.

Pages

Sunday, August 2, 2015

என் பார்வையில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் !

வேதத்தின் வரிகளையும் வேந்தரின் வழிகாட்டலையும் வாய்ச்சொல்லில் சொல்லுவதும் அறிவு. தன் வாழ்வின் வழியாக வாழ்ந்துக் காட்டுவதும் உயர்வு.

அதிகாலை தொழுகை, பள்ளியில் ஓதல் அதன்பின் இரயிலடியில் செய்தித்தாள் விற்பனை, பிறகு கல்வி கற்றல். இளம் வயதில் இப்படி வாழ்க்கையில் சுறுசுறுப்பு, வறுமை வதைக்க விடாமல் விடாத துருதுருப்பு.

மனிதகுலத்தில் அனைவரும் சமம். வர்ணபேதங்கள் பிரிக்கமுயன்றாலும் உள்ளன்பு,அவர் உண்மையாக இருந்ததினாலேஅது பேதங்களை உடைத்து ஒற்றுமை சுகத்தை, மனிதத்தை நுகர்ந்தது.

அக்கம் பக்கம் அனைவரும் ஒரே வழிநெறியில் இல்லாவிட்டாலும் அவ்வழிகளில் தன்னெறியுடன் பழகும் பக்குவம் இவரின் குணத்தின் உயர்வே.

வறுமையில் வதந்குவோர் கல்வியை விடாமல் வாலிபத்திலும் கற்பது பொதுவாக எல்லோர்க்கும் ஏற்புடையதல்ல. ஆனாலும் அக்காலத்தில் அத்திப் பூர்த்துப்போல் அங்கும்மிங்கும் இலட்சியவாதிகள் இவர்கள்போல் இருக்கத்தான் செய்தார்கள்.

கற்பதே நோக்கம் அதை விட்டு நான் பெரியவன் எனது முறை சிறந்தது என வேற்றுமை உணர்வுகள் வாலிப வயதில் தலைதூக்காமல் ஒற்றுமையில் உழன்று மனித அன்பை வெளிப்படுத்தும் சகஜ மனம் எல்லோர்க்கும் ஏற்படுதல் விருப்பமானதே. ஆனாலும் அவ்வாறு வாழ்ந்தவர்கள் போற்றுதலுக்குரியவர்களே. அதில் இவர் விதிவிலக்கல்ல.

ஏழ்மை எப்படிப் பந்தாடினாலும் ஆழ்மனதின் ஆசை உயர்கல்வி. அதனை அடைவது தெளிவான உள்நோக்கு, தொலைநோக்கு. அந்த அப்பியாசத்திலே ஊறி வளர்ந்ததால் இலட்சிய இலக்குகளை கனவு காணவேண்டும் என்ற விடாப்பிடியான வழிகாட்டல். தான் பெற்ற இன்பம் வையகம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்.

அக்கம்பக்கம் அன்மித்தவர்கள் இந்துமத வழிப்படி வாழ்பவர்கள். கற்கும் சூழல் கிருத்தவமதப்படி அமைவுகள். இதனில் இஸ்லாமிய வழியில் வளர்ந்து வாழ்ந்து வந்ததால்' நான் இஸ்லாமியன் கிருத்துவ மெழுகுவர்த்திக் கொண்டு இந்து வணக்கங்களுக்குறிய குத்து விளக்கு ஏற்றுகிறேன்' என்று தாமரை இல்லைத் தண்ணீர்போல் பழக்கப்பட்டு வளர்ந்த அவர்களின் மனதின் வார்த்தைகள் மதிக்கப்பட வேண்டியவைகள்.

இஸ்லாமிய நெறியில் தன் மனதில் பண்பாடு இருந்ததால் சொற்ப காலத்தில் பாரதம் முழுவதும் ஏன் உலகளவிலும் அவர் புகழ் உயர்ந்தது. ஏனென்றால் வழிகாட்டல்கள் வாழ்ந்து காட்டவே அல்லாமல் உச்சரிக்க மட்டும் அன்று என்பதால்தானே !

ஜாதி, மதம், அரசியல் போன்ற எந்த சாயமும் பூசிக்கொள்ளாத இஸ்லாமியர் வாழ்வு இவர் வாழ்வுப் பிரகாரம்தானே இக்காலத்தில் இருக்கும்.

வாழும் நாட்டின்பற்று ஈமானில் ஒரு பங்காக உள்ளது. அதனாலே அவர் 'நூறு கோடிக்கும் அதிகமான என் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகைக் காண கனவு காண்கின்றேன்.இந்தக் கனவு மெய்ப்பட நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை' என்று தனது கலந்துரையாடலில் கூறியது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதே.

நன்றி மறப்பது நன்றன்று என்பதை தான் மிக உயர்பதவியில் இருக்கும்போது வெளிப்படுத்துவது மிக உயர்ந்த பண்பு. தன் உரைகளில், கருத்துக்களில்  தன் கல்வி ஆசான்களை ஞாபகம் செய்ய என்றும்இவர்கள் மறந்ததில்லை.

தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக கேரளாவுக்குச் சென்று, அங்கு தன்னுடைய விருந்தாளிகளாக திருவனந்தபுறத்தில் தான் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது அறிமுகமான எளியவர்களான செருப்புத் தைப்பவர் ஒருவரையும், ஒரு சிறிய உணவு விடுதி உரிமையாளர் ஒருவரையும் மட்டுமே அழைத்துக்கொண்டது உயர்ந்த, பரந்த எண்ணமுடையவரின் பண்பல்லாமல் வேறாகாது.

விழா மேடையில் ஐந்து நாற்காலியில் ஒன்று மட்டும் ஜனாதிபதிக்காக சிறப்பைக்காட்ட வேறுபட்டிருந்தது. அதில் அமர அவர் மறுத்து அனைவருக்கும் சமமான நாற்காலி அமைக்கச்செய்து அதில் ஒன்றிலே அமர்ந்தது சமத்துவம் தன் உணர்விலே எச்சூழலிலும் இல்லாமல் போகாது என்று வாழ்ந்துகாட்டுதல் வழிகாட்டப்பட்ட வழிநெறி பிறளாது இருப்பதின் சான்றன்ரோ !

அவரவர் வழிகள் அவரவர்க்கு என்பதற்கேற்ப அனைத்து வழிகளையும் மதித்து, அவர்கள் மனதில் சிறு மரு உண்டாகாமல் அவர்கள் வழிபாடுமுறைகளை மதித்து, உண்மைகள் பலகோணத்தில் உள்ளதை உணர்ந்தும் அதனையும் மதித்தும் நடப்பதில் வெகுஜன மக்களை அரவணைத்து செல்வதில் பொதுநிலை மனதுடைய ஒரு ஜனாதிபதிக்கு கடினமானதுதான். இருப்பினும் தன் உள்ளார்ந்த நிலையினில் தெளிவாக இருந்தால் எங்கும் யார்மனமும் புண்படாமல் வாழலாம் என்று செயல்படுவதில், செயல்படுத்தியதில் சிலருக்கு புரிந்துக்கொள்வதில் குழப்பம் உண்டானால், அக்கவனிப்பாரில் குழப்பம் ஏற்பட்டால் அவர்தான் என்னதான் செய்வார் ?

போட்டோக்கள் எல்லாம் பிம்பங்கள். அப்போட்டாவில் உள்ளம், எண்ணம், மனநிலை தெரியாதுதானே ? எனவே பல வேறுபட்டக் கருத்துக்கள் ஏற்படுவதும் தடுக்கயியலாதுதான்.

என் இறப்பு இந்திய பொருளாதரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதால் 'நான் இறந்தால் விடுமுறை அளிக்காதீர்கள்' என்றார்.

தனது பாதுகாப்பிற்காக முன் செல்லும் ஜீப்பில் நின்றுகொண்டு வந்தவரை உட்காரச் செய்ய எடுத்த முயற்ச்சிகள், தன் பங்களாவில் கால் பாதிக்கப்பட்டு கிடந்த மயிலின் காலுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அது திரும்ப தன் 370 ஏக்கர் பங்களாவில் சுதந்திரமாக வாழ வழிவகுத்தது எவ்வுயிரையும் தன் உயிர்போல் மதிக்கும் கருணை உணர்வின் சான்றுகள் அல்லவா !

உயர் அல்ல இந்திய உச்சப் பதவியில் இருந்த இவர் குடும்பம் இன்றும் நடுத்தர நிலையில் இருக்கிறது. அவருக்கு ஐந்து கோட் உடுப்புகள். அவரின் அறையில் மேஜை நாற்காலி, படுக்க கட்டில், அத்துடன் பெற்ற நினைவுப் பரிசுகள், புத்தகங்கள்.

இந்திய அமைச்சரவை அவரை 'உண்மையான தேசியவாதி' என்று புகழாரம் சூற்றியுள்ளது. இது அதிகம் சிந்திக்க தூண்டுவதல்லாமல் உண்மையின் மணிமகுடம் என்றாலும் மிகையாகாது.

இவரின் இழப்பு இந்தியாவிற்கு மட்டும்மன்றி உலகுக்கு என்று அமெரிக்க மாளிகையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறப்பது இவரின் அறிவுக்கு, மனிதாபிமானத்திற்கு என்றாலும் மிகையில்லை.

இந்த பிரம்மச்சாரிக்கு குழந்தைகள்மீது அளவற்ற பாசம். மாணாக்கர்களே ஆக்கப்பூர்வ சக்திகள். அதனால் இந்தியாவை 2020க்குள் வளர்ந்த வல்லரசாக்க இவர்களுக்குள் இவர்கள் இருக்குமிடம் சென்று இறக்கும்வரை அறிவை விதைக்க கடின முயற்சி.

இன்னும் இவ்வாறு எழுதிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஒவ்வொரு இந்தியனும் இவைகளை அறிந்ததுதான்.

பல மேடைகளில் இவர் பெயர் உச்சரிக்காமல் இருந்ததில்லை. இருந்தாலும் எளிமைக்கு, நேர்மைக்கு, சமத்துவத்திற்கு இந்த இஸ்லாமியரிவரை எடுத்துக்காட்டாக இனியும் எல்லா மேடைகளிலும் உச்சரிக்கப்டாமல் போவதில்லை.அவரின் அருமை உணர்வோம் அவர் சொன்ன கனவை காண்போம். அதன் மூலமும் வாழ்வில் வெல்வோம்.

வேதத்தின் வரிகளையும் வேந்தரின் வழிகாட்டலையும் வாய்ச்சொல்லில் சொல்லுவதும் அறிவு. தன் வாழ்வின் வழியாக வாழ்ந்துக் காட்டுவதும் உயர்வு.

நபிதாஸ்

6 comments:

  1. //சிலருக்கு புரிந்துக்கொள்வதில் குழப்பம் உண்டானால், அக்கவனிப்பாரில் குழப்பம் ஏற்பட்டால் அவர்தான் என்னதான் செய்வார் ?//
    இவ்வரிகளை ரெமிமாட்டின்,நித்தியானந்தா,வாசகியைக் இணையத்தில் கற்பழித்ததால் புகழ், இணையப் பிச்சைக்காரன் சாருவுக்குச் சமர்ப்பியுங்கள்.
    நாய்க்குத் தெரியுமா? போர்த்தேங்காய் அருமை!
    ஒரு ஞானியைப் பற்றிய ஆழமான பார்வை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைகள் என்றும் அழிவதில்லை. அவை இறைமையின் நிலைகள். அதனால் உண்மையிருப்பின் இடையில் ஏற்படும் களங்கங்களுக்கு கவலைப்படத் தேவையில்லை. உண்மையின் இயல்பு எப்படியும் நலன்களை விளைவிக்கும். அதனால் அதன் களங்கம் கரைந்துவிடும்.

      அனால் காலத்தின் ஓட்டத்தில் உண்மையின் பிரகாசத்தைக் கண்டவர்கள் அதன் பிரகாசத்தை மட்டும் அனுபவிக்கத் துடிப்பார்கள். சிலர் உண்மை ஈர்த்து அதன்படி நடக்க முனைந்து உண்மையின் இலக்கணங்கள் இவர்கள் தெளிவாக விளங்கியிருக்கமாட்டார்களாயின் இவர்களின் வேடத்தில் பொய்மை தலைகாட்டாமல் போகாது. அத்தகையவர்கள் போன்றவர்கள் உலகில் காணப்பட்டதால் சில உண்மைவாதிகளும் உடன் தவறாகவே பார்க்கப்படுகிறார்கள். உண்மையில் நன்மைகளே இருக்கும். நன்மைகள் மனிதனை கவர்ந்தே இழுக்கும். புரிந்துக்கொள்ளும் ஆற்றல் நற்குணம் உள்ளவர்களால் இயலும்.

      அசத்தியம் அழியும். சத்தியம் வெல்லும். சத்தியம் வேன்றேதீரும்.

      மக்கள் ஜனாதிபதி அவர்கள் பற்றிய ஆழமானப் பார்வை தாங்கள் போன்றவர்களைக் கவர்ந்திடாமலும் போகாது. அதனால் மிகுந்த மகிழ்வே.

      Delete
  2. Replies
    1. உள்ளதை உள்ளபடி விளங்கிய தாங்கள் போன்றோர் இரசித்து வெளிப்படுத்தும் அருமை அருமையே.

      Delete
  3. சிறு வயதில் அதிகாலை எழுந்து ...இறையோனை தொழுது ....செய்தித்தாள் விநியோகம் செய்து..விரைவாய் பள்ளிசென்று படுத்த மாமேதையின் ..இளம் வயது வாழ்க்கையின் துவக்கம் ..அவர் வாழ்வு வெற்றியாய் அமைந்தது ...

    நானும் சிறு வயதில் அதிரையின் தினசரி பத்திரிக்கையின் முகவராக இருந்து ..அதிகாலையில் அதிரை பேருந்து நிலையத்தில் பத்திரிக்கையகட்டுகளை எடுத்து ..ஊர் முழுவதும் விநியோகித்த நினைவுகள் என்னை சுற்றி வருகிறது ..எத்தனை முகங்கள் பருச்சயம் ..எத்தனை வாசகர்களின் கரிசனமமான பார்வை ..நினைத்தாலே இனிக்கிறது ..எனக்கு

    ReplyDelete
  4. இக்கட்டுரை உங்களை பழைய பத்திரிகை முகவர் நினைவுக்கு கொண்டு சென்று விட்டது.

    மலரும் நினைவுகள் இனிக்கத்தான் செய்யும்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers