.

Pages

Friday, March 27, 2015

[ 15 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(53)
இருக்கின்ற ஒவ்வொன்றும் எப்படி யென்றே
வருகின்ற உண்மையில் வாசி - அருமை
அறிந்திடுவாய் 'எங்கேயோ அல்லவொன்றே எங்கும்',
தெறிந்திடுமே உன்னிலே தீர்ப்பு.

(54)
தீர்ப்பு விரும்புவார் திண்ணமாய் எல்லோரும்
ஈர்ப்பு மலர இதயத்தில் - ஒர்ம
ஒருமை நிலையில் உதித்திடும் தீர்வே
அருமை அமைந்தவ் அறம்

(55)
அறமென்றால் தன்னை அறிவதே அன்றி
சிறக்காதே இல்வாழ்க்கைச் சீராய் - இறந்திடும்
முன்னே இறத்தல் முதலறமாம் வாழ்விலே
பின்னே வராதேப் பிழை.

(56)
பிழையெனக் கண்டே பிழைத்தல்தொடரும்
பழைமையில் ஊறிப் படர்ந்தே - அழைத்தே
வளைத்திட உள்ளம் வராதே தெளிவு
முளைக்கவே துன்பம் முடிவு
(தொடரும்)
நபிதாஸ்

வெண்பா (53
பொருள்: இவ்வுலகில் இருக்கின்ற ஒவ்வொன்றும் எப்படி உண்டாகியது என்றக் கேள்விகளைத் தன்னுள்ளே கேட்டுக் கொண்டே சென்றால் உன்னில் வரும் பதில்களை நன்கு ஆராய்ந்தறிந்து சிந்திக்க அதன் அருமை அறிந்திடுவாய். மகா வல்லமை எங்கேயோ இருக்கின்றது என்பதல்ல அந்த ஒன்றே எங்கும் எல்லாமாக இருக்கின்றது என்ற உண்மை உன்னிலே தீர்வாக அறிந்திடுவாய்.

வெண்பா (54
பொருள்: திண்ணமாக எல்லோர் மனதிலும் ஒரு தீர்ப்புமேல் ஈர்ப்பு மலர அத்தீர்ப்பு எல்லோராலும் விரும்பப்பட வேண்டும்ம். பாரபட்ச்சம் பார்க்காது ஒன்றே பலவென்றதான அனைவரும் சமமென்ற மனநிலையில்; மனஉறுதியில் உதிக்கும் தீர்ப்பானது அந்த அனைவராலும் விரும்பப்படுகின்ற அருமைகள் நிறைந்த அறமெனப்படும் எல்லோராலும் விரும்பப்படும் தீர்ப்பாகும்.

வெண்பா (55
பொருள்: தன்னைப்பற்றிப் பூரணத் தெளிவாக அறிதலே அறமென்பதாகும். அவ்வாறல்லாவிட்டால் பல்வேறு காலங்களிலும் அல்லது நிலைகளிலும் வாழ்க்கைச் சீராகச் சிறப்புடையதாகாது. அவ்வாறுத் தன்னை அறிதலின் மூலம் இவ்வுலக மாயவலையில் சிக்கி இதுதான் வாழ்வென்ற இந்த நிலையில்லாததான இவ்வுலகவாழ்வில் இவ்வுடல் அழியும் முன்னே நிலையற்ற இவ்வாழ்வை அறிந்துணர்ந்து இழந்து நிலையான அவ்வுலக வாழ்வை அறிந்து வாழ்தலே முதல் அறமாகும். அவ்வாரானப் பின்னே வாழ்வில் பிழைகளே உண்டாகாது.  

வெண்பா (56
பொருள்: தொடர்ந்துப் பழகிப்போனப் பழக்கவழக்கத்தால், பிழைப்புக்காகப் பிழையெனத் தெரிந்தும் தவறுகளை விடாதுத் தொடர்ந்துச் செய்வார்.அழைத்துச் சுட்டிக்காட்டினாலும் அவருள்ளம் வளைந்திடாது. அவரில் நற்தெளிவு மலர்ந்திட துன்பம் உண்டாகித் திருத்தும்.

6 comments:

  1. வணக்கம்

    அருமையாக உள்ளது இரசிக்கவைக்கும் வரிகள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அருமையாக உள்ளதென அன்புடன் ரூபன்
      பெருமையாகச் சொன்னதில் பேச - உருவமில்லான்
      அன்பினிலே மூழ்கி அவனுக்கே இப்புகழ்
      இன்பமுமே என்பதைநான் ஏற்று

      Delete
  2. துன்பத்தின் முடிவில்
    துயருறும் மனது
    இன்பத்தை அருந்த
    வெண்பாவை வாசி

    சங்கத்துத் தமிழை
    சரளமாய் உரைத்த
    உம் மகிமை அதுவோ
    உலகெங்கும் உரைக்க

    ReplyDelete
    Replies
    1. இன்பத்தின் உள்ளத்தில் எந்தன் அதிரைமெய்சா
      சொன்னதனின் சொற்கள் சுவைதானே - என்றாலும்
      என்னிலே வந்தவைகள் ஏகன் அருளாலே
      என்பதில் என்சொந்தம் எங்கு?

      Delete
  3. பொருள்: தன்னைப்பற்றிப் பூரணத் தெளிவாக அறிதலே அறமென்பதாகும். அவ்வாறல்லாவிட்டால் பல்வேறு காலங்களிலும் அல்லது நிலைகளிலும் வாழ்க்கைச் சீராகச் சிறப்புடையதாகாது. அவ்வாறுத் தன்னை அறிதலின் மூலம் இவ்வுலக மாயவலையில் சிக்கி இதுதான் வாழ்வென்ற இந்த நிலையில்லாததான இவ்வுலகவாழ்வில் இவ்வுடல் அழியும் முன்னே நிலையற்ற இவ்வாழ்வை அறிந்துணர்ந்து இழந்து நிலையான அவ்வுலக வாழ்வை அறிந்து வாழ்தலே முதல் அறமாகும். அவ்வாரானப் பின்னே வாழ்வில் பிழைகளே உண்டாகாது.

    சரியான சிந்தனை .வாழ்க வளர்க தங்கள் சிந்தை திறன் ...

    ReplyDelete
    Replies
    1. சிந்தனையில் மூழ்கிச் சித்திக்கின் சிந்தை(த்)திறன்
      தந்ததனில் எல்லாம் தலைவனுக்கே - எந்தன்
      இதயத்தில் ஆளும் இறைவனே உந்தன்
      உதயத்தில் மட்டும் உயர்வு.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers