.

Pages

Friday, April 19, 2013

அம்மா என்னும் அன்பை நேசி !

அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி
......அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ ?
அம்மாவின்  வியர்வையினால் அனைத்தும் உண்டோம்
......அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்
அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே
.....அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே
அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட
..... அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே !

அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்
......அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்
பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால்
.....பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர்
இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம்
.....ஈடில்லா அம்மாவின் அன்பு வெள்ளம்
என்புக்கும் தோலுக்கும் அம்மா ஈந்த
.....இணையில்லாக் குருதியாலே நாமும் வந்தோம் !


\
வலியென்றால் உயிர்போகும் நிலையில் நாமும்
....வலியென்றால் உயிர்தருவாள் அம்மா மட்டும்
வலியொன்றை அனுபவித்து அவளும் ஈன்று
...வாஞ்சையுடன் அவ்வுயிரை நோக்கும் காலை
வலியென்றால் என்னவென்று கேட்பாள் நாளை
...வலிக்குமேலே வலியையும்தான் பத்து மாதம்
வலியெல்லாம் சுமந்தவளே அம்மா என்று
....வல்லோனும் சொல்லிவிட்டான் மறையின் கூற்றில் !



கல்லறையில் உறங்குகின்றாய் என்றன் அம்மா
......கருவறையில் சுமந்தவளே என்றன் அம்மா
செல்லறையின் செல்லுக்குள் குருதிச் செல்ல
.....செய்திட்டத் தியாகங்கள் என்ன வென்பேன் !
சில்லறைகள் காணாத காலம் கண்டாய்
...செல்வத்தில் இருக்கின்ற நேரம் நீயும்
கல்லறைக்குள் போய்விட்டாய் என்ன செய்ய ?
...கர்த்தனவன் கட்டளையும் அஃதே தானோ !



தலையணையும் படுக்கைகளில் இருந்தும் என்ன
....தானாக நித்திரையும் வருதல் இல்லை
தலையணையாய் உன்மடியில் படுக்க நீயும்
....தந்தசுகம் தலையணையும் தரவே இல்லை
மலையனைய துயரங்கள் என்றன் முன்னே
....மனக்குழப்பம் தந்துவிட்ட போதும் என்னை
நிலைகுலையாத் துணிவுடனே வாழ வேண்டி
....நீதந்த அறிவுரைகள் மறவேன் அம்மா !

என்முகமும் காணாமல் புதைத்த அன்று
...எப்படித்தான் துடித்தேனே நானும் என்று
உன்மனமும் அறியாமல் நீயும் மீளா
..உறக்கத்தில் சென்றுவிட்டாய் என்றன் அம்மா
தன்சுகத்தை உறக்கத்தை மறந்து நீயும்
...தவிப்புடனே என்னையும்தான் பாது காத்துப்
புன்சிரிப்பை மருந்தாக்கி வளர்த்தத் தாயே
...புண்ணியங்கள் செய்துவந்த தாயும் நீயே !



படிக்கட்டுப் படிக்கட்டாய் முன்னே ஏறும்
....படித்தரங்கள் எல்லாமும் உன்னைக் கூறும்
நடிக்கின்ற உலகத்தில் உன்றன் அன்பில்
....நடிப்பில்லா உளத்தூய்மை கண்டேன் நானே
வடித்திட்டக் கண்ணீரால் என்னை அன்பாய்
...வாரிமுத்தம் தந்திட்டப் பொழுதைத் தேடித்
துடிக்கின்ற என்னுள்ளம் அறிய வேண்டும்
..தொடர்ந்துநீயும் கனவினிலே வரவும் வேண்டும் !


உனக்காக ஏங்கும்
உன்றன் உயிர்,

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

34 comments:

  1. /// அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்...
    அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்... ///

    சிறப்பான பல வரிகளுக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. ஆம். எல்லா உயிரினங்களும் அம்மாவின் அன்பைத்தான் அன்பின் முகவரியாய்க் காட்டுகின்றன என்ற வரிகளே உங்களை ஈர்த்தன என்பதை முதல்வரியாய் இவண் கருத்தில் இட்டமைக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
    2. பதில் கொடுத்த மச்சானுக்கு நன்றி.

      Delete
  2. தாயின் பெருமை அருமை !

    'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' இறைவன் நாடினால் தாயின் நலனை நாம் பேணிக்காப்போம்

    வாழ்த்துகள் கவிக்குறள்...

    ReplyDelete
    Replies
    1. அடியேனுக்குப் பாராட்டும் பரிசளிப்பும் வழங்குவதற்காக நேற்று துபாய்த் தமிழர்ச் சங்கமம் சிறப்பாக ஏற்பாடு செய்து என்ன அழைத்துக் கவுரவித்திருந்த - துபாய்த் தமிழர்களின் சங்கமத்தில் கலந்து விட்டு அபுதபிக்குத் திரும்ப நள்ளிரவு ஆனதால், உடன் பின்னூட்டம் இடவில்லை. மேலும், இதற்கு முன்னர் அனுப்பிய “ஏற்றம் வேண்டின்” என்ற கவிதையை (இலண்டன் வானொலியில் ஒலி பரப்பிய விழிமத்தின் இணைப்புடன்) இன்றைய என் பதிவுக்குள் கொண்டு வரவே அனுப்பியிருந்த போதிலும், உங்கட்கு இந்த “அம்மா என்னும் அன்பை நேசி” என்னும் கவிதை மிகவும் உருக்கத்தை உண்டாக்கி விட்டதால் இதனையே இவ்வாரக் கவிதையாகப் பதிவுக்குள் கொண்டு வந்து விட்டதாக ஓர் அறிவிப்பை என் மின்மடலுக்கு நீங்கள் அனுப்பியச் செய்தியைக் கண்டேன்; இங்கும் அதுபோல் இக்கவிதையையே இன்று பதிவுக்குள் கொண்டு வந்தும் விட்டீர்கள் என்றால் இக்கவிதையின் அலை அதிர்வுகள் என் உம்மா அவர்களின் நிழற்படத்துடன் இணையமெங்கும் உலா வருகின்றன என்பதை நிதர்சனமாக்கிக் கொண்டிருக்கின்றன. சென்ற இடத்திலெல்லாம் சிறப்பையும், வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரவும் முன்னை முழுமுதலாய் இருந்து எனக்கு ஏற்றம் வேண்டி இறைவனிடம் துஆ செய்த என் அன்னையை நான் மறவேனா?

      “தாயின் காலடியில் சொர்க்கம்” என்ற தலைப்பையே என்னையும் கேளாமல் முன்பு என் கவிதைத் தொகுப்பை வெளியிட அட்டைப் படத்தில் உருவாக்கி எனக்கு மாதிரியும் அனுப்பியிருந்தார் கோவை தகிதா பதிப்பக உரிமையாளர் திரு. முனைவர்- பேராசிரியர் மணிவண்ணன் அய்யா அவர்கள். அப்பொழுது நான் கேட்டேன், “அய்யா! இதுவல்லவே என் கவிதை முழுவதையும் உள்ளடக்கிய ஒரு தலைப்பு; மேலும், அத்தொகுப்பில் தாயே என்னும் தலைப்பில் ஒரு புதுக்கவிதை எழுதியிருக்கிறேன் அதனை மட்டும் முதல் பக்கத்தில் போட்டுத் துவங்க வேண்டும் என்று தானே சொன்னேன்; முழுக் கவிதைத் தொகுப்ப்புக்கும் இந்தத் தலைப்பை ஏன் தெரிவு செய்தீர்கள் ?” என்றேன். அவர்கள் பதிலளித்தார்கள்: : இந்தத் தலைப்பு உலகம் முழுவதும் எல்லாராலும் கவரப்பட்ட ஓர் அற்புதமான நபிகளாரின் (ஸல்)வதனத்திலிருந்து வந்த ஓர் அற்புதமான வரிகள்; இதை எடுத்து விட வேண்டா” என்று கெஞ்சிக் கேட்டார்கள். நான் அப்பேராசிரியர் அவர்களின் ஆழ்ந்த வாசித்தலை எண்ணியும், எங்களின் நபிகளாரின்(ஸல்) வார்த்தை எவ்வளவு ஆழமான கவித்துவ நயமுடன் இருந்திருக்கின்றது என்பதையும் அறிந்தேன்; ஒத்துக் கொண்டேன். ஆனால், பின்னர் அப்பதிப்பகத்தார் செய்த இரு தவறுகளால் 2010ல் வெளிவர வேண்டிய என் முதல் கவிதைத் தொகுப்பு வரவில்லை.
      1) அச்சுக் கோத்ததில் பெரும் பிழைகள்
      2) என் தாயக விடுப்புக்கு முன்னரே நான் இல்லாமல் வெளியிட அவர்கள் தெரிவு செய்த திகதிக்கு என்று முடிவு செய்தமை.

      இக்காரணங்களால் அட்டைப்படத்தில் “தாயின் காலடியில் சொர்க்கம்” என்னும் (உங்களையும் ஈர்த்த) இவ்வழகிய தலைப்புடன் வெளிவர வேண்டிய அந்நூல் வெளிவராமல் போனதில் எனக்கும், அப்பதிப்பகத்தார்க்கும் இன்னமும் மனத்தினில் ஆறா வடுக்களாய் வேதனைகள் உள.

      ஆயினும். நீங்கள் அன்புடன் தெரிவு செய்த “ கலாமின் பேசும் கவிதைகள்” என்னும் தலைப்பையே அத்தொகுப்புக்கு இட்டு இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் அச்சில் ஏற்ற உள்ளேன். அதற்கான அணிந்துரையை வழங்கச் சென்ற வாரம் இலங்கையிலிருந்து துபைக்கு வருகை புரிந்துள்ள என் ஆசான், காப்பியக்கோ ஜின்னா ஷரிஃபுதீன் வாப்பா அவர்கள் இசைந்ததோடு மட்டுமல்லாமல் விரைவாகவும் தொகுத்துக் கொண்டு இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் (அவர்கள் இலங்கைக்குச் செல்லு முன்பாக) துபையில் சந்தித்து அவர்களிடம் பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டு அணிந்துரையும் பெறப்பட வேண்டும் என்று அன்புக்கட்டளையுமிட்டுள்ளார்கள். உஙளின் இப்பின்னூட்டத்தில் “தாயின் காலடியில் சொர்க்கம்” என்ற வரிகள் படித்ததும் என் இருதயத்தில் வடுவாகிப் போன அவ்வலிகள் என் நினைவு நாடாக்களைச் சுழற்றி விட்டன; அதனாற்றான் இத்தனை நீண்டப் பின்னூட்டமாக அமைந்து விட்டது; மன்னிக்கவும்.

      Delete
    2. பதில் கொடுத்த மச்சானுக்கு நன்றி.

      Delete
  3. கவியன்பரே ..

    உங்கள் வரிகள் ..

    நல்ல மகவின் இதய வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதில் தான் உள்ளது என்பதை என் தாயின் வளர்ப்பே இங்குச் சான்றென உங்களின் பின்னூட்டத்தில் என்னையும் என்றன் தாயையும் ஒரே வரியில் வாழ்த்திய உங்களின் இனிய வாழ்த்துரைக்கு என் உளம் நிறைவான நன்றிகள்.

      Delete
  4. அம்மா என்றழைக்காத உயிரில்லையே

    இக்கவிதையை வாசிக்கும் சக கவிஞர்களுக்கு பொறாமை ஏற்படுகின்ற அளவிற்கு அன்பான வரிகள் உள்ளது. சினிமாக்காரன் பார்வையில் இந்தக்கவிதை பட்டால் நிச்சயம் சினிமாவில் பாடலாய் பயன்படுத்திக்கொள்வான்.

    நடிக்கின்ற உலகத்தில் உன்றன் அன்பில்
    ....நடிப்பில்லா உளத்தூய்மை கண்டேன்

    அய்யா என்னவொரு வரிகள்

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று

    ReplyDelete
    Replies
    1. //இக்கவிதையை வாசிக்கும் சக கவிஞர்களுக்கு பொறாமை ஏற்படுகின்ற அளவிற்கு அன்பான வரிகள் உள்ளது\\

      கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்னும் சொலவடைக்கிணங்க உங்களின் ஆய்வுத் திறன் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது தமிழன் அய்யா அவர்களே! உண்மைதான், இக்கவிதையிலும், இதற்கு முன்னர் இங்குப் பதிந்த “கல்வி” என்னும் தலைப்பிலான கவிதையிலும் நான் நீண்ட நாட்களாக ஏங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரிய சூட்சமத்தை- சூத்திரத்தை உட்புகுத்தி, இக்கவிமல்ருக்குள் கவிதையின் “மூவிதழ்களை” கோத்துள்ளேன்; அதனாற்றான் எனக்கும் -( நான் எழுதியிருக்கும் 195 கவிதைகளில் இவ்விரண்டு கவிதைகளில்-)படிப்போர்க்கும் பதியப்பட்ட இடங்களிலும் வாசிக்கப்பட்ட இடங்களிலும் அதிகமானோரின் வரவேற்பையும் கைதட்டல்கள் என்னும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றன, எனவே, இறையருளால் இதுதான் நான் நீண்ட நாட்களாக விரும்பிய சூட்சம- சூத்திரம் உள்ளடக்கிய அம்மூவிதழ்களின் வாசத்தை வைத்தே வனைவேன் என்ற தீர்மானித்து வந்து விட்ட இத்தருணத்தில் , என் முடிவை மேலும் உறுதி செய்யும் வண்ணம் உங்களின் இப்பின்னூட்ட வரிகளும் அமைந்தன. என் உளம்நிறைவான நன்றிகள்.

      “நிற்க” செனற பதிவிலும் கேட்டேன்; இப்பொழுது கேட்கிறேன் அச்சூட்சம் - சூத்திம் - மூவிதழ்கள் என்பன யாவை? என்று கண்டுபிடித்து விட்டால் அவர்கட்கு என்னிடமிருந்து அன்பளிப்பை நிர்வாகி விழிப்புணர்வு வித்தகர் வழியாக நான் அனுப்பி வைப்பேன்; இப்போட்டி இங்கு வருகை தரும் எல்லார்க்கும் பொதுவானது என்றும்; இங்கு வருகை தரும் கவிஞர் பெருமக்கட்குக் குறிப்பானது என்றும் அறிவிக்கிறேன்.தொடர்ந்து உங்களின் பின்னூட்டத்தை அவதானிக்கின்றேன்; நீங்களும் என் கவிதைகளின் ஆளுமையை- ஆழத்தை- உட்பொருளை மிகவும் உன்னிப்பாகவே கண்டெடுத்து உங்களின் கருத்துரையில் இடுகின்றீர்கள்; எனவே நீங்கள் இப்போட்டியில் வெல்வீர்கள் என்றே நம்புகிறேன்.

      நேற்று கூட துபைபில் எனக்குப் பாராட்டும் பரிசளிப்பும் வழங்கிய விழாவில் ஒரு பாடகர் “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ?’ என்ற பாடலைப் பாடினார்; அப்பொழுது அங்கேயே நான் மேடையில் ஓர் அறிவிப்புச் செய்தேன்.” இப்பாடல் சினிமாப்பாடல் என்பதை விட இப்பாடலில் ஓர் இலக்கணம் உள்ளது அஃது என்ன? என்பதை மட்டும் அவதானித்து எவரேனும் இங்கேயே விழா முடிவதற்குள் அறிவித்து விட்டால் நான் அன்பளிப்பு வழங்குவேன்” என்று அறிவித்தேன். விழா முடியும் வரை எவரும் விடை பகரவில்லை; அதனால் அடியேன் மேடையேறி விடையைச் சொல்லி விடலாம் என்று மேடையை நோக்கிச் சென்றேன்; எங்கிருந்தோ ஒரு மூலையில் இருந்த நண்பரின் மூளையில் அவ்விடை அறியப்பட்டதும் ஓடி வந்து என்னிடம் விடையைச் சொல்லி என் அன்பளிப்பைப் பெற்றார்.

      இன்னும் இத்தளத்தின் நிர்வாகி அவர்களிடம் கலந்தாலோசித்து “கவிதைப் போட்டி- கவியன்பன் கலாம் விருது” என்று ஓர் அறிவிப்பையும் செய்து கவிதை எழுதவும் இலக்கிய ஆர்வம் தூண்டவும் செய்யலாம் என்ற ஓர் எண்ணமும் நீண்ட நாட்களாய் என் மனத்தினில் உள்ளது; உரிய காலத்தில் அறிவிப்பு வரும் என்பதையும் ஈண்டுப் பதிவு செய்கிறேன்.

      Delete
  5. அம்மா என்ற வார்த்தைக்கு வரையறை சொல்ல முடியுமா...? நிச்சயம் முடியாது....! அருமைப் பதிவு !! வாழ்த்துகள்....!!!

    ReplyDelete
    Replies
    1. வழக்குரைஞரால் ஆய்வு செய்யப்பட்டு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளேன் என்றால் நானும் என் கவிதையும் பேரின்பத்தை அடைகின்றோம். என் உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  6. அம்மாவுக்கு நிகரான வேறு வார்த்தை உள்ளதோ?

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா. அம்மா என்ற வார்த்தையே கவிதை என்றானபோது, அம்மாவுக்கும் கவிதைக்கும் நிகரான வார்த்தைகள் இலாத நிலையில், என்னால் இயன்ற மட்டும் எழுதி விட்டேன், அய்யா.

      உங்களின் உளம்கனிந்த வாழ்த்துக்கு என் உளம்நிறைவான நன்றிகள் அய்யா.

      Delete
    2. பதில் கொடுத்த மச்சானுக்கு நன்றி.

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    மச்சான், என்ன இது?
    இவ்வளவு தூரம்?
    இவ்வளவு சுருக்கி முடித்து விட்டீர்கள்.

    பெருமையை நினைக்காத அம்மாவை பெருமையோடு எழுதும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கோர்க்கும் வார்த்தைகள் மற்றவர்கள் சிந்தனைக்கு வராதவை என்று நினைக்கின்றேன்.
    பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. மச்சான்!. தூரமும் , சுருக்கமும் கொண்ட ஓர் அளவானப் பாத்திரமல்ல அம்மாவின் அன்பை அளந்துச் சொல்லும் எக்கவிதையும். இச்செய்யுளுக்கும் முன்னரே 2010ல் :தாயே என்னும் தலைப்பில் முகநூலின் கவிதைமுகம் குழுமம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல்பரிசை வென்றது என் கவிதை;அப்பொழ்து அந்தக் கவிதை “”தாயே” என்னும் தலைப்பில் புதுக்கவிதை முறையில் எழுதினேன். இருப்பினும், இன்று அதே கருவை வைத்து இச்செய்யுளை மரபுப்பாவில் வடிவமைத்துச் செதுக்கினேன்; அன்று எழுதிய அப்புதுக்கவிதையை விட இன்று எழுதிய இச்செய்யுளைப் பதியப்பட்ட/ பாடப்பட்ட இடங்களிலெல்லாம் அதிகமானோரின் பாராட்டுகளைப் பெற்றதுடன், என் ஆசான் காப்பியக்கோ இலங்கை ஜின்னா ஷரிஃபுதீன் அவர்களின் பாராட்டாக “ என் மனத்தினில் நெகிழ்வை உண்டாக்கிய அருமையான பாடல்; வாழ்த்துகள்” என்ற பொன்வரிகள் உள்ளடக்கிய மின்மடலைக் கண்ட பின்னர் இச்செய்யுளின் ஈர்ப்புக்கு நான் வடிவமைத்து வைத்த சூட்சமம் தான் காரணியமாகும் என்பதையும் ஊகித்துக் கொண்டேன். மச்சான் உங்களின் பாராட்டுக்கு நன்றிகள்.

      Delete
    2. பதில் கொடுத்த மச்சானுக்கு நன்றி.

      Delete
  8. தங்கள் உம்மாவின் புகை படம் கண்டவுடன் பழைய நினைவுகள் நான் மாமியை[உங்கள் ராத்த]பார்க்க வரும்பொழுது வாஞ்சையோடு வரவேற்ப்பார்கள் உங்கள் உம்மா அவர்கள் சுவர்க்கம் புக எனது துஆக்கள்

    குழந்தை பிறக்கையிலே
    அழக்கான்போம்
    அம்மாவின் பிரசவ வலி
    உணர்ந்த பிள்ளை
    அழுகாமல் என்செய்யும்
    நம்மை பெற்றெடுக்க
    மட்டுமா?
    வலி சுமக்கிள்
    நம்மை வளர்த்தெடுக்கவும்
    நற் பிள்ளையாய்
    உருவாக்கவும்
    எவ்வளவு சிரமப்படுகிறாள்
    அம்மான்னா சும்மாவா

    ReplyDelete
    Replies
    1. என் உம்மாவுக்குச் சுவனபதி கிடைக்கட்டும் என்ற உறவினரான உங்களின் வாழ்த்துக்கு என் உம்மாவின் சார்பிலும் என் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      \\அம்மாவின் பிரசவ வலி
      உணர்ந்த பிள்ளை
      அழுகாமல் என்செய்யும்//

      பார்த்தீர்களா! அம்மா என்னும் எழுத்தே கவிதை தான்; நம்மை உலகுக்கு வெளிக்காட்டிய முதலெழுத்தும் அம்மா; நாம் பள்ளியில் படித்த முதலெழுத்தின் விளக்கமும் அம்மா; இப்பொழுது உங்களையும் கவிதை வனையத் தூண்டியதும் அம்மா என்ற அவ்வுணர்வின் தாக்கம்!

      Delete
    2. பதில் கொடுத்த மச்சானுக்கு நன்றி.

      Delete
  9. அம்மாவை பற்றிய கவிதை அருமை

    அம்மாவை நினைவு கூர்ந்து உள்ளமுறுகி எழுதியுள்ளீர்கள்,
    அனைத்தும் சிறாப்பான வரிகள்/

    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  10. இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம்
    .....ஈடில்லா அம்மாவின் அன்பு வெள்ளம்.....

    எதற்கும் ஈடில்லாதது அம்மாவின் அன்பு நல்ல பகிர்வு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. ஓர் அன்னையாய் இருக்கும் பெண்மையின் பாராட்டுகளை உண்மையில் என் கவிதையுடன் இணைந்து அடியேனும் நன்றி கூறுகின்றோம்.

      Delete
    2. பதில் கொடுத்த மச்சானுக்கு நன்றி.

      Delete
  11. அம்மா? பெற்ற பிள்ளயை கருவறைலிருந்து கல்லறை வரை நிணைக்க கூடிய ஒரே ஜீவன்.

    சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  12. கருவறைக்குப் பின்னும் கனவிலும் எங்கள் உறவு தொடர்வது தான் எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டது அன்பு நேசர் ஹபீப் அவர்களே! அதனாற்றான்,

    //துடிக்கின்ற என்னுள்ளம் அறிய வேண்டும்
    ..தொடர்ந்துநீயும் கனவினிலே வரவும் வேண்டும் !\\

    என்று ஏக்கத்துடன் முடித்தேன்!

    உங்களின் வாழ்த்துக்கு உளம்நிறைவான நன்றிகள்!

    ReplyDelete

  13. வணக்கம்!

    அபுல்கலாம் அவா்களுக்கு வணக்கமும் வாழ்த்தகளும்
    முதல் முறையாகச் சிறந்த மரபுக்கவிதையை இன்று கணடேன்!

    பெற்றெடுத்த நற்றாயின் பெருமை யாவும்
    பேருலகின் விளிம்புகளைத் தாண்டிச் செல்லும்!
    சொற்றொடுத்த செந்தமிழே! உன்னைப் போன்று
    சுரக்கின்ற தேனுாற்றாம் அன்னை உள்ளம்!
    பற்றளித்த பயனளித்த பாரின் மேன்மை
    பயிற்றுவித்த முதலாசான்! தெய்வம் அம்மா!
    கற்றெடுத்த கவிக்கலையில் வாடா மாலை
    கட்டுவித்த அபுல்கலாம் வாழ்க நீடே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் அய்யா அவர்களின் வாழ்த்துக்கு என் உளம்நிறைவான நன்றிகள்1

      கற்றவர் நீங்கள் கனிவுடன் வாழ்த்திய
      நற்றமிழ்ப் பாவில் நனைந்து

      நண்பரே வருக! நற்றமிழ் விருந்தருந்தருக!!

      Delete
  14. அன்பான உங்கள் அம்மாவிற்கு வார்த்தைகளால் பாமாலை கட்டியிருக்கிறீர்கள்.
    சுவர்கத்தில் இருக்கும் உங்கள் அம்மா உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு தாயின் அருமையை- தாயின் பெருமையை ஒரு தாயாக இருக்கும் உங்களால் உன்னிப்பாய்க் கவனிக்கப்பட்ட என் கவிதையும் பேறு பெற்ற கவிதையானது! உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் உளம்நிறைவான நன்றிகள்!

      Delete
    2. பதில் கொடுத்த மச்சானுக்கு நன்றி.

      Delete
    3. நன்றியை ஏற்கிறேன் மச்சான்!

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers