.

Pages

Thursday, April 4, 2013

உயிரைத் தேடாதே

யாரங்கே
குட்டிச் சுவரோரம் நின்று
திருட்டுத் 'தம்' அடிப்பது

உன்
நுரையீரல் மாளிகையில்
ஒட்டிக் கொள்ளப் போகும்
பிசாசுகளை விரட்ட
மந்திரக்கோல்
வைத்திருக்கிறாயா

வளையம் வளையமாய்த்
துப்புகிறாயே புகை
அவை உன் ஆயுட் கைகளை
நீட்ட விடாமல் மாட்டப்படும்
விலங்குகளென்று தெரியுமா உனக்கு

உன் 
சல்லடை உடலை
மெல்லப்போகும்
கல்லறைக் குழியை
அவசர அவசரமாய்த் தோண்டும்
மண்வெட்டிகளே சிகரெட்டுகள்
ஞாபகமிருக்கட்டும்

ஏன்
புகையைக் காதலித்துச்
சாம்பலை மணக்கிறாய்

உன்
தற்கொலை முயற்சிக்கு
சிகரெட்டு நார்களிலா
கயிறு திரிக்கிறாய்

ஒரு கொள்ளிக்குத் 
தாங்காத நீ
இன்னும்
எத்தனைச் சிகரெட்டுகளுக்குக்
கொள்ளி வைப்பதாய்
உத்தேசம்

*
அன்புடன் புகாரி

13 comments:

  1. புகை நமக்கு என்றென்றும் பகை !

    அழகிய விழிப்புணர்வு

    ரசித்து வாசித்தேன்

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. புகைபிடிப்பதினால் ஏற்ப்படும் கேடுகளை மிக அருமையாக விளங்கும்படி கவி வரியில் சொல்லியுள்ளார்கள் அன்பு நண்பர் அன்புடன் புகாரி.

    புகை என்றென்றும் பகையே..!

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    புகைத்தல்.
    புகைத்தால் கொசு போகும் ஆனால் காசம் வரும்.
    பிறகு கொசு போகும் ஆனால் காசம் போகாது.
    காசம் போகாவிட்டால் உயிர் போகும்.
    உயிர் போனால்?

    உயிர் போகக்கூடியதுதான்.
    அது போக வேண்டிய நேரத்தில் போகட்டுமே.

    நாம் ஏன் வழியே போய் உயிரை மாய்க்கனும்?
    மானிடா திருந்தி வாழப்பாருடாப்பா.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. அன்புடன் புகாரி என்னும் நண்பனே! உனக்கு ஏற்பட்ட வாகன விபத்தை அறிந்து; அதில் இறையருளால் நீ ஆபத்துகளின்றித் தப்பித்ததை முகநூல் செய்திகளில் கண்டு அங்கே உன் உடல்நலம் பெற வேண்டும் என்ற கருத்துரை இட்டிருந்தேன்; இப்பொழுது உடல்நலமா?

    இவ்வாரம் நான் இத்தளத்திற்கு அனுப்ப எண்ணிய இத்தலைப்பில் நீயே முற்கூட்டி இத்தலைப்பில் எழுதி விட்டதும் நம்மிருவரின் உணர்வுகளின் சங்கமம் தான் என்பதை உளவியல் வமியாக அறிகிறேன்.
    புகைத்தலைப் பகைத்திடு என்ற தலைப்பில் என் கவிதை:


    வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;
    விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);
    மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;
    நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;
    புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி

    உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;
    குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;
    சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு;
    மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும் சாபக்கேடு..!!!

    உன்னை வளர்த்த உயர்வான சமூகத்திற்கு
    உன்னால் தரப்படும் ஒழுக்கமற்ற துரோகத்திற்கு
    என்ன தண்டனை என்ற போதே
    உன்னை நீயே உருக்குலைப்பது போதுமே...!!!!

    இதழ்முத்தம் உனக்கு இனிமேல் எட்டாது;
    முதலிரவில் மனைவி முகமும் கிட்டாது
    இதைவிடத் தண்டனை ஏற்குமா நெஞ்சே
    விதைவிட முன்னே விரட்டிடு நஞ்சை

    தோலில் சுருக்கம்; தோல்விகள் தொடர்தல்;
    பாலில் நஞ்சுபோல் பார்வைக்கு தெரியாமல்
    ஒவ்வொரு இழுப்பும் உயிரின் இழப்பு
    ஒவ்வொரு நெருப்பும் உடலினைக் கருக்கும்


    “கவியன்பன்’, கலாம், அதிராம்பட்டினம்

    ReplyDelete
    Replies
    1. கவிக்குறளின் கவிதை மேலும் மெருகூட்டுகின்றன !

      என்ன ஆச்சரியம் ! நாம் அனைவரும் புகைக்கு பகை என்பதை நிருபித்து வருகின்றோம்.

      Delete
  5. கசப்பான மருந்தை ...

    தேனில் குலைத்து ..

    கொடுப்பது போல் ...

    கவி எனும் தேனில் ..

    நல கருத்தை தந்த ..

    அன்புடன் புகாரி ..அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. கருத்திடுவோர் அனைவரும் நான் புகைப்பது இல்லை என்பதையும் குறிப்பிடுங்கள்
    நான் புகைப்பது இல்லை

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது அதாவது பத்து வயதுக்குள். நாங்கள் பத்து பதினைந்து பேர் ஒரு செட்டு. நம்ம ஊர் கந்தூரி நாட்களில் பீடி குடிப்போம். அது என்ன பீடி தெரியுமா?

      ஜீஜீவா, ஒருகட்டு பீடி வெறும் பத்து காசுதான்.

      அது ஒரு வயசு.

      சத்தியமா இப்போ இல்லைங்க.

      Delete
  7. மெய்யாலுமே நானும் புகைப்பது இல்லை :)

    ReplyDelete
  8. என் காக்கா அவர்கள் என்னிடம் சிறுவயதில் சொன்னார்கள், “ தம்பீ, உன் உதடுகள் அழகாகச் சிவப்பாக இருக்கின்றன; உன் ஆயுள்வரை இன்ஷா அல்லாஹ் அச்சிவந்த உதடுகளைக் கருப்பாக்கி விடாமல்- புகைபிடிக்காமல் காப்பாற்று; மேலும், என்றைக்கும் நீ தான் வகுப்பில் முதல் மாணவனாய் வர வேண்டும்” என்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்! அந்த இரண்டு கோரிக்கைகளையும் காப்பாற்றி விட்டேன்! என் வகுப்புத் தோழர்கள் இன்னமும் என்னை “ஃபர்ஸ்ட்ரேங்க் கலாம்” என்றும், உதட்டுக்கு என்ன லிப்ஸ்டிக் போடுகிறாய் என்றும் சொல்லும் அளவுக்கு படிப்பிலும், புகை பிடிப்பதை இல்லாமலிருப்பதிலும் என் தீவிரம் உறுதியாகி விட்டது; சிலர் நினைப்பது போல் இஃது என் தற்பெருமை அல்ல; என் தன்னிலை விளக்கம்; படிக்கும் மாணவர்கட்கு ஓர் உற்சாகம்- ஊக்கம் என்பதே இப்பதிவின் நோக்கம்.

    அதிலும் தொழிலதிபர் கோரியதால் ஈண்டுப் பதிய வேண்டியதாகிவிட்டது.

    ReplyDelete
  9. இந்த மனநோயை அவரவர் உணர்ந்து விட்டு விட்டால் நல்லது...

    அருமை வரிகளுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)April 5, 2013 at 8:15 AM
    புகைப்பது இல்லை என்ற தகவலையும் தாருங்கள் என்று சொன்னது முழு விழிப்புணர்வு.

    ஒரு கவிதையின் வெற்றியே அதுவாகத்தான் இருக்க முடியும்.

    நன்றி சபீர்

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  11. குடி குடியை கெடுக்கும் என்பார்கள் ஆனால் புகை பக்கத்தில் உள்ளவனையும் கெடுக்கும் அருமையான கவிவரிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers