.

Pages

Wednesday, April 8, 2015

[ 17 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(61)
அறிவும் அருவுருவம் அவ்விதம் உன்னில்
அறியா நிலையே அருவம் - அறியவே
எல்லா நிலையிலுமே இல்லா திருப்புகளும்
நல்லா அறிய நடிப்பு.

(62)
நடிப்புகள் உள்ளத்தின் நாட்ட நளினம்
துடிப்புகள் நம்பிக்கைத் தோற்றம் - தடிப்புகள்,
இல்லாத உள்ள இருப்பொன்றின் கானலேயாம்
அல்லாமல் வேறேது ஆற்று.

(63)
ஆற்றல்கள் தன்னை அறிந்திடத் தோற்றமாகி
ஏற்றங்கள் எய்த இயங்குமே - மாற்றங்கள்
நில்லாதே தோன்றியும் நித்தியம் சேர்ந்திடுமே
பொல்லாத வாழ்க்கைப் புரி.

(64)
புரிந்திட நிம்மதிப் பொய்மை அகற்றத்
தெரிந்திடும் ஆற்றல்கள் தேவை - சரியென்கின்
சத்தியம் அண்மித்தே சாந்தியாகிச் சந்திக்கும்
நித்திய உண்மை நிலை

நபிதாஸ்

வெண்பா (61
பொருள்: எதாவதொருப் புலனால் மட்டும் அல்லது மனதால் உணருவது அருவுருவமாகும். அவ்வகையில்அறிவு என்பது அருவுருவமாகும். அந்த அறிவானது மனதில் அல்லது சிந்தனையில் தோன்றும்முன் அது தோன்றாமை அல்லது இல்லாமை என்ற அருவமான நிலையிலாகும். அவ்வகையில் ஒரு அறிவானது அறியா அல்லதுத் தோன்றா நிலையினில் அது அருவத்தின் நிலையிலாகும்.

அதன்படி அறிவு அருவுருவம். அது அறியா (தோன்றா) நிலையில் அருவம். இவ்வாறுத் தன்னை அறியவே எல்லா நிலையிலும் அந்த அருவம் என்றத் தோன்றாமை இல்லாமையில் இருப்புகளாக உள்ளது. இதனை நன்குத் தெளிவாக அறிவோமானால் அருவமே அருவுருவமாக; உருவமாக நடிப்பதுப்போல் தெரியலாம்.

இல்லாதிருப்புகள் என்பது எதுவுமே நிலையானதல்ல அவைகள் மாற்றத்திற்குட்பட்டது; மாறிக்கொண்டேயிருக்கும். இருப்பதுபோல் இருக்கும் எதுவும் நிலைத்திருப்பதில்லையே. அவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு மாறிக்கொண்டே இருக்கின்ற அனைத்தும் இல்லாதிருப்புகள் ஆகும்.

வெண்பா (62
பொருள்: உள்ளத்தின் நாட்டத்தின் நளினமே நடிப்புகள் என்ற செயலகள். அச்செயல்களில் நம்பிக்கையின் விளைவால் ஒருவித எழுச்சி என்ற துடிப்புகள் உண்டாகும். நம்பிக்கையின் உறுதியில் துடிப்புகளாகி வடிவங்கள் என்றத் தடிப்புகள் உண்டாகும். நாட்டத்திற்குமுன் இல்லாத ஒன்று பின் இருப்பதுபோல் தோன்றுவது கானல்போன்றதாகும். இவ்வாறே சுயவொன்றே இல்லாதிருகின்றதே அல்லாமல் வேறு என்பதில்லையே என்பதாகும். இதனை அறிந்தாற்று.

வெண்பா (63
பொருள்: ஆற்றல்கள் அதுத் தன்னை அறிந்திடவே அதுவே தோற்றங்களாகித் தானே தன்னை அறிந்துத் 'தானேதான்' என்றுத் தெளிவுறும். அத்தகையத் தெளிவையடையும் ஏற்றங்கள் அடைய அதுத் தொடர்ந்துச் செயல்படும். இவ்வாறுத் தோன்றி மறையும் மாற்றங்கள் நிலையில்லாதது. நிலைக்காத நிலையின் மாற்றங்கள், மறு மாற்றங்களாகி நித்தியம் என்ற நிலையை அடைந்திடும் என்ற இப்பொல்லாத வாழ்க்கையைப் புரிந்துக்கொள்.

வெண்பா (64
பொருள்: நிம்மதி என்பதும் அல்லதும் பொய்யே என்பதைத் தெரிந்துக்கொள்வதற்கே ஆற்றல்கள் தேவையாகும். இது சரியென்றால் அல்லது புரிந்துக்கொண்டால் சத்தியம் என்ற உண்மை நெருங்கி மனம் அமைதியாகும் சந்திப்பு ஏற்படும். இதுவே நித்தியம் என்பதின் உண்மை நிலையாகும்.

2 comments:

  1. அறியா நிலையில்
    புரியாமனிதன்
    அறிவினை இழந்த
    தெளிவில்லா மனிதன்

    புரிதலில் அறிந்து
    புகழினை சேர்க்க
    அறிவினின் முதிர்ச்சி
    அடைவது நலமே

    ReplyDelete
    Replies
    1. அறியா நிலையில் அவனே குழந்தை
      அறிய அவனே அறிஞன் - அறிந்தே
      புகழை அடைவான் புரிதல் உயர்வே
      நிகழ விரும்பிடும் நீர்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers