.

Pages

Monday, June 24, 2013

இந்திய ரூபாய் மதிப்பு விழுவது எழுவதற்கா !? அழுவதற்கா !?

அண்மையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அந்நிய செலாவணி சந்தையில் இந்தியா ரூபாயின் நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் பல வினாக்களை பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைப்பற்றிய ஒரு சிறு விளக்கக் குறிப்பைத்தரவே இந்தப் பதிவு அவசியமாகிறது.

தொடங்கும் முன்பு ஒரு வார்த்தை – குறிப்பாக வளைகுடா நாடுகளில்  ஊதியம் ஈட்டுவோருக்கும் – NRI  என்ற பட்டம் பெற்றோருக்கும் கூறிட விரும்புகிறேன். அமெரிக்க டாலரின் விலை ஏற்றத்தின் விளைவாக நாம் அயல்நாடுகளில் சம்பாதிக்கும் தொகைக்கு இந்தியப் பணத்தில் அதிக அளவு கிடைப்பதாக எண்ணி நாம் ஒரேயடியாக மகிழ முடியாது. காரணம் நம்முடைய பண வருமானத்தின் அளவு கூடி இருக்கலாம். ஆனால் உண்மை வருமானத்தின் அளவு கூடவில்லை. பொருளாதார கலைச் சொற்களில் பண வருமானத்துக்கும் , ( DIFFERENCE BETWEEN MONEY INCOME AND REAL INCOME ) உண்மை வருமானத்துக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. அதாவது நம்முடைய ஊதிய வருமானத்தில் செலவு போக நம் கையில் சேமிப்பாக மிஞ்சுவதன் அளவுதான் உண்மை வருமானமாகும். அதைவிட்டு அதிக  பண அளவிலான  வருமானம் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கிடைத்தாலும் நமது வழக்கமான செலவுபோக கையில் மிஞ்சாமல் பற்றாக்குறைதான் நிலைமை என்றால் அது நமக்கு பண வருமானமேயன்றி நமது உண்மை வருமானமல்ல. நமது நாட்டின் பணத்தின் மதிப்பு குறைகிறது என்றால் நாம் உபயோகப்படுத்தும் அல்லது நுகரும் பொருள்களின் விலையும் கூடுகிறது அல்லது கூடும் என்று பொருள். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றும் வேண்டாம் கடந்த மாத காய்கறி விலைகளையும் இந்த மாதம் விற்றுக் கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும்.

அதே நேரம் நாம் அயல்நாட்டில் ஈட்டும் சம்பளத்தைக்கொண்டு , இப்போதைய செலாவணி விகிதத்தில் ஊருக்கு பணம் அனுப்பி நாம் ஏற்கனவே வாங்கி இருந்த கழுத்தை நெறிக்கும் கடன்கள் இருந்தால் அவைகளை உடனே தீர்க்க முயற்சிக்கலாம். பேசிமுடித்து முன் பணம் மட்டும் கொடுத்து வந்திருக்கும் சொத்துக்களை இப்போது கூடுதலாக பணம் அனுப்பி பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயல்கள்   ஓரளவுக்கு நமக்கு பயன்தரும் என்பதை சொல்லிக்கொண்டு இதைப்பற்றி சில குறிப்புகளை அலசலாம்.

கடந்த ஓராண்டாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல விழுந்துகொண்டிருந்தது; ஊசலாட்டம் ஆடிக்கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம்.  2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து சற்றேறக்குறைய இப்போதைய  வீழ்ச்சிவரை ரூபாயின் மதிப்பு 22% சரிந்து வந்திருக்கிறது. பொருளாதார வல்லுனர்கள் இந்த சரிவு இன்னும் தொடரும் என்றுதான் கணக்கிடுகிறார்கள்.

இதற்கு நச் என்று ஒரு தலையாய காரணம் சொல்லவேண்டுமானால் அமெரிக்க டாலருக்கான நமது நாட்டின் தேவைகள் அதிகரித்துவிட்டன என்று சொல்லலாம். பொதுவாக பொருளாதார கோட்பாடுகளின் அரிச்சுவடி, எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் தேவை அதிகரித்து அதற்குத் தகுந்தபடி வரத்து இல்லையோ அந்தப்பொருள் அல்லது சேவைகளின் விலை உயரும் என்பதாகும். தக்காளி முதல் தங்கம் வரை இதே கோட்பாடுதான். அதன்படி பல்வேறு காரணங்களுக்காக நமது நாட்டின் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இருக்கும் தேவைக்கு  சம்பந்தமே இல்லாமல் அமெரிக்க டாலரின் வரத்து குறைந்துகொண்டே போகிறது. இது முக்கிய காரணம்.

இப்படி தேவைகள் அதிகரித்து இருப்பதும் வரத்து குறைவாக இருப்பதும் அரசுக்கு தெரியாமல் திடீரென்று நடந்ததல்ல. இப்படி நடக்கும் என்று பல பொருளாதார மேதைகள் எச்சரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஆறு பொருளாதார நிபுணர்களைக்கொண்ட நமது நடுவண் அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்  பெருமக்களுக்கு அயல்நாட்டு சுற்றுப்பயணம் பெருகியது மட்டுமல்ல அதற்கான செலவுகளையும் அரசே கொடுத்ததால் அந்த வலி தெரியவில்லை.

இப்படி நமது நாட்டுக்கு அமெரிக்க டாலரின் பற்றாக்குறை ஏற்பட மூன்று  முக்கியமான காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.

முதலாவதாக அந்நிய முதலீடுகளின் வெளியேற்றமும், குறைவான ஏற்றுமதிகளும். நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் இரு வழிகள் நமது நாட்டில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளும், நாம் செய்யும் ஏற்றுமதி மூலம் வரும் பட்டியல் தொகைகளுமே ஆகும். 2000 – ஆம் ஆண்டு நம்மை நோக்கி அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வரத்தொடங்கின. இவைகள் பெரும்பாலும் அந்நிய நாட்டினர் நம் நாட்டில் செய்த முதலீடுகள் மட்டுமல்லாமல் நமது அரசியல்வாதிகள் செய்த மாயஜாலங்களின் மூலமும் கருப்பை வெள்ளையாக்கும் அகடம் பகடம் மூலமும் வந்தவை. ( படிக்க: எனது முந்தைய பதிவு அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும் என்ற தலைப்பில் ) ஆனால் எப்படியானாலும் அவை அமெரிக்க டாலர்களாக வந்தன. ஆனால் சமீக காலத்தில் இந்த முதலீடுகளும் அதன் மூலமாக கிடைத்த இலாபங்களும்( REPATRIATION) வெளியேறத்தொடங்கியுள்ளன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2000  ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை நமது நாட்டிலிருந்து அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் வாபஸ் பெறப்படவில்லை.

ஆனால் 2009 ல் 3.1 பில்லியன் டாலரும், 2011 ல் 10.7 பில்லியன் டாலரும் நமது நாட்டின் அந்நிய மூலதனத்திலிருந்து வெளியேறிவிட்டன. 2012 ல் 19 பில்லியன்  பிளஸ் டாலர்வரை வெளியேறின. 

(கிளிக்கு ரெக்கை முளைச்சுடிச்சு. ஆத்தைவிட்டு பறந்து போயிடுச்சு.)
 இப்படி அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு செய்த பணத்தை உருவிக்கொண்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடுவதற்குக் காரணங்கள்? ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி யார் இறைப்பார்கள்? நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, கூட்டணி அரசின் நிலையற்ற கொள்கைகள், வணிக கோட்பாடுகளுக்குட்படாத திட்டமிடமுடியாத செலவினங்கள் என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. வணிக கோட்பாடுகளுக்குட்படாத  செலவினங்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு காரியம் நடத்திகொள்வதற்காகக்  கொடுக்கப்படும் இலஞ்சம் ஆகும். இவைகளுக்கு பயந்து அந்நிய முதலீடுகள் வாபஸ் பெறப்படுகின்றன.

இரண்டாவதாக கச்சா எண்ணெய் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கூடுவது ஒருபுறம் அதற்காக அமெரிக்க டாலரில் செலுத்தவேண்டிய பணம் கைவசம் இல்லாவிட்டால் சந்தையில் அதிக விலை கொடுத்தேனும் டாலரை வாங்கி செலுத்தவேண்டிய கட்டாயம். இதனால் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவை, சந்தையில் டாலருக்கான விலையை ஏற்றிவிடுகிறது.

மூன்றாவதாக யூரோவுக்கு வந்துள்ள சோதனை. உலகின் அந்நிய செலாவணி சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக கருதப்படுவது யூரோ எனப்படும் ஐரோப்பிய யூனியனின் செலாவணியாகும். இந்த யூரோ ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொது செல்வாணியாகும். ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில்  கிரீஸ் – கிரேக்கம்-  நாடு ஒரு அங்கமாகும். கிரீஸ் நாட்டில் பலவித காரணங்களால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஒரு அங்கத்தினர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்ற அங்கத்தினர் நாடுகளை பாதிக்கும் என்று அஞ்சும் நாடுகள் கிரீஸை ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒதுங்கிவிடும்படி வற்புறுத்துகின்றன. அப்படி கிரீஸ் வெளியேறும் சூழ்நிலையில் யூரோவின்மேல் உள்ள அழுத்தம் அதிகமாகி  மதிப்புகுறையும். இதைக் கண்ட உலகின் மற்ற நாடுகள் யூரோவை வைத்து முதலீடு செய்வதை தவிர்த்து அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் தொடங்கி இருககிறார்கள்.

இதனாலும் உலக அளவில் அமெரிக்க டாலரின் விலை உயர்ந்து வருகிறது. குற்றாலத்தில் இடி இடித்து கோயம்புத்தூரில் மழை பெய்வதுபோல்தான் இந்தக் கதை . இதற்குக் காரணம் உலகமயமாக்கல் என்ற பொருளாதரத்தில் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் அசுரனும் அவனை ஊட்டி வளர்க்கும் வல்லரசுகளுமாகும். இந்நிலை இல்லாவிட்டால் கிரீஸ் நாட்டில்  ஏற்பட்ட அரிப்புக்கு இந்தியா மற்றும்  ஏனைய நாடுகள் சொரிந்து கொள்ள வேண்டியதிருக்காது.

இந்த மாற்றங்களினால் நாம் எழுவோமா? அழுவோமா? பதில் என்ன வென்றால் நாம் இப்போது அழலாம் ஆனால் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் நம்மால் எழவும் முடியும் .

இப்போது எப்படியெல்லாம் நாம் அழவேண்டி இருக்கும் ?

1. பெட்ரோலுக்கு இன்னும் அதிக விலை கொடுக்க நேரிடும். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு தரும்  மானியம் அதிகரிக்கப்படவேண்டிவரும். அரசுமானியம் என்பது மன்மோகன்சிங் அல்லது மண்டேசிங் அலுவாலியா வீட்டுப் பத்தாயத்தில் உள்ள கோதுமையை விற்று வருவதல்ல. அரசின் மானியம் கூடினால் வரிச்சுமை கூடும் இதனால் விலைவாசி உயரும்.

2. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். ஒரு விவசாய நாட்டில் இன்றும் நிறைய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கேவலமான நிலைமையில் இருக்கிறோம்.

3. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை மட்டும் பெரிதாக பேசுகிறோம். . வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் நமது மாணவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும். விமானப் பயணத்தின் கட்டணங்கள் விமானம் பறக்கும் உயரத்துக்கு எகிறி விடும்.

4. விலை உயர்வால் நடுத்தரவர்க்கத்தின் நுகர்வு குறைவால் உற்பத்தியான பொருள்கள் தேக்கமடையும். உற்பத்திப் பொருள்களின் தேக்கத்தால் உற்பத்தி குறையும். முதலீடு செய்வோருக்கு முனைப்பு வராது. இலாபம் குறைவதால் சேமிப்பும்  அதன்மூலம் வரும் முதலீடுகளும் குறையும். பொருளாதார மந்த நிலை ஏற்படும்.

எப்படி எல்லாம் செய்தால் நாம் எழலாம் ?

1. ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் அமெரிக்க டாலரை வங்கிகளுக்கு திறந்த சந்தையில் விற்று பற்றாகுறையை சற்று சரிக்கட்ட உதவலாம். இது ஒரு தற்காலிக முதலுதவியாகும். நீண்ட நாட்களுக்கு குணமாக்கும் மருந்தை அரசுதான் தரவேண்டும்.

2. தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதலீடுமட்டுமல்ல தொழில் வளர்ச்சிக்கான  நீண்டகால கடன்களும் அமெரிக்க டாலரில் வாங்கிக்கொள்வதற்கு வகை செய்யலாம்.

3. எண்ணை நிறுவனங்களுக்கும், இன்றியமையாத பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிர்ணய விலையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவு அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யலாம். சந்தை நிலவரத்தில் வாங்கும் டாலரின் விலையில் உள்ள ஸ்திரமற்ற நிலையும் விலையும் இதனால் தவிர்க்கப்படலாம்.

4. கூட்டணிக்கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் போக்கை மத்திய அரசு கைவிடலாம். ஒரு நிலையான அந்நிய முதலீடு மற்றும் அந்நிய செலவாணி கொள்கைகளை அறிவித்து பின்பற்றலாம்.

5. நாட்டின் மூல கனிம வளங்களை தனியாருக்கு குறைந்த விலையில் தாரைவார்ப்பதை நிறுத்தலாம். முக்கிய வருமானம் வரும் சுரங்க கனிமங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டியலில் குறைத்து விலைபோட்டு – வித்தியாசங்களை சுவிஸ் வங்கியில் சேர்க்கும் சில அரசியல்வாதிகளின் ஊழல வெளிப்பட்டுள்ளதை தீவிர குற்றமாக கருதி அப்படி ஒதுக்கப்பட்ட மூல வளங்களை பறிமுதல் செய்யலாம்.

6. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் டெபாசிட்கள்  100 பில்லியன் வரை இருந்து இப்போது 50 பில்லியனாக ஆகிவிட்டது. ஊக்கப்படுத்தி அதிக டெபாசிட்டுகளை கவரலாம்.

7. உலகிலேயே அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு விதித்து கணவன்மார்களது கண்ணீரைத் துடைக்கலாம். வரதட்சணையாக தங்க நகை போடுவதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கலாம். ( யார் யார் அடிக்க வரப்போகிறார்களோ?).

அண்மையில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்கு மதி வரியை அதிகரித்தது. நிதியமைச்சர் தங்கத்தின் இறக்குமதியை குறைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அறிவிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். 8. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்கிறேன் என்று சில குருவிக் கூட்டங்கள் அமெரிக்க டாலரை சலுகைவிலையில் வாங்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் விற்கும் நிலைகளைக் கட்டுப்படுத்தலாம்.

பொருளாதாரத்தில் பண மதிபபு குறைவது என்பது உலக அரங்கில் ஒரு நாட்டின் மரியாதைக்குரிய  பிரச்னை.   2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம், நிலக்கரிச் சுரங்க வயல்களைக் குறைந்த விலைக்குக் குத்தகை விட்டது, கனிமச் சுரங்கங்களில் அரசியல்வாதிகளை விருப்பம்போலச் சம்பாதிக்க அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் செல்வம் குறிப்பிட்ட சிலரால் சூறையாடப்பட்டுவிட்டது. 2ஜிஅலைக்கற்றை, நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் போன்ற அரசுக்கு வருவாய் பெற்றுத் தரும் தேசச் சொத்துகளைச் சரியான முறையில் விலை நிர்ணயம் செய்திருந்தாலே போதும். இந்திய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.  இப்படி நாட்டின்  செல்வத்தின்  மூலமான வருமானம் இடைக்கொள்ளை இன்றி வகைப்படுத்தப்பட்டு இருந்தால் திடீரென்று உலகைத்தாக்கும் பொருளாதார வீழ்ச்சி சுனாமிகளில்  இருந்து தப்பித்துக்கொண்டு விழுந்த பொருளாதாரம் எழுந்த பொருளாதாரமாக நிற்கவே முடியும். அரபு தேசங்கள் அப்படித்தான் ஆடாமல் நிற்கின்றன.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

11 comments:

  1. இந்திய பொருளாதாரத்தை சரிசெய்யக்கூடிய சிறந்த படைப்பு !

    மிக்க நன்றி மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர் அவர்களுக்கு,

    அரசு இந்த ஆலோசனைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டால் நிச்சயம் மாற்றம் வரும்.

    ReplyDelete
  2. சூழலுக்கேற்ற ஆக்கம் ..

    மனித மேம்பாட்டு துறை நிபுணரின் ..

    பொருளாதார சிந்தனை போற்ற தக்க ஒன்று

    தங்களின் எழுத்து நல்ல விழிப்புணர்வை தரும் என்பதில்

    ஐயமில்லை ..

    ReplyDelete
  3. ம.வ.மே.துறை நிபுணர் அவர்களின் விளக்கமான கட்டுறை அனைவரும் படிக்கவேண்டிய ஆக்கம் திருப்பூரில் அயல் நாட்டு வர்தகத்தில் ஆர்டர் எடுக்கும் பொழுது டாலரின் மதிப்பில் புக் செய்து பொருள் அனுப்பும் சமயம் டாலர் மதிப்பு கூடினால் சந்தோசப்படுவார்கள் இன்று ஆர்டர் கொடுத்தவர்கள் டாலர் மதிப்பு கூடியதை அவர்களுக்கு பொறுக்காமல் அனுப்பிய பொருளுக்கு discount கேட்கிறார்கள் மனசாட்சி இல்லாமல்
    அதே நேரத்தில் டாலர் வீழ்ச்சி கண்டால் நமக்கு வரும் நஷ்டத்தை கண்டுகொள்ள மாட்டார்கள்

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    நம் நாடு.
    தாய் நாடு.
    சுரண்டலுக்கு பேர் போன நாடு.
    டொலருக்கு அடங்கிய நாடு.

    நம் நாடு மட்டுமல்ல உலகமும் திருந்தனுமா? நூஹு நபி காலத்து பிரளயம் மீண்டும் வரணும், எல்லாம் மடியனும், மீண்டும் புதுசா முளைக்கனும் அவ்வளவுதான், எல்லாம் சரியாகி விடும்.

    பயமா இருக்கு, அந்த உலகத்தை நினைத்து, ஒன்றுமே இருக்காது. ஆமாம் எதுவுமே இருக்காது, அப்போ என்ன செய்வது, மீண்டும் புதுசா பழயபடி உண்டாக்கணும், அப்படி உண்டாக்கினால் பல வருடங்கள் கழித்து இதைவிட இன்னும் மோசமாக இருக்கும்.

    அதுக்கு இதுவே தேவலாம் போல் இருக்குது.

    ஆண்டவனுக்கு வெளிச்சம்.

    நன்றி காக்கா, உங்களுடைய இந்த ஆக்கத்தை படித்துவிட்டு இப்படியெல்லாம் யோசிக்க வைக்குது.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. சிந்திக்கவேண்டிய ஆக்கம்.

    நாங்கள் 1983-ல் சவூதி அரேபியாவில் இருந்த காலத்தில் 320 ரியால் கொடுத்து இந்திய பணம் ஆயிரம் ரூபாய்க்கு டிராப்ட் எடுத்து அனுப்புவோம்.அன்று மாதம் வீட்டுச்செலவுக்கு அது போதுமானதாக இருந்தது ஆனால் இன்றோ துபையில் 65 திர்ஹம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எத்தனை மடங்கு இந்திய ரூபாய் வீழ்ச்சியடைந்து விட்டது.! ஆனால் இன்று சராசரியாக மாதம் ஒன்றுக்கு குடும்ப செலவுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் தேவைப்பாடுகிறது. இதை கணக்குப்பார்த்தாலே தெரியும் ரூபாயின் மதிப்பு குறைவதால் ஏற்ப்படும் விளைவுகள் எந்த அளவுக்கு பாதிப்புக்களை ஏற்ப்படுத்துகிறது என்பது.!

    ReplyDelete
  6. அன்பான நண்பர்களே!

    விலைவாசி ஏற்றத்துக்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.
    புனித நோன்பு மாதம் வர இருக்கிறது. கடந்த வருடம் நோன்புக் கஞ்சி காய்ச்சும்போது தக்காளி விலை கிலோ இருபது ரூபாய் வரை விற்றது. இஞ்சி கிலோ முப்பது ரூபாய் கொத்த மல்லி ஒரு கட்டு ஐந்து ரூபாய். இன்று தக்காளி கிலோ அறுபது முதல் எழுபது ரூபாய் இஞ்சி ...அல்லாஹு அக்பர் இருநூற்றி நாற்பது ரூபாய் கொத்தமல்லி கட்டு பத்து ரூபாய். முருங்கைக்காய் கூட காய் ஐந்து ரூபாயாகிவிட்டது. வாழைப்பூ பதினைந்து ரூபாயாம்.
    புளி சென்ற வருடம் முப்பது ரூபாய் இன்று நாங்கள் வாங்கினோம் எழுபது ரூபாய்.

    சென்ற வருடம் தாங்கள் முஹல்லாக்களில் கஞ்சிக்குப் பணம் கொடுத்தவர்கள் அதே அளவு கொடுத்தால் சிரமம். இரட்டிப்பாக அல்லது மேலும் கொடுக்க நேரிடும். இல்லாவிட்டால் தேங்காய்ப் பால் கஞ்சிதான் காய்ச்ச முடியும். இல்லாவிட்டால் கஞ்சி வெள்ளம்தான்.

    இது ஒரு சின்ன உதாரணம்தான்.

    பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால் விலைவாசி உயர்வைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் அள்ளி விடுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து பேங்க் ரேட் குறைந்து விட்டது என்று நினைத்து அதிகப் பணம் அனுப்பலாம் என்கிற நிலையில் இங்கு விலைவாசி அதற்கு மேல் தாறுமாறாக ஏறி இருப்பதால் கையில் பணம் மிச்சப் படும் நிலை இல்லை. உள்ளூரில் வேலை பார்த்து கூலி வாங்கி சாப்பிடவேண்டிய நிலையில் இருப்பவர்கள் பாடு மிகவும் சிரமம். இதனால் இன்னும் கூலிகள் அதிகரிக்கும். அப்படி அதிகமானாலும் கூலித்தொழிலார்களின் கஷ்டம் ஒன்றும் தீர்ந்துவிடாது. ஆகவே

    அண்டா குண்டா அடகு வச்சி பத்தலே பத்தலே பத்தலே பத்தலே பத்தலே பாட்டுத்தான் இருக்கும்.

    ஆனால் மீண்டும் சொல்கிறேன். ஏற்கனவே வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், வீட்டுக் கடன் வாகனக் கடன் வாங்கியவர்கள் நகைக் கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளில் சம்பாதித்துக் கொண்டு இருந்தால் இந்த டாலருக்கு எதிரான இந்தியப் பணத்தின் மதிப்பின் வீழ்ச்சியை பயன்படுத்தி தங்களின் கடன்களை அடைத்துவிட முயலலாம். அத்துடன் நிலங்களுக்கு முன்பணம் கொடுத்தவர்கள் பாக்கிப் பணத்தை அனுப்பி பத்திரம் பதிவு செய்து விடலாம்.

    ReplyDelete
  7. பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி

    ReplyDelete
  8. பொருளாதாரம் படித்தவர்கள் ஆட்சி செய்யும் நாட்டில் பணத்தின் மதிப்பு குறைந்திருந்தாலும் மற்ற எல்லா பொருட்களின் மதிப்பும் வரலாறு காணாத ஏற்றம் ! இவை அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகத்தான் கருத வேண்டும்.

    மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் !

    ReplyDelete
  9. பணத்தின் மதிப்பு சரிந்திருப்பது வருத்தம் தான். எதனால் என்று சரியாகப் புரிந்து கொள்ள முடியாத என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் கட்டுரை நிஜமான விழிப்புணர்வைத் தருகிறது.
    என்ன செய்தால் எழலாம் என்று கூறியிருப்பது நன்றாக இருக்கிறது.

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  10. மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர் அவர்கள் பொருளியலிலும் நிபுணரே! அவர்களின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் நமக்கு பல நடைமுறை செய்திகளை மிக நுணுக்கமாக தருவது என்பது மிகையாகாது.
    சில கீழ்கண்ட காரணங்களும் நமது ரூபாய் மதிப்பைக்குறைக்க காரணிகளாக இருக்கின்றது என்பதும் கவனத்தில் கொள்ளலாம்.
    அதிக வெளிநாட்டு முதலிடுகள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்துதான் இந்தியாவுக்குள் வருகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்ப்பட்ட வீழ்ச்சியால் அந்நாட்டு பெரும் நிறுவனகள் தங்கள் அதிக பாதிப்பை குறைக்க இந்தியாவில் அவைகள் செய்த முதலீடுகளை திரும்ப தங்கள் நாட்டுக்கே எடுத்து செல்வதால் டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனாலும் இந்திய ரூபாய் மதிப்பு குறைகிறது.
    இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வட்டிகளை குறைத்தது. அதன்முலம் வட்டி குறைந்ததால் அமெரிக்கர்கள் தங்கள் 1.35 பில்லியன் டாலர் நிலையான வைப்பு முதலீடுகளை திரும்ப எடுத்துக்கொண்டனர்.
    வெளிநாட்டு சந்தைக்கேற்ப இந்திய பொருள்கள் விலை குறைத்து விற்கவேண்டியுள்ளது.
    மனிதனின் தீராத நோய்களுக்கு காரணிகளான இயற்கை உரத்திற்கு மாற்றான இரசாயன உரம், பாரம்பரிய மருத்துவம் நசித்து நோய்நீக்கி என்ற தவறான பெயர் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்த ஆங்கில மருந்துகள், இரும்பு கனிமம் இவைகள் அதிகமாக இறக்குமதி செய்வதாலும், மேக்கண்ட காரணிகளாலும் டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இவைகளும் நமது ரூபாய் மதிப்புக்குறைய காரணிகளே!

    ReplyDelete
  11. அன்பான சகோதர சகோதரிகளே!

    'சிக்'கலான பொருளாதாரக் கட்டுரையைப் படித்து கருத்துரை பதிந்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers