.

Pages

Thursday, November 28, 2013

[ 11 ] அறிவுத்தேன் [ அருவில் உருவம் ]

ஒன்றது உருவம்
தானது இன்றி
தலைவன ரூவில்
சமைந்தது உருவம் !

தலைவன் அருவில் சமைந்த உருவம் எவ்வாறு ?
மண் ஆற்றல். இது திடத் தன்மையக் குறிப்பது. வடிவம் உள்ளது. நீர் ஆற்றல். இது திரவத் தன்மைக் குறிப்பது. நிலையான வடிவமில்லாத பொருள். திரவமேத் திடம், அதாவது திரவமே மண்ணாகி உள்ளது (என்று முன்பே பார்த்துள்ளோம்). இவ்விரண்டும் உள்ள நாம் வசிக்கும் கோலம் அதனை பூமி என்கிறோம். ஆனாலும் மண் வேறு, நீர் வேறு, பூமி வேறு என்று பிரிவாகத்தான் வழக்கில் கொண்டுள்ளோம்.

பிரபஞ்சம் தன் சூரிய குடும்பங்களின் பூமி போன்ற கோலங்களில்தான் அது தன்னைப் பூக்குமிடங்களாகக் கொள்கிறது.  பூமி என்ற மண்ணும் நீரும் உள்ள இப்பெரியக் கோலத்தில் ஐம் பூதங்கள் இணைய ஏதுவான தட்ப வெப்பச் சூழல் கொண்டு உயிராற்றல் உண்டாகி, அது உருவங்கள் என்ற தனித்த தன்மைகளாகி தன்னில் இயக்கங்களையும் உண்டாகிக் கொள்கிறது.

பிரபஞ்சமே தன்னைப் பலவாக மாற்றிக்கொண்டது என்ற கருத்தை முன்பே பார்த்துள்ளோம். அதுபோல் பூமியில் பல உயிரினங்கள், ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை அவ்வாறு பூமியின் இயக்கத்தோடு அவைகள் தனித்த இயக்கமும் தோற்றமும் கொண்டு ஒவ்வொன்றும் இயங்குகின்றன.
அவைகளில் தன்னைவிட ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவகைகளிலோ கூடுதல் ஆற்றல் மற்றது ஒன்று கொண்டிருந்தால் அது அவைகளின் தலைமைக்குத் தகுதியானது என்றும், மனிதன் என்றால் தலைவர் என்றும் சொல்கிறோம். ஆக தலைவனில் உள்ளது அனைத்திலும் உள்ளது. மேலும் சில பல தனித்தத் தன்மைகள் தலமையில் தலைமை நிலைக்கேற்ப வெளிப்படுகிறது.

பிரபஞ்சம் என்ற அரூபமே வெளி, காற்று, வெப்பம், நீர், மண் இவைகளின் அனைத்தினது மூலமாக இருக்கின்றது என்று பார்த்துள்ளோம். பூமியின் மூலம் மண்ணும், நீரும். அதுபோல் பூமியில் உள்ள அனைத்தினது மூலம் பூமி ஆகும். அனைத்தினது மூலத்தை விட்டு, மறந்து பூமியில் உள்ள அவைகள் ஒவ்வொன்றும் தனித்தது என்றும், தன்னில் உண்டாகும் அறிவு ஆற்றலைக் கொண்டு தன்னையும் தனித்தது என்ற எண்ணம் கொண்டு மனிதன்தான்  பார்க்கின்றான். அது மனிதனின் சுபாவ வழக்கமானாலும் நுண்ணறிவின் உண்மைப்படிப் பொருத்தம் இல்லாத ஒன்றாகும்.

தங்கத்தில் மோதிரம் சமைந்ததுபோல், அனைத்தும் அருவில் சமைந்து உள்ளது. மோதிரம் என்று தனித்து இல்லை. தங்கத்திலே மோதிரம் ஆகும். தங்கத்தில் தங்கம் மோதிரம் போல் தெரிகின்றது. அதுபோல் தலைவன் என்ற ஓர் அரூவில் தான் உருவங்கள் சமைந்துள்ளது.

அறிவு மயக்கமோ அல்லது அறியாமை மயக்கமோ, மண்ணை மறந்து மண்ணில் உண்டாகிய அனைத்தும் வேறாக மனிதன் கருதுவது எங்ஙனம் சரியாகும் ? தலைவன் என்று சொல்லக்கூடிய ஒன்றில் இருந்துதானே அனைத்தும் உண்டாகியுள்ளது.

இன்னும் முன்பு எழுதப்பட்ட ஓர் உதாரணம், அதனை இங்கும் நினைவுகூறுவோம். அரூபம் அது மகா சக்த்தி வாய்ந்தது, அதனின் வழி ஆற்றல்களான எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான். அவைகள் மூலம் ஆக்சிஜன்,  ஹைட்ரஜன் போன்ற இன்னும் பல வாயுவுகளும் உண்டாக்கியுள்ளன.

ஆக்சிஜன்,  ஹைட்ரஜன் அவைகள் சேர்ந்து ஆவியான நீர் அம்சம். அது குளிர்ந்தால் தண்ணீர். அது இன்னும் மிக குளிர்ந்தால் ஐஸ் கட்டி அம்சமாகின்றது. (புளுட்டோ கிரகத்தில் ஐஸ் இரும்பு உடைக்கும் வலிமையுள்ளதாம்.) இம்மாற்றத்தில் ஒன்றுக்கொன்று தனித்தக் குணம். ஆனாலும் அடிப்படையில் மூலம் ஒன்றே. அரூபம் அதனின் ஆற்றலே உருவம் என்ற உருவங்களாகி இருக்கின்றது. மேலும் உருவத்தின் ஆற்றல் அரூபத்தின் ஆற்றலில் நின்றும் உள்ளது என்று பார்த்தோம்.

மண்ணும் அரூபத்தின் ஆற்றல். மண்ணில் உண்டாகும் உயிர்ப்பும் அதனின் ஆற்றல். அதனை மறந்து அதனை கொண்டு இருக்கும், இயங்கும் யாவும் தனித்தது, வேறானது என்று அறிவது சரியாகாது.

தங்கத்தில் மோதிரம், சில்வரில் பாத்திரம், இரும்பில் ஆயுதம், நீரில் பனிக்கட்டிகள், காற்றில் வாயுக்கள், ஒளியில் பல வண்ணங்கள், ஒலியில் சுரங்கள், மண்ணில் மனிதன், மனிதனில் மனம், மனதில் எண்ணங்கள், எண்ணத்தில் உண்மைகள், உண்மையில் பிரபஞ்சம்.

பிரபஞ்சம் என்ற அரூபம் ஒன்று அதனில் அனைத்தும் இவ்வாறு ஒன்றானது பலவாகி உள்ளது. விளங்கிக்கொள்ளப் பிரிவாகப் பார்த்து பழக்கதோஷத்தில் வேறு என்றே மனிதன் உணர்ந்துக் கொள்கிறான்.

தான் உண்டாக காரணமான  மூலம் என்ற ஆதியைத் தலைவன் என்று கொள்ளும்போது அதனிலிருந்து (அனைத்தும்) படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.

இஸ்லாமியத்தில் மண்ணால் மனித உருவம் படைக்கப்பட்டுப் படைத்தவன் தன் உயிரை அவ்வுருவில் ஊதினான், அது மனிதன் ஆகியது என்று உள்ளது. இங்கு மனிதனில், மனிதனின் மூலம், அவனின் மண்ணும்; உயிரும். அவைகள் அல்லாது இவன் இல்லை. ஆனாலும் தன் மூலத்தை அறிந்தாலும் தன்னைத் தன் மூலத்தைவிட்டுப் பிரித்தே மனிதன் தான் வேறாக உணர்கின்றான் ! தன் மூலத்திலிருந்து படைக்கப்பட்ட மனிதனை வேறு என்றால் எப்படி அம்மூலம்தான் ஏற்றுக்கொள்ளும் ? யார்தான் தன் உரிமையை விட்டுக்கொடுப்பார் ?! மேலும் தான் இந்த ஊரைச்சேர்ந்தவன் என்று அறிதலைவிட்டு தெளிவில்லாமல், தானே இந்த ஊர் என்பதும் அறிவுடமையாகாது.

அரூபம் ரூபங்களாகி உண்டாகி உள்ளது. தங்கத்தில் சமைந்த மோதிரம்போல் தலைவன் அருவில் சமைந்த உருவங்கள்.

கண்ணது பார்வை
உன்னது பார்வை
கண்ணைக் காண
கண்ணுரு தெரியும் !

காணும் கண் காணும் போது மாட்டுமே தெரிவதெங்கனம் ?
நபிதாஸ்

17 comments:

  1. மூளைக்கு நல்லா வேலை வைக்கும் தொடர்...

    வழக்கம்போல் தொடர்ந்து வாசித்து வருகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. ஞானகுரு நபிதாஸ் அவர்களின் மூளையும் அபாரம் என்பதே என் கணிப்பு. மூளைக்கு வேலை வைக்கும் பாடங்களான யாப்பிலக்கணம், இறைஞானம்.ஆகிய இருபெரும் க்டலில் நீந்தி முத்துக் குளித்து நமக்குச் சிந்தனை முத்துக்களை வாரி வழங்குகின்றர்கள். மாஷா அல்லாஹ். இவர்கள் வடிக்கும் இந்த அறிவுத்தேனை ஒன்று விடாமல் சுவைக்கவே கையை ஏந்திக் காத்துக் கொண்டிருக்கின்றேன்; முழுவதும் படித்தேன்; ஒரு படித் தேன் அளவுக்குக் குடித்தேன் என்னும் புகழுக்குரிய ஆழத்தைக் கவனித்தேன்; இஃது அறிவின் மலைத்தேன் என்றே மலைத்தேன்!

      Delete
    2. //மூளைக்கு நல்லா வேலை வைக்கும் தொடர்...//
      சிந்தனையின் பயனை யாரும் அடைந்தால் அதைவிட மிகுந்த சந்தோசம் இப்பொழுது வேறில்லை.

      மேலும் கவிஞர் கவிதீபம் அவர்கள் அறிவுத்தேனை அவர்தம் தேனில் குழைத்து தருவதும் அகத்திற்கு இதமே. அறியாமை நோய்கள் பறந்தால் சுகமே. தொடர்ந்து வாசிப்பது உங்கள் தாகமே. அவரின் வரிகளை நான் படிக்க மோகமே.

      Delete
  2. உணர்ச்சி பூர்வமான வரிகள் அருமை வாழ்த்துக்கள் நபிதாஸ் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. அறிவுகள் உணர்ச்சிகளைத் தந்தால் கவனமாக உள்வாங்குகிறோம் என்பது அறிய முடிகிறது. அதுதான் ஓர்மை நிலையின் விளைவுகள்.

      நன்றி அறிஞர் ஹபீப் அவர்களே !

      Delete
  3. தங்கத்தில் மோதிரமாய் ஒன்றின் ஒன்றாய்
    .......தனித்துள்ள அவனாற்றால் அருவாய் நின்றால்
    அங்கத்தில் ஊடுருவிச் செயலின் எண்ணம்
    ....அருவாகி யுள்ளமையாய் ஒளியின் வண்ணம்
    தங்கித்தான் ஆக்குமவன் ஆற்றல் ஒன்று
    ...தலைவன்தான் யாவற்றின் இயக்கம் என்று
    எங்கட்குச் சொல்லத்தான் வந்தீர் இன்று
    ... இவ்வாறு பாடங்கள் புரிந்தேன் நன்றே!



    ReplyDelete
    Replies
    1. தங்கத்தில் மோதிரமாய் ஒன்றின் ஒன்றாய்
      ..........தந்ததிலே கொண்டிடுதல் வேண்டும் ஒன்றே
      அங்கத்தில் ஊடுருவல் சொல்லில் உள்ளது
      ..........அருவான அவனிலேவே றும்உண் டோபோல்
      தங்கித்தான் ஆக்குமவன் ஆற்றல் ஒன்று
      ..........தலைவன்தான் யாவற்றின் இயக்கம் என்று
      உங்களின்சொல் உண்மையிலே தாக்கம் கொண்டு
      ..........உணர்வதைநான் நன்கேகண் டேன்ம கிழ்ந்தேன்.

      Delete
  4. இருக்கின்ற படைப்பெல்லாம் அவனாட்சி
    ... ...,,இன்னுயிரின் ஆக்கத்தில் ஒருசாட்சி
    அருவத்தில் அடக்கம்தான் இறையாட்சி
    .......அகத்திற்குள் எண்ணங்கள் உணர்வாட்சி
    வரும்பார்வை ஞானத்தில் மனக்காட்சி
    ......வாழ்க்கைக்கு வழிகாட்டும் அவன்மாட்சி
    உரும்துன்பம் வருமின்பம் அவன்திட்டம்
    ......உள்ரங்கம் வெளிரங்கம் அவன்சட்டம்!

    ReplyDelete
    Replies
    1. இருக்கின்ற படைப்பெல்லாம் அவன்காட்சி
      ..........என்பதிலே காணவேண்டாம் உருகாட்சி
      அருவத்தின் நிழல்தானே உருவகாட்சி
      ..........அகத்தினிலே அருவம்தான் என்றுமாட்சி
      தரும்ஆக்கத் தில்தகவல் உரைகாட்சி
      ..........தவறாது மனப்பற்றில் உயர்காட்சி
      கருத்தினிலே இன்பமும்துன் பமும்காட்சி
      ..........கவனித்தால் உள்வெளியும் ஒருகாட்சி !

      Delete
  5. அனைத்தும் அறிவுத்தேனாய் சிறப்பு
    ஆராய்ந்தால் கிட்டும் மதிப்பு
    எனக்கும் உள்ளுக்குள் ஒரு நினைப்பு
    ஏகமாய் எழுத ஒரு கணிப்பு

    ReplyDelete
    Replies
    1. ஆசைதான் அவ்வாறு இருக்க
      அயராது உட்கொள்ள சிறக்க
      புரியாது போகாது நெருங்க
      புண்ணியம் பெறுவது காக்க.

      Delete
    2. அன்பின் மெய்சா, அதிரை நிருபரில் பின்னூட்டக் கவிதையும், ஈண்டு இத்தளத்தில் இந்தக் கவிதையும் என்னை ஈர்த்தன:


      விரும்பிக் கொண்டீர் விரைவினில் நன்று
      விருத்தம் பார்க்க விழைந்தனன் இன்று
      திரும்பி பார்த்தேன் திறனது மெய்தான்
      அரும்பி வந்த அதிரையின் மெய்சா!

      Delete
  6. அதிரை மெய்சா அவர்கள் விரைவில் மரபுக் கவிதை தருவார் என்ற நம்பிக்கைகள் துளிர்விடுகிறது.

    ReplyDelete
  7. பெரிய பெரிய அறிஞர்களும் புலவர்களும் இருக்கும் சபைக்கு இடம் மாறி வந்து விட்டோமோ என்ற ஒரு நிலைதான் இவ்வாக்கமும் அதற்க்கு கருத்துக்களும் நல்ல விஷயமுள்ள பகுதி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பெரிய அறிஞர்களும் அல்ல, பெரிய புலவர்களும் அல்ல. எதயையும் சாதுரியமாகவும், நகைச் சுவையாகவும் ஆக்கங்களைத் தரும் உங்கள் மத்தியில் எங்கள் புத்திகளை தீட்டிக்கொள்ளும் சாதரணமானவர்களே நாங்கள்.

    ReplyDelete
  9. உங்கள் போன்றோரின் இவ்வார்த்தை ஏதோ மனதிற்குள் ஒரு நெருடலை தருகிறது [ஜசக்கல்லாஹ்ஹைரன் ]

    ReplyDelete
  10. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers