.

Pages

Saturday, August 3, 2013

[ 6 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' தொடர்கிறது...

HOUS BOY வேலைக்கு செல்பவர்களில் பலர் தனது வீட்டு ஏழ்மை நிலை அறிந்து இளம் வயதிலேயே உழைக்க முன் வருபவர்களாக இருப்பர். நான் முன்பு கூறிய நிகழ்வின் நாயகன் வீட்டு ஏழ்மை நிலை போக்க வேலைக்கு செல்ல வில்லை மாறாக தான்தோன்றி தனமாக ஊர் சுற்றிய இளைஞனை எப்படியாவது நல்வழி படுத்த ஏதாவது வேலைக்கு அனுப்பி அவன் வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வேண்டும் என்ற நோக்கில் வேலைக்கு அனுப்பப்பட்டான். ஆனால் சென்ற  இடத்திலும் தனது குறும்புத்தனத்தால் உடுத்திய உடையோடு நாடு திரும்பினான்.

அரபிகள் புதிதாக வீட்டு வேலைக்கு வரும் நபரை ஆறுமாதம் வரை கண்காணிப்பர். நாணயமான நடவடிக்கை வேண்டும் என்பது முதல் எதிர் பார்ப்பு அதில் நம்பிக்கை கிடைத்து விட்டால், அரபியர்களுக்கு தனி பிரியம் வந்து விடும். அதன் பின்னர் சோம்பலற்ற வேலை, அற்பணிக்கும் தன்மை இவைகளால் வீட்டில் ஒருவனாக மாறும் நிலை ஏற்படும் .எங்கு சென்றாலும் தன்னோடு அழைத்து செல்வர் .மேலை நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது கூட தன்னோடு அழைத்து சென்று மகிழ்வர்.

அப்பாவி என்ற எண்ணம் ஏற்படும் செயல் பாடு HOUS BOY வேலைக்கு சிறந்த தகுதி. ஒரு அப்பாவி இளைஞன் ..வீட்டு வேலைக்கு சென்றான் ..வேலைக்கு சென்ற ஆறு மாதத்திலேயே வீட்டு எஜமானரின் அன்புக்கு பாத்திரமாக மாறினான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான் அந்த இளைஞன்.

1980 களில் கடித தொடர்புகளே அதிகம் .ஒவ்வொரு வாரமும் தனது தாயிடமிருந்து வரும். கடிதத்தை படித்து மகிழ்வான். ஒரு நாள் கடிதம் வந்தது கடிதம் படித்த மறுகணமே கவலைக்கு உள்ளானான் காரணம் ஊரில் அடைமழை காரணமாக் தனது வீட்டு சுற்று சுவர்  இடிந்து விட்டது என்ற செய்தி கடிதத்தில் வந்த செய்தியே காரணம்.

சோகமாக காட்சி அளித்த அவ்விளைஞனிடம் எஜமானி விசாரித்தார்.

ஏன் கவலையாக உள்ளாய்...

அரபி மொழி அரை குறையாக தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞன்

கடும் மழை காரணமாக வீடு இடிந்து விட்டது என கூறி விட்டான்.

கவலைப்படாதே என்று கூறிய எஜமானி இந்தியாவில் சிறியதாக புதிய வீடு கட்ட எவ்வளவு தொகை தேவை படுமோ அவ்வளவு தொகையை அந்த இளைஞனிடம் கொடுத்து கவலை படாதே ஊருக்கு அனுப்பி வீடு கட்டி கொள்ளச்சொல் என்று எஜமானி கொடுத்துள்ளார்.

அந்த இளைஞனும் மகிழ்வோடு அம்மாவிடம் அனுப்பி வைத்தான். பணம் கிடைத்த மறுகணமே தாயார் பதறி போனார். வீட்டு வேலை செய்யும் தன் மகனுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது வகை தெரியா பையன் பணம் புழங்கும் அரபி இடத்தில் திருடி இருப்பானோ என்ற பயமே காரணம். களவுக்கு கை வெட்டும் தண்டனையும் உண்டு என்று அறிந்த தாய் பதறிப்போனார். அதே ஊரில் வேலை பார்க்கும் வேறு நபருக்கு போன் செய்து விவரம் கேட்க... அந்த நபர் அரபியிடம் விவரம் கேட்க... தான் கொடுத்த பணம் தான் என கூறியதோடு வீட்டு வேலைக்கார பையனிடம் அவனது தாயாரின் நேர்மையை பாராட்டியதோடு தன் வீட்டின் ஒரு அங்கத்தினராக ஏற்று கொண்டார்.

நேர்மைக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த பரிசு அரபியரின் அன்பிற்கும் பிரியத்திற்குரிய வேலை ஆளாய்  ஆகி விட்டால், வாழ்வில் முன்னேற்றம் மிக சுலபம். அடுத்த வாரம் காண்போம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

9 comments:

  1. அரபி, தாய், மகன் அருமையான விளக்கம். படித்தவுடன் நெகிழ்ச்சியாக இருந்தது.

    சிறந்த படைப்பு ! இறுதியில் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடுவோம்.

    ReplyDelete
  2. உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    ReplyDelete
  3. இன்று இஃப்தார் விருந்தொன்றுக்காக வெளிச்செல்லும் வேளையில், என் கண் முன்னே இரு தமிழர்கள் (துப்பரவுத் தொழிலாளிகள்) தோளில் முதுகுப்பையையும் கையில் உணவுப் பையையும் சுமந்து கொண்டுச் சென்றதைக் கண்டவுடன், என் கண்கள் கண்ணீரை வடித்தன; என் கவியுள்ளம் உடன் கீழ்க்காணும் வரிகளைத் தானாக வடித்தன; (இப்படித்தான் கவிதைகள் பிறக்கும்;ஒரு மின்னல் வெட்டாய் மின்னும் சிந்தைக் கருவில்; அஃத் பின்னர் வரும் கவிதை உருவில்)

    என் எண்ணக் கருவில் உருவான அவ்வரிகள்:

    தண்ணீரை முதுகில் சுமந்துத்
    தள்ளாடி நடக்கும் பாலைவன ஒட்டகம்;
    கண்ணீரையும் கவலைகளையும் முதுகில் சுமந்து
    கடன்களை அடைக்க நடக்கு நாங்களும்
    ஒரு பாலைவன ஒட்டகம்;


    இந்தக் கருவை வைத்து இன்ஷா அல்லாஹ் அடுத்த என் கவிதைப் படைப்பை உருவாக்க என்க்குக் கரு கொடுத்த அந்தத் தமிழர்கட்கும், வளைகுடா வாழ்வைப் படிக்கப் படிக்க வகைவகையாய்க் கவிதைகள் வனைய வைக்கும் தூண்டுகோலான உங்களின் எழுத்தும் என் உளம்நிறைவான நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கவி ...

      இவ்வாக்கத்திற்கு கிடைத்த வெற்றி

      Delete
  4. வளகுடா வாழ்க்கையில் மாறுபட்ட அனுபவங்களை தந்து நம் மனதை நெகிழ வைக்கும் அன்புச் சகோதரர் அதிரை சித்திக் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    RAMADHAN KAREEM

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தை மனமுவந்து வரவேற்கிறேன்

      Delete
  5. வளைகுடாவில் வாழும் நம் சகோதர/ சகோதரிகட்காக வேண்டி அக்கறையுடன் பிரார்த்திப்பதாக எனக்கு முகநூல் வழியாக நண்பர் ஒருவர் எழுதிய குறிப்பு (கீழே காண்க); படித்ததும் அவர் மீது எனக்கோர் மதிப்பு உண்டானது; உங்களனைவர்க்கும் அதுபோல் உண்டாகும் என்ற நம்பிக்கையில் இதோ பதிகிறேன்:

    //இரவு சாப்பாட்டிற்கு பிறகு எப்போதும் வராந்தாவில் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பேன். இலங்கை வழியாக அரபு நாடுகளிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் எங்கள் ஊரின் மேலாகத்தான் பறந்து செல்லும் . பெரும்பாலான இரவுகளில் வானில் கண் சிமிட்டிச் செல்லும் அந்த விமானங்களைப் பார்ப்பேன்... மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி அருவி போல பாயும் ! எத்தனை சகோதரர்கள் உழைத்துக் களைத்து ஓய்வெடுக்கவும் ... தங்கள் பெற்றோரை , மனைவி மக்களை , உற்றார் உறவினர்களை , நண்பர்களை பார்ப்பதற்கும் நெஞ்சு நிறைய பாசத்தை சுமந்து கொண்டு பை நிறைய பரிசுகளை சுமந்து கொண்டு வருகிறார்கள் !

    அவர்களின் நெஞ்சப் பூக்களில் எத்தனை பாசப் பூக்கள் வாசம் வீசும் !

    உடனே மனசு என்னையறியாமலே இறைவனிடம் பிரார்த்திக்கும்...

    " யா அல்லாஹ் ! இவர்கள் பயணத்தை இவர்களுக்கு இலேசாக்கி பாதுகாப்பாக்கி வை...

    இவர்கள் பயணத்தில் இவர்களுக்கு சந்தோசத்தைக் கொடு ...

    இவர்கள் பயணத்தால் இவர்களின் குடும்பத்திற்கு நன்மையை பரக்கத்தாக்கி வை..."

    எப்போதும் போல் இப்போதும் என் கண்ணில் பட்ட விமானத்தில் பயணித்து ஊருக்கு பெருநாள் சந்தோஷங்களோடு வந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் துஆ செய்து விட்டுத்தான் இதை உங்களோடு பகிர்கிறேன்.

    அல்லாஹ் அருள் புரியட்டும் !//

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers