன்று நம் தமிழகத்தின் நிலை நிறைய மாணவர்கள் பட்டம் பெற்றவர்களாய் இருக்கின்றனர் கல்யாண பத்திரிகைகள் இன்று கவனியுங்கள்  மணப்பெண்ணும்  மாப்பிள்ளையும் தம் பெயருக்கு பின்னால் பட்டயப் படிப்பை பதிய வைத்த பத்திரிகைகள் தான் அதிகமாக பார்க்க முடிகின்றது.

அமெரிக்க போன்ற நாடுகளில் படித்த தமிழர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது கால் சென்டர்கள் நிறைய கால்பதித்து இருக்கின்றது நம் தமிழகத்தில். போகின்ற போக்கில் நல்ல தொலை தொடர்பு நிறுவனம், நல்ல போக்குவரத்து நிர்வாகம், நல்ல மருத்துவம் தந்தது போல் நல்ல கல்விக்கூடமும் தனியார்களாலேயே தர முடியும் என்றாகிவிடும்.

அப்ப நம்ம அரசாங்கம் ? நல்ல சாராயம் தரும் நிர்வாகமாக இருக்கும் ! இலவசங்களை எதிர்பார்த்து இருக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை சாராய சாம்ராஜ்யம் நம் அரசே வைத்துக்கொள்ளும்

வியாபாரிகளான தனியார்கள். நல்ல பொருளை தருவர், வாடிக்கையாளரை திருப்தி படுத்துவர், நல்ல வருமானத்தையும் சிறப்பாய் செய்வர். தனியார் வசம் கல்வி நிறுவனம் வரமா ? சாபமா ? உங்களின் தீர்ப்பு உங்களின் மனோ நிலையை பொறுத்தது

மடமையை போக்க
பள்ளிகளும் கட்டணம்
கேட்கும்
மலத்தை வெளியேற்ற
கழிப்பிடமும்  கட்டணம்
கேட்கும்

மிக்சியும் கிரைண்டரும்
இலவசமாய் கிடைக்கும்
நம்ம நாட்டில் [ தமிழ் நாடு ]

மு.செ.மு.சபீர் அஹமது

20 comments:

  1. சாராய சாம்ராஜ்யம் ஒழிய வேண்டும்... கல்வித் தொழிலும்...

    இப்போது இருக்கும் கல்வி முறையே சாபம் தான்... நன்றி...

    ReplyDelete
  2. சமூகத்தில் உயிர் நாடியாக விளங்கக்கூடியது இரண்டு ஒன்று கல்வி மற்றொன்று மருத்துவம். இவற்றின் இரண்டிலும் ஊழல் என்பதே இருக்கக் கூடாது. கல்வியை அரசு முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் நிச்சயம் மாற்றம் வரும். சமூகத்தில் கல்வி வியாபாரமாக இருப்பது முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.

    சேவை என்பது எல்லாம் மலையேறிப்போய்விட்டது

    ReplyDelete
  3. // சேவை என்பது எல்லாம் மலையேறிப்போய்விட்டது //

    நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்வதெல்லாம் மலையேறிப்போய்டுச்சிங்க

    ReplyDelete
  4. இல்லே தெரியாமத்தான் கேட்கிறேன்...

    இப்போதுள்ள தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள அதாவது கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை யாருங்க அமுல்படுத்துறது ?

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    நல்லதொரு ஆக்கத்தை வடித்து இருக்கின்றீர்.

    எதிலேதான் சுரண்டல் இல்லை, இதெல்லாம் நீங்கள் எல்லோரும் மாறும் என்று நினைக்கின்றீர்களா? தலைக்குமேலே வெள்ளம் போய்க் கொண்டிருகுங்க. வெள்ளம் எப்போ வடியும்? அன்றுதான் எல்லாம் சரியாக இருக்கும்.

    அது சரி கட்டுரையாளர் சகோ மு.செ.மு.சபீர் அஹ்மத் கேட்ட கேள்விக்கு என்ன பதில்?

    அரசாட்சியையும் தனியார்கிட்டே கொடுத்து விட்டால்.....!!??

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. ஆட்சியில் இருக்கும் நமது மந்திரிமார்கள் [தனியாராகிய] தமது உற்றார் உறவினர்களுக்கு தானே சொத்துக்களை சேர்க்கின்றனர் so அரசும் என்றோ தனியார் வசம் போய்விட்டது
      எத்தனையோ தனியார் நிறுவனங்கள் ஆட்சிக்கு பின்னால் இருந்தது கொண்டு தமது அதிகாரத்தை செயல்படுத்தி கொண்டுதானே இருக்கிறது so அரசு என்றோ தனியார் வசம் போய்விட்டது

      Delete
    2. மறைமுகமாக செயல்படுவதைவிட, எல்லா மக்களுக்கும் தெரியும் வண்ணம் செயல்படவில்லையே.

      Delete
  6. தனியார் நிறுவனங்கள் கல்வி துறையில் ஈடுபட்டிருப்பது வரம் தான்

    லாபம் ஈட்ட நல்ல முறையில் பாடங்கள் நடை பெற ஆசிரியர்கள்

    அன்றாடம் கண்காணிக்க படுகிறார்கள் .அரசு பள்ளியில்

    ஆசிரியர்களின் நிலைப்பாடு ஏனோ தானோ என்றுள்ளது .புதிய பாட

    திட்டங்கள் ..நவீன சாதனங்கள் ..தனிமனித ஒழுக்கம் என தனியார்

    பள்ளியில் கூடுதல் கவனம் செலுத்த படுகிறது .கல்வி நிறுவனம்

    நடத்த ஆசை படுபவர்கள் பணம் மட்டும் குறிக்கோளாக

    கொண்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை .பல தொழில்களில்

    கரைகண்டவர்கள் கடைசியில் இத்தொழில் தடம் பதிக்கிறார்கள் .

    இத்தொழில் சிறு தவறு நடந்தாலும் ஊடகம் பெற்றோர்கள் ஊரை

    கூட்டி..உண்டு இல்லை என செய்து விடு கிறார்கள் ..அரசு பள்ளி

    ஆசிரியர்களிடம் ஏன் என்று கேட்க உயர் அதிகாரியை அணுக

    வேண்டும்..அவரை காண வில்லை என்று மாவட்ட் அளவில் தேட

    வேண்டும் இப்படி அரசு துறையை விட..பணம் செலவானாலும்

    தனியார் துறையே நன்று...பின்னூட்டத்தில் வந்தவர்களின்

    பிள்ளைகள் எத்தனை பேர் அரசு பள்ளியில் படிக்கிறார்கள் ...?

    ReplyDelete
  7. நல்ல கட்டுரை.

    மற்ற துறை தனியாரிடம் இருக்கும்போது நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆனால் கல்வி மட்டும் அரசு ஒன்றில் மட்டுமே இருக்க வேண்டும். இன்று இவ்வாறில்லாமல் தனியாரிடம் தொழிலாக கல்வி காணப்படுவது மிகப்பெரிய சாபமே.

    ReplyDelete
  8. கருத்து பதிந்த அனைவருக்கும் அட்வான்ஸ் ரமலான் வாழ்த்துக்கள் நண்பர் சித்திக் சொல்லும் கருத்திற்கு மற்றவர்களின் கருத்து மாறுபடுகிறது சற்று அலசவும் தனியார் வசம் s]நெய்வேலி நிலக்கரி சுரங்கமே ஒப்படைக்க படவுள்ளதே காரணம் என்ன?

    ReplyDelete
  9. //கந்து வட்டிக்காரன், கள்ளச்சாராயம் காய்ச்சியவன், வியாபாரம் என்ற பெயரால் கொள்ளையடித்தவன், அரசியலில் ஊழல் புரிந்தவன், மழைக்காக கூட பள்ளிப்பக்கம் ஒதுங்காதவன் இவர்கள்தான் இன்று கல்வியின் தந்தையர்கள் !? பள்ளி தாளாளர்கள் //
    முக்காலும் உண்மை!! என்ன வொரு ஆதங்கம்; ஆவேசம்!! அப்பப்பா,, தொழிலதிபரின் இந்த ஆவேசத்துக்கு முன்னாள் தமியேன் யாத்தளித்த “புரட்சி” என்னும் கீழ்க்காணும் கவிதை ஈடாகுமா?


    விதையின் எழுச்சியும் வெற்றிப் புரட்சி

    நிதமும் எழுகின்ற ஞாயிறும் கூறும்

    நிதமும் உழைத்தால் நிலத்தில் புரட்சி

    விதைபோல் எழுவாய் விரைந்து



    காற்றின் புரட்சி கடும்புயல் சொல்லுமே

    மாற்றும் அரசினை மக்கள் புரட்சியால்

    ஆற்றல் முகில்தரும் ஆற்றல் புரட்சியே

    போற்றும் மழையாய்ப் பொழிந்து



    கல்விப் புரட்சியும் காமராசர் சிந்தையாம்

    சொல்லில் புரட்சியைச் சொன்னவர் அண்ணாவாம்

    எல்லாம் இலவயம் என்றானச் சோம்பலால்

    இல்லை புரட்சியும் இன்று



    குழப்பம் விளைவித்தல் கோழைப் புரட்சி

    ஒழுக்கம் வளர்த்தல் உயந்தப் புரட்சி

    அழுக்காறு நீக்கல் அகத்தின் புரட்சி

    விழுப்பம் பெறவே விரும்பு




    குறிப்பு: அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் மற்றும் சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் நம் கண் முன்னால் நிற்கும் சாதனையாளர்கள்!

    ReplyDelete
  10. யாம் இயற்றிய ஆதங்க கட்டுரைக்கு அற்புதமான கவிதை வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறேன் ரமலானை சிறப்பாக்குங்கள்

    ReplyDelete
  11. ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா!
    இன்ஷா அல்லாஹ், “அமலால் நிறையும் ரமலான்!” ஆமீன்.

    ReplyDelete
  12. நியாயமான கேள்விகளுடன் புரட்சிகரமான உங்கள் கட்டுரை வாசிக்கும்போது இந்நாட்டின் நிலை நினைத்து மனம் நொந்து வேதனைப்படுகிறது. தப்பு அரசு தரப்பு மட்டுமில்லை மக்களிடத்திலும் உள்ளது. தனது காரியம் மட்டும் வெற்றியடைந்தால் போதுமென்று நினைக்கும் சுயநலவாதிகள் இருக்கும் வரை எல்லாமே விலை பொருளாகத்தான் போகும்.

    ReplyDelete
    Replies
    1. சங்கை மிகு ரமலானை வரவேற்று புனிதப்படுத்துவோம்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers