.

Pages

Thursday, April 18, 2013

இன்னும் விடியாமல்

பலர்
பதவிப் பற்று மிஞ்சியே
அரசியலுக்கு வந்தனர்
நாட்டுப் பற்றே நோக்கமென
சப்தமாய் முழங்கினர்

சிலரோ
நாட்டுப் பற்று மிஞ்சியே
அரசியலுக்கு வந்தனர்

ஒரு 
நாற்காலி வேண்டுமென
மெல்லவே மொழிந்தனர்

இருந்தும், இந்த
நாட்டுப் பற்றுக் காரர்களையே
நாற்காலியில் அமர்த்தியதும்
பதவிப் பற்றுக் காரர்களாய்
அழுக்காக்கி விடுகிறதே 
நம்மின் பொல்லாத அரசியல் 

பார்த்தீரா
அழுக்கைப் புழுக்களாய் மாற்றும்
ஒரு சாதாரண சாக்கடையல்ல
நம் அரசியல்
பயனுள்ள மனிதர்களையே
புழுக்களாய் மாற்றும் ஒரு
நரகலோகச் சாக்கடைக் கடல்

.

எத்தனையோ கற்பக விதைகள்
தங்களை
இதில் விதைத்துக் கொண்டு
கள்ளிகளாய் வளர்ந்துவிட்டன

எத்தனையோ புத்தர்கள்
இங்கு புண்ணியம் கற்பிக்க வந்து
சித்தார்த்தர்களாகி
தங்களின்
சில்லறை விளையாட்டுக்களில்
செலவழிந்து போயினர்

இந்த 
வளைவுகளையெல்லாம்
நிமிர்த்திவிட்டுத் தான்
உயிர் விடுவேன் என்று
வரிந்து கட்டிக் கொண்டு
இதில் குதித்தவர்களில் 

பலர்
வளைந்து போயினர்
சிலரோ
ஒடிந்தே போயினர்

.

என்ன ஒரு புதுமை பாருங்கள்

நம்
அரசியல் வயலில்
அழுகிய விதைகளுக்கே
அமோக விளைச்சல்

காரும் நிலமும்
கடிதில் வேண்டுமென்று
அரசியலுக்கு வந்த
பொல்லாதவாதிகள் தாமே
இன்று
முக்கால் வாசி அரசியல் வாதிகள்

இங்கே 
சத்தியங்களுக்காய்ப் பிறந்தவர்களெல்லாம்
எங்கே போனார்கள் 

சுதந்திர மரத்தின்
வேர்களுக்கு நீரூற்ற வந்த
ஒவ்வொருவருமா 
அதன் கிளைகளைத் திருடுவது

.

அடடா
நம் இந்தியாவில் தான்
எத்தனை தேசாபிமானிகள் 

கணிசமாய் வரதட்சணை வாங்க
ஒரு பட்டம் வேண்டுமென்ற
வணிகத்தனத்தில்
கேள்வித் தாள்களைப் பற்றி மட்டுமே
கவலைப்படும்
ஒரு கல்லூரி வருகையாளனைப் போல

பலரும்
இந்த தேசத்தைப் பற்றிக்
கவலைப் படுகிறார்கள் 

உண்மைதானே
இந்த அரசியல் அங்கவஸ்திரம் 
தோளில் ஆடினால் 
இவர்களின்
மீசைக்கே தகுதியற்றமேலுதடுகள் கூட
மீசையை விடவும்
அதிகமாய்த் தானே துடிக்கின்றன 

.

தம் பெயரைக்
கல்லில் நாட்டுவதற்காகவே
பல மந்திரிகள் இங்கே
மைல் கல்லுக்கும் கூட
அடிக்கல் நாட்டத் தவிக்கிறார்கள்

மந்திரிகளில் பெரும்பாலோர்
தங்களின்
சொந்த சுகதுக்கங்களைக்
கொண்டாடத் தானே
அரசியல் கூட்டம் கூட்டுகிறார்கள்

குண்டர்களே நல்ல தொண்டர்கள் 
என்று 
தீனி போடப்பட்டால்
நம் சுதந்திரப் பெண்ணின் கற்பு 
காற்றில் பறக்காமல்
கலையழகோடவா நடக்கும் 

பல நேரங்களில்
தவறு
நம் மந்திரிகளிடமில்லை
கைநாட்டுகள்தாம்
கைத்தட்டுகின்றன என்றால்
இந்தக் கற்றோர்களில் பலருங்கூட
இங்கே கண்மூடியல்லவா கிடக்கிறார்கள் 

.

யோசித்துப் பாருங்கள்
நாம்
வாக்களிக்க
முகராசியைத்தானே பார்த்தோம்
கொள்கைகளையா பரிசீலித்தோம்

கட்சிக் கூட்டங்களில்
பெரும்பாலோர் கேட்கும் விருப்பங்கள்
எதிர்க்கட்சித் தலைவரின்
வீட்டு விமரிசனங்கள்தாமே 

நம்மில் பலர்
மந்திரிகள் எதைச் சொல்கிறார்கள் 
என்பதை விட
மந்திரிகளுக்கு எத்தனை
மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன
என்று தானே
கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

.

வாய் வித்தைகளுக்காய் மட்டுமே
வாக்களித்து விட்டுப் போகும்
வாக்காளப் பெருமக்கள்
நம்மில் கொஞ்சமா

வியாபார விசயமாய்த்
தங்கள் வாக்குகளை
இரகசிய ஏலம் விடும்
தேசத் துரோகிகள் நம்மில்
கொஞ்சமா

.

இந்தியர்களே
நம்
தேசத்தின் அரசியல் நிர்ணயத்தில்
முழுப் பங்கும்
மொத்த வலிமையும் கொண்டோர்
நீங்களே

உங்களின்
அறியாமை ஓடுகளை
உடைத்தெறிந்து
சுதந்திமாகச் சுவாசிக்கச்
சிந்தியுங்கள்

சுதந்திரம்
தனியினச் சுவாசமல்ல - அது
மொத்த நாசிகளின் 
முழுச் சுவாசம்

ஒரு சுத்தமான
இரத்த தானம்தான்
விழுந்து கிடக்கும் இந்தியாவை
எடுத்து நிறுத்துமெனில்
தயங்க வேண்டாம்

எழுங்கள் இந்தியர்களே
எழுங்கள்.
அன்புடன் புகாரி

11 comments:

  1. /// அழுகிய விதைகளுக்கே
    அமோக விளைச்சல் ///

    உண்மை...

    விதைகள் மாற வேண்டும்...
    இல்லை... இல்லை...
    விதைகளை மாற்ற வேண்டும்...

    ReplyDelete
  2. தன்னம்பிக்கைத் தரும் வரிகள் !

    எழுங்கள்... இந்தியர்களே
    எழுங்கள்...





    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    நல்ல கவிதை.
    பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. அரசியல் வியாதிகளின் அவலங்களை இதைவிட நேர்த்தியாக இதுவரை எவரும் கவிதையில் கையாளவில்லை!

    உடல்நலம் பெற்று மீண்டும் எம்மைச் சந்திப்பதில் சந்தோஷம் காணும் ஆயிரமாயிரம் “அன்புடன்” நண்பர்களில் அடியேனும் ஒருவன்.

    ReplyDelete
  5. நம்நாட்டில் பதவியாசை பிடித்த அரசியல்வாதிகளும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்கும் பொதுமக்களும் சிந்திக்கக்கூடிய அருமையானவரிகள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அழுகிய விதைகள் ..

    அமோக விளைச்சல் ...

    மனத்தால் அழுகிய்வர்கள்

    நாட்டை அழ வைப்பாவர்கள்

    ReplyDelete
  7. அன்பு உள்ளங்களுக்கு என் மரியாதைக்குரிய நன்றிகள்

    ReplyDelete
  8. இக்கவிதையை தொடர்ந்து அரசியல் வாதிகளின் அவலங்களை சொல்லும் ஒரு கவிதை. நேற்று படித்த ஒரு செய்திகளில் இருந்து சற்று நேரத்தில்

    ReplyDelete
  9. மக்களுக்கு விழிப்புணர்வு கவிதைவரிகள்.அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மிகவும் அருமையான கவிதை . ஆரம்பத்தில் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று ஆரம்பிப்பவர்கள் பதவிக்கு வந்ததும் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியாக மாறிவிடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா...

      சிரிச்சிட்டேன் போங்க :)

      மக்கள் தெளிவா இருந்தா எல்லாம் சரியா நடக்கும்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers