.

Pages

Monday, May 27, 2013

வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு [ நிறைவுப்பகுதி ]

குறுந்தொடர் : III [ நிறைவுப்பகுதி ]

இக்குறுந்தொடரின் இரண்டாவது பகுதியை இப்படி முடித்து இருந்தேன்.

//காரணம் இல்லாமல் காரியம் நடக்காதே! இதெற்கெல்லாம் என்ன காரணங்கள் ?

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள் . 

அவை என்னென்ன ? பார்க்கலாம். //

இப்போது தொடர்ந்து பார்க்கலாம்.

திட்ட கமிஷன் என்பது ஒவ்வொரு நாட்டின் பொருளாதார கட்டமைப்புகளுக்கான உயிர்நாடியாகும். ஐந்தாண்டுத்திட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் , மக்கள் நலவாழ்வுத்திட்டங்களும் இந்தக்குழுவில் இருக்கும் மகாபனுவர்கள் தரும் செயல் அறிக்கைகளை வைத்துத்தான் மேற்கொள்ளப்படும். ஆனால் இவர்கள் தரும் பொருளாதார அறிக்கைகளைப்பார்த்தால் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக உண்மைப் பொருளாதார, சமூக சூழ்நிலைகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டு இப்படி பித்தலாட்டமான அறிக்கை தருவது காட்டில் நிலவு காய்வதற்கும் கடலில் மழை பெய்வதற்கும் ஒப்பானது. பயனாளிகளுக்குப்பயன்படாதது.
திட்டக்கமிஷனின் தில்லுமுல்லு அறிக்கைக்கு காரணங்களாக கருதப்படுபவை அல்லது கணிக்கப்படுபவை.

1. உலக வங்கியை திருப்திப்படுத்த
2. உலகபெருங்குழுமங்களின் இசைக்கேற்ப நடனமாட
3. உலக நாட்டினரின்முன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்கிற மாயமான தோற்றத்தை சித்தரிக்க,
4.  உள்நாட்டில் வறுமை ஒழிப்புத்திட்டங்களை ஒழித்துக்கட்ட
5.  முக்கியமாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு தரும் மானியங்களைக் குறைக்க,
6. நிர்வாக கோளாறுகளை மறைக்க,
7. கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறையை கண்டுகொள்ளாதிருக்க

இத்தகைய காரணங்களால்தான் இப்படி ஒரு செப்பிடுவித்தைக்குள் திட்ட கமிஷன் இறங்கி இருக்கிறது என்று காரணங்களைச் சொல்லலாம்- சொல்கிறார்கள்.

அண்மைக்கால இந்திய அரசின் பொருளாதார கொள்கை ரீதியான நடவடிக்கைகள் உலக வங்கியை திருப்திப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. முக்கியமாக நாட்டின்  முதுகெலும்பான விவசாயத்துக்கான முதலீடுகள் குறைக்கப்பட்டு பெருந்தொழில்களுக்கான முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது உலக வங்கியின் தலையணை மந்திரத்துக்கு உட்பட்டே. பெருந்தொழிலகள் பெருக்குவதற்காக விவசாய நிலங்கள் உலகவங்கியின் வழிகாட்டுதல்களின்பேரில் அபகரிக்கப்படுகின்றன. இருக்கும் நிலத்தையும் இழந்த ஏழை விவசாயி வறுமைக்கோட்டின் கீழாவது படுத்து ஒய்வு எடுக்க முடியவில்லை. ஒரு பொருளாதார அறிக்கையின்படி “ Structural adjustment policies prescribed by the International Monetary Fund (IMF) and the World Bank as conditions for loans and repayment.” என்ற வரிகள் விளங்க வைக்கும் .

உணவுதானிய வேளாண்மையானது குறைக்கப்பட்டு பணப் பயிரை நோக்கி திருப்பிவிடப்பட்டது. அதற்கு உழவர்களை விரட்டுவதற்கு ஏற்ப உணவுதானியக் கொள்முதல் விலை திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டது. இதனால் உணவுப் பயிரிட்டு வந்த உழவர்கள் பணப்பயிரை நோக்கி விரட்டப்பட்டார்கள். இதே மாதிரிக் கொள்கை இந்தியா போன்ற உலகின் பிற பின்தங்கிய நாடுகளிலும் உலகவங்கியால் கட்ன்தரப்பட்ட நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. பருத்தி, மூலிகை போன்ற மாற்றுப் பயிர் சாகுபடி எல்லா நாடுகளிலும் ஊக்குவிக்கப்பட்டது. இவை ஏற்றுமதிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் வறுமைதான்  வளர்ந்தது.
உழைப்பவர் வாழ்வே வீதியிலே! உறங்குவதோ நடை பாதையிலே! இரக்கம் காட்டத்தான்  நாதி இல்லே!

அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை. அந்நிய நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரியும் இல்லை. நாட்டின் மூலவளங்கள் பெருங்குழுமங்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன. கோதாவரி நதி தீர எரிவாயு உரிமைப்போராட்டதில் சகோதரர்களின் பங்காளி சண்டைக்கு நாட்டின் பிரதமர் கட்டைப் பஞ்சாயத்துபண்ணுகிறார். கறுப்புப்பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலைத் தர மறுக்கிறது அரசு. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிவிடுமென்ற அச்சம்தான் காரணம். . நாட்டை வணிகப்பாத்தி கட்டி பன்னட்டுக்குழுமங்களுக்கு விற்கத்துடிக்கிறது அரசு. சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் கொள்கை அவசர அவசரமாக “கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வை” என்ற நோக்கில் அரசு துரிதகதியில் செயல்பட நினைத்தது.

பன்னாட்டுக்குழுமங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி விமான நிலையங்களை புதிதாக கட்ட ரூ. 10,000  கோடி ஒதுக்கினார்கள். காமன்வெல்த் விளையாட்டுக்காக ரூ. 60,000   கோடி ஒதுக்கினார்கள்.  காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு ஒதுக்கிய தொகை போதவில்லை என்று ஏழ்மை ஒழிப்பு, மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளை திசை திருப்பினார்கள்.

Tens of millions of dollars have been diverted in India from schemes to fight poverty and used to fund Delhi's Commonwealth Games, a report says. The Housing and Land Rights Network pressure group says its report is based on official documents obtained under India's right to information act. The group says there should be an independent inquiry into how this was allowed to happen. [ Source: BBC News 14th May 2010. ]

இப்படி உலக வங்கி என்ற மாமியாரும், பன்னாட்டுக்குழுமங்கள்  என்கிற மனைவியும் சொல்லும் சொல்கேட்டு ‘ மாமியா வீட்டோட போய்விட்ட மருமகன் ‘ போல் மத்திய அரசு செயல் படுகிறது. மாமியார் வீட்டில் போய் இறங்கி மாமியார் வீட்டு ஜனங்கள் கூடி “ பொட்டி” பிரிக்கிறார்கள். தாய் வீடோ, விவ்சாயம்போல் புறக்கணிக்கப்படுகிறது.  உலக வறுமையின் காரணங்களை ஆய்ந்த அறிக்கை கூறுகிறது.

To attract investment, poor countries enter a spiraling race to the bottom to see who can provide lower standards, reduced wages and cheaper resources. This has increased POVERTY and inequality for most people. It also forms a backbone to what we today call globalization. As a result, it maintains the historic unequal rules of trade.

அடுத்து, நிர்வாகத்தில் கோளாறுகள்,  முக்கியமாக உணவுபங்கீட்டில் பாகுபாடுகள், ஊழல்கள், கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமை ஆகியவற்றை குறிப்பிடலாம். நாட்டின் உணவு  உற்பத்திப் புள்ளி விவரங்களை உணவுத்தேவையின் புள்ளிகளோடு ஒப்பிட்டால் உற்பத்தி தன்னிறைவு அடைந்துள்ளது. அதாவது நமது அனைத்து மக்களுக்கும் தேவையான அளவு உணவு உற்பத்தி ஆகியே  இருக்கிறது. ஆனாலும் பட்டினிச்சாவுகள் என்? பற்றாக்குறை ஏன்? திட்டமிடப்படாத பகிர்விலும் பாதுகாப்பிலும் ஏற்பட்ட ஒட்டைகள்தான் காரணங்கள்.
உணவு உற்பத்தி

2008- 2009 218.20  மில்லியன் டன்
2009- 2010 237.47  மில்லியன் டன்  அதாவது உற்பத்தியின் அளவு  உயர்ந்தே இருக்கிறது.

ஆனாலும் ஒருகோடியே அறுபத்தொன்பது லட்சம் டன் உணவுப்பொருள்கள் சரியான சேமிப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வீனாகிப்போயின.

ஒரே ஒரு சோற்றுப்பருக்கை உண்ணும் தட்டில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் எடுத்து சாப்பிடு, தட்டையை வழித்து சாப்பிடு , கைவிரல்களை சூப்பி சாப்பிடு என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் வியர்வை சிந்தி உற்பத்தியான டன் கணக்கான உணவுப்பொருள்கள் வெயிலிலும் மழையிலும் கிடந்தது வீணாக விட்டது யார் குற்றம் ?

திட்டமிட்ட பகிர்வு இல்லை- சேமித்துவைக்க வக்கில்லை. பகிர்ந்தளிக்கும் திட்டங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது . இதோ உலகவங்கியின் அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது.

Corruption in developing countries definitely must be high on the priority lists (and is increasingly becoming so in the wake of the global financial crisis), but so too must it be on the priority lists of rich countries. World Bank report said attempts by the Indian government to combat poverty were not working. It said aid programmes were beset by corruption, bad administration and under-payments.

இத்தகைய காரணங்களால் தங்கள் மீது எழுப்பப்படும் கேள்விக்கணைகளை தாங்க வக்கில்லாமல் வறுமைக்கோட்டின் துப்பட்டிக்குள் நுழைந்துகொண்டு பேராசிரியர் சுரேஷ் டி. தெண்டுல்கர் தந்த வக்கற்ற அறிக்கையை வகையில்லாமல் ஏற்றுக்கொண்டு தனது கையால் ஆகாத தனத்தை வறியவர், எளியவர், வகையிலர், தொகையிலரின் வாழ்வின் மேல் தாக்கி இருக்கிறது மத்திய அரசு.

மக்கள் இளிச்சவாயர்களாக விழிப்புணர்வற்று இருக்கும்வரை இதுபோன்ற செயல்களே நடக்கும்.
இதோ வைரமுத்து

சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே!
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மக்களின் அறியாமையை பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அதை ஏற்றுகொள்வார்கள் என்று கருதும் அரசுகள் அழியவேண்டும். அழியுமா ? அழிப்போமா ? எதை எதிர்க்காவிட்டலும் இந்த அரசின் வறுமைக்கோட்டு அறிக்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

வழக்கு மன்றம் முடிவுறுகிறது. வறுமைக்கோடு வழக்கு கூண்டிலேயே தளர்ந்து போய்  நின்றது ஒரு பாட்டில்  தண்ணீர் வாங்கிக்குடித்து தளர்ச்சியைப் போக்கிகொள்ளக்கூடாதா என்று கேட்டேன்.  வறுமைக்கோடு  என்னைத்திருப்பிக் கேட்டது இருக்கும் 22/=ரூபாயில், 14/= ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்கி விட்டால் பாக்கி 8/= ரூபாயை வைத்து நான் நாக்கு வழிக்க்கவா ?  என்று எனக்குத் தெரியவில்லை.

யாரைக்கேட்கலாம் ? எக்ஸ் க்யூஸ் மி இந்த அட்ரஸ் எங்கே இருக்குதென்று சொல்ல முடியுமா ? மன்மோகன் சிங், ரேஸ் கோர்ஸ் ரோடு, புது டில்லி.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

12 comments:

  1. அரசியலில் கூட்டணி அமைப்பதற்கே அவர்கட்கு நேரம் போதவில்லையே; இதில் இப்படிப்பட்ட அருமையான பொருளாதார விடயங்களில் ஒருபோதும் ஆழ்ந்துச் சிந்திக்க மாட்டார்கள். மக்களும் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் கீழ்த்தரமான நிலைமைக்கு வந்து விட்ட பின்னர் அரசியல் என்பது விளையாட்டாகவும்; விளையாட்டு என்பது அரசியலாகவும் போய்விட்டது, ஆயினும் அரசியலிலும் , விளையாட்டிலும் “ஊழல்” மட்டும் பட்டொளி வீசிப் பறக்கிறது!

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் இந்த ஏழை இந்தியன் என்பதை நன்றாகவே கணித்து வைத்துள்ளனர்.

    ReplyDelete
  2. சமூகத்தை புரட்டிப்போடக்கூடிய தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் வாசிப்பதில் மனமகிழ்வடைகிறது அய்யா.

    அய்யாவின் எழுத்துப்பணி வளர்க. நன்றி!

    ReplyDelete
  3. வெளி உலகம் அறியா அனைத்து விசயங்களையும் வெளிக்கொணர்ந்து வழக்குக் கூண்டில் வறுமையை வாய்திறக்க வைத்து விட்டீர்கள். அருமை.

    நிறையுரையாக தந்திருக்கும் இக்குறுந்தடரின் நிறைவான ஆக்கம் போல இன்னும் நிறைய விசயங்களுடன் தாங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சமூக விழிப்புணர்வு பக்கங்களின் வெற்றி

    பல திரட்டிகளின் அழைப்பே சாட்சி ...

    ReplyDelete
    Replies
    1. கடின உழைப்புக்கு நிஜாம் என்பதே நிஜம்!

      Delete
  5. பதிவுக்கு நன்றி.

    அருமையாக தொகுப்பு, எப்படி பின்னூட்டம் இடுவது என்றே தெரியவில்லை, எழுதுவது என்றால் எப்படியும் எழுதாலாம் ஏனென்றால் அந்த அளவுக்கு இன்று உலக அரங்கோடு ஒப்பிடுகையில் நம் பாரதம்?

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. குறுந்தொடர்கள் மூன்றும் அருமை !

    வறுமைக்கோடு பட்டியலில் வசதி படைத்தோரின் பெயர்கள் உள்ளதால் உண்மையான ஏழைகள் உதவித்தொகை பெற இயலாமல் தவிப்பதை கண்கூடாக் காண்கிறோம். பட்டியலை மறுபரிசீலனை செய்வது அரசின் முதன்மையான கடமையாகும்.

    இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து செயல்படுவது மிக அவசியம்.

    நல்லதொரு தொடரைத் தந்த மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. நன்றி நண்பரே !

    இணைய :) முயற்சிக்கின்றோம்

    ReplyDelete

  8. ஏ நாடாளுமன்றமே!
    வறுமைக் கோட்டிற்குக் கீழ்
    நாற்பது கோடிப் பேர் என்றாய்
    அறிவுக் கோட்டின் கீழ்
    அறுபது கோடிப் பேர்
    அதை மட்டும் ஏன்
    அறிவிக்க மறந்தாய்////
    செருப்பால் அடித்ததுபோல் வார்த்தை நன்று
    பணப்பயிராய் நோக்கி ஆங்கிலேயர் காலத்திலேயே விவசாயிகள் தள்ளப்பட்டார்கள் மறுத்தவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வங்காளத்தில்,குஜராத்தில் ஒரு வகை சாயம் தயாரிக்க உதவும் பயிர்களை ஆங்கிலேய அரசு பயிரிட சொன்னது அதை பயிரிட்டு பதப்படுத்தி லண்டனுக்கு அனுப்பி கொள்ளை லாபம் பார்த்தனர் வெள்ளையர்கள் என்ற வரலாறு உண்டு
    ஒரு தந்தை தமது பிள்ளைகளில் வருமானக்குறைவு உள்ள பிள்ளையைத்தான் அதிகம் கவனிப்பார் இந்த நாடும் நலிந்த விவசாயிகளை கவனிக்காமல் பணம் கொழிக்கும் அந்நிய நாட்டு முதலீட்டை ஆதரிக்கின்றது ஓர வஞ்சனை கொண்ட தந்தைபோல்

    ReplyDelete
  9. அருமையான தலைப்பு பதிவுக்கு நன்றி.

    மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே நாட்டின் வறுமைக்கோடு என்ற அந்த பாதை முடிவுக்கு வரும்.

    ReplyDelete
  10. அன்பின் சகோதரர்கள் பலர் ஆழ்ந்து படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers