.

Pages

Friday, October 18, 2013

படிக்கச் சென்றனர்: துடிக்கக் கொன்றனர் !

சன் செய்தியில் தலைப்புச் செய்தி: [ 09/10/2013 ]
நெல்லை மாவட்டம், தூத்துகுடியில் உள்ள தனியார் பொறி இயற் கல்லூரி முதல்வரை, அக் கல்லூரி மாணவர்களே அரிவாளால் வெட்டிக் கொன்றனர். - இது நிகழ்ந்தது , காலை எட்டரை மணிக்கு,  அவர் தம்முடைய காரில் கல்லூரிக்கு வந்து சேர்ந்த போது. நேற்று மாலை,  ஒரு மாணவன் மீது முதல்வர்  ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக,  அம்மாணவனைக் கல்லூரியிலிருந்து நீக்கியதற்காக  மாணவர்கள் அவரை  வெட்டிக் கொன்றனர். 

இச்செய்தியைக் கருவாக வைத்து யான் இன்று எழுதிய கவிதை இதோ:
படிக்கவே அனுப்பிப் பெற்றோர் பயத்துடன் இருக்கும் ஆசை
அடிக்கவா அறிவை ஊட்டி அனுதினம் வளர்த்தார் ஆசான்?
வெடிக்குதே மனமும் ஏனோ விடியலின் சமயம் செய்தி
படித்ததும் எனக்கும் தானே படிப்பவர் செயலை எண்ணி

அறிவிலார் நிகழ்த்தும் பாவம் அனைத்தையும் படித்துப் பார்த்தால்
அறிவுளோர் அடைவர் சோகம்; அவர்களின் குறைகள் என்ன?
நெறிகளை முறையாய்க் கற்றால் நிலத்தினில் குருதி சிந்தி
வெறியுடன் அலைந்துக் கொல்லும் வெகுளியும் வருமா முந்தி?

தடியுடன் அரிவாள் கொண்டு தலையினை உடனே வெட்டி
முடிவுரை எழுதிச் சென்று முடிவிலே அவர்தம் பெற்றோர்
முடிவிலா இருளில் வாழ முடிந்ததே இவர்கள் கற்றப்
படிப்பினில் இருந்து நாமும் படிப்பினைப் பெறுவோம் இன்றே!

தவறுகள் நடக்கா வண்ணம் தணிந்துதான் தடுத்தார் ஆசான்
கவலைகள் பயமும் இன்றிக் கலைகளாய்க் கொலையும் ஆச்சு
அவலமும்  வருதல் நோக்கி அமைதியாய் நடந்தால் என்ன?
எவருமே உதவ மாட்டார்  இனிவரும் பலன்தான் என்ன?

எழுத்தினை அறியச் செய்த இணையிலா அறிஞர் ஆசான்
கழுத்திலே அரிவாள் வைக்கக் கடுமனம் வருதல் மோசம்
அழுத்திடும் விழியில் பொங்கும் அழுகையில் எழுதிப் பாட
வழுத்தியே விளிக்கும் ஆசான் வலியினை நினத்துப் பார்க்க!

தியாகமும் நிரம்பச் செய்து தினம்தினம் வறுமை தாங்கி
வியாதிகள் பெருகக் கண்டும் விடியலாய் உனையே ஏங்கி
மயானமும் அழைக்கும் காலம் வரைக்குமே பொருளை ஈட்டி
நியாயமாய் அளித்த பெற்றோர் நினைவினில் வராமல் போச்சே!

படித்துநீ பெறுதல் பட்டம் படித்திட விரும்பும் பாரும்
துடித்திடும் கொலையைக் கற்கத் துணையது எவரோ கூறும்?
குடித்திடும் மதுவா? உள்ளம் குடிபுகும் விழியாள் தானா?
கெடுத்திடும்  கொலைவெறி உன்னில் கொணர்ந்திட வளர்த்தாய்த் தானாய்!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 17-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

22 comments:

  1. வணக்கம்
    கவிதை வரிகள் மனதை தொட்டுச் சென்றது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என் கவிதை வரிகளை விட , அன்னாரின் குழந்தை அக்‌ஷயா நிருபர்களிடம் கேட்டக் கேள்விகள் இதோ: அவைகளைப் படித்ததும் என் உள்ளம் துடித்தது; கண்கள் கண்ணீரை வடித்தன

      கனத்த இதயத்தோடு கிளம்ப எத்தனிக்கையில் நம் கைபற்றிக் கொண்ட சுரேஷின் மகள் அக்‌ஷயா, "அங்கிள்… அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே.. ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா, அப்பா இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?" என்று கேட்ட அந்த சின்னஞ்சிறு குழந்தையின் முகம் ஏனோ இன்னும் நெஞ்சை வீட்டு நீங்க மறுக்கிறது.

      link:

      http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article5228553.ece?utm_source=vuukle&utm_medium=notification_email&utm_campaign=vuukle_referral

      உங்களின் வருகைக்கு நன்றி, இக்கவிதைக்கான வாழ்த்தை ஏற்புரையில் ஏற்க மனமின்றித் துக்கம் என் தொண்டையை அடைக்கின்றது; குறிப்பாக அந்த அக்‌ஷயா என்னும் சிறுமியின் அழுகை என்னை மீண்டும் மீண்டும் அழவைத்து விட்டது. யான் யாத்தப் பாக்களில் இந்தப்பா ஒன்றுதான் என்னை ஆழமாக உணரவைத்து ஆட்டிவைத்து இயற்றவைத்தது; இஃதோர் இரங்கற்பா என்றும் கொள்க.

      Delete
  2. அதிக கண்டிப்பும் ஆபத்தில் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டான துன்பியல் நிகழ்வு இது !

    கவிதையாலும் சமூக அவலங்களை தோலுரித்துக்காட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்ட அமைந்த கவிதை !

    வாழ்த்துக்கள் கவிக்குறள் !

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தம்பி சேக்கனா நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்,
      நாளை (அட்டவணைப்படி) வெளியிட வேண்டிய என் கவிதையை இன்றே வெளியிட்டும், துக்கமான ஒரு நிகழ்வை அதன் சூடு குறைவதற்கும் வெளிப்படுத்தியும் என் கவிதைக்கும் எனக்கும் மதிப்பளித்தமைக்கு முதற்கண் என் நன்றிகள்.

      உங்களின் வாழ்த்தையும் யான் ஏற்புரையில் ஏற்க மனமின்றி இருக்கிறேன்; வாழ்த்துவதற்கான கவிதையாக இதைக் கருதாமல், துக்கத்தின் வெளிப்பாடாகவே - அன்னார்க்கு என் இரங்கற்பாவாகே கருதி, இலண்டன் தமிழ் வானாலியாரின் விருப்புத் தலைப்பில் கேட்டக் கவிதைக்கு இப்பாடலை அரங்கேற்ற அனுப்பினேன். எனக்கு நேரமின்மையால், நேரலையில் சென்று கேட்டுப் பதிவினைத் தரவிறக்கம் செய்ய இயலவில்லை; அதுவேபோல், யூட்யூப் இணைப்பும் இன்றுவரை அவர்களால் தரவிறக்கம் செய்யப்படவில்லை. அதைப்பற்றியும் யான் கவலைப்படவில்லை. அகிலமெங்கும் உள்ளத் தமிழர்ச் செவிகளில் இந்தக் கொடுமையின் துன்பம் கேட்கப்பட வேண்டும் என்றும், தங்களின் வலைத்தளத்தின் மூலம் பரந்துபட்ட வாசக/வாசகிகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பது மட்டுமே என் பதிவுகளின் நோக்கம்.

      சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள் என்னும் இவ்வலைத்தளத்தில் இந்தச் சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் தொண்டை என் பாடலும் செய்து விட்டது என்பதில் என் கவிதைக்கான அங்கீகாரம் என்றே கருதுகிறேன்.

      Delete
  3. மனதை கனக்க வைத்தது... அந்தக் குழந்தை என்ன பதில் சொல்ல என்ன பதில் சொல்வது...?

    ReplyDelete
    Replies
    1. ஆம். அன்பின் ஐயா திண்டுக்கல் தனபாலான்! இன்னும் விடையறியா வினாவை அல்லவா கள்ளமறிய அப்பிள்ளை உள்ளம் கேட்டு விட்டது!

      உங்களின் வருகைக்கும் நன்றி.

      Delete
  4. படித்திட உள்ளம் உருகி பனிபோல கரைந்து போனேன்
    வடித்திடும் குழந்தை சோக வார்த்தைகள் மீளா நரகம்
    துடித்திடும் கவியின் வேதனை துயர்மிகு உச்ச வார்ப்பு
    கொடுத்திடும் கவிஞர் கலாமின் கூர்மிகு கவியே சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. என் விருப்பம் இறையவன் பேரருளால் நிறைவுறும் என்பதற்குத் தங்களின் மேற்காணும் பின்னூட்டப் பாடலே சான்றாகும். ஆம். நற்றமிழ்ப் பாவலரும், ஞானத்தேன் பூமலரும் ஆகிய தாங்கள் என் அடியொற்றி வருதல் கண்டேன்; மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்.

      Delete
    2. \\ தாங்கள் என் அடியொற்றி வருதல் கண்டேன்; மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்.\\

      இதில் என் மரபிலக்கண அடியொற்றி என்று வாசிக்கவும்

      ஞானப்பாட்டையில் தங்களின் அடியொற்றி நடைபயில்கிறேன், ஞான குருவே!

      Delete
  5. கரையா மனமும் கரைந்து கண்ணீரில் நனைய வைக்கும் கவித்தீபத்தின் இக்கவிபடித்து மனம் கனத்துத்தான் போனேன். தாங்களின் இக்கவியை இலண்டன் வியாழன் கவிதை நிகழ்ச்சி fa tv-யில் வசிக்கும் போது நான் உள்வாங்கிக்கொண்டுதான் இருந்தேன்

    ReplyDelete
    Replies
    1. என் கவிதையில் உருக்கமும் இருந்தது என்பதை விட, என் கவிதையின் கருவில் தான் உருக்கம் இருந்தது.முன்பு உங்களின் மருமகன் இறப்புக்கு நீங்கள் எழுதிய இரங்கற்பா எழுதும் போது இருந்த அதே மனநிலையில் தான் எழுதினேன்; நம்மிருவரின் இப்பாக்களின் அடிப்படை அந்தத் துன்பியல் நிகழ்வுகள் என்ற கருவே உருக்கத்தை உருவாக்கி விட்டன என்பதே உண்மை. பொதுவாக, கவிதைகள் யாவும் உணர்ச்சியின் பிம்பங்கள், உயிரின் ஓசைகள்; அவற்றுள் எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்கும் உள்ளம் தான் ஒரு கவிஞனுக்கு இறையவன் கருவில் அமைத்தத் திருவாகும். அதிலும், சோகம் என்ற ராகத்தில் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பையும் உண்டாக்கி வைத்ததும் அந்த இறையவனே ஆவான். நிற்க., எனக்கு நேரமின்மையின் கரணீயமாகவே வியாழன் தோறும் நேரலையில் இலண்டன் தமிழ் வானொலியைக் கேட்பதுமில்லை; உடன் பதிவை இணைப்பதுமில்லை. சில மாதங்களாக, யூட்யூப் மூலம் அவர்கள் பதிவிறக்கம் செய்வதும் நிறுத்தி விட்டனர்; சில “ஓவர்லோடு” என்ற டெக்னிகல் ப்ராப்ளம் என்றும் மறுமொழிக் கூறி வ்ருகின்றனர். இதனால், எனக்குக் கிடைக்கும் வெள்ளி விடுமுறையை இந்த இணைப்பைத் தேடியே விரக்தியும் அடைந்து விட்டேன். அல்ஹம்துலில்லாஹ், உங்களின் உள்வாங்கும் ஆற்றலுக்குள் வியாழன் நேரலையில் நீங்கள் அங்கீகரித்தமைக்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      என்பால் உளம்போந்து நீங்கள் காட்டும் அக்கறைக்கும் அன்புக்கும் தமியேன் என்றென்றும் நன்றி கடப்பாடுடையானாவேன். பெருநாள் அனறு எனக்கு வேறு சில நிகழ்வுகள் இருந்தமையால், உங்களிடமிருந்து விரைவாக விடைபெற்றேன்; மன்னிக்கவும்; நீங்களும் அந்த வருத்தத்தில் இருப்பதாக அறிந்தேன். இன்ஷா அல்லாஹ் மறுமுறை சந்திப்போம்; நிரம்ப உரையாடிச் சிந்திப்போம்,

      Delete
  6. துயர நிகழ்வை ..துல்லியமாய் சொன்னீர்கள் .
    இக்கவி உங்கள் மூலம் சமூக விழிப்புணர்வு பக்கத்தில்
    வரவேண்டும் என்று ஆவலாய் இருந்தேன் பதிந்து விட்டீர்கள் ...படிக்க சென்றார்கள் ..துடிக்க கொன்றார்கள் .
    தலைப்பே கவியின் கருத்தை சொல்லி விட்டாது .
    என்ன சொல்வது இன்றைய இளைஞர்களின் மன நிலையை ?

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தமிழூற்றே! இப்பொழுது நீங்கள் பத்திரிகைத் துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாதலால், உங்களை நடுவராக வைத்துத் தீர்ப்பு வழங்கச் சொன்னால் கீழ்க்காணும் குற்றவாளிகள் பற்றி என்ன தீர்ப்பு வழங்குவீர்கள்?

      1) சினிமா
      2) மது
      3) மயக்கும் மாதர்
      4) ஆன்மீகம் இல்லாக் கல்வி முறை
      5) பெரியோரை மதித்து மரியாதை செய்தல் இல்லாமை

      இந்தக் குற்றவாளிகட்கு என்ன தீர்ப்பு வழங்குவீர்கள். இந்த ஐந்தும் குற்றவாளிகளே என்பது என் வாதம்.

      உங்களின் வருகைக்கும் நன்றிகள்.

      Delete
    2. இறைமறையை கொடுத்து பொருளுணர்ந்து படிக்க வைத்து திருத்த முயற்சிக்'கலாம்' :)

      Delete
    3. சேக்”கனா” உங்கள் கனா நிஜம் ஆகும் , நிஜாம்!

      4-ஆம் குற்றவாளியான ஆன்மீகம் இல்லாக் கல்வி முறை அல்லது நீதிபோதனைகள் மறக்கப்பட்ட வகுப்புகள்.மாற்றப்பட்டு நாமெல்லாம் படித்த அந்நாள் மீண்டும் மலராதா? அறியாமை என்னும் இருளகலப் புத்தொளிப் புலராதா? என்பதும் என் ஏக்கம்.!

      Delete
    4. ஆம் ..ஆன்மீக அறிவு இல்லாமையே காரணம்
      பெரியோரை மதிக்க வேண்டும் என்ற அறிவும் அந்த ஆண்மீகத்துக்குள்ளே வந்து விடும் ...
      மது மாது சூது போன்ற கேட்ட குணங்களை போக்க ஆன்மீக அறிவே நல்லது ...தன்பி நிஜாம் கூறிய கருத்தே என் கருத்தாகும்

      Delete
    5. நல்லதொரு தீர்ப்பு!

      Delete
  7. இதற்க்கல்லாம் சினிமாவும் மதுவும் தான் முழு காரணம்.

    ReplyDelete
    Replies
    1. யான் குறிப்பிட்ட ஐந்தும் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றன; அவற்றுள் நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ள முதலாம், இரண்டாம் குற்றவாளிகள் அரசின் கஜானாவை நிரப்பும் அட்சயப் பாத்திரங்களைப் போனதன் பின்னர், தினமும் போராட்டங்களை விட மனப்போராட்டம் செய்து மன மாற்றம் செய்தால் பலன் கிட்டும்.

      Delete
    2. அன்பின் நேசர் ஹபீப், உங்களின் வருகைக்கு நன்றி/

      Delete
  8. கள்ளமிள்ளா பிள்ளை நெஞ்சில்
    நஞ்சை விதைத்தவர் யாரோ ?
    கண்டவர் அங்கனமே மான்டிருப்பர்
    கேட்டவர் அந்தோ நொந்தே சாகின்றார்.
    நல்வழி பிறந்திடுமோ ?
    வார்த்தைகள் இல்லை கனத்துப் போனது நெஞ்சம் .

    ReplyDelete
    Replies
    1. தாயுளமாய்க் கொண்டதால் தானாய் மனத்தினில்
      பாயுமுங்கள் மட்டிலாப் பாச மழைதனில்
      காயுமெங்கள் காயம் கடிதாய் மனம்விட்டே
      சேயுளமும் ஆங்குநிற்கு தே


      உங்களின் வருகைக்கு நன்றி

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers