.

Pages

Thursday, November 21, 2013

[ 10 ] அறிவுத்தேன் [ வேற்றுணர்வில் உருவம் !? ]

பலவா பழுத்து
மாவது முளைத்து
வேறா உணர்கிறது
உருவ மாகிறது !

வேறா உணர்கிறது என்றால் ?

உண்டுமை ( Entity ) உள்ளமையில் ( Existence )  அழிந்து ( தான் என்ற தனித்தத் தன்மை இழந்து ) அந்த உள்ளமையில் உண்டாகும் செயல்களான அனைத்தும் அறிந்தப் பதிவில்லா அரூபச் செயல்கள் என்றும் அது வல்லமை யுடைதாகவும் இருக்கும் என்றும் பார்த்தோம்.

ஒரு மனிதன் தன்னைத் தனித்தவனாக உணரப்படுவானாகில் அவனைத் தெரிகின்ற அந்த உருவ அமைப்பு அல்லது அவன் இருப்புக்கு காரணமானது எதுவோ அது அவனது உண்டுமை என்பதாகும். அதுபோலவே மற்றவைகளும், மற்றவைகளுக்கும்.

மனிதன் என்ற தனித்த உண்டுமையான அவன், மண்ணால் படைக்கப்பட்டு உள்ளான் என்ற அறிவுக்கு உட்பட்டு பார்ப்போமானால், விளங்கிக் கொள்வதர்க்காக மண் (பூமி) என்பது ஓர் உள்ளமை.

( ஆனால் உள்ளமையில்தான் பூமி போன்ற பல அனைத்தும் உண்டாகி உள்ளன.)

உள்ளமையில் ( Existence ) அதனின் அதனில் உண்டாகி உள்ள ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தது, தனக்கு என்று உரிமைகள்; உடயவைகள் உள்ளன என எண்ணும்போது; உணரும்போது அங்குத் தனித்த உண்டுமைகள் ( Entities ) உண்டாகிறன..

மனிதன் தனதுக் கைகள்; கால்கள், தனதுத் தலை; தனது உடம்பு என்றுத் தன் உருவத்தின் ஒவ்வொன்றையும் தனதுத் தனது என்று உணருகிறான். பொதுவாகத் .தன் உடம்பைத் தன்னுடையது என்கிறான். அதுதான் அவன் என்றுக் கூறுகிறான். எதோ ஒன்று அவனது அவ்வுடம்பில் இருக்கின்றது அது அவ்வாறுக் கூறுகிறது எனபதைச் சிந்தித்தால் புரியலாம்.

அவன், அவனது என்றுக் கூறிய அந்தக் கைகளும் அவன் அல்ல, அந்தக் கால்களும் அவன் அல்ல, அவனது என்ற அந்தத் தலையும் அவன் அல்ல, அவன் அவனது உடம்பும் என்று சொன்ன அந்த உடம்பும் அவன் அல்ல. ஆனாலும் வேறொன்று இவைகளை தனதுத் தனது என்று அவ்வுடம்பு மூலம் சொல்கிறது. அந்த ஒன்று அதுதான் நான், தான், தனது என்றுச் சொல்கிறது. இவ்வுடம்பை இவ்வுடம்பு மூலம் தனது என்று அந்த ஒன்றேதான் கூறுகிறது.

மேலும் நான் பார்க்கிறேன் என்றுச் சொல்கிறோம். கண் இல்லாமல் பார்க்கமுடியாது. அதனால் கண்தான் நான் ஆகுமா ? அல்லது நான் என்ற உணர்வு இல்லாமல் கண்தான் பார்க்குமா ?   ஆக இந்த உருவத்திற்கு அப்பார்ப்பட்டு நான் என்ற உணர்வு ஒன்று உள்ளது என்பது சரிதானே ?! அதனை உயிர், மனம், ஆன்மா என்றெல்லாம் சொல்கிறோம்.

ஆனாலும் ஆன்மா என்பது மிக வலிமையுள்ளது அதன் ஆற்றலை அளவிடமுயாது. எனவே அது அப்பார்ப்பட்டும் என்பதும் அல்ல. அதுவே அவ்வாறாகி அதுவில் அவ்வாறு கூறுகிறது. ஆன்மாவே உடம்பென்றும் உருவாகி அவ்வுடம்பில் அவ்வாறு பார்க்கிறேன் என்று சொல்கிறது. ஆனால் புத்திதான் பிரிவாக உணர்ந்து தனித்த உண்டுமையாகத் தான் தோன்றியத் தன் உருவைக் கொள்கிறது.

தான், நான் என்று அவ்வாறு மண்ணால் ஆனத் தன்னைக் கூறும்போது தன் உருவத்தை மட்டும் உணர்கிறது, பார்க்கிறது. அந்நிலையில் பல பொருள்கள் அதன் பார்வையில் படும் போது, மண்ணில் இருக்கும் அனைத்தும் மண்ணால் ஆனவைகளே என்ற எண்ணமற்று, அவைகள் தனக்கு அன்னியமானவைகள் என்று எண்ணுகிறது. அப்பொழுது பல உருவங்கள் அதற்குத் தெரிகிறது. (மண்ணில் இருக்கும் அனைத்தும் மண்ணால் ஆனவைகளே)

பிறந்த குழந்தை தான், நான், என்று எண்ணுவதில்லை. வளர்ந்த மனிதன் தான், நான் என்று எண்ணுகிறான். பிறந்த குழந்தை உள்ளமையில் உண்டாகி  வளர்ந்து பின் மனிதன் என்றத் தனித்த உண்டுமை உணர்வில் இருக்கின்றது.

பிறந்தவுடன் குழந்தை (Existence) தனதுக் கைகள்; கால்கள், தனதுத் தலை; தனது உடம்பு என்று நினைத்ததே இல்லை. -(Existence) - பார்க்கும் பல அனைத்தும் வேறு என்றும், தான் என்றும் நினைக்காது. எப்பொழுது அதன் ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்குகிறதோ அப்பொழுதுதான் அது தனதுக் கைகள்; கால்கள், தனதுத் தலை; தனது உடம்பு என்று நினைக்கும்; உரிமைகொள்ள ஆரம்பிக்கும். -(Entity)- பிரிந்த உணர்வு நிலை இங்கு உண்டுமை (Entity) என்றும், பிரியா உணர்வு நிலை உள்ளமை (Existence) என்றும் ஆகும்.

உண்டுமை உணர்வில்தான் தான்; நான். பிறவைகள் என்ற உணர்வுகள் உண்டாகும். அதனது உரிமைக்கொள்ளும் சுபாவங்களும் உண்டாகும். உரிமைக் கொள்ளுதல் என்றாலே பிரிவுகள் உண்டாகும். உதாரணம் வளர்ந்தக் குழந்தை அல்லது மனிதன்.

உள்ளமை உணர்வில் தான்; நான், பிறவைகள் என்ற உணர்வுகளும் உண்டாகாது, எதையும் உரிமை கொள்ளும் சுபாவமும் உண்டாகாது. உதாரணம் பிறந்தக் குழந்தை. அந்நிலையில் பிரிவு உணர்வுகள் இல்லையாதலால், உண்டுமையின் சுபாவமான பூ; காய்; இலை; கிளை; தண்டு; வேர் என்ற பிரிவாகப் பார்க்காது, உள்ளமையின் சுபாவமான மரம் என்றே பார்க்கும். அவ்வாறும் அன்று மரம் என்ற உணர்வும் அற்று பூமி என்ற அறிவுணர்வும் அற்று இயங்கும்.

உள்ளதை ஒன்று என்றும் அதனை உள்ளமை என்றும் கூறுகிறோம். அவ்வொன்றில் உள்ள பலதை உண்டுமைகள் என்கிறோம்.

மா மரம் ஒன்று. அது காய்த்து, அவைகள் பல பழங்களாக பழுத்து, அவைகள் முளைத்து பலமரங்கள் உண்டாகினால், பல மரஉருவங்கள் தெரியும். ஒரே மரம், அது பல மரங்களாகியிருக்கின்றது. ஒவ்வொன்றும் வெவ்வேறு மரங்களாகத்தான் தெரியும். ஆனால் உண்மையில் ஒரே மரம்தான். அதன் பரிணாம வளர்ச்சியின் அமைப்பு அவ்வாறு. இது உதாரணம்.

பிரபஞ்சம் ஒர் இருப்பு (உள்ளமை). அதற்கு உருவமில்லை. அதாவது ஒரே இருப்பாக உணரும்பொழுது உருவமில்லை. அதில் உண்டாகி இருக்கும் மற்றவைகள் பிரிவாக பல இருப்புகளாக (உண்டுமைகளாக) அவைகள் உணரும்பொழுது உருவங்கள் அவைகளுக்குள் அவைகளுக்கு பிரிவு உணர்வால் வேறுபாடுகளாக தெரிகின்றது.

ஒன்று அது பலப் பிரிவுகளாக அதனுள் சுயமாக உண்டான உணர்வால் பிரிந்து அவைகள் பார்க்கும் பொழுது உருவங்கள் அவைகளுக்கு தெரியும். ஒன்றாக உணர்ந்தால் உருவம் இல்லை.

ஒன்றது உருவம்
தானது இன்றி
தலைவன ரூவில்
சமைந்தது உருவம் !

தலைவன் அருவில் சமைந்த உருவம் எவ்வாறு ?
நபிதாஸ்

13 comments:

  1. அருமையான ஆக்கம் பயனுள்ள தகவல்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஆக்கம் என்று உணர்ந்து கூறுமிடத்து நான் மகிழ்கிறேன். அதுவும் பயனுள்ள தகவல் என்று எண்ணுமிடத்து ஆக்கம் அதன் நோக்கத்தை பெற்றது என்று மிகுந்த மகிழ்வதைத் தவிர வேறொன்றுமில்லை. நன்றி.

      Delete
  2. வித்தியாசமான அலசல்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. விதைத்தது பலர் மனதில் வளர. இருப்பதை விதைத்தேன். அந்தந்த காலத்தில் ஆன்றோர்கள் சொல்லாதை யாரும் விதைக்க எங்கனம் இயலும். ஆன்மா தன்னை உணரும் பொது இவ்வாறு வித்தியாசம் என்று கூறலாம். நன்றி.

      Delete
  3. நான்


    நான் என்றால்
    “அகம்பாவத்தின்
    அடையாளம்;
    அகம் பாவங்களை
    ஆக்ரமிக்க
    ஆரம்பத்தளம்”
    ஆன்மீகக் கூற்று

    “தன்னம்பிக்கையின்
    ஊக்க மருந்து;
    உற்சாகத்தின் ஊற்று
    நான் என்கின்ற கூற்று”
    உளவியலார்க் கூற்று

    உன்னால் மட்டுமே
    முடியும் என்றால்
    தற்பெருமை
    உன்னால் முடியும்
    என்றால் தன்னம்பிக்கை

    “நான் யார்?”
    மூளையின் மூலையா?
    உடலின் கூடா
    உயிரும் போனதும்
    பெயரும் போகின்றது
    மெய்யும் பொய்யானது
    மெய்யின் மீதானப் பெயரும்
    பொய்யானது

    உள்ளிருக்கும் நான்
    உயிரின் ஒளியா?
    எந்தையின் உயிரணுவா?
    விந்தைகளின் கனாவாக
    விடையறியா வினாவாக
    என்னைப் பற்றி
    இன்னமும் அறியாமல்
    என்னதான் படித்தேன்?
    என்னையேக் கேட்டேன்

    நானாக நான் இன்றேல்
    வீணாக ஏன் தம்பட்டம்?
    நான் என்ற தன் பட்டம்!!

    --

    ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
    அபுதபி(இருப்பிடம்)

    ReplyDelete
    Replies
    1. நான் என்றால்
      “அகம்பாவத்தின்
      அடையாளம்;
      அகம் பாவங்களை
      ஆக்ரமிக்க
      ஆரம்பத்தளம்”

      உண்மையே !
      அறியாமையில்
      அகம்பாவம்
      ஆரம்பிக்கும்
      ஆட்டமும் போடும் !

      தன்னம்பிக்கை என்றாலும்
      தற்பெருமை தாண்டவமாடும்.
      அழிவுகளும் காட்சிகளாகும் !

      இதுவும் உண்மையே
      பூரண அறிவில், தெளிவில்
      அகம் தன்னை
      "நான்" என்று வெளிப்படுத்தும்.
      அமைதியாக இருக்கும்.
      அற்புதமும் விளைவிக்கும்.
      அது அதன் நோக்கமன்று
      அதன் இயல்பு.
      அதனால்
      ஆனந்தம் எங்கும் காட்சிகளாகும்

      அதுதான் "நான்" என்று கூறும்
      அது அதனை
      அவ்வாறு அன்றி
      எவ்வாறு கூறும் ?

      அறியாமை
      அதனை உரிமை கொண்டால்
      அது
      அதன் விதி !
      .
      தன்
      விதியை உடைத்து
      மதியை பிடித்து
      "நான்"னில்
      மறையும்
      எதுவோ
      அது
      அந்நிலையில்
      தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான்
      என்றது.
      ஆம் !
      இது
      உலக வழிகாட்டியின்
      வழிகாட்டல்.
      .
      நன்றி !

      Delete
  4. http://kalaamkathir.blogspot.ae/2011/10/blog-post_19.html

    ReplyDelete
  5. ஒற்றுமையிலும் வேற்றுமையை ரகம் பிரித்து காட்டி இருக்கும் விதம் அருமை. நபிதாஸ் அவர்களே.!

    ReplyDelete
    Replies
    1. ஒற்றுமையிலும் என்பதிலும் இரண்டு தெரிகிறது.
      வேற்றுமை என்பதிலும் இரண்டு தெரிகிறது.
      எப்படியோ !

      ஒன்றே பல
      பலவே ஒன்றில்
      என்பதெல்லாம்
      ஆட்டங்கள்.
      அறிந்தபின்
      அமைதியாகிவிடும்.

      நன்றி !

      Delete
  6. அறியத்தூண்டும் தகவல்கள் !

    தொடர்ந்து வாசித்து வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அறியத் தூண்டும் ஆர்வம்தான் இப்பொழுது தொடராக செல்கிறது. தாங்கள் போன்றோர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே நேரங்கள் பாராது கருத்துக்கள் கோர்க்கப்படுகிறது. வணக்கத்தின் விபரங்கள் யாவும் வாசித்து தெளிவான விளக்கத்தில் நிறுத்தினால் எழுத்துக்கள் புண்ணியம் பெரும். எழுதியோனிடம் ஒன்றுமில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டவைகள் தான் இப்பொழுது எல்லோரும் எழுதியும் படித்துக்கொண்டு இருக்கின்றோம்.

      Delete
  7. தலைப்பிற்க்கு ஏற்ற ஆக்கம் நாமும் இதுபோல் எழுத வேண்டும் என்று வருகிறது ஏக்கம் ஒரு கருவை வைத்துக்கொண்டு இவ்வளவு எழுதுகிறீர்கள் வாழ்க உங்கள் நோக்கம்

    ReplyDelete
  8. ஆக்கத்தின் தாக்கத்தால் ஏக்கம் வந்ததா
    ஊக்கத்தின் தேக்கத்தால் சொக்கி நின்றதா
    சாக்கிட்டு நீக்கிட்டு பா(ர்)க்கா உண்மையில்
    நோக்கத்தில் பூக்களாக நிக்கும் நீங்களே.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers