.

Pages

Saturday, June 21, 2014

சுற்றி எரிகிறது ! சுந்தரத் தீவு !!

சுற்றி எரிகிறது
...சுந்தரத் தீவு
நெற்றி வைத்து
...நீளமாய்க் கேளு

காலமும் காணாக்
...காட்சித்தான் பின்ன
 பாலகர் செய்த
... பாவம்தான் என்ன?

கொடுமையிலும் கொடுமை
...கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
...களைந்துவிடும் தீமை

இறைவனின் கோபம்
....இவர்களைஅடையுமா?
விரைவுடன் தீர்ப்பு
...வந்திடவும்; மடிவர்

இறுதிநாள் வருகைக்கு
....இக்கொடுமை ஒருசான்றா?
உறுதியாய்க் கொடுமைக்கு
...உள்ளமெலாம் உருகாதா?

கொத்துக் கொலைகண்டு
...குழந்தைகள் நிலைகண்டு
கத்தும் கடல்கூட
...கதறுமே பழிதீர்க்க

தீர்ப்புநாள் வராதென்று
....தீதைச் செய்தாயோ?
யார்க்குமே அடங்காத
...யுத்தப் பித்தனே

அர்ஷில் எட்டும்
....அலறல் சத்தம்
குர்ஸி தட்டும்
...குழந்தை ரத்தம்

பாதிக்கப் பட்ட
...பள்ளியும் மக்களும்
நீதிக்கு முன்பு
...நிற்கின்ற வேளை

கூட்டுச் சதியால்
..கூடிக் குலாவி
வேட்டு வெடித்தல்
..வேடிக் கையே!

பொய்நாக் கூட்டம்
...புரிய வில்லையா?
ஐநா சபையோர்
...அறிய வில்லையா?

பிரிவினை கேட்டனரா?
பிரியமுடன் நடந்தனரா?
எரியுமுன் கோபமதில்
இழந்ததுவுன் பகுத்தறிவே!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

12 comments:

  1. இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொலை வெறி தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. முன்பு தமிழர்களை பலிவாங்கியவர்கள் இன்று இஸ்லாமியர்கள் மீது பார்வையை திருப்பியுள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. விரைவாகப் பதிவுக்குள் கொணர்ந்தமைக்கு நன்றி

      Delete
  2. அப்போது தமிழ் முஸ்லிம் தமிழர்கள் தாக்கப்படும்போது பார்த்து சிரித்து கொன்டிருந்தீர்கள் . இப்பொது உங்களுக்கு?

    ReplyDelete
  3. அன்பின் சகோதரா சிவாஜி, காத்தான்குடியில் பள்ளியில் தொழுகை நடத்தியவர்களை வைகறைப் பொழுதில் சுட்டுத்தள்ளியதும்; ஒரே நாளில் கிராமத்தை விட்டு முஸ்லிம்களை விரட்டியதும் கண்டு அடைக்கலம் அடைந்தனர் ஆளும் அரசிடம்; ஆனால் இன்று அடைக்கலம் நாடி வந்தவர்களையே அடித்து நொறுக்கினால் இவர்களின் பாடு பெரும்பாடு; இருதலைக் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி சிற்ந்ததது என்று பார்ப்பதை விட மொழியால் ஒன்றுபட்ட தமிழர்களுடன் இணைந்து வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு நிலைப்பாடு உண்டாகும் காலம் நெருங்கி விட்டது; ஆம். அதற்கான ஓர் ஏற்பாடாகவே இதனைக் கருதலாம். இலங்கை முஸ்லிம் தலைவர்களிடமும் குறைகள் பல உள என்பதை யாம் அறிவோம்.

    ReplyDelete
  4. இந்தப் பதிவின் நோக்கம்: உளமார்ந்து உள்வாங்கி உருக்குலைந்த அந்த மக்கட்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காகவே! வன்முறைகள் யார் செய்தாலும் யாம் ஏற்க மாட்டோம். அமைதியும், அன்பும் தான் உலகில் நிலையான ஒரு வளர்ச்சியாகும். அடக்குமுறை, கொடுங்கோன்மையைக் கொண்டு மதம், மொழி, இனத்தால் மனிதம் அழித்து மதம வளர்ப்பதை யாம் விரும்பவில்லை. உலகம் அமைதி பெற உருக்கமுடம் பிரார்த்திக்க வேண்டிய நோக்கத்தில் யான் எழுதிய இக்கவிதைக்கு விருப்பம் மற்றும் பாரட்டுகள் வேண்டாமென்றே வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன். பற்றி எரியும் கொடுமையைக் கண்டுப் பற்றி எரிந்த என் உணர்வினைக் கொண்டு படைத்தனன் இப்பாடலை.

    ReplyDelete
  5. தமிழ்க் கருவை அடியோடு அழிக்க நினைக்கும் இனவெறியர்களுக்கு ஐ.நா விரைவில் நல்ல பாடம்புகட்டிட வேண்டும். புத்த போதனைக்கு எதிர்மறையாய் மனித உயிர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்று குவிக்கும் சிங்கள இன வெறியர்களுக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கும் பிற மனிதாபிமானமுள்ள சிங்கள சகோதரர்களும் இத்தகைய இனமழிக்க நினைக்கும் போக்கிற்கு கண்டனக்குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மனிதாபிமானமுள்ள சிங்களர்களும் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை தமிழர்களுக்கு வரும்.

    ReplyDelete
  6. இரத்தம் கொதிக்கிறது
    ...இரக்கம் வெடிக்கிறது
    அரவம் கேட்கிறது
    ...அமைதி குலைகிறது.

    அலறுவார் தமிழுக்கு
    ...அறிவாரோ தமிழகறும் ?
    புலம்புவார் நம்புபவர்
    ...புரிவாரோ நம்மவரை !

    ஒற்றுமை கூறுவார்
    ...ஓரம் கட்டுவார்
    இற்று போய்விட்டது
    ...இனியுமா இதயத்தில் ?

    உசுப்புவார் தனக்கே
    ...ஓடுவோம் முருக்கியே
    பசப்புவார் நம்மை
    ...பறிகொடுத்தோம் வேலுரை

    எதிலும் தனிமை
    ...இப்படியா நிலைமை
    விதியை வெல்ல
    ...வேண்டுமே அல்லாஹ் !

    பிரிவினை விதைத்தாய்
    ...பிளவுகள் சுவைத்தாய்
    சொரிந்தாய் சுகத்துக்காய்
    ...சொட்டுகிறது வேதனையாய்

    உன்னிலே தொல்லை
    ...ஒற்றுமை இல்லை
    பின்னுவீர் உன்னில்
    ...பிரியாமை மண்ணில்

    இருந்திடு இணைந்து
    ...எடுத்திடு அனைத்து
    மருந்திடு மனதில்
    ...மதித்திடு குணத்தில்

    அன்றையர் வாழ்வில்
    ...அன்புகள் மலிந்தது
    இன்றையர் உலகில்
    ...இன்பங்கள் அழிந்தது

    இன்னுமா வேண்டும்
    ...இதயத்தில் மாற்றம்
    என்றுமே வேண்டாம்
    ...ஏகனில் பேதம் !

    சோதனை போக்க
    ...சொந்தத்தார் இழிக்க
    வேதனை விட்டு
    ...வெற்றியை மீட்டு

    நடந்திடு நாயகர்
    ...நடத்திய வாழ்வை
    தொடர்ந்திடும் உலகம்
    ...துயரங்கள் போகும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் கவிதை
      .....அளித்திடும் உண்மை
      துன்பமும் இயம்பும்
      ,,,,துயரமும் கூறும்.

      மிக்க நன்றி

      Delete
  7. சிங்கள ரத்த காட்டேரி களுக்கு
    லட்ச கணக்கான தமிழர்களின் ரத்தம் குடித்தது போறாது
    என்பதால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்
    கொடுக்கிறார்கள் போலும் .
    கவியன்பரின் கவி கண்ணீர் வரவழைத்து விட்டது

    ReplyDelete
    Replies
    1. என் கவிதை உங்களின் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது என்பதை விட, இலங்கையில் உள்ள தீவிரவாத இளங்கைகள் செய்த அட்டூழியம் கண்டே மனம் வெம்பிக் கண்ணீராய்ப் பெருகியது எனலாம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  8. முஸ்லீம்கள் மீது சிங்களவர்கள் முதல் தாக்குதலை 19௦௦ ல் ஆரம்பித்து விட்டார்களாம் பிறகு கிருஸ்துவர்கள் மலையாளிகள் என்று போய் பின் தமிழர்கள் மீது நீண்ட தாக்குதலை தொடர்ந்தார்கள் மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பம் செய்கிறார்களோ என்று அய்யமாக உள்ளது அல்லாஹ்வின் உதவி இலங்கை இஸ்லாமியர்களுக்கு கிடைக்க துஆ செய்வோமாக

    ReplyDelete
    Replies
    1. என் வாப்பா போன்று நமதூரின் முன்னோர்கள் 1957ல் இதே மாதிரியான இனக்கலவரத்தில் சொத்து, கடைகளை விட்டு விட்டு வந்ததைச் சிறுவயதில் கேட்டு வெம்பினேன்; இன்று கண்கூடாகக் காண்கிறேன்; மீண்டும் நினைவு படுத்திய உங்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers