.

Pages

Thursday, March 7, 2013

இலவசம் ! இலவசம் !!

ஒன்று வாங்கினால் 
ஒன்று இலவசம்
ஒருநாள் மட்டும் 
மூக்குப்பொடி இலவசம்

பலகீனங்கள் இங்கே 
பரீட்சிக்கப்படுகின்றன.

தாலி வாங்கினால்
பெண்டாட்டி இலவசம் என்று 
கடை திறக்காததுதான் மிச்சம் 

இலவசமாய்
ஓர் அற்பத்தை வழங்கிவிட்டு
உங்களையே
வேரோடு இழுத்துக்கொண்டுவிடும்
வணிக சிகாமணிகளின் சாதுர்யத்தை 
என்னவென்று சொல்ல

படி அரிசியைப் 
பரிசாய்க் கொடுத்துவிட்டு
பாராளுமன்றத்துக்கு ஓட்டுகுவிக்கும்
திருட்டு அரசியல்வாதிக்கு
சற்றும் இளைத்ததோ 
இந்த வணிக நுணுக்கம்

முன்னேறிய நாடுகளிலும்
முக்கால்வாசிப்பேர் 
முழு பலகீனர்களே என்பது
முக்காடுபோடும் வெட்கம்

ஒன்றுக்கு மூன்று 
இலவசம் என்று அறிவித்துவிட்டாலோ
செத்த பிணங்களும் 
விற்றுத்தீரும் அவலம்

சீரழியும் வணிகமுறையால்
பொருள் சிக்கனங்கள் 
புரட்டி எடுக்கப்படுகின்றன

தேவைகளோ
தீண்டப்படாமல் திண்டாட
தேவையற்றவையே 
தேடி வருகின்றன தினந்தோறும்

கௌரவ மனிதனுக்கும்
கையேந்த கற்றுத்தரும்
நாகரிகம் வளரலாமா

நாளுக்கு நாள் 
ஆடை குறைத்து
அலையும் இதயங்களை
அடித்து விழுங்கும்
சில்லறைத் திரைப்படங்களைவிட

இலவசம் என்னும்
காந்தக் கணைகளால்
ஒட்டுமொத்த மக்களின் 
தேவைகளைப் பெருக்கி
தில்லானா ஆடவைத்து
பொருள் அழிவில்
பணம் குவிப்பது 
உலக அழிவில்லையா

இதுதான் வணிக தர்மமா

அதன் பின் செல்வதுதான்
செவ்வாயில் தேடல் நடத்தும்
நம் அறிவின் முதிர்ச்சியா
அன்புடன் புகாரி

20 comments:

  1. தட்டி எழுப்ப முயலும் அருமையான விழிப்புணர்வுப் பதிவு !

    தொடர வாழ்த்துக்கள்...

    சமூகத்தில் காலம் காலமாக 'இலவசம்' என்ற பெயரில் பொதுமக்களிடயே வழங்கப்பட்டு வரும் பொருட்களால் சமுதாயத்தின் நிலைகள் மாறிக்கொண்டே வருகிறது என்றுச் சொன்னால் மிகையாகாது.

    ReplyDelete
  2. பிறப்பு முதல் இறப்பு வரை எத்துணை இலவசங்கள் !

    1. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செய்யும் அறிவிப்பாகிய “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் இலவசமாக வழங்குவோம்” என்பதாகட்டும்...

    2. தேர்தல் நடக்கும் முந்திய நள்ளிரவில் பொதுமக்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை, பரிசுப்பொருளாகட்டும்...

    3. இலவசப் பொருட்கள் வழங்க “நமது தலைவர்” வருகிறார் என்ற கட் அவுட் அறிவிப்பாகட்டும்...

    4. புதிய கடையின் திறப்பு விழாவின்போது கொடுக்கும் இலவசமாகட்டும்...

    5. ஒரு பொருள் எடுத்தால் மற்றொன்று இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்...

    6. நூறு சதவீத பொருள் வாங்கினால் கூடுதலாக இருபது சதவீதம் இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்...

    7. பண்டிகைக்கால தள்ளுபடியாகட்டும்...

    8. இன்று ஒரு நாள் மட்டும் எதை எடுத்தாலும் பாதி விலை ( ?! ) என்ற அறிவிப்பாகட்டும்...

    9. ஒரு மனை வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதாகட்டும்...

    10. நூறு ரூபாய்க்கு டாப் அப் செய்தால் நூற்றுஐம்பது ரூபாய்க்கு டாக் டைம் என்பதாகட்டும்...

    இப்படி இலவசங்கள் சமூகத்தில் ரொம்ப மலிவாகக் காணப்படுகிறது.

    ReplyDelete
  3. இலவசம் என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.

    அரசால் தேவையானவர்களுக்கு இலவசங்கள் வழங்குவதில் தவறில்லை என்றாலும், உழைத்து பிழைக்கக்கூடிய வாய்ப்புள்ளவனுக்கும், வசதி படைத்தவனுக்கும் இலவசங்களைக் கொடுப்பது, அவனை சோம்பேறியாக்கிவிடுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய Professional Tax, Sales Tax, Central Sales Tax, Custom Duty, Income Tax, Dividend Distribution Tax, Excise Duty , Municipal & Fire Tax, Staff Professional Tax, Cash Handling Tax, Food & Entertainment Tax, Gift Tax, Wealth Tax, Stamp Duty & Registration Fee, Interest & Penalty, Road Tax, Toll Tax , Vat & etc போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

    ReplyDelete
  4. “பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” என்பது பழமொழி ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை பசியாற்றிவிடலாம். அந்த நிமிடத்திலேயே அவனை அடுத்தவர்களிடம் கையேந்தவும் பழக்கிவிடுகிறோம். இது மட்டுமல்லாமல் மீனை பரிதாபப்பட்டு கொடுப்பவனுக்கும் இதனால் வீணான செலவு. இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.

    இன்று பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பை நாளை நாம் பயன்படுத்தலாம் என்பதை தூக்கி தூர வைத்துவிட்டு அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது என்பதைக் கருத்தில் கொண்டு இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.

    கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி !

    ReplyDelete
    Replies
    1. சேக்கனா அவர்களுக்கு, உங்களின் எண்ணற்ற எண்ணங்களை வெளிக்கொண்டுவர என் கவிதை பயன்பட்டிருக்கிறது என்று அறியும்போது மகிழ்வாய் இருக்கிறது.

      Delete
  5. செம தாக்குதல்...

    அனைத்தும் உண்மை...

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    இலவசம். இல்லை வசம். நம்மிடம் இல்லை வசம்.
    வசம் என்ற சொல்லுக்கு உரிமை என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

    இலவசத்தை கொடுத்து விட்டு நம்மிடம் உள்ள வசத்தை திருடிவிடுகிறார்கள்.

    பொது மக்களே இனியும் நீங்கள் உங்கள் உரிமையை இழப்பீர்கள் என்றால், உங்கள் அனைவரையும் அலாஸ்கா காட்டிற்கு அனுப்ப வேண்டியதுதான். அதுக்கும் யோசித்து பாருங்கள்.

    அலாஸ்கா? அல்லது இங்கேவா?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. நம்மை நம் வசம் இருக்கவிடாமல் ஆசையின் வசம் வீழவைப்பதே இலவசத்தின் தந்திரம். நன்றி ஜமால் அவர்களே

      Delete
  7. அன்புடன் புகாரியின் கவிதைக்கு
    வலுசேர்க்கும் விதமாய்
    செக்கன்னா நிஜாமின்
    கருத்துக்கள் பாராட்டுதலுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சபீர். உங்கள் இருவருக்கும் நன்றி

      Delete
  8. இலவசம் என்ற தலைப்பிட்டு அருமையானதொரு விழிப்புணர்வு ஆக்கம் பதித்த அருமை நண்பர் அன்புடன் புகாரி அவர்களுக்கு இலவசமாய் என் போலியில்லா உண்மையான வாழ்த்துக்கள்.

    இன்றைய சூழலில் மக்களின் பலகீன மோகம் இலவசத்தில் மயங்கிக் கிடப்பதை அறிந்து அன்றாடத்தேவையிலிருந்து ஆட்சி மாற்றம் வரை இலவசமென்று அறிவித்து மக்களின் மனதில் இலவசத்தை ஆணித்தரமாக ஊன்றி விட்டார்கள்.

    இனியாவாவது மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்களா..? பார்ப்போம்.!

    ReplyDelete
    Replies
    1. என்னை அழைத்து சமூக விழிப்புணர்வுக்குள் விழித்திருக்கச் செய்த நட்புக்கு நன்றி மெய்சா

      Delete
  9. // இலவசம் என்னும்
    காந்தக் கணைகளால்
    ஒட்டுமொத்த மக்களின்
    தேவைகளைப் பெருக்கி
    தில்லானா ஆடவைத்து
    பொருள் அழிவில்
    பணம் குவிப்பது
    உலக அழிவில்லையா

    இதுதான் வணிக தர்மமா //

    காந்த வரிகள்

    இலவசம் இல்லாத பாரதம் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இலவசம் இல்லாத பிரபஞ்சம் வேண்டும் என்றே சொல்லலாம் தமிழன்.

      Delete
  10. முன்னேறிய நாடுகளில்

    முக்கால்வாசி பேர்

    பலகீனர்களே ..முக்காடு போட்டு

    மறைத்த ரகசியத்தை ..


    வெளி கொனர்ந்த கவிதை

    ReplyDelete
    Replies
    1. முன்னேறிய நாட்டில் இருப்பதால் சட்டென்று பற்றிக்கொண்டீரா இந்த வரிகளை. நன்றி சித்திக்

      Delete
  11. நான் கல்லெறிந்ததற்கு எனக்கு திண்டினைத் தந்த திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி. திண்டு = பஞ்சுத்தலையணை

    ReplyDelete
  12. //பலகீனங்கள் இங்கே
    பரீட்சிக்கப்படுகின்றன.//

    பலமான வரிகள்
    உளமார்ந்த வலிகள்
    பரீட்சைக்கப்பட்டுப்
    பறிக்கப்படும் நிலைகள்!

    வெள்ளிக் கிழமையில்
    துள்ளிக் குதித்து
    உள்ளத்தை நிரப்பிய
    உள்ளபடியான உண்மைகள்!

    கனடாவின் கவிமேகம் அருள்கூர்ந்து அதிரையின் விழிப்புணர்வுப் பக்கமென்னும் நிலத்தில் கவிமழையைப் பெய்வதற்கு வெள்ளி தோறும் வருகை புரிதலுக்கு எங்களின் உளம்நிறைவான வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. கவிவெள்ளி காணவந்து பொன்வெள்ளி அள்ளியிறைத்த நட்புவெள்ளிக்கு நன்றி

    ReplyDelete
  14. இலவசம் அது மக்களுக்கு இல்லா-வாசம் நீங்கள் கவிவரியில் சொன்னது என்னிடம் கைவசம். அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்புடன் புகாரி காக்கா அவர்களே.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers