.

Pages

Saturday, February 22, 2014

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் !

சொல்லக்  கொதிக்குதுடா நெஞ்சம் - நாட்டில்
.......சோதனை வந்ததடா நேர்மைக்குப் பஞ்சம்
மெல்லக் கரையும் மனிதம் - உலகில்
.......மெலியுதே முன்னோரும் காத்தப் புனிதம்!

ஆன்மீகம் இல்லாத கல்வி - அதனால்
.....அனைத்துத் துறைகளிலும் வந்தது தோல்வி
மேன்மைகள் பெற்றனர் முன்னோர் - அதனை
....மீண்டும் கொணர்ந்திட வில்லையே பின்னோர்!
..
கள்ள வணிகம் பதுக்கல் - எல்லாம்
......காலத்தின் கட்டாயம் என்றே மதிக்கும்
உள்ள நிலமைகள் எண்ணி - நாளும்
.....உள்ளம் கொதிக்கவே வேகுதடா கண்ணீர்!

மெல்ல இனிசாகும் செந்தமிழும் - இளையோர்
.... மென்று குதறியே காரி உமிழும்
கொல்லும் கொலைவெறிப் பாயும் - பாடலால்
.....கொஞ்சமும் அச்சமின்றித் தாய்மொழித் தேயும்

தோலுர்ணவு மட்டுமே தூண்டும் - அதற்குத்
......துணைசெய்யும் தோழமைதான் கள்ளமாய் வேண்டும்
பாலுணர்வுச் செய்கையில் பின்னி - இன்று
.....பாழ்பட்டுச் சாகுதடா  நாணமிலாக் கன்னி!

ஆளுமை என்னும் பெயரில்  - ஆண்கள்
.....ஆதிக்கம் செய்திடப் பெண்கள் துயரில்
மீளுதல் இல்லா அடிமை - வரன்
...மேலேதான் தட்சணைக் கேட்கும் கொடுமை!

சாதி மதங்களின் சண்டை  - அதனால்
......சாயும் மனிதனின் மாண்புள மண்டை
மீதி  யுளோர்களின் யாக்கை   -  என்னோகுமோ
.......மேதி னியிலுளோர் அச்சமுடன் வாழ்க்கை!

நாட்டினில் உள்ள நிலைமை - மாறிட
.....நாடுவோம் தூயநற் றொண்டின் தலைமை
பாட்டினில் சொன்னேன் கவியரங்கில் - இவைகளைப்
.....ப்டைத்தவன் மாற்றுவான் இந்தப் புவியரங்கில்!

கொதித்திடும் எண்ணங்கள் சாடலாய் -ஈண்டுக்
....கொட்டியே தீர்த்தனன்  சந்தத்தின் பாடலாய்
மதித்திடும் பாவலர்  ஆன்றோர் --யாவரும்
...மதிப்பெண் இடுதலே யான்பெற்ற சான்றாம்!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : 'சந்த வசந்தம்' இணையக் கவியரங்கில் அரங்கேறிய இந்த கவிதை அதில் பங்கேற்ற அனைத்து சான்றோர்களின் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

'கவியன்பன்' கலாம் அவர்களின் இந்த கவிதைக்கு சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் இனிய குரலில் பாடிய பாடல் இதோ...

29 comments:

  1. புத்துணர்வு தரக்கூடிய படைப்பு !

    வாழ்த்துக்கள் கவிக்குறள்

    ReplyDelete
  2. நெஞ்சார்ந்த நன்றிகள் தம்பி நிஜாமுக்கு.

    ReplyDelete
  3. சந்த வசந்தக் கவியரங்கில் என் கவிதைக்குப் பாராட்டுகள்
    அத்தளத்தில் உடனுக்குடன் பதியப்பட்டப் பின்னூட்டங்களை ஈண்டு மீள்பதிவு செய்கின்றேன்:

    கவியரங்கத் தலைவர் அவர்களின் அழைப்பு:

    தியாகராஜனுக்குத் தனி அஞ்சல் கொடுத்தும் அவர் வரவில்லை. அடுத்த கவிஞர் கலாம்.


    மரபிலே ஊற்றம், மனத்திலே ஊக்கம்
    தரமதை நாடுகின்ற தன்மை- நிரம்பவே
    பெற்றிருக்கும் அன்பர் பிழையாக் கவிதைநெறி
    கற்றிருக்கும் எங்கள் கலாம்.

    கலாம் வருக கவி தருக

    பாராட்டுப் பின்னூட்டங்கள்:

    1)
    கலாம் பாட்டிற்கு நான் முதல் வகுப்புக்கான மதிப்பெண் 60/100 வழங்குகிறேன்
    புலவர் இரா இராமமூர்த்தி


    என் மறுமொழி:

    புலவர் பெருமானால் போற்றுதல் பெற்றேன்;
    நலமே அடைந்தது நாள்


    2)
    சாதி மதங்களின் சண்டை - அதனால்
    ......சாயும் மனிதனின் மாண்புள மண்டை
    மீதி யுளோர்களின் யாக்கை - என்னோகுமோ
    .......மேதி னியிலுளோர் அச்சமுடன் வாழ்க்கை!


    அருமையான வரிகள் கலாம்.
    நல்ல கவிதை.

    வரதராசன்.

    என் மறுமொழி:


    அருமைக் கவியென அன்புடன் வாழ்த்திப்
    பெருமை படுகின்ற பேற்றினை நல்கியே
    ஐயா வழங்கிடும் அன்பில் நனைந்தனன்
    மெய்யாய்ச் சிலிர்த்தது மெய்





    3)
    ஆம்..கலாம் கவிதை சிந்தனையும், தர்மக்கோபமும் மிக்கது.யான் 62% மதிப்பெண் வழங்குவேன்,
    யோகியார்

    என் மறுமொழி:

    யோகியார் தந்தது யோகமாம் என்றேயான்
    ஆகினேன் ஆனந்தம் ஆழ்ந்து




    4)
    அன்பு கலாம் ஐயா,

    நாட்டு நிலைமைகளை நன்கு படம்
    போட்டுக் காட்டிப் பாடினீர்கள்
    வாழ்த்துகள்.
    நன்றிகளும் பாராட்டுக்களும்..
    சோதரி
    புஷ்பா கிறிஸ்ரி

    என் மறுமொழி:

    சோதரி புஷ்பாவின் சொல்லுக்குள் என்பாவை
    ஆதரிக் கும்பண்புண்(டு) ஆம்


    ReplyDelete
  4. தொடர்ச்சி.............................
    \
    5)
    காலத்தின் கோலத்தின் ஆழத்தை வேழத்தின்
    வேகத்தில் தந்தார் கலாம்

    வாழ்க ஐயா

    -துரை. ந.உ.

    என் மறுமொழி:

    படத்தைப் பிடித்திங்குப் பாடும் துரையார்
    இடத்தில் எனக்கும் இனிய மதிப்பைக்
    கொடுத்து வழங்கும் கொடுப்பினை காதால்
    மடுத்துத் திளைத்தேன் மகிழ்ந்து


    6)
    > ஆன்மீகம் இல்லாத கல்வி - அதனால்
    > .....அனைத்துத் துறைகளிலும் வந்தது தோல்வி
    > மேன்மைகள் பெற்றனர் முன்னோர் - அதனை
    > ....மீண்டும் கொணர்ந்திட வில்லையே பின்னோர்!

    இதுதான் நம் அவலங்களிலேயே முதன்மையான தென்று எனக்குப் படுகிறது. அருமையான கவிதை கலாம் அவர்களே.

    அன்புடன்,
    ரமணி

    என் மறுமொழி:

    தரமுடன் ஆய்ந்துத் தகைசால் கருத்தை
    இரமணி தந்தார்கள் ஈண்டு

    ReplyDelete
  5. தொடர்ச்சி....................
    \
    7)
    எங்கள் ஆசானும், இந்தச் சந்த வசந்தக் குழுமத்தின் நிறுவனரும், இந்தக் கவியரங்கத் தலைவருமான கவிவேழம் இலந்தையார் என்னும் உயர்திரு கவிமாமணி இராமஸ்வாமி சுப்பையர் அவர்களின் பாராட்டும்; பாடமும்


    கல்வி, தமிழ்க்கொலை கள்ளம்- நாட்டில்
    காணும் பதுக்கல்கள் தீமைகள் வெள்ளம்
    புல்லிடும் காமத்தின் தீமை - கலாம்
    பொங்கியேசாடினார் சொன்னார் ஆற் றாமை

    நாட்டு நடப்புகள் கூறி- தீமை
    நாளும் வளர்வதைச் சாடினார் சீறி
    பாட்டிற்குச் சொன்னேன் பாராட்டு- கொஞ்சம்
    பாடினேன் வாயினால் தாளமும் போட்டு

    வாழ்க

    சில குறிப்புகள்

    தாய்மொழித் தேயும் -- வலிமிகாது




    ஆன்மீகம் இல்லாத கல்வி - அதனால்
    .....அனைத்துத் துறைகளிலும் வந்தது தோல்வி
    மேன்மைகள் பெற்றனர் முன்னோர் - அதனை
    ....மீண்டும் கொணர்ந்திட வில்லையே பின்னோர்!------ மிக நன்று

    மெல்ல இனிசாகும் செந்தமிழும் - ஓசை கூடுகிறது

    தட்சணைக் கேட்கும் - வலி மிகாது

    தட்சண் என்னும் பெயருடையவனைக் கேடும் என்றாகிவிடும்

    ஆனந்தக்களிப்புப் பாடும் போது தாளம் மிக மிக முக்கியம். வாயினால் பாடித் தாளம் போட்டுப் பார்த்துச் சரிசெய்துகொள்ளவேண்டும்

    இலந்தை

    ஆசான் அவர்களுக்கு என் பணிவான மறுமொழி:


    ஆசான் அவர்களுக்கு வணக்கம்.

    அன்பின் ஆசான் - கவியரங்கத் தலைவர் கவிவேழம் இலந்தையார் அவர்களின் பாராட்டு யான் பெற்ற பேறு என்றே எண்ணி மிக்கப் பணிவன்புடன் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன், ஐயா.

    தாங்கள் குறிப்பிட்ட ஒற்றுப் பிழைகட்கான விளக்கம் அறிய விழைகின்றேன், ஐயா.

    1)தாய்மொழி தேயும் = வலி மிகாததற்கான காரணிகள் கீழ்க்காணுபவைகளில் எதுவென்று அறிய விழைகின்றேன்:

    எழுவாய்த் தொடர்
    ஏழாம் வேற்றுமைத் தொகை
    ஐந்தாம் வேற்றுமைத் தொகை
    மூன்றாம் வேற்றுமைத் தொகை

    2)தட்சணை கேட்கும் = வலி மிகாத்தற்கான காரணி= இரண்டாம் வேற்றுமைத் தொகை?

    பாடலைப் பாடிப் பார்க்காமல் பதிந்தமைக்கு மன்னிகவும்.

    என்றும் தங்களின் பணிவுள்ள
    மாணவன்,
    கலாம்

    என் ஐயத்தைத் தெளிவுபடுத்தும் ஆசானின் பாடம்:

    எழுவாய்த் தொடர், இரண்டாம் வேற்றுமைத் தொகை

    பால் குடித்தான் பாலைக் குடித்தான் போலத் தட்சணையை என்று வந்திருந்தால் மிகும்


    ஆசான் அவர்களுக்கு என் மறுமொழி:


    ஐயம் தெளிந்தேன் ஐயா.



    ReplyDelete
  6. தொடர்ச்சி.................
    \
    8)
    அன்புள்ள கலாம் ஐயா
    மிக அழகான கவிதை..
    அன்புடன்
    அகிலா


    அகிலாவின் வாழ்த்தில் அகமெங்கும் இன்பம்
    மகிழ்வாலே துள்ளும் மனம்

    9)
    நல்ல கவிதை ஐயா! வாழ்த்துகள்.

    முலாம்பூசா மொழிபேசும் மூதாதை போலே
    கலாம்காதர் கவிச்சொல்லும் கடவுளருட் குரலே!

    -அவனடிமை

    என் மறுமொழி:

    பொய்மையிலா என்கவிதை போற்றும் அவனடிமை
    வாய்மையினை எண்ணியென் வாழ்த்து

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம்.


    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.... புத்தக விமரிசனம்
      நூலாசிரியர் : சாவித்திரி கண்ணன்

      சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம். துக்ளக் பத்திரிக்கையில் 1997 முதல் 2004 வரை சாவித்திரி கண்ணன் அவர்கள் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. மொத்தம் 67 கட்டுரைகள். மூன்றில் 2 பங்கு கட்டுரைகளை கல்வி, நீராதாரத் திட்டங்கள், அரசு அலுவலகங்களின் இலஞ்ச ஊழல்கள் என்ற மூன்று பிரிவுக்குள் அடக்கலாம். மீதியுள்ளவை மனித உரிமை மீறல்கள், விவசாயம், அரசியல் போன்ற சமூகப் பிரச்சனைகளை ஆராயும் கட்டுரைகளே.

      Delete
    2. காவிரி,கிருஷ்ணா,வீராணம் போன்ற பெரிய நீராதாரத் திட்டங்கள் பற்றிய கட்டுரைகளை வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரைகள் என்பதை விட ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது விவசாயக் கல்லூரிகள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகள் என்று அழைப்பதே பொருத்தம். அவ்வளவு அடர்த்தியான தகவல்கள், கள ஆராய்ச்சி, கடந்த கால வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அதனால் படிப்பதற்கும் கொஞ்சம் கடினமாய் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்குமில்லை. ரஷ்ய நிறுவனம் இலஞ்சம் தர மறுத்ததால் கைவிடப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டத்தால் பயனுமில்லை, சாத்தியமுமில்லை என்பதை விளக்கும் விரிவான கட்டுரைகளும் உள்ளன.

      மாநகராட்சி பள்ளிக் கல்வி, நர்சரி பள்ளிக் கல்வி, கம்ப்யூட்டர் கல்வி, சட்டக் கல்வி, பொறியியற் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகம் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடக்கும் இலஞ்ச-ஊழல்கள், பொறுப்பற்ற செயல்பாடுகள் போன்றவற்றை கிட்டத்தட்ட 15 கட்டுரைகள் மூலம் தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

      Delete
    3. இந்திய அரசியல் சாசனத்தின் 45வது பிரிவு, இந்த சாசனம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளில் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அளிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறது. அரசியல்சாசனம் நடைமுறைக்கு வந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 14 வயதிற்குட்பட்ட கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல்தான் உள்ளன. இவர்களில் பலர் குழந்தைத் தொழிலாளர்களாகவுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் சிலரின் பேச்சைப் படம் பிடித்துள்ள கட்டுரை "கொத்தடிமைத் தளையில் குழந்தைகள்"." காலைல 7 மணிக்கெல்லாம் தறி வேலை செய்யற எடத்துல இருக்கணும். சாயந்தரம் 7 மணி வரை செய்றேன். எனக்கு ஸ்கூலுக்குப் போக முடியலைனு வருத்தமா இருக்குதுனு" 9 வயது ஜெயலட்சுமி செல்றது நமது நெஞ்சை நெகிழ வைக்கிறது.

      ஒவ்வொரு கட்டுரையிலும் அந்நியன் படத்தில் மாறுவது போல் நூலாசிரியர், வழக்கறிஞராக மாறி தான் எடுத்துக் கொண்ட கருத்தை ஒரு வழக்காகக் கருதி அதன் வாதி,பிரதிவாதிகள்,துறை வல்லுனர்கள்,பொதுமக்கள் போன்ற அனைவருடனும் கலந்துரையாடி, சில சமயங்களில் புலனாய்வு செய்து அதன் சாராம்சத்தை நடுநிலையோடு கட்டுரையாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, பழவேற்காடு ஏரியில், வடசென்னை அனல்மின் நிலைய ரசாயனக் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய கட்டுரையில்(" மீள முடியாத நிலையில் மீனவர் வாழ்க்கை") பழவேற்காடு மீனவ சங்கத் தலைவர், அகில இந்திய மீனவ சங்கத் தலைவர், உள்ளூர் இளைஞர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மின் உற்பத்தி நிலையத் துறை வல்லுனர்கள்,மீன்வளத்துறை அமைச்சர் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் கோர்த்து நல்ல கட்டுரையாக்கியுள்ளார்.

      Delete

    4. "அரிசியில் அடிக்கப்படும் கொள்ளை" கட்டுரையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல், பொதுவிநியோகக் கடைகளுக்கு அரிசியாக வரும்வரை நடக்கும் ஊழல்களைப் பற்றிப் படிக்கும் போது இதை வைத்து "ஒரு நெல்லின் பயணம்" என்ற புலனாய்வுப் படமே எடுக்கலாம் போல. அவ்வளவு ஊழல்கள்.

      "ஏழையின் பட்ஜெட்" ஒரு வித்தியாசமான பட்ஜெட். ஒரு ரிக்ஷாக்காரரின் மாத வரவு செலவு பற்றியது. "பலியான மாணவன் பணத்திற்காகச் செய்யப்பட்ட ஆபரேஷன்", ரமணா படத்தை நினைவூட்டுகிறது.

      இந்தியாவில் அரசு அலுவலகங்களில் இலஞ்ச-ஊழல், பொறுப்பின்மைக்கா பஞ்சம். ஒவ்வொரு அரசு அலுவலமாக ஏறி அங்கு என்னதான் நடக்கிறது. எப்படித்தான் கொள்ளையடிக்கிறார்கள் என்று அறிந்து, உலகறியச் செய்ய துறைமுகம், கஸ்டம்ஸ், கால்நடைத்துறை, மாநகராட்சி அலுவலகம், தலைமைச் செயலகம் என்று பல இடங்கள் சுற்றி 'மக்களே....எப்படி இலஞ்சம் வாங்குகிறார்கள்" பாருங்கள் என்று "கரை புரண்டோடும் துறைமுக ஊழல்", "தற்குறி நிலைமையில் தலைமைச் செயலகம்", " கால்நடைத் துறையில் கூட்டுக் கொள்ளை", "மலைக்க வைக்கும் மாநகராட்சி ஊழல்" போன்ற கட்டுரைகள் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். அரசியல் தலையீட்டால், கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகள் நஷ்டமடைந்ததையும், கூட்டுறவுத் துறை வீட்டு வசதி திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததையும் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

      அரசு நிறுவனங்களில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அரசு சாரா நிறுவனங்களில் நடக்கும் ஊழலைப் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது.

      என்னென்ன காரணங்கள் காட்டி இலஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது போல், எப்படியெல்லாம் செயல்பட்டால் இந்த இலஞ்ச, ஊழலை ஒழிக்கலாம் என்று தனியே ஒரு புத்தகம் வெளியிட ஆசிரியரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. நாட்டில் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவோருக்கு, படம் பிடித்துக் காட்டுவோருக்குப் பஞ்சமில்லை. ஆனால் தீர்வு சொல்வார்தான் யாருமில்லை. நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகப் பிரச்சனையிலும் ஆழமான பார்வை கொண்ட நூலாசிரியருக்கு தீர்வு சொல்லும் தகுதி, திறமை உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை....

      23-september-2006
      posted by Senthil Arumugam @ 5:27 PM

      Delete
  8. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் !
    சொக்கிக் கேட்கவைக்கும் சொல்வண்ணம்
    அள்ளிக் கொடுத்திட்ட கவித் தீபம்
    அனைத்தையும் கலந்தளித்த பழச்சாராம்
    நெஞ்சம் நிறைத்த துந்தன் கானம்
    நித்தமும் தூண் டுமெந்தன் எண்ணம்
    நிழலாய்த் தொடரும் என்றும் கவீயாய்..........

    ReplyDelete
  9. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் !
    சொக்கிக் கேட்கவைக்கும் சொல்வண்ணம்
    அள்ளிக் கொடுத்திட்ட கவித் தீபம்
    அனைத்தையும் கலந்தளித்த பழச்சாராம்
    நெஞ்சம் நிறைத்த துந்தன் கானம்
    நித்தமும் தூண் டுமெந்தன் எண்ணம்
    நீண்ட நெடுநாளையப் பயணம்
    நிழலாய்த் தொடரும் என்றும் கவீயாய்..........

    ReplyDelete
  10. மெய்சா வரைந்த கவிதை - என்னை
    .....மெய்சிலிர்க்க வைத்த மனத்தின் உள்விதை
    நெய்சார்ந் தளித்தச் சுவையாம் - இக்கவிஞர்க்கு
    ....நெஞ்சார்ந்த நன்றியைச் சாற்றும் அவையாம்!

    ReplyDelete
  11. நல்ல கருத்துக்களை ..
    செந்தமிழில் ...தந்த கவி தீபம் கலாம் அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அதிரைத் தமிழூற்றின் அமுத வார்த்தைகள் படித்து மகிழ்ந்”தேன்”.

      ஜஸாக்க்ல்லாஹ் கைரன்.

      Delete
  12. சந்தத்தின் பாடல் பார்த்தேன் - வடித்துத்
    .....தந்ததில் கொதிக்கும் நெஞ்சம் கண்டேன்
    பந்தத்தில் பதிகின்றேன் நன்றே - துடிப்பைப்
    .....பார்த்துப் புரிந்தே பிடித்தேன் இன்றே

    இந்த சமுதாயம் உணர்ச்சியில் - வீழ்ந்தே
    .....இப்படிப் பாழாய் போனதே காட்சியில்
    சொந்த பந்தமும் விட்டது - மதிமயங்கி
    .....சொல்லினில் வழிதவறிப் போயிக் கெட்டது

    என்று திருந்தும் காணேன் - ஒற்றுமை
    .....எப்படித் திரும்பும் என்றே போனேன்
    அன்று சொல்லித்தான் போனார் - அப்படி
    .....ஆகியே எழுபத்து மூன்றாகி ஆனார்.

    ReplyDelete
    Replies
    1. \\இந்த சமுதாயம் \\= ஒற்று மிகும் ( இந்த, அந்த, எந்த என்னும் சொல்லுக்குப் பின்னர் ஒற்று மிகும்

      \\பாழாய் போனதே\\= ஒற்று மிகும் (4 ஆம் வேற்றுமைத் தொகை= பாழாய் - ஆகிப் போனதே என்று தொக்கி வருவதால்)

      Delete
  13. அன்பின் மாணவர் நபிதாஸ்.
    அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்தப்பாடல் “ஆனந்தக் களிப்பு” என்னும் பா வகையில் யாத்துள்ளேன்; சிந்துக்குத் தந்தையாம் - பாட்டுக்கொரு புலவன் பாரதியின் அதிகமான பாக்கள் சிந்துப் பாக்களாகவும்; அந்த முண்டாசுக் கவிஞனின் முரட்டு வேகம் எல்லாம் இந்தச் சந்தப்பாடல்களில் தான் அதிகம் காட்டப்படுவதால், “சொல்லக் கொதிக்குதுடா நெஞ்சம்” என்னும் தலைப்பினை எங்களின் சந்த வசந்தக் கவியரங்கக் குழுமத்தின் தலைவர் அவர்கள் எங்கட்குக் கொடுத்துக் கவியரங்கில் பங்கேற்க அழைத்ததும், எனக்குள்ளும் அதே வேகமும் - கோபமும் கொப்பளிக்கவே அதே மாதிரியான இந்த வகைப் பாவினத்தில் வடித்தனன். இந்தப் பாவகையில் தான் முன்பும் “ஹஜ் என்னும் அரும்பாக்யம்” என்னும் பாடலும் இயற்றியிருந்தேன்.

    நீங்கள் என் பாடலை அடியொற்றிப் பின்னூட்டப்பா எழுதியிருப்பினும், யான் எடுத்துக் கொண்ட அந்த “ஆனந்தக் களிப்பு” என்னும் சந்தப் பாடலின் இலக்கணத்தில் முதன்மையான ஒன்றான “தளை” அறிதல் வேண்டும்.

    1) எல்லாச் சீர்களும் “வெண்டளை”யாகவே வரவேண்டும்;
    2) தனிச்சீர் அலகிட வேண்டாம்
    3) முதல் அடியில் மூன்று சீர்களும்; (தனிச்சொல்லைக் கணக்கிட வேண்டாம்,)இரண்டாம் அடியில் நான்கு சீர்களும்அமைக்க
    வேண்டும்.
    4) முதல் அடியின் ஈற்றுச் சீரும்; இரண்டாம் அடியின் ஈற்றுச் சீரும் “ஈற்றெதுகை”யாகவே ஒன்றி வருதல் வேண்டும்

    இப்பொழுது யான் கற்பித்துள்ளபடி மீண்டும் உங்களின் பின்னூட்டப் பாடலை வடிவமைக்கலாம்.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் கலாம் காக்கா

    வணக்கம் என்ற சொல் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.தயவு செய்து திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி காக்கா

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் ஸலாம் அன்புத்தம்பி அர.அல (இப்னு அப்துர்ரஜ்ஜாக்),

      மரியாதைச் செலுத்துவதற்கு, வாழ்த்துவதற்கு அடையாளமாகக் கைகூப்பி “வணக்கம்” கூறுவது என்பது வேறு; இறைவனை வணங்கும் - வழிபாடு -தொழுகை என்பது வேறு.

      “ந்ற்றாள் தொழார் எனின்” என்ற வரிகளில் தொழுதல் என்பதே இறைவணக்கம். மற்றபடி, மனிதர்கட்கிடையில் கைகூப்பி வாழ்த்தும் வணக்கமும் கூறுவது பொதுவானதொரு முகமன் என்றே கருதலாம்.

      இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்வதால், இப்படி மனிதர்களுக்கு “வணக்கம்” என்னும் வந்தனம், நம்ஸ்காரம், salutation, greetings சொல்வதைத் தடுப்பதால் நல்லிணக்கம் தடைபடுகின்றது;

      ”வணக்கதிற்குரியவன்...” என்ற மொழிபெயர்ப்பில் கூட தவறுள்ளது

      லா= இல்லை
      இலாஹ்= இறைவன்
      இல்ல= தவிர்த்து
      அல்லாஹ்= ஓர் உண்மை இறைவன்

      இதனைச் சேர்த்தால், ஓர் உண்மை இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை

      இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் NO GOD ; BUT ALLAH

      எனவே நாமாக “வணக்கத்திற்குரிய” என்று வார்த்தையை முன்னோர்களின் தவறான மொழிபெயர்ப்பால் ஏற்று விட்டோம் என்பதால், மனிதர்கட்குச் செய்யும் மரியாதை என்னும் வாழ்த்தான வணக்கத்தையும் இறைவன்க்குரிய தொழுகை மற்றும் கட்டளைகளுடன் “இணைவைத்து” ப் பார்ப்பது என்பது எப்படி ஒன்றாகும்?

      ஆர்வமுடன் கைகூப்பி-மனம் ஒப்பி மாற்று சமய (தொப்புள்கொடி உறவுகள்0 சகோதர.சகோதரிகள் “வணகம்: என்று சொன்னதும், நம்மவர்கள் மீண்டும் “கைகூப்பி” வணக்கம் சொல்லி விட்டால், நாம் சாமி கும்பிட்டு விட்டதைப் போன்றே எம்மை “முஷ்ரிக்” என்கின்றனர்.

      இப்படி பத்வா கொடுப்பதற்கு இவர்கட்கு யார் அதிகார்ம கொடுத்தது>

      “தீர்ப்பு நாளின் அதிபதி” என்று 17 முறை தொழுகையில் தின்மும் ஓதி விட்டு , சக முஸ்லிமை ‘,முஷ்ரிக்” என்று தீர்ப்புச் சொன்னால், அந்த அல்லாஹ்வைத் தீர்ப்புச் சொல்லும் இடத்திலிருந்து இவர்கள் உட்கார்ந்து கொண்டார்களா(அல்லாஹ் பாதுகாப்பானாக)

      உள்ளன்புடனும், மரியாதையுடனும் கைகூப்பி வணக்கம் என்று சொல்லும் தமிழர்க்கு , ஒரு தமிழராகிய யாம் அதே முறையில் நன்றி வணக்கம் சொன்னது தப்பா?

      நிற்க. இதுபோல், அறபு மொழியில் “ஸல்” என்ற மூலச்சொல் , எம் கண்மணியாம் நபிகளார் (ஸல்) அவர்களை வாழ்த்தும் இந்த ஸலவாத்த்து என்னும் salutation க்கும், greetings க்கும் உள்ள அதே மூலச் சொல்தான்
      “ஸலா(த்) “ என்னும் தொழுகைக்கும் குறிப்பிடப்படுவதால், இரண்டும் ஒன்றல்ல; ஸல்வாத்து வேறு; ஸலாத் வேறு என்று எப்படி அழகாக- தெளிவாகப் புரிந்து வைத்துள்ளோமோ, அதுவேபோல், இந்த மனிதர்கட்கிடையில் பேச்சால், எழுத்தால் பரிமாறும் அன்பிந் ம்ரியாதையின் வெளிப்பாடான “வணக்கம்” என்பதும், இறைவனுக்கு மட்டுமே இணங்கி நடத்தும் தொழுகை மட்டும் கடமைகளும் வேறு என்று உண்ர முடியாமல் குழம்புவதும்; குழப்புவதும் காரணீயமாகவே,
      நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழ்ச் சகோதரர்களிடம் திருப்பி கைகூப்பி வணங்காமல் தள்ளி நின்று ப்கைமையை வளர்த்துக் கொண்டோம்.

      தெளிவாக அறிவோம்:
      மனிதர்கட்கிடையில் வணக்க்ம் சொல்வது வேறு= மரியாதை

      இறைவனுக்குச் செலுத்துவது தொழுகை என்னும் கடமை.

      ஆனால், நாம் இந்தத் தொழுகையில் செலுத்தும், குனிதல்- சிரம் பணிதல் எதுவும் மனிதர்கட்குச் செய்வது தான் இணைவைப்பாகும்.

      மேலும், விளக்கம் ஞானியார் நபிதாஸ் அவ்ர்கள் கூறுவாரக்ள், இன்ஷா அல்லாஹ்.

      Delete
  15. சந்தத்தின் பாடல்கள் பார்த்தேன் - வார்த்தைச்
    .....சாரத்தில் நின்நெஞ்சம் சொல்கொதிக்க கண்டேன்
    பந்தத்தில் தீட்டுகின்றேன் நன்றே - துடிப்பைப்
    .....பார்த்துப் புரிந்தே பிடித்தேனே இன்றே

    இந்தச் சமுதாயம் வீண்உணர்வில் - வீழ்ந்தே
    .....இப்படிப் பாழாகிப் போனதே காட்சியினில்
    சொந்த உறவுகள் விட்டது - மதிமயங்கி
    .....சொல்லில் வழிதவறிப் போனதால் கெட்டது

    என்று திருந்திடுமோ காணேன் - ஒற்றுமை
    .....எப்பத் திரும்பும் புரியாதுப் போனேன்
    அன்று வகுத்துத்தான் போனார் - அப்படி
    .....ஆகி எழுபத்து மூன்றாகி ஆனார்.

    மூத்தவன் என்றும்தான் சொல்வார் - அறிவிலும்
    .....மூத்தவன் என்பதில் உள்ளதைப் பாரார்
    சூத்திரம் என்பதில் கெட்டார் - இவர்
    .....சொற்களில் உண்மைகள் காண்பதை விட்டார்

    ஆத்திரம் கொள்ளவும் வேண்டாம் - இந்த
    .....அறியாமை என்றுமே நின்றிடும் பாவம்
    சாத்திரம் பேசுவார் நன்கு - வார்த்தை
    .....சாரத்தின் நோக்கம் அறியாமல் இன்று.

    பற்றிப் பிடித்தாரே வார்த்தை - பற்றற்றான்
    .....பற்றினை விட்டும் விலகியே வித்தை
    கற்றக் கலையினில் ஊன்றி - புரியாமல்
    .....கற்றாரை தூற்றும் உலகினில் தோன்றி.

    ReplyDelete
    Replies
    1. இதனையே யான் முன்னர் உங்களிடம் ; ”என் கவியரங்கப் பாடல் பதிவான் பின்னர் இந்த ஆனந்தக் களிப்பைப் பற்றிய இலக்கணம் பயிற்றுவிப்பேன்” என்று சொன்னேன். இப்பொழுது நீங்களும் பொறுமை காத்து யான் இட்ட வழி முறைகளைப் பேணி அவ்வண்ணமே அழகிய- தளை தட்டாத இந்த ஆனந்தக் களிப்பு என்னும் சந்தப்பாடலை சமைத்த் விட்டீர்கள். அருஞ்சுவையாய்ப் பருகினேன்; பெரும் கருத்துகளில் உருகினேன்; மாஷா அல்லாஹ். எதையும் “பட்” டெனப் பற்றிக் கொண்டு- கற்றுக் கொள்ளும் உங்களின் ஆரவமே எனக்கு உங்களின் பால் மிகுந்த அன்பையும் ஈர்ப்பையும் உண்டாக்கி விட்டது, இன்ஷா அல்லாஹ் விரைவில் விடுப்பில் - ஊரில்-நேரில் சந்திப்போம்; சிந்திப்போம்.

      Delete
  16. இப்பாடலை முயற்சித்துத் தோற்றுப் போனவன் நான்..

    சில கவிதைகளை பாடலாக்குவது கடினம் என்பதை இப்பாடல் எனக்கு உணர்த்தியது.. அப்படியும் கடினப்பட்டு பாடி முடித்தப்பிறகு யோசித்தேன்

    ஒருவேளை என் ராகத்தில் அடங்க மறுத்ததால் இக்கவியின் உயிர் கெட்டுவிடுமோ என அஞ்சி இதனை பாடலாக பாடும் முயற்சியை கைவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் இலண்டன் வானொலியார் தரும் தலைப்புக்கு யான் இயற்றப் போகும் பாடல் இரு சீரகளில் அமையும் ஒரு வண்ணப்பாடல் என்பதால் உங்களால் எளிதாகப் பாட முடியும்; குறிப்பாக “அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக; என்ற உங்கள் குரலில் வெளியான முதற்பாடலைப் போன்றே அமையும் என்பதால் இலகுவாகி விடும்; உங்களின் இலகுவான ராகத்திற்காகவே எண்சீர் விருத்தம், அல்லது இதுபோன்ற நீண்ட பாவடிகள் அமைப்பதை நிறுத்திக் கொள்கின்றேன்; உங்களுக்கு மிகவும் எளிதானவைகள்: வண்ணப்பாடல் , இரு சீர், மூன்று, நான்கு, அறுசீர்களில் மட்டும் அடங்கும் பாடல்களே என்பதையும் யான் உணர்ந்து கொண்டேன்.

      இலண்டன் வானொலியார் நேற்று அறிவித்த ஓர் அதிரடி அறிவிப்பில்:

      “இனிமேல் எழுத்து வடிவத்தில் வரும் மின்மடலில் அனுப்பும் கவிதைகள் ஏற்கப்பட மாட்டாது; காணோளியாகவோ, ஒலிப்பேழையாகவோ பதிவு செய்து அனுப்பினால் மட்டுமே ஏற்கப்படும்”

      எனவே, இனிமேல் உங்களின் பேருதவியை நாடியே உள்ளேன்; எனக்குக் காணொளியில் பதிந்து கொள்ள என் கணினியில் வசதியில்லை; ஒலிப்பேழையிலும் பதிந்து mp3 யில் அனுப்பினாலும், உங்களைப் போன்ற குரல் இனிமை எனக்கு வாய்க்கவில்லை. எனவே, இன்ஷா அல்லாஹ் வாரந்தோறும் உங்களின் உதவியை நாடுகின்றேன்.

      நிற்க. நீங்கள் இப்பாடலைப் பாட இயலாமல் போனது என் பாடலின் நீண்ட வரிகள் தான் , எனினும், உடன் நீங்கள் இயலாமையை ஒப்புக் கொண்டதும் தமிழகத்தின் பிரபல மட்டைப் பந்து வர்ணணையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் இப்பாடலைப் பாட முன்வந்து இருப்பதும் ஓர் ஆறுதலாகும். ஏற்கனவே, ரமலானில் “பிரார்த்தனை” என்னும் என் பாடலை அவராகவே முனவ்ந்து (இணையத்திலிருந்து என் பாட்லைக் கண்டுபிடித்து) எனக்கும் அந்த ஒலிப்பேழையை அனுப்பினார்கள்; அப்பாடலை அவர்கள் நடத்தும் வானொலியிலும் ஒலிபரப்பினார்கள். அன்று முதல் என் பாடலைப் பாட அவாவுடன் இருந்தார்கள்; எனினும், நமதூர் இளம்முரசு ஆக வளர்ந்து வரும் உங்கட்கே வாய்ப்பளித்தேன்; இடையில் நிறுத்தம் செய்தால் ஏதோ “ கூட்டணியில் குழப்பம்” என்று கதை கட்டி விடவும் நிரம்ப் ஆட்கள் இதே வேலையாக ஃபித்னா உருவாக்கவும் காத்திருப்பதும் யாம் அறிவோம் என்பதால் , முதலில் உங்கட்கே வாய்ப்பளித்து விட்டு, உங்களின் இயலாமையை நீங்கள் வெளிப்படையாக ஈண்டுப் பதிவு செய்து விட்டமையால், யானும் என் நிலைப்பாட்டைப் பதிவு செய்கின்றேன்.

      இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து உங்க்ட்கு வாய்ப்பளிக்கின்றேன்.

      Delete
  17. அல்ஹம்துலில்லாஹ் யானும் என் ஆசான்களும் எதிர்பார்த்த அதே வேகமும் உரத்தக் குரலின் உச்சஸ்தாயினில் சந்தங்கள் ஈடுகொடுக்க மிகவும் அருமையாகப் பாடியிருக்கின்றார்கள், அன்புச் சகோதரர் - பிரபலமான மட்டைப் பந்து வர்ணணையாளர்- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள். இன்ஷா அல்லாஹ் இருவாரங்களில் இந்த ஒலிப்பேழையை இலண்டன் வானொலிக்கு அனுப்பி இவர்களின் தேன்குரலை அகிலமெலாம் காற்றலைகளில் பரவச் செய்வேன்.

    குறிப்பாக, இவர்கள் பாட எடுத்துக் கொண்ட இராகமும், குணங்குடி மஸ்தான் சாஹிப் என்னும் ஞானப்பாடல்களின் குருவானவர்களின் மிகவும் பிரபலமான “தக்க பெரியோன் அருள் தங்கியே நிற்கின்ற தவராஜ செம்மேருவே” என்ற பாடலின் இராகத்தை ஒட்டியிருப்பதிலிருந்து யான் யாத்தப் பாடலும் குணங்குடியாரின் பாடலும் ஒரே சிந்து வகையில் ஒத்து வருகின்றதை இந்த வர்ணணையாளரும் தேன்குரலாளருமான அன்புச் சகோதரர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதும் மிகவும் தெளிவானது; அல்ஹம்துலில்லாஹ்.

    குணங்குடியார், தக்கலை பீர் முஹம்மத் அப்பா மற்றும் புலவரேறு உமறுப் புலவர் அப்பா போன்றவர்களின் அதே மரபு வழியில் யாப்பின் வழிநின்று ஞானப்பாடல்களை யானும் இயற்றியும் இவ்வண்ணம் ஒலிப்பேழைகளாகவும், குறுந்தகடுகளாகவும் வரவேண்டும், இன்ஷா அல்லாஹ் என்பதே என் குறிக்கோளும்; பேரவாவும்; இதனால் மறைந்துபட்டத் தமிழ் இஸ்லாமிய இலக்கியத்திற்கான சேவையில் அடியேனும் பங்குபெற்றவனாவேன், இன்ஷா அல்லாஹ்! குடந்தையில் நடந்து முடிந்த “இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில்” சிறப்பு விருந்தினாராக அபுதபியிலிருந்து வந்து கலந்து கொண்டும், என் கவிதைகளை பாவலர்க்ள் முன்னிலையில் அரங்கேற்றவும், அன்பு நண்பர் முதுவை ஹிதாயத் (துபை ஊடகவியலார்) அவர்களின் ஆவலின் பேரில் எண்ணியிருந்தும்; குறிப்பிட்ட என் விடுப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டதால் அந்த அரிய வாய்ப்பும் நழுவி விட்டது. இன்ஷா அல்லாஹ் காலம் கனியும் வரைக்கும் காத்திருப்பேன்; அதிரையின் பெயரை அகிலமெலாம் பரவ்ச் செய்வேன்; எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

    ReplyDelete
  18. இந்தக் கவியரங்கம் முடியும் தருவாயில் இன்று இறுதியாக ஒரு கவிதையை அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ் லிருந்து பாவலர் ஸ்வாமிநாதன் அவர்கள் எங்களின் சந்த வசந்தக் குழுமத்திற்கு அனுப்பிய மடலை ஈண்டுப் பதிகின்றேன்; நீங்களும் படித்து இரசிக்கலாம் அல்லவா?

    \\ என் நண்பரைக் காணப்போனேன் ”பட்டி மன்றம் இரண்டு நாளில் முடியப் போகிறதாம்.
    உங்களுக்கு நெஞ்சம் கொதித்த விஷயம் நாட்டில் ஏதுமே இல்லையா, அய்யா ? ” என்றேன்.

    மெதுவாக யோசித்து, “ ஏன் இல்லை ?” என்று கேட்ட நண்பர்
    ஆன்மிகத்தில், அரசியலில், மருத்துவத்தில்,
    நீதித்துறையில், திரைப்படத்தில், தொலைக்காட்சியில் , நூல்விற்பனையில், விளையாட்டில் தன்
    நெஞ்சு கொதிக்கும் விஷயங்களைப் பட்டியலிட்டது கீழே காண்க.

    ஏன் ? ஏன் ? ஏன் ?
    =============================

    சிந்தை குளிர ஆண்டவனைத் தரிசிக்க ஆலயம் போனால்
    சிறப்பு தரிசனம் என்று சில்லறை பிடுங்குவதேன் ?

    காசு கொடுத்துப் போவாரைச் சவுக்குக் கட்டைக் கட்டுகளில்
    நெருக்கி அடைத்து வரிசையில் காக்க வைப்பதேன் ?

    மதம்சாராக் கூட்டணி என்றுவாய் கிழியப் பேசுவோர்
    சம்மதித்து சாதிக் கட்சிகளை எல்லாம் சேர்ப்பதேன் ?

    அரசில் சிறிது ஊழலுண்டு என்ற நிலைபோய் மாபெரும்
    ஊழலில் சிறிது அரசும் உண்டு என்றானதேன் ?

    ஊழலை ஒழிப்போம் என்று ஓங்கிய குரலில் சொன்னவர்கள்
    ஊழல் கறுப்பு பணத்தை மீட்க முயலாததேன் ?

    சட்டுபுட்டு என்று சுவையாய் கதையைச் சொல்லாது தொடரில்
    சவ்வுபோல் கதையை கால காலமாய் இழுப்பதேன் ?

    வாழ்த்த வாயும் மனதும் போதுமெனப் புரியாமல் பேச்சாளர்
    ’வாழ்த்த வயதில்லை’ என்று கிளிப்பேச்சு பேசுவதேன் ?

    சட்டம் தெரியாமல் வெட்டு குத்து மட்டுமே கற்றவர்கள்
    சட்டசபை உறுப்பினராய்க் கண்ணில் மிளகு தூவுவதேன் ?

    குடிக்க அரசே மதுவகை தயாரித்து ஊரெங்கும் விற்று
    குடிமக்களைக் ’குடிக்கும்’ மக்கள் ஆக்கி மகிழ்வதேன் ?

    பஞ்சாங்கம் சோதிட நூல்கள் விற்பனையில் சாதனை படைக்க
    பாதைக் கடையில் பழந்தமிழ் நூல்கள் கிடப்பதேன் ?

    துணிந்து ஆங்கிலப் படத்தைச் சுட்ட அடிதடிப் படத்துக்கு
    தமிழ்ப் பெயர் சூட்டினால் பரிசு தருவதேன் ?

    கொள்கைகள் கல்வியைப் பற்றிக் கேட்காமல் வேட்பாளர் மனுதாரரை
    ’கைச்செலவுக் காசிருக்கா’ என்று மட்டும் கேட்பதேன் ?

    கல்யாணம் செய்யக் கூட சத்திரம் வாடகைக்குக் கொடுக்காமல்
    கட்சிக் கூட்டத்துக்கு மட்டும் கனிவோடு கொடுப்பதேன் ?

    தொடர்ந்த வழக்குகள் துரிதமாய் முடியாமல் இழுத்து அடித்து
    தீர்ப்பு வருமுன் வழக்கே காலமாகி விடுவதேன் ?

    நீதி மன்றத்தில் வாதி பிரதிவாதி வாட்சண்டை போடக்கண்டு
    நீதியரசர் மிரண்டு கூண்டுக்குள் அமர்ந்து விசாரிப்பதேன் ?

    ’போலியோ’ மருந்து கிடைக்காமல் மக்கள் வருந்திப் புலம்ப
    போலி மருந்துகள் ஏகமாய்ப் பெருத்துப் புழங்குவதேன் ?

    வயித்து வலிக்குக் கூட மருத்துவரிடம் போகும்படி ஆகிவிட்டால்
    வீட்டைவித்து வைத்தியச் செலவு கொடுக்க வேண்டியதேன்?

    அரசு மருத்துவ மனையில் கிடைக்காத அற்புத கவனிப்பு
    அதே மருத்துவரின் சொந்த ’கிளினிக்’கில் கிடைப்பதேன் ?

    மட்டைப் பந்தாட்ட வீரர்கள் முனைந்தாடி வெற்றி பெறாமல்
    ’மட்டை’ அடித்துத் தோற்கக் கையூட்டு வாங்குவதேன் ?

    ==========================


    சுவாமிநாதன்
    லாஸ் ஏஞ்சலஸ்\\

    ReplyDelete
    Replies
    1. மனிதன் மாறிவிட்டான் - அவன்
      பணத்தில் ஆசைப்பட்டான்

      எங்கும் அநீதி தழைக்கவிட்டு
      அங்கே நீதியை எடுத்துக் காட்டி
      அங்கும் பணத்தை அள்ளிக்கொண்டு
      அவன்.....
      மனிதன் மாறிவிட்டான் - அவன்
      பணத்தில் ஆசைப்பட்டான்.

      Delete
  19. சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் குரலில் பாடல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    அவருடைய அனுபவம் கைகொடுத்துள்ளது.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers