.

Pages

Monday, April 15, 2013

பொருளாதார வளர்ச்சி ! சுற்றுச்சூழல் தளர்ச்சி !

நமது ஊர்களை சுற்றிப்பாருங்கள். நமது ஊரையே பாருங்கள். வீடுகள் பெருகி இருக்கின்றன. கடை, கடைத்தெருக்கள் –புதிது புதிதாக இதுவரை பார்த்திராத  வர்த்தக நிலையங்கள் எங்கு பார்த்தாலும் பெருகி இருக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல், அப்பனும் பிள்ளையும் எதிர் எதிரில் போனாலும் கூட பார்த்துக்கொள்ள முடியாத விரைவு, நடந்து போவோரை காண்பது அருகிவருகிறது. இரு சக்கர, மூன்று சக்கர வண்டிகள், வீடுகளில் வகை வகையான கார்கள்., உணவு விடுதிகளில் சொல்லொண்ணாத கூட்டங்கள், உல்லாச கேளிக்கை விடுதிகள், கல்வி நிலையங்கள், சூப்பர் மற்றும் ஹைபர் மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் இப்படி ஏகப்பட்டவை.

மாபெரும் பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் ஓரளவு பரவலாக அனைவருக்கும் அமையும் வண்ணம் வெளிநாட்டுப்பணமும், அவை செலவாகின்ற விதத்தால் உள்ளூரில், வெளியூர்களில்  வளர்ந்துவிட்டன தொழில்களும்.

அதே நேரம் கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.

ஊர்கள வளர்ந்த அளவு ஊர்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் வளர்ந்திருக்கிறதா? எங்கு பார்த்தாலும் கழிவு நீர் வாய்க்கால்கள், தேங்கி  கிடக்கும் சாக்கடை குட்டைகள், ஒவ்வொரு தெருக்களின் ஆரம்பத்திலும் கொட்டப்பட்டு நாறிக்கிடக்கும் குப்பை கூளங்கள், எங்கு பார்த்தாலும் காற்றில் பறந்து கலர் கலராய்  பிளாஸ்டிக் கழிவுகள். இரவு நேரங்களில் நம்மை தூக்கிச்செல்ல படை எடுக்கும் கொசுக்கூட்டங்கள்.  அதிரையின். கஸ்டம்ஸ் சாலை முனையிலிருந்து ஜாவியா ரோட்டைப்பாருங்கள்- இருபுறமும் குப்பைகள். சி எம் பி லைனை பாருங்கள்.- மீன்கள் துள்ளிக்குதிக்க சிற்றோடையாக ஓடிக்கொண்டிருந்தது இன்று சாக்கடைகளின் தாயகமாக திகழ்கிறது. தைக்கால் ரோட்டிலிருந்து தரகர் தெரு செல்லும் ரோட்டை பாருங்கள்-எவருக்கும் கவலை இல்லாமல் எல்லோராலும் கொட்டப்படும் குப்பைகள். எல்லா சிறிய, பெரிய ஊர்களிலும் இதே நிலை. மேலோட்டமாக இவைகளை குறிப்பிட்டாலும் இவைகள் ஒரு சிறு சிந்தனைக்கே. ஆனால் விரிவான முறையில் இந்த தலைப்பைபற்றி எழுதவேண்டும் அதன் எல்லைகள் வானளாவியது. உலக பொருளாதார அரங்கில் விவாதப்பொருளானது . இது ஒரு ஹை டோஸ் ஊசி.

பொருளாதார வளர்ச்சி சுற்று சூழலையும் வளரச்செய்து மேம்படுத்தவேண்டும். ( ECONOMY WITH ECOLOGICAL PERSPECTIVE ) சுற்று சூழல் உள்ளடக்கிய பொருளியல்  என்று கூறுவார்கள். இதைப்பற்றித்தான் எழுதப்போகிறேன்.

சுற்று சூழலையும் சேர்த்து வளர்க்காத பொருளாதார வளர்ச்சி மனிதனின் இரண்டு கால்கள் வெவ்வேறு திசையை நோக்கி நடக்கத்தொடங்குவதற்கு இணையானது. இருகண்கள் இருவேறு திசைகளை பார்ப்பதற்கு ஒப்பானது.

வாழைப்பழம் வாங்க வசதி இருக்கிறது – இது பொருளாதார வளர்ச்சி என்று வைத்துக்கொள்ளலாம். – ஆனால் அந்த பழத்தை உரித்து உள்ளே தள்ளிவிட்டு  – அதன் தோலை நம் வீட்டு தலைவாசல்படியில் போடுகிறோமே அதுதான் சுற்று சூழலுக்கு கேடு விளைவிப்பது . வழுக்கிவிழுந்தால் உடைவது நமது இடுப்பல்லவா? இன்றைய உலக பொருளாதார வளர்ச்சி இதைத்தான் செய்திருக்கிறது.

வாருங்கள் சப்ஜெக்டுக்கு போவோம்...

குறிப்பாக உலகெங்கும், சிறப்பாக இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னாள் அறிமுகப்படுத்தப்பட்டு ஆக்கிரமித்துள்ள உலகமயமாக்கலும், தனியார் மயமாக்கலும், சந்தை பொருளாதாரமும் சுற்று சூழல்களின் மேல் நிகழ்த்தியுள்ள வெறியாட்டங்கள் , தாக்கங்கள் கணக்கிலடங்காதவையாகும்.

உலகில் உள்ள பணக்காரர்களை வருடாவருடம் தரவரிசையில் கணக்கெடுத்து வெளியிடும் போர்ப்ஸ் இதழ் இந்தியாவில் 40 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35100 கோடி அமெரிக்க டாலர் என்று கூறுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8  முதல் 9 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்துள்ளது. அதே நேரம் வேளாண்மை வளர்ச்சி விக்தம் 4.9  விழுக்காடாக குறைந்து விட்டது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து விழுக்காடு தவிர மற்றவர்கள் 97.45  கோடி மக்கள் தேவைக்கும், ஆசைக்கும் ஏற்ப வாழ்வதற்கு போராடுகிறார்கள். தொண்டைக்கும் வாய்க்கும் இழுத்துக்கொண்டுதான் போகிறது. ‘காடு விளைஞ்சென்ன மச்சான் கையும் காலும்தானே மிச்சம்’ என்கிற கதைதான்.

உலகமயமாக்கல் தொடங்கியதில் இருந்து 1,66,304  விவசாயிகள் ( 2006  வரை உள்ள புள்ளி) நவீன இரசாயன வேளாண்மையால் விளைச்சல் இன்றி , இடுபொருளின் அடக்க விலைக்கும், உற்பத்தி கண்டுமுதலின் விற்பனை விலைக்கும் ஏற்பட்ட மலையளவு வித்தியாசத்தால் கடனாளியாகி தற்கொலை செய்துகொண்டு செத்தார்கள். வறுமையால் செத்தவர்கள் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. வறுமை ஏற்படக்காரணம் திடீரென முளைத்த ஆடம்பர சமாச்சாரங்களும் என்பதை இந்த இடத்தில் நினைத்தும் இணைத்தும் கொள்ளவேண்டும்.

ஓர் இந்தியன் குறைந்தபட்ச வாழ்க்கைதரத்துடன் வாழ மாதம் அவனுக்கு ரூபாய் 2,540/=  சராசரியாக தேவைப்படுகிறது. ( துபாயிலிருந்து இதைவிட அதிகமாக மாதாமாதம் அனுப்புகிறேனே என்று சுலைமான் காக்கா கூறுவது காதில் விழுகிறது. நீங்கள் அனுப்பும் அதிகப்பணம் பட்டுக்கோட்டை பூம்புகாரிலும், அசோகன் ஆபரண மாளிகையிலும், கல்யாணி கவரிங்கிலும் , வியாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தஞ்சை பாஸ்கர் டாக்டரிடமும் செலவாகிறது காக்கோவ். கண்டித்து வையுங்கள்) இந்த ரூ. 2540/= கூட இல்லாதவர்கள்தான் வறுமையில் உழல்கிறார்கள் அல்லது உயிரைமாய்க்கிரார்கள்.

பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் மாசுபடும் நமது மரபுக்கு இசைந்த சூழல்கள் - அவைகள் சுரண்டப்படுவதை இப்படி பட்டியல் இடலாம்...

- பசுமை புரட்சி தொடங்கி வைத்த இரசாயனம் சார்ந்த விவசாயம் ,

- பசுமை புரட்சி தொடங்கி வைத்த மரபணு மாற்ற பயிர்கள் படையெடுப்பு,

- நீர்வள ஆதாரங்களின் சேதாரங்கள் ,

- தோண்டப்படும் கனிம சுரங்கங்கள் ,

- மணல கொள்ளை,

- மாற்றப்பட்ட நில பயன்பாட்டு முறை,

- விளை நிலங்களை முடக்கிப்போடும் வீட்டுமனைகள், ( இது பற்றி எனது வயலும் வாழ்வும் –தனிக்கட்டுரை)

- விளை நிலங்களை ஆக்ரமித்து அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,

- விளை நிலங்களை ஆக்ரமித்து அமைக்கப்படும் பலவழி சாலைகள்,

- அடித்தட்டு மக்களின் நகரங்களை நோக்கிய இடப்பெயர்ச்சி, ( எங்கேப்பா செல்லப்பன் ஆசாரியை காணோம்? அவர் பையன் கம்ப்யூட்டர் படித்து அமெரிக்க போய்விட்டான். சென்னையில் வீடு வாங்கி குடியேறிவிட்டார். அவரது கருவிகள் ? பிள்ளைமார் குளத்தில் வீசி எறிந்து விட்டார். )

- பாரம்பரிய தொழில்களின் அழிவு,

- கைவினை தொழில்களின் கையறு நிலை,

- கட்டுப்படுத்தமுடியாத விலைவாசி உயர்வு,

- புவி வெப்பமயமாவது,

- கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள்.

- உணவு முறை மாற்றங்கள் ( கே. எப். சி  முதல் அருண் ஐஸ் க்ரீம் வரை)
இப்படி பல.

ஒரு புறம உலக பணக்காரர்களில் நாற்பதுபேர் இந்தியர் என்ற நிலை .
மறுபுறம் 97.45 கோடிப்பேர்- நடுத்தர வர்க்கமும் சேர்த்து- வாழவே போராடும் நிலை . இதுவே  உலகமயமாக்கல் என்ற வேண்டாத பிள்ளையை பெற்று அது காண்டாமிருகமாகிய கதை.

முதலாளித்துவத்தால் இன்று உலகமயமாக்கல் நகர்த்தப்படுகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பம், சமூகத்தை மாற்றியமைக்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் உலகமயமாக்கலின் முக்கிய கூட்டணி கட்சிகள். உண்மையில் இவை பொருளாதார உறவுகளை மட்டுமல்லாமல் சூழலியல் பொருளாதார அமைப்புகளையும் பாதிக்கின்றன.
இந்த புள்ளிவிபரங்களை பார்க்கலாம்.

இந்த உலகமயமாக்கல் உலகத்தின்மீது காரி உமிழ்ந்த கரியமில வாயுவின் அளவுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அளவில்,

1950 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 110 டன்கள்
2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  820  டன்கள்-
வெறும் ஐம்பது ஆண்டுகளில் எட்டு மடங்கு கரியமில வாயு இந்த பொருளாதார வளர்ச்சிக்காக போடப்பட்ட திட்டங்களால், பெட்ரோலிய எரிபொருள் உமிழ்வால் உலகை நாறடித்துவிட்டன. இதனால் உலகம் வெப்பமயமாவது ஊக்குவிக்கப்படுகிறது. அணு குண்டை விட, அணு கதிர்வீச்சைவிட புவி வெப்பமயமாவது ஆபத்தானது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சூழலுக்கு எதிரான இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு காரணமாக 2030ஆம் ஆண்டு புவியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதை யாராலும் தடுக்க முடியாது. இது மிக மோசமான காலநிலை மாற்றத்திற்கு உலகை உந்தித் தள்ளும். ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த சட்ட வரையறையை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தினாலும் கூட புவியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வதை தடுக்க முடியாமல் போகும். கோமாளி மீன், எம்பெரர் பென்குவின், ஸ்டாகோர்ன் கோரல் (பவள உயிர்), பெலுகுவா திமிங்கலம், தோனி ஆமை, ரிஸ்சீல், சால்மன் மீன் போன்ற கடல்சார்ந்த உயிரினங்களும், ஆர்டிக் நரி, துருவக் கரடி மற்றும் வறட்சி தாங்காத குயுவர் மரம் போன்ற அரிய உயிரினங்கள் புவி வெப்பமடைவதால் அழிந்துவிடும். இந்த அழிவு, சுற்றுச்சூழல் அழிவின், சூழலியல் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை மட்டுமல்லாமல் உலகின் இறுதி ஊர்வலத்தை அறிவுறுத்தும் சாவுமணிகளாகும்.

உலகமயமாக்களுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்து வரும் உலக வங்கி, அதை நடைமுறைபடுத்தும் உலக வர்த்தக நிறுவனம், அதன் செல்லப்பிள்ளையான உலக பொருளாதார அமைப்பு ( WORLD BANK, WORLD TRADE ORGANIZATION, WORLD ECONOMIC FORUM) ஆகிய சக்திவாய்ந்த சந்தை பொருளாதாரத்தின் சாச்சாக்களும், மாமாக்களும், சுற்றுசூழல் இயல் இணைந்த- அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கேற்ற  பொருளாதாரத்தை புறக்கணித்து வருவதால்தான் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இலாப நோக்கங்களோடு ஆன்லைண் வர்த்தகங்கள் மூலமாக ஏற்படுத்தப்படும் செயற்கை பற்றாக்குறை , விலைவாசி உயர்வு இவைகளால் பணக்காரர்கள் மேலும் பணக்கரர்களாகவும் , ஏழைகள் இன்னும் ஏழைகளாகவுமே ஆக்கப்படும் “ யோசனை மன்சவாடு வண்டி சாட சப்பை “ திட்டங்களால் என்ன பயன் ?

உலகமயமாக்குதளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் வைக்கும் வாதம் கட்டுப்பாடற்ற பொருளாதாரம் கொண்டுவந்து கொட்டும் அதிக நிதிவளங்கள், புதிய தொழில் நுட்பங்கள் உலகை வளர்ச்சியின்பால் தலைகீழாக மாற்றி உயர வைத்துவிடும் என்பதாகும். ஆனால் உண்மையில்- நடைமுறையில்  உடல் கொழுத்து இருக்கும் அதில் உயிர் இல்லை என்ற நிலையும்- மரம் பருத்திருக்கும் ஆனால் பூக்காது, காய்க்காது என்ற நிலையும்- கண்ணிருக்கும் பார்க்கமுடியாது- காதிருக்கும் கேட்க முடியாது- காலிருக்கும் நடக்க முடியாது என்றும் இருந்தால் எவ்வளவு வேடிக்கையோ அப்படித்தான் இருக்கிறது.
உலகமயமாக்களும், பொருளாதார வளச்சியும்  மண்ணின் மரபுகளை அழிக்காமலும், சுற்றுசூழல்களை மாசுபடுத்தாமலும் வளர்ந்தால்-
கட்டுப்பாடற்ற வர்த்தகம் காசை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் உலக அமைதி , ஒற்றுமை இவைகள் ஓங்கி நிற்க செய்யும்வகையில் மாற்றங்களோடு வருமானால் -

“பழையன கழிதலும் – புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே “ என்ற அடிப்படையில் ஏற்கலாம்.

இத்தகைய குறிக்கோள் இல்லாத வளர்ச்சி

“ஓதிய மரங்கள் பெருத்து இருந்தாலும் உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது

விளக்கிருந்தாலும் எண்ணை இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது

பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது “

என்ற கருத்தைத்தான் நிலைக்கச்செய்யும். உலகமயமாக்களுக்கு உலகில் எதிர்ப்பு மேலோங்கவே செய்யும்.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

11 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    காலங்கள் மாறும்பொழுது ஆக்கத்தின் தன்மைகளும் மாறியே ஆகவேண்டும். அந்த வகையில் இது ஓர் வித்தியாசமான ஆக்கமாக இருந்தாலும், தேவையானது.

    நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும், எப்போது கொண்டு வரமுடியும்? ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திக்க வேண்டும்.

    நல்ல தொகுப்பு, பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. இப்பதிவின் மூலம் அறியப்படுத்திக்கொள்ளும் செய்தி யாதெனில் சமூக விழிப்புனறு பக்கத்தின் நிர்வாகியும் அதிரை நியூஸ்சின்,நிர்வாகம் மற்றும் குழுமத்தில் அங்கம் வகிக்கும் சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்கள் தகப்பனாரின் கண் அறுவைசிகிச்சை வேண்டி சென்றிருப்பதால் ஓரிரு நாட்கள் இணையத்தில் இணைய முடியாத சூழலில் உள்ளார் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நேற்று சரியாக மாலை நான்கு முப்பதுக்கு அவரிடமிருந்து போன் வந்தது, விவரம் அறியப்பெற்றேன், நல்ல சுகத்தோடு வீடு திரும்ப துஆ செய்துடுவோம். ஆமீன்.

      Delete
  3. தந்தைக்கு ..தனயன் செய்யும் உதவி இருலோக நன்மை

    ReplyDelete
  4. முனைவர் இ.அ. காக்கா அவர்களின் இவ்வாய்வும் நூலுருவில் வருமா?
    பொருளாதாரம் படிக்கும் மாணாக்கர்கட்கு நிரம்ப உதவும் வண்ணம் தங்களின் எழுத்தும் பயன்பெறும் அல்லவா? வாழ்த்துகள்!

    அன்புத்தம்பி விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்களின் தந்தையாரின் கண் மருத்துவ சிகிச்சை வெற்றியுடன் திகழவும்; தந்தைக்குப் பணிவிடை செய்யும் இத்தனையனுக்கு இறைவனின் ஆசிகள் கிடைக்கட்டும் என்றும் ப்ரார்த்திக்கிறேன்.(ஆமீன்)

    ReplyDelete
  5. //இ.அ. காக்கா அவர்களின் இவ்வாய்வும் நூலுருவில் வருமா?
    பொருளாதாரம் படிக்கும் மாணாக்கர்கட்கு நிரம்ப உதவும் வண்ணம் தங்களின் எழுத்தும் பயன்பெறும் அல்லவா? வாழ்த்துகள்!// inshaa Allah. ULKAKAVIYANBAN.

    அன்புத்தம்பி விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்களின் தந்தையாரின் கண் மருத்துவ சிகிச்சை வெற்றியுடன் திகழவும்; தந்தைக்குப் பணிவிடை செய்யும் இத்தனையனுக்கு இறைவனின் ஆசிகள் கிடைக்கட்டும் என்றும் ப்ரார்த்திக்கிறேன்.(ஆமீன்)= I WOULD LIKE TO JOIN WITH YOUR PARAYER.

    ReplyDelete
  6. நல்ல பதிவு இப்ராஹீம் அன்சாரி காக்காவின் ஆதக்கம் புரிக்கின்றது நமதூர் சுகதாரம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் என்ன செய்வது அவரவர்கள் அவர்களின் சொத்துகள் நீலங்கள் பாதுகாக்கின்றகள்.யாரும் ஊரை பற்றி தெருக்களை பற்றி கவலை பட வில்லை.

    ReplyDelete
  7. சகோ.செக்கன்னா நிஜாம் அவர்களின் தந்தையின் கண்சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர நாம் எல்லோரும் பிராத்திப்போமாக

    ReplyDelete
  8. தம்பி ஹபீப் அவர்களின் கருத்துப் பதிவுக்கு நன்றி. நமது ஊர் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இந்த பிரச்னை.

    ReplyDelete
  9. ஆய்வு அருமை !

    கவிக்குறள் கூறியதை நான் வழிமொழிகின்றேன்.

    இறுதியில் நூல் வடிவம் பெற தகுதியுள்ள ஆய்வு

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. இறைவனின் உதவியால் என் தகப்பனாரின் கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று நேற்று இரவு ஊர் திரும்பினோம். கருத்திட்டும் - அலைபேசியில் கூப்பிடும் நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உடல் நலம் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்த அன்பு நண்பர்களுக்கு - மூத்த எழுத்தாளர்களுக்கு - உறவினர்களுக்கு எனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நேரம் கிடைத்தால் 'கண் ஒளியை நோக்கி வாப்பாவுடன் ஒரு பயணம்' என்ற தலைப்பிட்டு எனது அனுபவத்தை தொகுத்து பதிகிறேன். [ இறைவன் நாடினால் ]

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers