.

Pages

Thursday, April 11, 2013

இறுதியாய் ஒரு கேள்வி

இரத்த நயாகராவில்
மீண்டும் மீண்டும் 
மனித உயிர்த் தாகத்தோடு
மதர்ப்பாய் நீராடும்
மத மங்கையரே

உங்கள் 
மோகனப் பார்வைகளின்
பூரண ஈர்ப்பில்

மேலும் மேலும் 
சுண்டி இழுக்கப்பட்டுச்
சுருண்டுவிழும்
பாமர ஆத்மாக்கள்

பக்திப் பெருக்கெடுத்து
கண்கள் மூடி
கைகள் உயர்த்தி

தங்கள் தலைகளிலேயே 
கொள்ளி வைத்துக்கொள்கிறார்கள்

வாருங்கள்..
வந்து உங்கள் கூந்தலை
உலர்த்திக்கொள்ளுங்கள்

.கீதை அழுகிறது
குரான் தேம்புகிறது
பைபிள் கண்ணீர் வடிக்கிறது

வாழ்க்கையைத்தானே
வரையறுத்துச் சொன்னோம்

இறைவனைத்தானே
கண்டு பிடித்துத்தந்தோம்

இந்த 
மத வாகனங்களோ
இவர்களை 
வாழ்க்கைச் சொர்க்கத்திற்கு
இட்டுச் செல்லாமல்

இப்படி
மூர்க்கமாய் முட்டிக்கொண்டு 
சடல தாகம்கொண்ட
சுடுகாட்டையல்லவா
தங்களின் 
வெற்றிமேடையாக்கிவிட்டன

.இப்படி
மாண்டு தீர்ந்தால்
இந்த
மதங்கள் யாருக்கு

அந்த
இறைவன்தான் யாருக்கு
அன்புடன் புகாரி

9 comments:

  1. ஆழமான கருத்து
    அழுத்தமாகச் சொல்லப்பட்ட கவிதை
    மனம் தொட்டது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கண்மூடிப் பழக்கங்களை மண்மூடச் செய்யும் கவிதை இது!

    ReplyDelete
  3. ஆதங்கம் நியாமானது என்றாலும், மார்க்கம் கூறும் கருத்துகளை முழுமையாக அறிந்து அதன் பிரகாரம் செயல்படாதது ஒரு காரணமாக இருக்கலாம் !

    மனிதே நேயம், சகோதரத்துவம் அனைவரிடத்திலும் ஏற்பட வேண்டும்.

    ReplyDelete
  4. மனசாட்சி செத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தட்டி எழுப்பியுள்ளீர்கள்.மனிதநேயம் அனைவரிடத்திலும் வந்து விட்டால் மதச்சண்டைகள் முற்றுப்பெறும்.

    அருமை ஆதங்கமான விழிப்புணர்வு வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    இறுதியாய் ஒரு கேள்வி.
    கேள்வி இறுதியாக இருந்தாலும் பதில் இறுதியாக இருக்காது.
    கேட்ட கேள்விகளுக்கு பதில் தர முயற்சித்தால் உலகம் இறுதி வரைக்கும் பதில் வந்து கொண்டே இருக்கும்.

    வந்தாச்சி, படிச்சாச்சி, புரிஞ்சாச்சி,அப்புறம் என்னாச்சி? எல்லாம் மண்ணாச்சி.

    இந்த மானிட ஜென்மத்தை திருத்தவே முடியாதுங்க, சொல்ல சொல்ல தலையை நல்லாவே ஆட்டுவாணுக, அப்புறம் நமக்கே ஆப்பு வைப்பானுக. என்ன செய்வதுங்க, சும்மா இருக்க முடியலைங்க, ஏதாவது எழுதி திருத்தனும் என்ற ஆதங்கம் இருக்குதுங்க.

    ஒரு நாள் வரும், அந்த நாள் எல்லா மனிதனும் உணர்ந்து திருந்தி இருப்பான். இது என்னுடைய நம்பிக்கை.

    நம்பிக்கை வீண் போகாது. இதையும் நம்புகின்றேன்.
    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு-இது ஒரு பாடல் வரிகள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  6. நான் சொல்வதே சரி ..

    என்ற மனப்பான்மை ..

    தனது தரப்பே நியாமானது ..

    என்ற தன்மை மதத்தின் பெயரால்

    ஆடும் தாண்டவமே ..பெரும் கொடுமைகளுக்கு

    காரணம்

    ReplyDelete
  7. மதம் நம்மை நல்வழிப்படுத்த வேண்டும். மதத்தால் மதங்க்கொண்டு அலையக்கூடாது

    ReplyDelete
  8. நல்ல கருத்தாழம் மிக்க கவிதை. நறுக்கென்று சொல்லப் பட்டிருக்கிறது. பாராட்டுகிறேன். அன்புடன் அன்சாரி.

    ReplyDelete
  9. ஆழமான கருத்து அனுபவமிக்க வரிகள் அருமை வாழ்த்துக்கள் காக்கா.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers