.

Pages

Monday, September 3, 2012

‘சந்திப்பு’ : தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் [காணொளி]


சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. இக்கல்வியை ஒரு சேவை எனக்கருதி மாணாக்கர்களுக்கு திறம்பட புகட்டுவது நமது ஆசிரியப் பெருமக்களே !

மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக ‘ஆசிரியர் தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...

1. ஆசிரியர் தினத்தைப்பற்றி...
2. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...

ஆகிய கேள்விகளை முன்வைத்து நமதூர் கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களை ஒரு அருமையான இடத்தில் வைத்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

நமதூர் கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் கணிதத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சிறந்த சொற்ப்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கின்றார். இவர் எழுதிய ‘என்றும் எதிலும் இஸ்லாம்’, கல்வி கற்போர் கடமை’ ஆகிய நூல்கள் பிரபலமானவை ஆகும்.

இவரால் எழுதப்பட்ட ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்ற நாடகங்களும், பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளும் ( வினாடி-வினா ) வானொலியில் ஒலிப்பரப்பாகியுள்ளது மேலும் ‘உமறுப் புலவரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் எழுதிய சமூக விழிப்புணர்வு நாடங்கள் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றுப்பட்டுள்ளன குறிப்பாக ‘தாயகமே உனக்காக’, திறக்கட்டும் சிறைக்கதவு’, ‘புலித்தேவன்’,அட்வகேட் சுந்தரம் BA., B.L, ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்றவைகளாகும்.
                     'புலித்தேவன்' என்ற சமூக விழிப்புணர்வு நாடகத்தில் பங்குபெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கும்
                     நமது தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள்.

‘தேசிய நல்லாசிரியர் விருது’ பெறுவதற்குரிய அனைத்து சிறப்புகளை பெற்றிருந்தும் இரண்டு முறைகள் கல்வித்துறையால் பரிந்துரை செய்யப்பட்டு ‘விருது’ கைநழுவிப்போனது அவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெரும் ஏமாற்றமே !


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள்’ தொடரும்...

8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    குற்றாலத்தில் ஐந்து அருவிகள்தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எனது மதிப்பிற்குரிய ஆசிரியரும், வாழ்நாளில் மறக்க முடியாத ஒருவருமாகிய ஹாஜா முஹைதீன் அவர்களின் பேச்சு ஒரு ஆறாவது அருவிபோல் அமைந்துள்ளது.

    நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது கணித ஆசிரியராக பணியில் சேர்ந்தாலும் , கல்லூரி நூல் நிலையத்தில் அவர்கள் பணியாற்றும்போது பள்ளி ஆண்டுவிழாவுக்காக அவர்கள் எழுதித் தந்த தீரன் திப்பு சுல்தான், ஒட்டக்கூத்தர் ஆகிய நாடகங்களில் நடித்தவன் என்ற முறையில் நாடக ஆசிரியராகவும், இயக்குனராகவும் அவரால் இயக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

    கணக்கு ஒரு பிணக்கு அதை ஒதுக்கு என்ற மனநிலையில் இருந்த மாணவர்களை இலக்கியத்தரத்தொடு கணிதப்பாடமும் நடத்தமுடியும் என்று நிரூபித்தவர். அவர் சொல்லிக்கொடுத்த பித்தகொராஸ் தேற்றம் , தாமரைப்பூ தண்ணீரில் காற்றில் வளைவது போன்றவை இன்றும் மனதில் நிழலாடுகின்றன.

    பழக எளிமை, வாழ்வும் எளிமை என்று எளிமைக்கு சொந்தக்காரரான ஹாஜா முஹைதீன் சார் அவர்கள் நீண்டகாலம் நலமுடன் வாழ்ந்து நிறைய கல்விப் பணியாற்ற வேண்டுமென்று து ஆச்செய்கிறேன்.

    ReplyDelete
  2. ஆசிரியர் பெருந்தகையின் சொற்பொழிவைத் தெளிவாக கேட்கமுடியவில்லை என்றாலும், அதன் சாராம்சமான "கல்வியின் அத்தியாவசியம்" மிகவும் அக்கறையுடன் கேட்கப்பட வேண்டிய, பின்பற்ற வேண்டிய ஒன்று. எங்களுக்கான ஆசிரியர் பெருந்தகையின் வழிகாட்டல் தொடர அல்லாஹ் உதவி செய்வானாகவும் ஆமீன்.

    ReplyDelete
  3. மெயின் அருவி போட்டோ விற்கு பின்னே கொட்டினாலும் இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் அறிவு எனும் அருவி இவரின்வார்த்தைகளில் கொட்டும்

    ReplyDelete
  4. அலுவலகங்களில் வேலை பார்க்கும்
    அதிகாரிகளிடத்தில்ஒப்படைக்க படுவது கோப்புகள் ..
    ஆசிரியர் இடத்தில ஒப்படைக்க படுவது மாணவனின்
    வாழ்க்கையின் எதிர்காலம் என்ற வார்த்தை
    பொன்னேட்டில் பொரிக்க தக்கது...!

    ReplyDelete
  5. கணித ஆசிரியராய் அறிமுகமாகி, தலைமையாசிரியராய் உயர்வடைந்து எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள ஆசிரியர் அவர்கள் “நடமாடும் பல்கலைக் கழகம்”!
    1) கணித வினாக்களிலும், செய்முறை விளக்கவுரைகளிலும் தூய தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தவர்கள்
    2) அவர்கள் எழுதி இயக்கிய ‘எழுத்தாளர் ஏகாம்பரம்” நாடகத்தில் அரசு வழக்கறிஞராக நடித்தது எனக்குள் நானே “வழக்கறிஞரக” ஆனது போல் இன்றும் நினைக்கின்றேன்.
    3) பேச்சு, கவிதை, நாடகம், வினாடி வினா, என்று பற்பல துறைகளிலும் மிளிரும் அவர்களை நாங்கள் ஆசானாக அடையப் பெற்றது அல்லாஹ் எங்கட்கருளிய பேறாகும்!
    அன்னாரின் நீண்ட ஆயுளுக்கும் இன்னும் சிறப்பாக எங்களை வழிநடத்தவும் வேண்டி அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்.

    ReplyDelete
  6. தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் அன்புடன் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

    நீங்கள் கற்றுத்தந்த அந்தக் கல்வியே என்னை ‘சந்திப்பு’ தொடருக்காக தங்களை மீண்டும் சந்திக்க வைத்தது. எனது மாணவப் பருவத்தில் தங்களால் எழுதப்பட்ட நாடகம் ஒன்றில் பங்குபெற்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஓன்று.

    தங்களிடம் கல்வி பயின்ற மாணவர்களை நினைவில் வைத்து இன்றும் அவர்களைப்பற்றி பெருமையுடன் கூறுவது தங்களிடம் நான் கற்றக்கொண்ட நல்ல பண்பு.

    நீண்ட நலமுடன் வாழ்ந்து நிறைய கல்விப் பணியாற்ற வேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ‘துஆ’ செய்தவனாக......

    உங்களின் மாணவன்,
    M. நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் )

    ReplyDelete
  7. 'சந்திப்பு' தொடருக்கு சிறு குறிப்பு மட்டும் தேவை என்பதால் அவர்களைபற்றி சில தகவல்களை மாத்திரம் இப்பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

    தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களின் விளையாட்டுக்குழு தலைவராகவும், நமது சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறந்த சொற்பொழிவாளராகவும்,சமூக சேவையில் ஈடுபாடு மிக்கவராகவும் நமது ஆசான் அவர்கள் இருந்துள்ளார்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers