.

Pages

Tuesday, April 23, 2013

ஏன் இந்த தற்பெருமை !?

இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு, விழிப்புணர்வு என்று வரும்போது நாம் நம் மனதையும் ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் ஒரு வகையில் விழிப்புணர்வே. அந்த மாதிரியான வரிசையில் இதுவும் ஒரு சிறிய உதாரணத்துடன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு பெரிய மரம் ஒன்று, நல்ல உயரமாகவும் அடர்ந்தும் காணப்பட்டது, அதன் அருகில் வளர்ந்து வந்த ஒரு சிறிய புல்லை நோக்கி, ஓ அற்பப் புல்லே, நீ எவ்வளவு பலனற்றதும், நிலையற்றதும், சிறியதுமாயிருக்கின்றாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கின்றேன், என்று அடிக்கடி பெருமையடித்துக் கொண்டது. தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ள அந்த புல்லுக்கு ஒன்றும் இல்லாதபடியால் அது எப்போதும் அமைதியாகவே இருந்தது. ஒரு நாள் பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும் நேராக நிமிர்ந்து நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில் விழுந்து விட்டது.

புயல் காற்று ஓய்ந்தபோது, தரையில் சாய்ந்த அந்த பெரிய மரம் மெதுவாக எட்டி அந்த சிறிய புல்லை பார்த்தது. அந்தப் புல் எப்போதும் போல் தழைத்து நின்று கொண்டிருந்தது. அதைக் கண்ணுற்று வியப்படைந்த அந்த மரம், ஓ சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே அப் பலத்த புயற் காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய அற்பப் புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப் புயலை சமாளிக்க முடிந்தது?’ என்று கேட்டது. அதற்க்கு அந்தப்புல் புன்முறுவலுடன், அது மிகவும் எளிதானது, காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை குனித்து கொள்வேன். அப்பொழுது அவை எந்த பிரச்சனையும் உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும் என்று பதிலளித்தது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது பெருமையா? அல்லது, தாழ்மையா ?

தாழ்மை எவ்வளவு தூரம் இறைவனால் விரும்பப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம் மற்றவர்களை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் உண்மையான மனத்தாழ்மையை கற்றுக்க் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு மனிதனின் மனதின் அடித்தளத்திலும் பெருமை என்ற கொடிய நோய் நிறைந்திருக்கிறது.

தாழ்மைக்கு மறுபெயர் கீழ்படிதல், மரியாதை செய்தல், அன்பு பாராட்டுதல், பொறுமையுடன் இருத்தல், விட்டுக்கொடுத்தல், பணிவிடை செய்தல், இன்னும் சொல்லிக் கொண்டே போனாலும் அதற்க்கு ஒரே பெயர் தாழ்மை.

எவன் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கின்றானோ, அவன்தான் உச்சத்தில் இருப்பான், இதுதான் நிரந்தரமானது. இன்று பல ஊழல்களில், பல கோல்மால்களில், பல மோசடிகளில், பல தில்லு முல்லுகளில் உச்சத்தில் இருப்பதுபோல் தெரியும், ஆனால் அது அத்தனையும் தற்காலிகமானது.

நான் இதை எழுத என்ன காரணம், எல்லோரும் நிரந்தர சுகத்தோடு நன்றாக சந்தொஷத்துடன் இருக்கவே, மாறாக வேறு எதுவும் இல்லை.

இன்றிலிருந்து நாம் அனைவரும் ஒருவருக்கொருத்தர் அரவணைப்போடு, அன்போடு, தாழ்மையோடு பழகுவோம்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

26 comments:

  1. // இன்றிலிருந்து நாம் அனைவரும் ஒருவருக்கொருத்தர் அரவணைப்போடு, அன்போடு, தாழ்மையோடு பழகுவோம். //

    அப்படியே ஆகட்டும்...

    ReplyDelete
  2. சமீபத்தில் சிந்தனையைத் தூண்டும் சிறுகதை ஒன்றை வாரமலரில் படிக்க நேரிட்டது.

    அதில்...

    குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.

    குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.

    இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
    பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்' என்று கூறத் தொடங்கினான்.

    இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.

    மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.

    அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு!'' என்றார்.

    அந்த சீடன் திகைத்தான்.

    ""ம்! தள்ளு!'' என்றார் குரு.
    ""அது... வேண்டாம் குருவே!'' என்றான் சீடன்.
    ""இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்... என்னை ஆற்றில் தள்ளு!'' என்றார்.

    மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.
    மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ ? என்று திகிலுடன் பார்த்தனர்.

    ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.

    அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
    குரு கரை மேலே ஏறி வந்தார்.

    தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.

    ""இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?'' என்று கேட்டார்.

    அந்த சீடன் தலைகுனிந்தான்.

    ""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!'' என்றார் குரு.
    தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தகவலுக்கும் நன்றி. விழிப்புணர்வு வித்தகரே.

      Delete
  3. நல்லதொரு உதாரணம்...

    /// மன்னிக்க முடியாத ஒவ்வொரு மனிதனின் மனதின் அடித்தளத்திலும் பெருமை என்ற கொடிய நோய் நிறைந்திருக்கிறது. ///

    நோயை தானாக சரிப்படுத்துக் கொள்ளவும் வேண்டும்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      மனிதன் மரணிப்பவன் ஆனால் மன்னிக்க மனம் வரவில்லை. ஒரு வேலை மனிதனுக்கு மரணமே இல்லையென்றால்?

      Delete
  4. ஒருவர் தன்னை எந்த அளவுக்கு தாழ்த்திக் கொள்கிறாரோ! அந்த அளவுக்கு அவரின் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் என்பது என் பார்வை...

    பெருமைக்குறியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      சரியாக சொன்னீர்கள்.

      Delete
  5. மனித உரிமைக்காவலர் ஜமால் காக்காவின் மற்றுமொரு மாறுபட்ட சிந்தனை அருமை.

    தற்பெருமையில் தாண்டவமாடுவோருக்கு தகுந்த பதிவு.

    ஒண்ணா இருக்க கத்துக்கணும் உண்மைய சொன்னா ஒத்துக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இந்த சிந்தனை எனக்கு எப்படி வந்தது தெரியுமா?

      என் வீட்டுக்கு எதிர்புறம் ஒரு சில பெரிய உயர்ந்த மரங்கள் இருக்கின்றன, அதன் அருகில் சில புற்களும் முளைத்து தழைத்து இருக்கின்றன. இப்படியான இந்த தாவரங்களின் நிலை என்னை ஒருகணம் சிந்திக்க வைத்தது. அந்த சிந்தனையில் உருவானதுதான் இந்த ஆக்கம்.

      Delete
    2. இக்கட்டுரைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு அருமை.

      இதற்க்குத்தேர்ந்தெடுத்த புகைப்படமும் ஒரு கதை சொல்லுமளவுக்கு சூப்பரா இருக்கு.

      Delete
  6. நீதி போதனை

    சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      சரியாக சொல்வது நம் கடமை.

      Delete
  7. அனைவரிடம் அவசியம் இருக்கவேண்டிய
    குணம் அடக்கம் அதை எளிமையாக அருமையாக
    சொல்லிப் போனவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நம் எல்லோரும் எல்லா நன்மைகளும் அடைந்து சந்தோஷமாக இருப்போம்.

      Delete
  8. விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போவதில்லை என்பதுபோல் தாழ்ந்து இருப்பவனும் வீழ்ந்து போவதில்லை ஜமால் காக்காவின் கதை சகோ.சேக்கன்னா நிஜாமின் துணை கதை அருமை.

    ஒரு முறை போருக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கையில் ஒரு சஹாபி வாழை உயர்த்தியவண்ணம் நெஞ்சை நிமிர்த்தி கிழக்கும் மேற்கும் நடந்தவராக இறுமாப்போடு எதிரிகளை வீழ்த்திவிடுவோம் என்று கவிபாடிக்கொண்டு மற்ற வீரர்களை ஆர்வப்படுத்திக்கொண்டிருந்தார் இதை கண்ட நாயகம்[ஸல்]அவர்கள் புன்சிரிப்போடு அவரை பார்த்து மற்ற சஹாபியிடம் சொன்னார்கள் இவரின் இந்த நடை இருக்கின்றதே அல்லாஹ் வெறுக்கும் நடையாக உள்ளது மனிதனுக்கு இறுமாப்பு தவறான செயல் நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடிமை சர்வவல்லமை அவனுக்கு மட்டுமே என்றார்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      மேலும் ஒரு சம்பவத்தை சொல்லி விட்டீர்கள், அப்போ எங்கு பார்த்தாலும் தாழ்மைதான் முதன்மையானது.

      Delete
  9. வாழை=வாலை எழுத்துப்பிழை மாற்றி படிக்கவும்

    ReplyDelete
  10. அருமையான பதிவு வித்தியாசமான விழிப்புணர்வு பதிவு தனக்கு மேல் அந்தஸ்தில் உள்ளவனை நினைக்க வேண்டாம் உனக்கு கீழ் அந்தஸ்தில் உள்ளவனை நினை. விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்கள் சொல்வதும் உண்மையே.

      Delete
  11. தலை தாழும் போதில் நிலை உயரும்; தற்பெருமைக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரே சொல் இடையில் புகுந்தால்/ வெளியேறினால் வேறுபாடு விளங்கும்

    தன்னால் முடியும்= தன்னம்பிக்கை
    தனக்கு மட்டுமே முடியும்= தற்பெருமை.

    இதில் எப்படி “மட்டும்” என்பதில் அழுத்தம் கொடுப்பதால் , தன்னம்பிக்கை என்னும் அழகிய- அவசியமான ஒரு குணம் மாறித் தற்பெருமையாகி விடும்! பக்குவம் உடையோர் இதில் கவனமாய் இருப்பர்; ஆனால் அவ்வண்ணம் பக்குவமாய் இருப்பவரின் நடை, உடை, பேச்சு, எழுத்துக்களில் தன்னம்பிக்கையுடன், தான் கூறும் விடயத்தால் பிறர்க்கும் தான் பெற்ற இன்பம் பெற வேண்டும் என்றோ அல்லது இதனால் பிறர்க்கும் நன்மை கிடைக்கும் என்றோ உளத்தூய்மை என்னும் இக்லாஸூடன் இருக்கும் பட்சத்தில் அவரின் பேச்சு, எழுத்து, செயல்முறைகள் தன்னம்பிக்கைத் தான் என்றும் பிறர்க்கும் நன்மை நாடுகின்றார் என்பதும் புரிந்துணர்தலில் குறைபாடுடையோரால் விமர்சனத்துக்குள்ளாகி “தற்பெருமைவாதி” என்ற வீண்பட்டம் வரலாம்! ஆனால், அல்லாஹ்வுக்கும் அவருக்கும் மட்டும் உள்ள உளவியல் ரீதியான் இவ்வுளத்தூய்மையைக் கொச்சைப்படுத்தித் தற்பெருமைவாதி என்று அவரைக் குற்றஞ்சாட்டுபவர்களை, உண்மையில் அந்தக் குற்றச்சாட்டைக் கூறுபவர்கள் தான் தற்பெருமைவாதியாகவோ, பிறரைத் துருவித் துருவி ஆராய்பவர்களாகவோ இருக்கும் “ஈகோ” என்னும் மனோயிச்சையின் அடிமைகளாகிவிடுவர்.

    எனவே, தற்பெருமைவாதி யார்? அவரை எப்படித் தற்பெருமைவாதி என்று கணிக்கலாம் என்பதற்கு யார்க்கும் இயலாத ஒன்று. “செயல்கள் யாவும் எண்ணங்களை வைத்தே “ கணிக்க முடியும் என்பதால், ஒருவருடைய செய்லகளை வைத்து அவரின் எண்ணத்தை அல்லாஹ்வைத் தவிர எவராலும் கணிக்க இயலாது. அப்படிக் கணிப்பவரின் பார்வையில் கோளாறு என்பதால், இவ்விடயத்தில் மிக மிக எச்சரிக்கையுடன் இருப்பதே ஒற்றுமை உருவாக வழியாகும்.

    அன்பு மச்சான்! மிகவும் வலுவான ஒரு விடயத்தை ஆழமாக நீங்கள் ஆய்ந்தாய்ந்து எழுதியிருக்கின்றீர்கள்; வாழ்த்துகள்; பாராட்டுகள்!

    ஆயினும், அடியேன் மேலே கூறியுள்ள கருத்துக்களை வைத்து நோக்கினால், இதில் கரணம் தப்பினால் மரணம் என்னும் சொலவடைக்கிணங்க, எச்சரிக்கையுடன் பிறரை மதிப்பீடு செய்யத் தவறினால், அருமையாக உருவாக்கப்பட்ட ஒற்றுமை என்னும் கோட்டை இடிக்கப்பட்டு விடும்!

    காட்டு; ஜமா அத் தில் போகப் பெயர் கொடுக்கும் பொழுது எல்லார்க்கும் தெரியும் வண்ணம் “நான் 40 நாட்கள் போகிறேன்” என்று சொல்லுவதன் மரிம என்ன? இது தற்பெருமையன்று; அதே ஜமா அத்தில் தான் “இக்லாஸ்’ என்னும் உளத்தூய்மையின் பாடம் கற்பிக்கப்படும் பொழுது, இங்கு “நான்’ என்று எல்லார் முன்னிலையிலும் சொல்லிக் கொண்டு முந்துவதன் நோக்கம்; நன்மை செய்யப் பிறரைத் தூண்டுதல்;இதில் தற்பெருமை என்று நினைப்பவர்தான் அறிவிலியாவார்.

    தர்மங்களைப் பிறர் அறியவும் கொடுக்கலாம்; மறைவாகவும் கொடுக்கலாம் என்ற கோட்பாட்டில், ஓர் உண்மையை அறியலாம். பிறர் அறியக் கொடுப்பதால் நன்மையை ஏவுதல் என்ற நன்மையை அடையலாம்; இது தற்பெருமையன்று என்பதை அறியலாம்.

    இப்படி “நன்மையை” நாடித் தான் செய்யும் செயற்களைப் பிறர்க்கு அறிவிப்பவரைத் தற்பெருமைவாதி என்று அவசரத்தில் கணிப்பவர்- விமர்சனத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தாண்டவமாடுவர்கள் தான் உண்மையில் உள்ளுக்குள் பொறாமையுடன் கூடிய தற்பெருமைவாதியாகி விடுவார்.

    அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      அன்பு மச்சான். உங்களின் இந்த விரிவாக்கம் மிகவும் என்னை மட்டுமல்லாது எல்லோரையும் கவரும் வண்ணம் இருக்குது.

      Delete
  12. மிக்க நன்றி மச்சான். பிறரின் உண்மையான எண்ணங்களை அறியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று “குத்திக் காட்டுவதே தன் புத்தி” என்று விமர்சனங்களில் தரம் தாழ்ந்து எழுதுபவர்கள் மத்தியில் உங்களின் ஆக்கம் ஒரு படிப்பினையாக அமையட்டும். தன் ஆக்கத்தை எப்படியாவது போட்டுவிடுங்கள் என்று கெஞ்சுபவர்களும் உளர்; ஆனால், உங்கள் ஆக்கம் வரவேண்டும் என்று ஏங்குபவர்களை உருவாக்கி விட்டீர்கள்; இதுவே உங்களின் தன்னடக்கம்; அஃதே போல், ஊருக்கு நல்லுதவிகள் செய்தும் தற்பெருமையின்றி நீங்கள் இருப்பதாற்றான் இப்படிப்பட்ட ஆக்கம் எழுத மிகவும் தகுதி வாய்ந்தவராக நீங்கள் இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  13. எழுத்தாளர் கூறியிருப்பது போல் ஒருவரின் பொறாமை பிறர்நலன் பாதிக்காவண்ணம் இருத்தல் வேண்டும்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers