.

Pages

Thursday, June 20, 2013

வேண்டும் அந்த வரம்

வாழை இலை விருந்து வேண்டாம்
வடை பாயச இனிப்பு வேண்டாம்
காலை மாலைத் தேனீர் வேண்டாம்
கழுத்துவரை விழுங்க வேண்டாம்

காய்ந்த வயிறு
பாய்ந்து உண்ணக்
கையளவு
சோறு போதும்

எட்டு மாடி கட்ட வேண்டாம்
எக்கச் சக்க அறைகள் வேண்டாம்
பட்டுத்திரைச் சீலை வேண்டாம்
பளபளப்புச் சுவர்கள் வேண்டாம்

கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடிசை போதும்

கழுத்துப் பட்டை எனக்கு வேண்டாம்
கோட்டு சூட்டு எதுவும் வேண்டாம்
கப்பல் விட்டுக் காற்றில் ஏறி
கண்டம் தாண்டிப் போக வேண்டாம்

பிழைக்க ஒரு
வழியைச் சொல்லும்
பிச்சை இல்லாப்
பிழைப்புப் போதும்

குடை விரிக்கும் கண்கள் வேண்டாம்
கொட்டும் அருவிக் கூந்தல் வேண்டாம்
நடை நிமிர்த்தும் படிப்பு வேண்டாம்
நல்லினியப் பேச்சும் வேண்டாம்

உடன் அழுது
குப்பை கொட்ட
ஒருத்தி வந்தால்
எனக்குப் போதும்

இப்படியாய் இருந்த தெல்லாம்
எப்படித்தான் மாறிப் போச்சோ
ஆகாயத்தை ஓட்டை போட்டு
அதுக்கு மேல கொடியை நட்டு

ஒய்யாரமா
வளந்து வளந்து
உசுரைத் தின்னு
வாழுதோ

வேண்டும்களின் பட்டியலில்
வேளைக் கொண்ணு மாறிப் போனா
மாண்ட பின்னும் நிம்மதிக்கு
மானிடரே வாய்ப்புண்டோ

தோண்டத் தோண்டப்
புதையல்கள்
தொலைந்து போகும்
இதயங்கள்

வேண்டாம் வேண்டாம் ஆசைகள்
வேதனையின் ஊற்றுக்கள்
வேணும் எனக்கு ஒற்றை வரம்
விபரமான மேன்மை வரம்

வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த வரம்
அன்புடன் புகாரி

7 comments:

  1. /// வேண்டாம் என்றே
    எண்ணும் வரம் ///

    சிறப்பாக முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வேண்டுவதும், வேண்டாமையும் பிரித்துக காட்டிய, தேன் பிழியும் தெவிட்டாத உன் கவிதை ஆசைகளை அடக்கக் கற்றுக் கொடுக்கும் ஞான வரம்; போதனைகள் பூக்கும் போதி மரம்!

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை

    கேட்ட வரங்கள் அனைத்தும் அருமை !

    ReplyDelete
  4. நடையழகு சிறப்பாய் அமைந்துள்ளது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஃஃஃஃவேண்டும்களின் பட்டியலில்
    வேளைக் கொண்ணு மாறிப் போனாஃஃஃஃ

    அருமையான வரிகள்

    அன்புச் சகோதரன்
    2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

    ReplyDelete
  6. வரங்கள் அனைத்தும் அருமை. இப்படியான வாழ்க்கை முறை அமைந்து விட்டால் வரத்தினை நம் மனிதர்கள் மாற்றியும் கேட்பார்கள்.

    ReplyDelete
  7. அன்பு கவி ..

    நீங்கள் வேண்டாம் என்ற சொல்

    வேண்டும் ..

    போதும் என்ற மனமே

    பொன் செய்யும் மருந்து

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers