.

Pages

Monday, December 31, 2012

அழிவின் விளிம்பில்...!

ஒரு சிறு தவறுக்காக
அப்பா அன்று
திட்டினார் என்று
ஊரையே விட்டு ஓடினேன் !

எதுவுமே அறியாத
இரண்டு கெட்டான்
வயது பதினைந்து
இருபது வருடங்கள்
கழிந்து, அங்கேயும்
இங்கேயும் சுற்றி
திரிந்துவிட்டு, முப்பத்தி
ஐந்து அகவையில்
இப்போதுதான் ஊருக்கே
திரும்புகிறேன் சொகுசான
பேருந்து, சுகமான தூக்கம் !

கண்விழித்துபோது, தெரிந்தது,
'வெள்ளிமலை' [ கிராமம் ]
என்ற பதாகை [ போர்டு ]
வரவேற்றது !

மண்சாலையைக் காணோம் !
தார்சாலையில் இறங்கி
நடந்தேன் ! ஊரைச்சுற்றி
இருந்த மலைகளையும் 
காணோம் !

வழியில் ஒரு வாலிபரிடம்,
தம்பி ! ஊரைச்சுற்றி
மேற்கே பனிகள் படர்ந்த
மேற்குமலை தொடர்ச்சி
இருக்குமே !

மனிதர்கள் மிருகங்கள்
பறவைகள் என்று
எல்லோருக்கும் வனங்களில்
வளங்கள் வழங்கி
மழைபெய்ய காரணமாக
இருந்ததே அது எங்கே ?
என்றேன்...
'அதை எல்லாம்தான் வேட்டு
வைத்துவிட்டார்களே' என்றார்
என்ன தம்பி சொல்கிறாய் !
என்று வெள்ளந்தியாய்
கேட்டேன் 'மலைகளை
உடைத்து, வயிறு புடைக்க
உண்டு ஏப்பம்
விட்டுவிட்டார்களே' என்றார்.

'மலை முழுங்கி மஹாதேவன்
என்பார்களே ! அவர்கள்தான்
இவர்கள் என்றார்.
அடே ! உதாரணங்கள் கூட
உண்மையாகி விட்டதே ! என்ற
வியப்பில் சிந்தனை சென்றபோது,

தம்பி ! வளங்கள் வழங்கும்
வாய்க்கால்கள், ஆறுகள்
ஏரிகளைக் காணோமே !
அது எங்கே ? என்றேன்...

அதோ ! நீண்ட வால்கொண்ட
'வால்மார்ட்' கட்டிடம்
தெரிகிறதே அதுதான்
என்றார் வியப்பு மேலிட
மேலும் நடந்த போது,

நாம் தாகம் தீர்க்க
தண்ணீர் அருந்துவோமே
வண்ணச்சிறவிகளும், வாத்துகளும்
நீந்துமே தாமரைக்குளம்
அதாவது உண்டா என்றேன்...

ஓ...! அதுவா ?
'கேம்பஸ் கிளப்' என்ற பெயரில்
'வால்மார்ட்'டின் முதலை
முதலாளிகளின் சூதாட்ட
கூடமாகி விட்டதே என்றார்.

வீட்டின் நெருக்கத்தில்
அப்பாவும், அம்மாவும்
நின்றிருந்தவரை, முப்பத்தி
ஐந்து வாலிபனாக
மொழு மொழு என்றிருந்த
என்னைப் பார்த்ததும்,

ஒரே நேரத்தில் இருவருக்கும்
ஆனந்த அதிர்ச்சி !
பரஸ்பரம் சுகமும்,
நலமும் விசாரிப்பு
முடிந்ததும் கேட்டேன்.
'அம்மா ! அறுவடை
முடிந்தபின்னர், தாளடிகளில்
வாய்க்கால், வரப்புக்களில்
மாடுகள் மேயுமே அந்த 
வயல்களாவது மீதமுண்டா ?'
என்றேன்.

அதற்குள் அப்பா
முந்திக் கொண்டு
அதோ ! கரகர வென்று
உருளைகள் உருளும்
சப்தம் காதை துளைக்குதே !
'உலகமயமாக்கள் தொழிற்
கூடம்' அந்த இடம்தான் தம்பி
என்றார்.

மூச்சுத்திணறி, அப்போது
மயக்கம் போட்டு கீழே விழுந்தவன்தான்
இப்போதுதான் கண் திறந்தேன்
அம்மாவின் மடியில்
தலைவைத்துப் படுத்திருக்க

அப்பா மோரும் நீரும்
தந்து ஆசுவாசப்படுத்தினார்
அக்காவும், தம்பிகளும்
தங்கைகளும் கவலை தோய்ந்த
முகத்துடன் நின்றிருந்தனர்
அப்பா சொன்னார்
'தம்பி ! நாம் கலியுக
அழிவின் விளிம்பில் 
நிற்கின்றோம் என்றவர்.

வெள்ளிமலை [ கிராமத்தில் ]
அடையாளங்களை இழந்து
விட்டோம், இழந்தது
வெள்ளிமலை மட்டுந்தானா ?
இந்திய கிராமங்களும்தான்
என்றார் அப்பா ஆராத்துயரில்...

"புதுமைக்கவி" 
அதிரை அப்துல் ரஜாக்

9 comments:

  1. வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்களைக் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது ஒவ்வொரு ஊரிலும் நடக்கக்கூடிய ஒன்றாகும்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊரை பார்ப்பவர்கள் எதோ அயல் நாட்டைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

    புதுமைக்கவியின் கவிதை அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. கிராமங்களைப்பற்றிய கனவோடு சென்றால் அங்கும் குடியேறி இருக்கிறது நகரத்தின் சாயல் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  3. தாங்களின் கவி வரிகள் ஒரு நிஜம் இன்று நிழலாகிப்போனதை உணர முடிந்தது.

    அன்று நாம் கண்ட அந்த பசுமை எங்கே இயற்கை எங்கே...???

    நாகரீகம் தலை தூக்கியதும் நாம் அனைத்து வளங்களையும் இழந்து விட்டோம்.

    இனி இருப்பதை காக்க முயற்ச்சிப்போமாக.....!

    வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கிராமத்தின் அழகும் இன்று அதன் நிலையும்...
    சிறப்புக் கவிதை..

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    சரியான பொருள் கொண்ட கவிதை, இதுமட்டுமா, பொறுத்துருந்து பாருங்கள்.

    மலைகள், குன்றுகள், குளங்கள், மரங்கள் எல்லாம் காணாமல் போனதுபோல் மனித உருப்புகளும் காணாமல் போனாலும் ஆச்சரியப்டத்தேவையில்லை.

    தற்போது எங்கு பார்த்தாலும் பெண்களின் கற்புகள் பறிபோவதை யாராலும் மறக்க முடியுமா? கற்பு மட்டுமா அதோடு உயிரும் சேர்ந்தல்லவா பறிபோகுது

    பொதுமக்களே, என்ன செய்வது?
    எல்லாம் உங்கள் கையில் இருக்குது பொதுமக்களே.

    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    எனது நண்பனி தந்தைக்கு நான் என் முதல் கண் சலவாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன் ( அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்) காக்கா உங்களின் இந்த வரிகள் எனக்கு ஒரு கவிதையாக தெரியவில்லை நிஜத்தை தாங்கள் வார்த்தைகளின் வரிகளாக தந்துள்ளீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நெல்கலஞ்சியம் என்று பெயர் பெற்ற நமது தஞ்சை மாவட்டம் இன்று வெளி மானிலங்கலிருந்து நெல் இறக்குமதி செய்யும் அளவிற்க்கு நிலைமை தல்லப்பட்டுயுள்ளது என்றால், அதற்க்கு காரணம் அழிவின் விளிம்பே என்று சொன்னால் ஆச்சரிப்படுவதற்க்கு இல்லை என்றுதான் அர்தம். மிக ஆழமான அழகான் கருத்து. காலத்து ஏற்ற கருத்து வாழ்த்துகள்.

    அன்புடன்
    அதிரை M. அல்மாஸ்

    ReplyDelete
  7. ஒரு சிறுவனின் ஓட்டம் எது வரையிலும் என்பது உங்களின் கவிதை வரிகள் அமைத்தன. அருமை வாழ்த்துக்கள் அதிரை அப்துல் ரஜாக் காக்கா அவர்களுக்கு.

    ReplyDelete
  8. வெள்ளிமலை கிராமம் மட்டுமல்ல எல்லா கிராமம் ஊருக்கும் பொருந்தும் இந்த வரிகள்

    ReplyDelete
  9. ஓ...! அதுவா ?
    'கேம்பஸ் கிளப்' என்ற பெயரில்
    'வால்மார்ட்'டின் முதலை
    முதலாளிகளின் சூதாட்ட
    கூடமாகி விட்டதே என்றார்.

    தலீவா சூப்பரு

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers