அடிப்படை அவசியம் வேண்டும்
.....அடுத்ததும் சிறப்பினில் கொண்டும்
பிடிப்புடன் திகழ்ந்திட முதலும்
.....பேற்றினில் உயர்ந்திடத் துணையும்
கம்பியும் மரங்களும் மண்ணும்
.....கற்களும் சிமிட்டியும் நீரும்
நம்பிட இல்லமாய் ஆகும்
.....நயத்தினில் மெச்சிடத் தகுமா ?
திறம்படக் கலைகளும் அமைத்தே
.....தேவைகள் நிறைந்திடச் செய்தே
சிறப்பினில் உயர்வினைப் பெறவே
.....சிலசில வசதிகள் மிகவே
இவ்விதம் சிறப்புகள் சமைத்தே
.....இருப்பிடம் திறம்பட அமைத்தே
அவ்விதம் யாவுமே கொண்டே
.....ஆகிடும் இல்லமும் நன்றே
வாகனம் சக்கரம் பொறியில்
..... வசதியாய் இருக்கையின் நெறியில்
பாகமும் பக்குவம் அமைத்தும்
.....பார்த்திடப் பாரினில் இல்லை !
அழகுடன் வசதிகள் நிறைந்த
.....அமைவினை நாடுவார் சூழ்ந்தே
தழுவிடும் இவைகளே இயற்கை
.....தலைவனும் அவ்விதம் முறையே
அடிப்படை வழிமுறைக் கடமை
.....அதைவிட அதிகமும் தேவை
அடியுடன் அதிகமும் சேர
.....அழகுகள் ஆற்றலும் கூடும்
அண்ணலும் தனிமையில் இணங்கி
.....அவனையே அதிகமாய் வணங்கி
உண்ணலும் உறக்கமும் குறைத்தே
.....உலகினில் அவனருள் நிறைந்தார்
வழக்கினில் வந்திடச் செயலும்
.....வழிகளில் கணக்கிட வேணும்
பழக்கமும் ஆகிடில் இன்னும்
.....பழுத்திடச் செய்யணும் வணக்கம்
எண்ணிட எல்லையும் இல்லை
.....எங்கனம் நினைப்பினில் எல்லை
உண்பதில் கணக்கிட வேண்டும்
.....உன்னிலே வணக்கமில் வேண்டாம்
அடிக்கடி மெருகிடப் பொன்னும்
.....அழகுடன் பளிச்சிட மின்னும்
துடிப்புடன் பற்றிடத் திகழ்வோம்
.....தூயவன் அருளினைப் பெறுவோம்
அடிப்படை வசதியை மட்டும்
.....அனைவரும் நாடலைச் சட்டும்
அடிப்படை அதனுடன் சேர்த்தே
.....அநேகமும் அழகுகள் பார்த்தே
விரும்பிடும் இல்லமும் நாடும்
.....விரைந்திடும் வாகனம் தேடும்
கருத்திதில் படிப்பினைக் கண்டே
.....கவனமும் கொள்ளுதல் நன்றே
அடிப்படை வணக்கமும் வேண்டும்
.....அதனுடன் அதிகமும் வேண்டும்
துடிப்புடன் நிகழ்த்தியும் சென்றார்
.....துயவனின் அருளினைச் சுமந்தார்
அனைத்திலும் அதிகமும் மனதில்
.....அவனையே வணங்குதல் கணக்கில் ?
நினைத்திட வேண்டியே இதனில்
.....நினைவுகள் கொட்டினேன் பதத்தில்
வணங்கிடப் படைத்தான் அவன்சொல்
.....வழியினில் குறைத்திடல் யார்சொல் ?
வணங்கிடும் ரகசியம் அறிந்தால்
.....வாழ்வுகள் வணக்கமாய் தெரியும்
சுருக்கிட நாடுதல் தகுமா ?
.....சுகங்களும் சுருங்கினால் புரியும் !
பெருக்கிட விரும்புதல் கொண்டே
.....பெரியவன் விரும்புவான் கண்டே
அடிப்படைக் கடமையும் ஆற்றி
.....அதனுடன் அதிகமும் போற்றி
பிடிப்புடன் வாழுதல் வேண்டும்
.....பிரியமும் காட்டுவன் அவனும்.
கருவினில் நழுவிடா நின்றே
.....கச்சிதம் கவனமும் கொண்டே
அருளினை அடைவது உண்மை
.....அவனது விருப்பமும் திண்மை
அடிப்படை அவசியம் வேண்டும்
.....அடுத்ததும் நிறைந்திடக் கொண்டும்
படிப்பினை இதனிலே நின்றும்
.....பக்குவம் பெற்றிடல் வேண்டும்.
நபிதாஸ்
அரையடிக்கு விளம் விளம் மா